Language Selection

கருத்துகளை உற்பத்தி செய்வதன் மூலம், அதை மக்களிடம் கொண்டு செல்லும் சரியான உத்திகள் மூலம், புரட்சி செய்ய முடியும் என்று நம்புகின்ற அரசியல் போக்கு தவறானது. மக்களுக்கு புரியும் மொழியில் பிரச்சாரத்தை செய்யாமை தான், புரட்சி நடைபெறாமைக்கான காரணம் என்று அரசியலைப் புரிந்துகொள்வது தவறானது. இதற்கான மொழியும், உத்தியும், பிரச்சாரமும் தான் குறைபாடு என்று கருதும் அரசியல் போக்குத் தவறானது.

மார்க்ஸ் அறிவியல்பூர்வமான தத்துவஞானத்தையும், அமைப்பையும் மறுத்து வில்ஹெம் வியட்லிங் செயற்பட்ட போது கூறியது இங்கு பொருந்தும். "இந்த போதனை ஒரு கற்பனைத் தீர்க்கதரிசியையும் - வாய் பிளந்து நிற்கும் கழுதைகளையுமே உருவாக்குகிறது" என்றார். இது புரட்சியை உருவாக்காது.

எது முதன்மையானது? எது அடிப்படையானது? என்றால் கட்சியையும், தத்துவத்தையும் மக்களின் நடைமுறையுடன் வளர்த்தெடுப்பது தான். இதையே நாம் என்றும் செய்ய வேண்டும்.

எந்தக் கருத்தையும், எந்த உத்தியையும், முன்னெடுக்க தத்துவமும் கட்சியும் அவசியமானது. பிரச்சாரத்தை முன்னெடுக்க நடைமுறையுடன் கூடிய கட்சி அவசியமானது. கருத்தும், உத்தியும், பிரச்சாரமும் முதன்மையானது என்பது, நடைமுறையையும், கட்சியைக் கட்டுவதையும், தத்துவரீதியான வளர்ச்சியையும் மறுக்கின்ற கோட்பாடாகும்.

இது கருத்து மக்களை சென்று அடைந்துவிடுவதன் மூலம் புரட்சி தானாக மேல் வந்துவிடும் என்று கருதுகின்றது. இன்று பிரச்சாரம் சார்ந்த குறைபாடும், அதற்கான மொழி சார்ந்த குறைபாடும் தான், சமூக மாற்றம் நடக்காமல் இருப்பதற்கான காரணமா? இப்படிக் கருதுவது தவாறான அரசியல். இது மூன்று பிரதான அரசியல் விலகலைத் தருகின்றது.

1.சமூக மாற்றத்தை முன்னெடுக்க ஒரு கட்சி முதன்மையானதாக இருக்க வேண்டும் என்பதை மறுக்கின்றது. மாறாக கருத்து இருந்தால், அதைப் பிரசாரம் செய்தால் போதும் என்பதை முன்வைக்கின்றது. கட்சிக்குரிய முதன்மை பாத்திரத்தையும், அதைக் கட்டுவதையும் மறுதளிக்கின்றது.

2.மொழியும், அதற்கான உத்தியும் தான் பிரச்சனை, நாம் கொண்டுள்ள அரசியலும் கட்சியுமல்ல என்று கருத்தை முன்வைக்கின்றது.

3.பிரச்சாரம் செய்யும் முறைதான் பிரச்சனை, நடைமுறையல்ல என்ற கருத்தை உருவாக்குகின்றது.

இப்படி கருதுவது அரசியல்ரீதியான தவறாகும். இது வாழ்நிலை சார்ந்து, சூழல் சார்ந்து வெளிப்படும் கருத்துப் போக்காகும். புரட்சி நடைபெறுவதற்குரிய புறநிலையை மறுத்து, சொந்த அகநிலைக் கோட்பாடாக வெளிப்படுகின்றது. மார்க்ஸ் இது பற்றி "விருப்பங்களின் மீது புரட்சிகள் ஏற்படுவதில்லை@ மாறாக, புறநிலை வளர்ச்சியின் அவசியம் புரட்சியை ஆக்குகிறது" என்றார். ஆகவே மானசீகமான மனவிருப்பங்கள் கொண்டு புரட்சியை ஆக்க முடியாது. புறநிலையான வளர்ச்சியை கருத்துகள் உருவாக்குவதில்லை. தொடர்சியான வர்க்கப் போராட்டங்கள் புறநிலையான வளர்ச்சிக்கு அவசியமானது. கருத்துகள் வர்க்கப் போராட்டத்தை உருவாக்குவதில்லை. வர்க்கப் போராட்டங்கள் தான் கருத்துக்களை உருவாக்குகின்றது. இங்கு வர்க்கப் போராட்டம் உருவாக்கும் கருத்துகளை உள்வாங்கி வழிநடத்தும் கட்சியும், தத்துவமும், நடைமுறையும் அவசியமானது, அதுவே முதன்மையானதாகின்றது.

இதற்கு மாறாக விருப்பங்கள் புரட்சியாகிவிடாது. மார்க்ஸ் "கம்யூனிச விருப்பங்கள் மீதான கருத்தமைவுகளை செயல்படுத்துவதல்ல. அது வரலாற்றுப் பூர்வமான ஒரு நடைமுறை இயக்கம்" அவசியம் என்றார். இதற்கு மாறாக மக்களிடம் பிரச்சாரம் சென்றடையும் மொழியும், உத்தியும், பிரச்சாரமும் தான் காரணம் என்று கருதும் போது, இதை உற்பத்தி செய்யும் அதி மேதாவிகளை மக்களுக்கு மேலாக முன் நிறுத்தி விடுகின்றது.

கட்சியைக் கட்டுதல் என்பதே முதன்மையானது. இதன் சாரம் என்பது கட்சியின் தத்துவார்த்த மட்டத்தை உயர்த்துதல், கட்சிக்கான நபர்களை உருவாக்குதலாகும். வர்க்கப் போராட்டத்தை சமூக மாற்றமாக்க இது முன் நிபந்தனையாகும். இது மட்டும் போதாது, இந்தக் கட்சி தன்னை நடைமுறைப் போராட்டங்களில் இணைத்துகொள்வதுடன், மக்களுடன் தொடர்பில் இருப்பதும் அவசியமானது. இந்த வகையில்

1.கட்சியைக் கட்டுதல்

2.தத்துவார்த்த ரீதியாக தன்னை வளர்த்தெடுத்தல்

3.நடைமுறையைக் கட்சியாக மக்களுடன் தொடர்பில் இருத்தல்

இது முதன்iமானது. இது இருந்தால் மட்டும் தான், கருத்தையும், உத்தியையும், பிரச்சாரத்தையும் முன்கொண்டு செல்லமுடியும்;.

கருத்துகளுடன், மொழியுடனும் மக்களை தொடர்பு கொண்டு புரட்சியை நடத்திவிடலாம் என்ற சிந்தனையும், போக்கும் தவறானது. இது பிரமுகர்களினதும், தத்துவவாதிகளினதும் கற்பனைவாதத்தை அடிப்படையாகக் கொண்டது. கருத்துகள் இருந்தால் போதும், அது புரட்சி செய்யும் என்று நம்புகின்ற, நம்ப வைக்கின்ற தவறான அரசியல் கூறாகும். கட்சி கட்டுவது முதன்மையானது. கட்சி மக்களுடன் தொடர்பு கொண்டு இருக்கவேண்டும். கட்சி வர்க்கப் போராட்டத்துக்கு தலைமை தாங்க வேண்டும்.

வர்க்கப் போரட்டம் என்பது சமூகத்தில் எங்கும் இருக்கின்றது. அதை நெறிப்படுத்தி வழிநடத்தக் கூடிய வர்க்கக் கட்சி கட்டுவதும், அதற்கான செயற்பாடும் தான் எம்முன்னுள்ள முதன்மைப் பணியாகும்.

 

பி.இரயாகரன்

25.01.2013


Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது