Wed05012024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்

மன்னித்து விடு தாயே! - வன்னி அகதி முகாமில் இருந்து கண்மணி

  • PDF

முகம் தெரியாத தாயே!
உனது வயிற்றில்
உருவான
முதற் கருவின்
கண்ணீர் வரிகளம்மா!
வன்னி அவலத்தின்
கண்ணீர் வாழ்கையில்

எனது வருகையை – நீ
அறியவில்லை
கொடியவர்களின்
கோரத் தாக்குதலில்
எத்தனை முறை – முகம்
குப்புற விழ்ந்து
குழறி அழுதாய்
கந்தகப் புகையிலும் - நான்
கசங்கி விடவில்லை.
நிவாரணக் கிராமங்கள் - என்று
வெளிப்பூச்சு பூசிய
முட்கம்பி சிறையினுள்
வந்தும்
எனது வருகையை
அறியமுடியாத பாவியாக
உணவுக்கும்
தண்ணீரிற்கும்
ஓடி ஓடித் திரிந்தாய் - தெரு
நாயை விடக் கேவலமாக
நீ மட்டுமல்ல
எங்கள் இனமே திரிந்தது
முட்கம்பிச் சிறையின்
தெரு வழியே  

உள்ளமும் உடலும்
களைத்து விடும் உனக்கு
உனது தாய்
உன்னை ஏசுவாள்
வேண்டாம் உணவு
விடு மகளே என்று
கொளுத்ததும் வெயிலில்
கூடாரத்திலும் - இருக்கமுடியாது
கும்பியும் பொறுக்காது
மீண்டும் திரிவாய்
மனித அவலம் என்பது
இது தானாம்மா?
நீ வாழும்
அவல வாழ்வை
பார்க்கும் போது – மனம்
பதறித் துடிக்கின்றது
மன்னித்து விடு தாயே!
அதனால் தான் - நீ
அறியும் முன்பேயே
கர்பத்திலேயே கரைந்து
கொண்டு இருக்கிறேன்.
நான் மட்டுமல்ல
என்னைப் போன்று
ஏராளமான கருக்கள்
முட்கம்பி வேலிக்குள்
முகவரி இன்றி கருகி விட்டன.
அதனால் நானும்
உன்னிடமிருந்து
விடைபொறுகின்றேன்
மன்னித்து விடு தாயே!

 

Last Updated on Monday, 08 March 2010 12:13