Language Selection

சுயநிர்ணயத்தை ஏற்றுக்கொள்ளாமையால் முன்னிலை சோசலிசக் கட்சியை, இனவாதிகளாக, திரிபுவாதிகளாக, சந்தர்ப்பவாதிகளாக காட்டுகின்ற அரசியல் கேலிக்கூத்தைக் காண்கின்றோம். இப்படி இட்டுக்காட்டி கூறுவது திரிபுவாதமாக, இனவாதமாக இருக்கின்றது. இப்படி திரிக்க தேசிய சுயநிர்ணயம் தொடர்பாக ரோசா லக்சம்பேர்க்குடனான லெனினின் விவாதத்தை எடுத்துக் காட்டுகின்றனர். லெனின் சுயநிர்ணயம் ஏற்க மறுத்த ரோசா லக்சம்பேர்க்கை இனவாதியாகவோ, திரிபுவாதியாகவோ முத்திரை குத்திக் காட்டி விவாதிக்கவில்லை. அவரை எதிரியாகக் காட்டவில்லை, எதிரியாக்கவில்லை. மாறாக அவரை மார்க்சியவாதியாக அடையாளப்படுத்தி, அரசியல் விவாதத்தை முன்னெடுத்தார். தமிழ்தேசியம் மட்டும் தான் தன்னுடன் அல்லாத அனைத்தையும் எதிரியாகச் சித்தரித்துக் காட்டுகின்றது.

நாங்கள் லெனின் வழியில் தான் முன்னிலை சோசலிசக் கட்சியுடன் முரண்பட்ட விவாதிப்பது மட்டுமின்றி இணைந்து பயணிக்கின்றோம். ஒரு வர்க்கக் கட்சியாக அதை அங்கீகரிக்கும் அதே நேரம், ஒன்றிணைந்த வர்க்கக் கட்சிக்கான பொதுத் திசையில் பயணிக்கின்றோம். சுயநிர்ணயம் முதல் பல்வேறு அரசியல் முரண்பாடுகளை, வர்க்கக் கட்சிக்கான பாதையில் ஒன்றிணைந்து தீர்க்கக்கூடிய வகையில் அணுகிவருகிறோம்.

இலங்கையில் வர்க்கப் போராட்டத்தை முன்னெடுக்க எது இன்று அவசியமோ, எது இன்று சாத்தியமானதோ, அந்தப் பாதையில் பயணிப்பதையே மார்க்சியம் வழிகாட்டுகின்றது. குருட்டுத்தனமாக கோட்பாட்டை வழிபடுவதை மார்க்சியம் அங்கீகரிப்பதில்லை. கோட்பாட்டு ரீதியான முரண்பாடுகள், கோட்பாட்டுத் தூய்மை என்பது வர்க்கப் போராட்டத்தை நடத்துவதற்காக மட்டும்தான். வர்க்கப் போராட்டத்தைக் குழிபறிப்பதற்காக அல்ல. கோட்பாட்டை பாதுகாப்பதற்காக அல்ல. அது எங்கள் வேலையுமல்ல. வர்க்கப் போராட்டத்தை முன்னெடுப்பதற்கும், அதை வழிநடத்துவதற்கும் தான் மார்க்சியம்.

முன்னிலை சோசலிசக் கட்சி ஒரு குழந்தை. அது தவளுகின்றது. அதன் தோற்றம் தூக்க முடியாதளவுக்கு மிகப்பெரியது. அந்தக் கட்சியின் உருவாக்கம் மற்றைய கட்சிகள் போல் சிறுகச்சிறுகவாக உருவாகவில்லை. கட்சியில் தலைமையில் இருந்த ஒரு சிலர் மட்டத்தில் இருந்து முன்னெடுத்த உட்கட்சிப் போராட்டமும், தலைமையில் இருந்த பொது அதிருப்தியும் இணைந்து உருவானதுதான் அந்தக் கட்சி. அது வெளிவந்த போது, அந்த அமைப்பின் பெரும்பான்மை உறுப்பினர்கள் அதனுடன் சேர்ந்து கொண்டனர். அரசியல்ரீதியான உட்கட்சிப் போராட்டத்தை நடத்தியவர்கள் இதை எதிர்பார்க்காததுடன், அவர்களையும் இணைத்து வழிநடத்த வேண்டிய பொறுப்பும் வந்து சேர்ந்தது. கட்சித் தலைமை தன்னை அரசியல்ரீதியாக வளர்த்தெடுக்கத் தொடங்கியது முதல், கீழ் அணிகளை அரசியல்ரீதியாக வளர்த்தெடுக்க வேண்டிய நிலையில் தன்னைத்தான் புரட்சிகரமாக்கி வருகின்றது. இதுதான் அந்தக் குழந்தையின் வளர்ச்சி. உயிர்ப்பிக்கும் ஆற்றலும் வளமும் கொண்ட அந்த பெண் குழந்தையையே, கள்ளிப் பால் கொடுத்து கொன்று விட முனைகின்றனர்.

