Language Selection

இன முரண்பாடும், முரண்பாட்டின் தன்மையும், முழுமை தளுவியதல்ல. அதாவது இலங்கை தளுவியதில்லை. வடக்கு கிழக்கு தமிழர் இன முரண்பாட்டை பிரதான முரண்பாடாக கருதுகின்ற போது, வடக்கு கிழக்கு அல்லாத பகுதிகளில் வாழும் தமிழரும் சிங்களவரும் அப்படிக் கருதவில்லை. இங்கு அவர்களின் பிரதான முரண்பாடு, வர்க்க முரண்பாடாக உள்ளது. அதேநேரம் இதே முரண்பாடு, வடக்கு கிழக்கு மக்களுக்கு அதே நிபந்தனையின் கீழ் உள்ளது. ஒரு நாட்டின் உள்ளான நிலைமை இது. அதேநேரம் வடக்கு கிழக்கு மக்களுக்குள் பிரதேச சாதிய வர்க்க முரண்பாடுகள் கூர்மையாகியுள்ளது.

இந்த நிலையில் இதை எல்லாம் மறுத்து, இன முரண்பாட்டை மட்டும் முன்னிலைப்படுத்துவது யார்? வடக்கு கிழக்கில் உள்ள சுரண்டும் வர்க்கம்தான். அவர்கள் தான் பிரிவினையை முன்வைக்கின்றனர். வடக்கு கிழக்கு மக்கள் சந்திக்கின்ற மேலதிகமான இனவொடுக்குமுறை, அந்த மக்கள் சந்திக்கின்ற வர்க்க ஒடுக்குமுறையை இல்லாததாக்கிவிடுவதில்லை. சாதிய பிரதேச முரண்பாடுகளை களைந்துவிடுவதில்லை.

பிரிவினையை முன்தள்ளும் சுரண்டும் வர்க்கம், இலங்கை தளுவிய வர்க்க முரண்பாட்டை மூடிமறைத்து, பிரிவினை மூலம் அதைப் பாதுகாத்து தன் சுரண்டும் உரிமையாக அதை மாற்றுகின்றது. இந்தப் பிரிவினைவாதத்தின் அரசியல் உள்ளடக்கம் இந்த அடிப்படையில் தான் கருக்கொள்கின்றது. ஒடுக்கும் இன சுரண்டும் வர்க்கம் தன் இன மக்களையும் சுரண்டுகின்றது என்பதையும் மறுத்து அல்லது மூடிமறைத்து, அனைத்தையும் வெறும் இன ஒடுக்குமுறையாகக் காட்டுகின்றது. இலங்கையின் பிரதான முரண்பாடு இனமுரண்பாடாகவும் காட்டுகின்றது. இதன் மூலம் தான் சுரண்டும் உரிமையை, முன்னிறுத்தி பாதுகாக்கின்றது.

 

 

பாட்டாளி வர்க்கம் ஒடுக்கும் இன சுரண்டலையும், அதுவே அந்த இன மக்களின் பிரதான முரண்பாடாக இருப்பதை எடுத்துக் காட்டுவதுடன், இன ஒடுக்குமுறையையும் எடுத்துக் காட்கின்றது. அதேநேரம் சுரண்டும் பிரிவினையை மறுத்து, ஐனநாயகக் கோரிக்கையை முன்னிறுத்தி அதற்காகப் போராடுகின்றது. லெனின் இதைத்தான் "எல்லாத்தேசிய இனங்களுக்கும் பிரிந்து போகிற உரிமையை ஒப்புக்கொள்வது, பிரிந்துபோகின்ற பிரச்சனை எழுகின்ற போது எல்லா ஏற்றத்தாழ்வுகளையும், எல்லா விசேச உரிமைகளையும் எல்லாத் தனித்துவப்போக்கையும் நீக்கும் நோக்கத்துடன் அதை அணுகிச் சீர்தூக்கிப்பார்ப்பது' என்றார்.

இல்லையென்று சொல்லும் மார்க்சியம் எதுவும் கிடையாது. இழப்பதற்கு எதுவுமற்ற பாட்டாளி வர்க்கம், இனவொடுக்குமுறையால் இழப்பதற்கு எதுவும் இருப்பதில்லை. இங்கு நிலவும் இனவொடுக்குமுறையால் பாதிக்கப்படுவது பாட்டாளி வர்க்கமல்ல. பாட்டாளி வர்க்கமல்லாத மற்றைய வர்க்கங்களின் நலன்கள்தான். இங்கு ஜனநாயகக் கோரிக்கை என்பது, தன் இன மக்களை சுரண்டுவதை அது அனுமதிப்பதில்லை. அது சொந்த இனப் பாட்டாளி வர்க்கத்தை சுரண்டுகின்ற பூர்சுவா வர்க்க உரிமையை மறுத்து நிற்கின்றது. ஜனநாயகக் கோரிக்கைக்கு மாறான பிரிவினைவாதம் என்பது, சுரண்டலை நடத்த அனுமதிக்கும் கோரிக்கையாகும்.

இங்கு பாட்டாளி வர்க்கத்தின் கடமை, இனம் கடந்த வர்க்க ஓற்றுமையைக் கோரி, சுரண்டல் வர்க்கத்தை தனிமைப்படுத்தும் வண்ணம் இடைநிலை வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதுதான்.

இனியொருவும் புதியதிசையும் முன்வைத்த தமது திட்டத்தில் "இலங்கையின் பிரதான முரண்பாடு தேசிய இன முரண்பாடு. … பிரதான முரண்பாடுகளைக் கடந்து இலங்கை மக்களின் பிரதான எதிரி தரகு முதலாளித்துவம்" என்கின்றனர். இலங்கையின் பிரதான முரண்பாடு "தேசிய இன முரண்பாடு" என்பது தவறானது. வடக்கு கிழக்கு அல்லாத மக்களின் பிரதான முரண்பாடு, வர்க்க முரண்பாடாகும். அதே முரண்பாடு வடக்கு கிழக்கு மக்களுக்கும் உள்ளது. "பிரதான எதிரி தரகு முதலாளித்துவம்" என்பது, குறுக்கிக் காட்டுகின்ற மற்றொரு அரசியல் திரிபு. "தரகு முதலாளித்துவம்" பிரதான எதிரிகளில் ஒன்றுதானே ஓழிய, அது மட்டும் தான் "பிரதான எதிரி"யல்ல.

தொடர்ந்து அவர்கள் கூறுகின்ற "பிரதான முரண்பாடான தேசிய இன முரண்பாடிற்கும் தேசிய இன அடக்குமுறைக்கும் எதிரான போராட்டங்களின் வெற்றியே இலங்கை மக்களின் விடுதலைக்கான முன்நிபந்தனையாக அமைகிறது" என்பது மற்றொரு திரிபு. இலங்கை மக்களின் (வடக்கு கிழக்கு அல்லாத மக்களின் பிரதான முரண்பாடு வர்க்க முரண்பாடு) வர்க்கப் போராட்டமும், தேசிய இன முரண்பாட்டை தீர்க்கும் ஆற்றல் உள்ளது. வடக்கு கிழக்கு அல்லாத பிரதேசத்தில் இனமுரண்பாடல்ல பிரதான முரண்பாடு. இதை குறுந்தேசியவாதிகள் தான், அதாவது பிரிவினைவாதத்தை முன்தள்ளும் கூட்டம் தான், இப்படி குறுக்கிக் காட்டுகின்றனர். லெனின் தலைமையிலான பாட்டாளிவர்க்க கட்சி, இதே நிலைமையை சந்திக்கவில்லையா? ருசியாவில் பல சிறிய தேசிய இனங்கள் ஓடுக்கப்பட்டு அங்கு இனமுரண்பாடு நிலவிய போது, சிறு தேசிய இனங்களின் முதன்மை முரண்பாடாக இனமுரண்பாடு இருந்த போது, ருசியாவின் வர்க்கப் போராட்டத்தை முதன்மை முரண்பாடாக கொண்டுதான் லெனின் வர்க்கப் போராட்டத்தை முன்னெடுத்து தேசிய இனவொடுக்குமுறைக்கு முடிவு கட்டினார். இங்கு சுயநிர்ணயத்தை உயர்த்திப்பிடித்து, வர்க்கப் போராட்டம் மூலம் இனவொடுக்குமுறைக்கு முடிவு கட்டினர்.

இந்த உண்மைகள் பலவற்றை தங்கள் பிரிவினைவாத திட்டத்துக்கு அமைய திரித்து மறுக்கின்றது, இனியொருவும், புதிய திசைகளும். இந்த வகையில் இவை குறுகிய குறுந்தேசிய இனவாதம் சார்ந்த பிரிவினைவாதத் திட்டமாகும். பாட்டாளி வர்க்கத்தின் ஐக்கியத்தை மறுத்து, அதற்கு குழிபறிக்கும் கோட்பாட்டையும் நடைமுறையையும் அது கோருகின்றது.

 

முற்றும்

 

பி.இரயாகரன்

26.02.2011

 

1. இனியொருவும் புதிய திசையும் முன்வைக்கும் சுயநிர்ணயக் கோட்பாடு இனவாதமாகும்-பகுதி 1

2. இனியொருவும் புதிய திசையும் முன்வைக்கும் சுயநிர்ணயக் கோட்பாடு இனவாதமாகும்-பகுதி 2


Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது