Thu05022024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்

"முகம்" இழந்தவரின் ஆணாதிக்க பின்னணி இசையில் முகிழ்ந்த "சுதந்திர" பெண் விடுதலைக் கோசம்

  • PDF

28.1.2001 பாரிசில் நடந்த வேலணை மகாவித்தியாலய பழைய மாணவர் சங்க நிகழ்வில், பெண் விடுதலை என்ற பெயரில் ஒரிருவர் சுதந்திர கோசத்தை, புலம் பெயர் இலக்கியவாதிகள் அனைவரையும் எதிர்த்து எழுப்பினர். ஒரிருவர் அண்மையில் நடத்திய புலம் பெயர் இலக்கியச் சந்திப்பை மான வெட்கமின்றி அண்மையில் அலங்கரிக்கவும் தவறாதவர்கள். சொல்லுக்கும் செயலுக்கும் எவ்வளவு முரண்பாடு. புலிகளின் பினாமியாக உத்தியோகபூர்வமாகவும், உத்தியோகபூர்வமற்ற நிலையிலும் இயங்கும், 99 சதவீதம் சினிமா திரைப்பட ஆணாதிக்க பாடல் குப்பைகளை அடிப்படையாக கொண்டு இயங்கும் ஐரோப்பிய தமிழ் வானொலி தொலைக் காட்சிகளில், படுபிற்போக்கான அறிவிப்பளார்களாக பவனி வருபவர்கள். அங்கு தேவாரம் முதல் திருக்குறள் வரை குழந்தைகள் மீது திணித்து, ஆணாதிக்கத்தை மதத்தினுடாகவும் பண்பாட்டின் ஊடாகவும் ஊட்டி வளர்ப்பவர்கள். புலம்பெயர் இலக்கிய வாதிகளின் நேர்மையைப் பற்றி வாய் கிழிய கோசமிட்டவர்கள், பார்ப்பனிய ஆணாதிக்க அடிமை திருமணச் சடங்குகளின் சின்னமான தாலியை கழுத்திலும், ஆணின் அடிமையை பறை சாற்றும் குங்குமத்தை நெற்றியிலுமாக மடிசார் முறையில் வீற்றிருந்து, ஆணாதிக்கம் பற்றி தமது கோசத்தை, நேர்மையினமாக நடைமுறைக்கு எதிராகவே இரவல் கோசத்தில் எழுப்பினர். புலம்பெயர் இலக்கிய சீரழிவையும் வக்கிரத்தையும் குறித்து விமர்சிப்பதற்கு, அதாவது இங்கு பொதுவில் அல்ல, குறைந்தபட்சம் அதற்கு சமூக நடைமுறையில் ஆணாதிக்க ஒழிப்பில் நேர்மை தேவை. குறிப்பான பாதிப்பு இருப்பின் குறித்த விமர்சனமும், பொதுவான விமர்சனம் எனின் உயர்ந்த சமூக விஞ்ஞான கோட்பாட்டின் அடிப்படையில் நின்று செய்வதுமே நேர்மையாகும். இந்து மதத்தை ஒழிக்காமல் பெண்ணியம் என்பது வெற்றுப் பேச்சாகும். இந்து மதமே ஆணாதிக்க வக்கிரமாகவும் வன்முறையாகவும் இருக்கின்ற போது, இந்துமதச் சடங்குகளை கோயில் படியேறி செய்வதில் தொண்டராக இருந்தபடி, ஆணாதிக்க ஒழிப்பு பற்றி பிதற்றுவது எதற்காக? புலிகளின் ஆணாதிக்க உரைகள் முதல் நடத்தைகள் வரை சமரசம் செய்து சோரம் போய் விமர்சிக்க வக்கற்று, அனைத்து மனித விரோதத்துக்கும் துணை போபவர்கள், புலிகள் அல்லாத இலக்கிய வாதிகளின் கோட்பாடுகள் மீது பொதுவாக கொச்சைப்படுத்தி தாக்குவது எதற்காக? ஆனால் தேசியம் மீது மட்டும் ஆகயாக, என்ன காதல்! என்ன சமரசம்! என்ன ஆணாதிக்கம்! இதன் அரசியல் பின்னணி என்ன?  தாம் சொல்வதற்கு எதிராக ஆணாதிக்க அடிமைத்தனத்தை தனக்குள் பாதுகாத்தபடி, பெண் விடுதலை பற்றிய பிதற்றல், உள்ளடக்கத்தில் பிற்போக்கானவை. ஆணாதிக்க அடிமைத்தனத்தை தாலியிலும், குங்குமத்திலும், மெட்டியிலும் அணிகலனாக அணிந்தபடி, அந்த சடங்குகளை சுயவிமர்சனமின்றி பாதுகாத்தபடி, மேடையில் அச் சின்னங்களுடனும், வனொலியிலும் அதை பண்பாடாக கூறியபடி, கோசம் போடுவதே பெண் விடுதலை என்கின்றனர். தேசிய விடுதலைப் போராட்டத்தை பயன்படுத்தியும், தமிழ் மக்களை ஆழ்ந்த அறியாமையிலும், வீட்டில் ஆணாதிக்க சினிமாவைக் கொண்டு தனிமையில் காலம் தள்ளி வாழும் அடிமைப் பெண்களின் தொலைபேசித் தயவிலும், பிழைப்பு நடத்தும் வனொலிகளின் அறிவிப்புத் திலகங்களின் பெண்ணியம் என்பது, நவீன ஆணாதிக்கத்தை பெண்ணுக்கு அணிகலனாக்கி அதை நடைமுறையில் கொண்டிருக்கும் "சுதந்திரத்தை" அங்கீகரிக்க கோருவதாகும். ஆணாதிக்க அடிப்படை நிலப்பிரபுத்துவ ஏகாதிபத்திய பண்பாட்டு கலாச்சாரங்களை பேணியபடி "சுதந்திர" ஆணாதிக்கத்தில், பெண்களின் "சுதந்திர" ஆணாதிக்க நடத்தைகளை கோருவதில் இவை மண்டிக்கிடக்கின்றது. இப்படி நடைமுறையில் ஆணாதிக்கத்தை கொண்டபடி கோசம் போட்ட பெண்கள் புலம்பெயர் இலக்கியத்துடன் எந்தவிதமான ஒட்டோ உறவோ கிடையாது.  புலம் பெயர் இலக்கியத்தை படிப்பதோ, அது பற்றி தெரிந்து கொண்டவர்களோ அல்ல. ஆனால் புலம் பெயர் இலக்கியம் மீது தேசியத்தை விலத்தி மற்றைய கோட்பாடுகளின் மீது நடத்திய பொது தாக்குதலின் பின்னணி என்ன? (பார்க்க பெட்டிச் செய்தியை.)

அதே நிகழ்ச்சி மண்டபத்தில் உரத்து பெண்ணியம் பேசிய ஒருவரின் சொந்த மகள், படையப்பா படத்தின் "சுதந்திர" பாடல் காட்சிக்கும், வேறு சினிமா பாடலுக்கும் ஆடிய ஆட்டம், டிஸ்கோவில் பெண் "சுதந்திரம்" பெற்று ஆடியதை ஒத்ததே. ஏகாதிபத்திய பண்பாட்டில் பிள்ளைகள் இயல்பாகவே இதை ஆடுவது, ஏகாதிபத்திய நாட்டின் பொதுவான சமூகப் போக்காக இருப்பது முற்றிலும் இதிலிருந்து வேறானது. ஆனால் இதை தாயும் தந்தையுமாக முன்னின்று நடத்தியது என்பது, பெண்ணியத்தை பேசும் அருகதையை அற்றதாக்கின்றது. அப்பெண்ணின் தாயும் தந்தையும் இப் பெண்ணை, தந்தை வேலை செய்யும் டிஸ்கோவில் ஆட அனுமதிப்பாரா? இன்றைய சினிமாவில் நடிகை, மற்றும் துணை நடிகைகளை ஆணாதிக்க வக்கிரத்துக்கு தீனிபோடும் வகையில், ஆட வைக்கும் ஆணாதிக்க சினிமா உலகத்தின், ஆணாதிக்க பாடல் மற்றும் நடனப் பண்பாட்டை பெண்ணியம் பேசியபடி, சொந்த மகளுக்கு பழக்கி அதை மேடையில் ஏற்றி ரசிக்கும் பெண்ணியம் எந்த வகைப்பட்டது. இந்தப் பண்பாடு எல்லை பல கடந்து உலகை ஆக்கிரமிக்கும், உலகமயமாதலின் நீக்கமற்ற மறுவடிவம் தான் இது. அதை பழைய மாணவர் சங்கத்தின் குறைந்தபட்சம் இருக்கும் உள்ளார்ந்த  நேர்மையான நோக்கத்தை கொச்சைப்படுத்தும் வகையில் நடத்தியது என்பது, மாணவர் சங்கத்தின் சமூக கண்ணோட்டத்தின் பலவீனங்கள் மீது தான். இந்த சமூகத்தின் ஆணாதிக்கம், அறியாமை, மூடத்தனம், நிறவாதம், இனவாதம், தற்குறித்தனம், சாதியத் திமிர்... என அனைத்தினதும் தலைமைக் குருக்கலாக வழிகாட்டியாக முன்னோடியாக இருப்பவர்கள், ஆணாதிக்க ஒழிப்பு பற்றி கோசம் போட்டு வேசம் போடுவது அருவருப்பான பெண்ணியமாகின்றது.

முகத்தின் பின்னால்

இப்பெண்களை புலம்பெயர் கோஸ்டி கானத்தில் ஆசியும் அருளும் வழங்கி ஆட்டுவித்தவனாக நம்பப்படுபவன் "முகம்" எடுத்து முகமிழந்த "முகம்" காட்டா கவிஞனாவன். இக் கவிஞரின் பல கவிதைகளும், இவரின் ஆசியும் அருளும் பெற்று எழுதப்பட்ட பல கவிதைகள், இப் பெண்ணிய கோசவாதிகளால் உரிமை கோரியும் கோராதும் அரங்கேறியது பலரும் அறிந்ததே. புலம் பெயர் இலக்கியத்தில் மலட்டுத்தனத்தில் உயிர்ப்பிக்கும் ஆற்றலற்ற வக்கிரத்தை வெளிப்படுத்திய விதம் கேவலமானது. இக் கவிஞனின் இலக்கியம் என்பது மென்மையான உணர்ச்சி சார்ந்தது என்ற போர்வையில், பூர்சுவா பெண்ணுக்கேயுரிய ஆணாதிக்கம் சார்ந்த மென்மையான உணர்வுகளை, இலக்கியத்தினைக் கொண்டு மயக்கி அவர்களை ஏமாற்றி நுகரும், ஒரு அற்ப ஊரறிந்த பொறுக்கியாவான். மென்மை உணர்வை பெண்களுடன் பொருத்தி அதை இலக்கியத்தின் பண்பாக காட்டி, கவிஞன் மென்மையான உணர்வுகளைக் கொண்டவன,; அவன் பெண்களின் மென்மையான உணர்வில் ஒன்று கலப்பவன் என்று நியாயப்படுத்தி, பெண்களை இலக்கியத்தின் பின் ஏமாற்றி நுகரும் இலக்கியப் பண்பாடு, இலக்கிய வரலாற்றில் புதியவையல்ல. இதைச் சொல்லியே பல கவிஞர்கள் கவிஞர்களாக நுகர்ந்து பொறுக்கி வாழ்கின்றனர். கவிஞனின் "சுதந்திரம்" அனைத்தையும் விட மேலானது அல்லவா!! இந்தப் பொறுக்கி தமிழ் வனொலிகளின் பிற்போக்கை எதிர்ப்பதாக பாசாங்கு செய்தபடி, செய்தி அறிவிப்பாளர்களுக்கு ஆலோசனைகளும், முகமற்ற கவிதைகளையும் எழுதிக் கொடுத்து, பெண்களை இலக்கியத்தின் ஆணாதிக்க தேசிய ரசனைகளுக்குள்ளும், பயன்பாட்டுக்குள்ளும் வளைத்துப் போடும் விடயத்தில் முகமற்ற சமரசவாதியாவான். கவியின் இலக்கிய ரசனையை ரசித்து நண்பியாக இருந்தவர்களும் இல்லாதவர்களும்;, ஆணாதிக்க கவிஞனால் ஏற்பட்ட சொந்த மனைவியின் துயரத்தை கவிதை நிகழ்வாக்கவில்லை. சொந்த மனைவி இலங்கையில் தனிமையில் பல வருடங்கள் தவித்து தனித்து கிடந்த போது, அந்த பெண்ணின் "முகம்" இழந்த முகத்தை, ஆணாதிக்கத்துக்கு எதிரான போராட்டங்கள் நிச்சயமாக வரலாற்றில் படமாக்கும். இந்தியா இலங்கை மீது சமதானப் படை வேடத்தில் ஆக்கிரமித்து, தமிழ் பேசும் மக்களை கொன்றும், கற்பழித்தும் சொத்துகளை சூறையாடி அழித்த நிகழ்வுகளை, பெருமை பட பீற்றும் கவிஞர், ஒரு இந்தியக் கைக்கூலியாவர். புலம்பெயர் இலக்கியத்தினை பொதுப்படையாக தூற்றுவதற்கு அவரின் தனிப்பட்ட காழ்ப்புகளை அடிப்படையாக கொண்டு,  அதை முகமிழந்து "முகம்" தெரியாத பின்ணியில் சேற்றை அள்ளி எறிவது, புலம்பெயர் கோஷ்டி கானத்தின் இசையின் ஒரு பக்கமாக இது வெடித்துக் கிளம்பியது. புலம்பெயர் இலக்கியத்துடன் எந்தவிதமான தொடர்பற்ற பெண்களை ஆதாரமாக கொண்டு, அதை தூற்றுவித்த ஒரு வக்கிரம் கொண்டவனாக, இலக்கிய கோஸ்டி வாதத்தை துணை கொண்டு புரையோடிய போது இலக்கிய வக்கிரம் வெளிப்பட்டது. எடுப்பார் கைப்பிள்ளையாகி சுதந்திரம் இழந்து கருத்திழந்து பொம்மையாக, அவர்களுடன் நேரடியாக சம்பந்தமில்லாத புலம் பெயர் இலக்கியம் மீது பொதுத் தாக்குதலை நடத்தியோர், படுபிற்போக்காக இருக்கின்ற சமுதாயத்தின் முன்னணி நடிகர்கள் தான்.