ஒரு கட்சியின் தோற்றம், புரட்சிகரமான பாதையில் முன்னோக்கி செல்லும் அதன் எதார்த்தத்தை நிராகரித்து, அரசியல் நடத்துவது கேலிக்குரியது. முரண்பாடான கருத்துக்காக, அதை எதிரியாக்கி எதிர்த்த அரசியல் செய்வது புரட்சிகரமான அரசியல் அல்ல, எதிர்ப் புரட்சிகரமான அரசியல். அவர்களுடன் ஒன்றிணைந்து அல்லது வெளியில் இருந்து அணுகுவது மட்டும் தான், புரட்சிகரமானதும் சரியானதுமான அரசியல்.

அந்தக் கட்சியில் கீழ் இருந்து மேலாகவும், மேல் இருந்து கீழாகவும் நடக்கும் மாற்றங்கள், புரட்சிகரமான நடைமுறைகள், இன்று முன்னோக்கிச் செல்வதை யாரும் நிராகரிக்கவோ மறுக்கவோ முடியாது. நாங்கள் சேர்ந்து பயணிக்க அல்லது ஒன்றிணைந்து பயணிக்க வேண்டியதன் அவசியம் என்பது, வர்க்கப் போராட்டத்துக்கு எது இன்று அவசியமானதோ, எது அதிக சாதகமானதோ, அதை அடிப்படையாக கொண்டு அணுகுவதைத் தாண்டி எம்மிடம் வேறு அரசியல் கிடையாது. 1960 களில் சண் தலைமையிலான கட்சியின் தவறான அணுகுமுறைகளை நாங்கள் செய்யவிரும்பவில்லை. காலத்தின் தேவை, அதற்கான சமூகப் பொறுப்புடன், வர்க்க நடைமுறை கொண்ட கட்சியை நோக்கி பயணிப்பது காலத்தின் கட்டாயமாகும். இது தான் இலங்கையில் புரட்சிகரமான சூழலை உருவாக்கும் அரசியல் அடிப்படையும் நிபந்தனையுமாகும்.

இப்படி இருக்க "சிங்கள மக்கள் மத்தியிலிருந்து ஒடுக்குமுறைக்கு எதிரான குரல்களும் தமிழ்ப் பேசும் மக்களின் சுயநிர்ணய உரிமையை ஆதரிக்கும் குரல்களும் சிறுகச் சிறுக எழ ஆரம்பித்தன. அவற்றை முளையிலேயே கிள்ளியெறிவதற்கான தூண்டப்பட்ட திரிபுவாதிகள் தாம் பொறுக்கிய மார்க்சியக் கருத்துக்களோடு இனவாதத்தைக் கலந்து ஜே.வி.பி ஐ உயிர்ப்பித்த போது உருவானதே முன்னிலை சோசலிசக் கட்சி." என்று, ஒரு வர்க்க கட்சியை திரித்து காட்டுகின்ற பித்தலாட்டங்கள் அரசியல் அடிப்படையற்றவை. "சுயநிர்ணய உரிமையை ஆதரி"த்தால் அதை திரிபுவாதி அல்ல என்று கூறமுனைகின்ற இழிவான அரசியல் அர்ப்பத்தனத்தைத்தான் இங்கு நாம் காணமுடியும்.

இந்த அரசியல் தர்க்கம் சுயநிர்ணயத்தை ஏற்றுக்கொண்டவர்களை, இனவாதிகள் அல்ல என்கின்றது. திரிபுவாதிகள் அல்ல என்கின்றது. இது தான் மூடிமறைத்த தமிழ்தேசிய சந்தர்ப்பவாதிகளின் உண்மை முகம். சுயநிர்ணயத்தை முன்வைத்து இயங்கும் குறுந்தேசியம் வரை, இனவாதிகள் அல்ல என்று இந்த அரசியல் கண்ணோட்டத்தை இந்த தர்க்கம் வரையறுக்கின்றது.

மறுதளத்தில் சுயநிர்ணயத்தை ஏற்றுக் கொள்வது மட்டுமல்ல, அதற்கான நடைமுறையும் அவசியமானது. சுயநிர்ணயத்தை முன்னிறுத்தி நிற்கும் இனவாதத்தை எதிர்த்துப் போராடும் பொது அரசியல் தளத்தில் தான், சுயநிர்ணயத்தை கோட்பாடாக முன்வைக்காமைக்கு எதிராகவும் போராட முடியும்.

கோட்பாட்டு அளவில் சுயநிர்ணயத்தை முன்வைக்காமல் நடைமுறையில் இனவொடுக்குமுறையையும், இனவாதத்தையும் எதிர்த்துப் போராடும் ஒரு கட்சியின் செயல் தந்திரத்தை இனவாதமாக திரிபுவாதமாக சித்தரிப்பது அபத்தம். அவர்கள் தங்கள் போராட்டத்தை மேலும் சிறப்பாக முன்னெடுக்க, கோட்பாட்டுரீதியான அரசியல் ஆயுதத்தைக் கொண்டிராமை என்பது தொடர்ந்து விவாதத்துக்கும் விமர்சனத்துக்குமுரியது. அதை ஏற்க வைக்கும் போராட்டம் என்பது கூட, அவர்களின் இனவொடுக்குமுறைக்கும், இனவாதத்துக்கும் எதிரான நடைமுறைப் போராட்டத்தின் ஊடாகத்தான் சாத்தியம். வெறும் கோட்பாட்டுத் தளத்தில் மட்டுமல்ல.

சுயநிர்ணயத்தை ஏற்காமையை வைத்து அரசியல்ரீதியாக முத்திரை குத்துகின்ற இழிவான போக்கே இங்கு அரசியலாகின்றது. "இலங்கை இந்திய அரசுகள் அந்த ஒரு விடயத்தில் மட்டும் மிகவும் தெளிவாக இருந்திருக்கின்றன. எந்தக் கணத்திலும் சிங்கள மக்கள் மத்தியிலிருந்து சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் குரல்கள் எழுந்துவிடக் கூடாது என்பதில் அவற்றின் செயல் தந்திரம் உறுதியாகவிருந்தது" என்று கூறுவதன் மூலம், முன்னிலை சோசலிசக் கட்சியை அதன் அரசியல் கூறாக காட்ட முனைகின்றனர்.

முன்னிலை சோசலிசக் கட்சி, ஒரு கட்சி என்ற வகையில் சுயநிர்ணயத்தை ஏற்றுக் கொள்ளாமை பெரும்பான்மையின் முடிவாக, கட்சியின் ஜனநாயக மத்தியத்துவத்துக்கு உட்பட்ட ஒரு கட்சி. சுயநிர்ணயத்தை ஏற்றுக் கொண்ட சிறுபான்மையும் கீழ் இருந்து உருவாக்கும் நடைமுறை மூலம் தொடர்ந்து அதைப் பெரும்பான்மையாக மாற்றும் உட்கட்சி போராட்டத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு கட்சியாகத்தான் இருக்கின்றது. இப்படித்தான் கட்சியின் உள் ஜனநாயகம் இருக்கும். இதை நிராகரிப்பது மார்க்சியமல்ல. முன்னிலை சோசலிசக் கட்சியில் சுயநிர்ணயம் சிறுபான்மைக் கருத்தாக, அதற்கான உட்கட்சிப் போராட்டம் முதல் உயிரோட்டமுள்ள கட்சி ஜனநாயகத்தையும் கண்டுகொள்ளாது அரசியல் நடத்தக் கூடாது. இதைப்பற்றி தெரியாவிட்டால், அதைத் தெரிந்து கொண்டு விவாதிப்பதுதான் சரியான அரசியலாக இருப்பதுடன், அதன் மூலம் மக்களை வழிநடத்த முடியும்.

இங்கு சுயநிர்ணயத்தில் இருந்து கட்சி பற்றிய முடிவா அல்லது கட்சியின் பொது வேலை திட்டத்தில் இருந்து சுயநிர்ணயம் பற்றிய விவாதமா என்ற அடிப்படை அரசியல் கேள்வியை இது எழுப்பிவிடுகின்றது. சுயநிர்ணயத்தில் இருந்து கட்சி பற்றிய மதிப்பீடு மார்க்சியமல்ல. அதாவது தேசியவாதம். சுயநிர்ணயம் மட்டும் தான் முரண்பாடு என்பது மார்க்சியமல்ல. தேசியவாதம். சுயநிர்ணயம் கடந்து பல்வேறு முரண்பாடுகளுடன் தான், முன்னிலை சோசலிச கட்சியை நாங்கள் வர்க்க கட்சியாக அணுகுகின்றோம்.

சுயநிர்ணயத்தை அவர்கள் சோவியத் மற்றும் அன்றைய காலகட்டத்துக்கே பொருத்தமானது என்றும், சுயநிர்ணயம் இன்றைய சர்வதேசிய நிலைக்கும் பொருத்தமற்றது என்றும் முன்வைக்கின்ற வாதங்கள், மற்றும் அன்று சுயநிர்ணயத்தின் பிரயோகத்தை வெவ்வேறு சூழலில் மார்க்ஸ் முதல் லெனின் வரை முன்வைத்ததாக கூறுகின்ற வாதங்கள் தர்க்கங்கள் மீது, சரியான தத்துவார்த்த அரசியல் விவாதங்கள் அவசியமானதாக உள்ளது. சிங்கள மக்களுடன் உரையாடல் மற்றும் சுயநிர்ணயம் தொடர்பான கட்டுரைகள் இந்த வகையில் முன்வைக்கப்பட்டது.

சுயநிர்ணயம் என்பதனை பிரிவினையாகவே தமிழ்த்தேசியமும், பேரினவாதமும் கருதுவது போல் தான், முன்னிலை சோசலிசக் கட்சியும் கருதுகின்றது. இதுவொரு அடிப்படையான அரசியல் கண்ணோட்டத் தவறுமாகும்.

பிரிவினையை மறுத்து பிரிந்து செல்லும் உரிமையைத்தான் சுயநிர்ணயம் முன்வைக்கின்றது. பிரிவினை வரும் போது ஒரேயொரு நிலையில் மட்டும் தான், அதாவது பாட்டாளி வர்க்க நலனுக்கு சாதகமாக இருந்தால் மட்டும்தான் பிரிந்து செல்வதை பாட்டாளி வர்க்கம் ஆதரிக்கும். மற்றைய எல்லா நிலையிலும் இதை எதிர்த்துப் போராடும். இதைத்தான் சுயநிர்ணயம் வரையறுக்கின்றது. சுயநிர்ணயத்தை முன்வைக்காமை பற்றி பேசுகின்றவர்கள் இந்த அடிப்படையில் நின்று விவாதங்களை முன்வைக்காமை என்பதே, இந்த விவாதத்தின் பலவீனமாகும்.

சுயநிர்ணயம் அல்லாத எந்தத் தீர்வையும், பாட்டாளி வர்க்கம் முன்வைப்பதில்லை. வேறு தீர்வுகளை மற்றைய வர்க்கங்களால் முன்வைக்கப்படும் போது, அதைப் பாட்டாளி வர்க்க நலனில் இருந்து மட்டும் சீர்தூக்கி அணுகுகின்றது. பாட்டாளி வர்க்க அரசியல் என்பது, வர்க்கப் போராட்டத்தை நடத்துவதற்குத் தான்.

 

பி.இரயாகரன்

01.02.2013


Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது