Language Selection

சிங்கள மக்களுடன் இணைந்து போராடுவதையும், அவர்கள் தமிழ் மக்களுக்காக போராட முற்படுவதையும், பலரும் தங்கள் தங்கள் நிலை அவர்களால் அங்கீகரிக்கப்படுதல் என்ற குறுகிய பார்வையூடாக அணுகுகின்றனர். நாங்கள் சரியாக தான் இருந்தோம், இருக்கின்றோம், அவர்கள் தான் தவறாக இருந்ததாக கருதிக்கொண்டு, காட்டிக்கொண்டு அணுக முற்படுகின்றனர்.

தமிழ்மக்களின் மேலான ஒடுக்குமுறையை சிங்கள புரட்சிகர பிரிவுகள் இனங்கண்டு போராட முனையும் அரசியல் உள்ளடக்கத்தில், தமிழ் தரப்பு தன்னை அரசியல்மயமாக்கிவிடவில்லை. இந்த உண்மையை நாங்கள் இனங்கண்டுகொள்ளவும், ஏற்றுக்கொள்ளவும் வேண்டும். இதை மாற்றியமைக்க, தங்கள் தங்கள் கடந்தகால அரசியலை மறுக்காமல் இந்த மாறுதல் நிகழமுடியாது. சிங்களப் புரட்சிகரக் கூறுகள் தங்கள் கடந்தகால அரசியல் வழிமுறைகளை மறுத்ததுடன், அதை சுயவிமர்சனம் செய்தபடி விமர்சனம் செய்ததன் மூலம் புரட்சிகர மாற்றம் நடந்தது. புதியதொரு புரட்சிகர அரசியல்வழி மூலம் தான், தமிழ்மக்கள் மேலான ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடவேண்டிய சமூகப் பொறுப்புடன், அதற்கான காலடியை எடுத்து வைத்திருக்கின்றனர்.

தமிழர் தரப்பில் இப்படி நடக்கவில்லை. இது நடக்காமல் உண்மையான நேர்மையான செயற்பாட்டை எம்மில் நாம் எதிர்பார்க்க முடியாது. இன்று சிங்களப் புரட்சிகர சக்திகளின் முன்முயற்சியுடன் கூடிய இந்த முயற்சியை வரவேற்கும், பங்கேற்க முனைபவர்கள், தங்கள் கடந்தகால நிலையில் நின்று இதை அணுக முற்படுகின்றனர். இது அரசுக்கு எதிரான போராட்டத்தை பலவீனமாக்கி சிதைக்கும். எம்மை நாம் தீவிரமாக மாற்றியாக வேண்டும்.

கடந்தகாலத்தில் புலியாக, புலியெதிர்ப்பாக, இரண்டையும் எதிர்க்கும் ஜனநாயகவாதியாகவே தம்மைக் காட்டிக் கொண்டு பலரும் இருந்தனர். இங்கு கூட அங்குமிங்குமாக இணைந்தும், விலகியும் நின்றனர். புரட்சிகர அரசியல் கூறாக தம்மை வெளிப்படுத்தியிருக்கவில்லை. இது உண்மையில் தமிழ்மக்களுக்கு எதிராக இருந்ததுடன், இலங்கை மக்களுக்கு எதிரானதாகவும் இருந்தது. உண்மையில் சொந்த மக்களைச் சார்ந்தும், அந்த மக்களின் அரசியலை உயர்த்தி நிற்பதை மறுத்தும் நின்றதன் மூலம், தங்களை அடையாளப்படுத்தியவர்கள் என்பதை நாம் ஏற்றுக்கொண்டாக வேண்டும்.

இங்கு தான் இந்திய உளவாளிகள் முதல் இதை வைத்துப் பிழைக்கும் அரசியல் பிரமுகர்கள் வரையான, பல வண்ணம் கொண்டவர்களாக தமிழ் தரப்பு சமூகப் பொறுப்பற்று இருந்தது, இருந்திருக்கின்றது. சிங்களப் புரட்சிகரக் கூறுகள் தங்கள் கடந்தகாலத்தை மறுத்து உருவானது போல், தமிழ்தரப்பு புரட்சிகர கூறாக தன்னை புடம் போட்டு வெளிப்படுத்தவில்லை.

இன்று சிங்கள மக்களுடன் தமிழர்கள் இணைந்து போராடுவது என்பது, தங்கள் கடந்தகால அரசியல் மற்றும் தம்மைச் சுற்றிய இந்த போக்குகளை மறுத்தல் மூலம், தங்களை மீளக் கட்டமைத்தல் தான். இதுதான் சிங்கள மக்களுடன் இணைந்து போராடுதல் என்பதன் சாரமாகும்.

சிங்கள மக்களுடன் இணைந்து போராடுதல் என்பது, எங்களுடைய கடந்தகால நிலையில் நின்று எங்களை அவர்களை ஏற்கவைப்பதல்ல. அவர்களுக்குள் நடந்த மாற்றத்தைப் போன்று எம்மை நாம் மீட்டு உருவாக்குதல் தான்.

சாதாரண தமிழ் மக்கள் சிங்கள மக்களைப் புரிந்துகொள்ளும் வண்ணம் தமிழ்மக்கள் மத்தியில் மாற்றத்தை உருவாக்க வேண்டிய எமது வரலாற்றுப் பொறுப்பில் நின்றபடி தான், இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

எம்மை நாம் மாற்றாமல், எமது கடந்தகால நிலையில் நின்று இதைச் சாதிக்க முடியாது. மக்களை விழிப்பூட்டுவது, அவர்கள் தமக்காக தங்களைத் தாங்கள் அணிதிரட்ட வழிகாட்டுவது என்பது, அர்த்தமுள்ள உண்மையான அரசியல் உணர்வாக எம்மில் மாறவேண்டும். எமக்குத் தெரிந்ததை வைத்து, எமது தெரிந்த செயலை வைத்து இதை முன் நகர்த்த முடியாது. மாற்றம் என்பது, எமது அரசியலில், எமது அறிவில், எமது எழுத்தில், எமது நடத்தையில்… என எங்கும் தொடர்ந்து இடைவிடாது எம்மில் நடக்கவேண்டும்.

நாங்கள் எம்மில் உள்ள அனைத்துவிதமான சமூக ஒடுக்குமுறையையும் முரணற்ற வகையில் எதிர்த்துப் போராடுபவராக இருந்தபடிதான், மக்களை வழிகாட்டி அழைத்துச்செல்ல முடியும். நாங்கள் நேர்மையானவராக, உண்மை உள்ளவராக, வெளிப்படையானவராக இருக்கவேண்டும்.

சிங்கள மக்களுடன் ஐக்கியம் என்பது, சிங்கள ஓடுக்கப்பட்ட மக்களுடனான ஒருங்கிணைந்த போராட்டம் தான். எமது எதிரியும், அவனின் எதிரியும் ஓன்று என்பதை இனம் காணும் அளவுக்கு, இதை நாம் புரிந்து கொள்ளும் அளவுக்கு, நாங்கள் எங்களை மாற்றியாக வேண்டும். இலங்கையில் புரட்சிகர மாற்றம் என்பது, வெளியில் இருந்தல்ல எம்மில் இருந்து தொடங்க வேண்டும். அதுதான் இலங்கை மக்களின் புரட்சிகரமான மாற்றத்துக்கான முதல்படி.

பி.இரயாகரன்

20.10.2012


Most Read

முற்றவெளியில் பிணத்தை எரிக்க, கொள்ளிக்கட்டை கொடுத்த வெள்ளாளியப் பண்பாடு

யாழ். நாகவிகாரை விகாராதிபதியின் உடலை யாழ் முற்றவெளியில் எரிக்க வேண்டும் என்று அடம்பிடிக்க, அதை எதிர்க்கும் அளவுக்கு இனவாத - இந்துத்துவ சாதிய அரசியல் நடந்தேறியிருக்கின்றது. மக்களை ஒடுக்குவதையே தங்கள் அரசியலாகக் கொண்ட ஒடுக்கும் தரப்புகள், ஒடுக்கப்பட்ட தமிழ்மக்களின் மேலான தங்கள் அதிகாரத்தை அரசியல் மயமாக்கும் அரசியலாக, தகன நிகழ்வை மாற்றியிருக்கின்றனர்.

பிரமுகர்கள் மரணமாகும் போது பொதுவெளிகளில் தகனம் செய்யும் புத்த மதத்தின் மரபை, ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் முதுகில் போட்டு எரிப்பதற்;கு "நல்லாட்சி" அரசு கங்கணம் கட்டி நின்று, அதை தங்கள் அதிகாரங்கள் மூலம்  அரங்கேற்றினர். இந்த இனவாத அரசியல் பின்னணியில் "நல்லாட்சி" அரசின் தூண்களான கூட்டமைப்பின் அனுசரணையுடனேயே, இந்த முரண்பாடு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான அரசியலாக்கப்பட்டது.

வேள்வியை தடைசெய்யக் கோரும் வெள்ளாளிய இந்துத்துவம்

யாழ் குடாநாட்டில் மிருகபலி மூலம் நடைபெறும் வேள்வியானது பாரம்பரிய வரலாறு கொண்டது மட்டுமின்றி ஆதி மனித வழிபாட்டு முறையின் தொடர்ச்சியாக இருக்கின்றது. இது காலகாலமாக இந்து வெள்ளாள சாதிய வழிபாட்டு முறைக்கு முரணாகவும் இருந்து வருகின்றது. ஆதிமனித வழிவந்த ஒடுக்கப்பட்ட சாதிகளால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட மிருக பலி மூலமான வழிபாட்டு முறையானது, ஒடுக்கும் சாதியைச் சேர்ந்த மக்களையும் தனக்குள் உள்வாக்கிக் கொண்டதுடன் வேள்வியான உணவுக் கொண்டாட்டமாக மாறி இருக்கின்றது. இறைச்சி விரும்பி உண்ணும் உணவாக மாறி இந்து-சாதி பண்பாட்டு கூறுகளை அழிக்கின்றது. இதானல் இதை சாதிய இந்துத்துவவாதிகள் தடை செய்யக் கோருகின்றனர்.

மிருக பலி !?

இலங்கையில் மாடு வெட்டுவதை தடை செய்வது பற்றி ஜனாதிபதி கூறியதாக செய்திகள் வெளிவந்திருக்கின்றது. உழைக்கும் மக்கள் மாட்டு இறைச்சியை தங்கள் உணவாக உண்பதை சமூக பண்பாடாகக் கொண்டவர்கள். இதற்கு எதிராக "மாடு புனிதமானது" என்றும் மாட்டு இறைச்சியை உண்ணக் கூடாது என்ற பிரச்சாரத்தை வெள்ளாள சாதிய இந்துத்துவ மதவாத சக்திகள் முன்னெடுத்து வந்ததுடன், மாட்டு இறைச்சியை ஓடுக்கப்பட்ட சாதிகளின் "இழி' உணவாக காட்டி வந்தனர். அதேநேரம் பௌத்த மத அடிப்படைவாதிகள் கூட இதே இந்துத்துவ சாதிய அடிப்படையில் முன்வைத்து வந்ததுடன் முஸ்லீம் மக்களின் உணவுப் பண்பாட்டுக்கு எதிரான பிரச்சாரமாகவும் இதை முன்னெடுத்து வருகின்றனர்.

உலகை குலுக்கிய வர்க்கப் புரட்சியின் 100 ஆண்டு

மார்க்சியம் என்பது கற்பனையல்ல. மானிட வாழ்வியலைப் பற்றிய தத்துவமே மார்க்சியம். மார்க்சிய தத்துவத்தின் நடைமுறையே, 1917 உலகைக் குலுக்கிய வர்க்கப் புரட்சியாகும்.

இந்தப் புரட்சி தனியுடமைக்கு எதிரான வர்க்கப் புரட்சி என்பதாலே, எல்லாப் புரட்சிகளிலும் இருந்து வேறுபட்டு நிற்கின்றது. இதனாலேயே 1917 நடந்த புரட்சி, உலக வர்க்கப் புரட்சிக்கான ஆயுதமாகி நிற்கின்றது. எல்லாவிதமான ஒடுக்குமுறைகளுக்;கும் எதிரான உண்மையான நேர்மையான தத்துவமாக மார்க்சியம் இருப்பது போல், 1917 புரட்சியே இன்றைய புரட்சிகளுக்கு எல்லாம் நடைமுறையாகவும் இருக்கின்றது. இது தான் இன்றைய எதார்த்தம்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

MOST READ