செங்கொடியின் சிறகுகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இடைத்தங்கல் முகாம்கள் எனும் பெயரில் ஏதிலிகளாக முட்கம்பி வேலிகளுக்குள் ராணுவக்காவலுக்குள் விடப்பட்டுத்தவிக்கும் மூன்று லட்சம் தமிழர்களின் கண்ணீரை துடைத்துவரும்(!) திட்டத்துடன் அனுப்பபட்ட நாடாளுமன்ற பத்துப்பேர் குழு திரும்பிவந்திருக்கிறது.

இந்த ஐந்து நாள் பயணத்தில் ஐந்து மணிநேரம் மட்டும் தமிழர்களை பார்வையிட்டுவிட்டு மீதி நேரங்களில் ராஜபக்சேவுடனும், அரசின் பிரதிநிதிகளுடனும் சந்திப்பதிலுமே செலவிட்டுள்ளது. பின்னர் சென்னையில் முதல்வரை சந்தித்தனர், முதல்வரும் இன்னும் பதினைந்து நாட்களில் 58 ஆயிரம் பேர் சொந்த வீடுகளுக்கு அனுப்பப்படுவர் என்று அறிவித்தார் அத்துடன் எல்லாம் முடிந்தது. ஆனால் இவைகள் யாரை ஏமாற்ற?

முதலில் இந்தக்குழு இந்திய அரசின் சார்பில் செல்லவிருப்பதாக கூறப்பட்டது, பின்னர் கட்சியின் செலவில் செல்வதாக மாற்றப்பட்டது. அனைத்துக்கட்சிகளின் உறுப்பினர்களும் என்று முதலிலும், கூட்டணிக்கட்சியினர் மட்டும் என்று பின்னரும் அறிவிக்கப்பட்டது. நாடகம் நடத்துவதற்குக்கூட தாம் தயாரில்லை என மைய அரசு நிலைப்பட்டிருப்பதையே இவை காட்டுகின்றன. என்றாலும் அரசின் சார்பில் சென்றிருந்தாலும் அனைத்துக்கட்சி உறுப்பினர்களும் சென்றிருந்தாலும் இந்தக்காட்சிகளில் மாற்றம் ஒன்றும் ஏற்பட்டிருக்கப்போவதில்லை என்பது தான் நிஜம். இந்தக்குழுவில் தமிழர்கள் பிரச்சனைகளில் அதிகம் உணர்ச்சிவயப்படக்கூடியவர் என்று அறியப்படுபவரான திருமா “முகாம் நிலைகள் திருப்திகரமாக இருக்கிறது என எமது குழுவில் யாரும் சொல்லவில்லை. நாம் திருப்தி அடையவும் இல்லை. ஆயினும் முகாம்களில் 1500 மருத்துவப்பணியாளர்கள் வேலை செய்கின்றனர் என்பதனையும் மறுப்பதற்கில்லை.” என்று தெரிவித்துள்ளார். திரைப்பட நகைச்சுவை காட்சி போல கஷ்டப்படுகிறார்கள் ஆனால் கஷ்டப்படவில்லை என்று கூறுவதற்குத்தான் இவர்கள் சென்றது, இதற்குத்தான் சோனியாகாந்தி, கருணாநிதி, ராஜபக்சே, டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் படங்களுடன், “இந்திய உறவுகளே! வருக! வருக!!” என்று வரவேற்கும் சுவரொட்டிகள் யாழ்பாணத்தில் ஒட்டப்பட்டிருந்தன. இந்திய அரசின் திட்டத்துடன், இந்திய ராணுவ உதவியுடன், ராணுவ தளவாடங்கள் இன்னும் அனைத்துவகை உதவிகளுடன் தான் தமிழர்கள் இந்த நிலைக்கு ஆளாக்கப்பட்டனர் என்ற உண்மையை இதுபோன்ற சோபையற்ற நாடங்களின் மூலம் மறக்கடித்துவிட முடியுமா?

58 ஆயிரம் பேர் பதினைந்து நாட்களில் திருப்பியனுப்பப்படுவர் எனும் கருணாநிதியின் அறிக்கையை, இலங்கை அமைச்சர் அனுரா பிரியதர்ஷன் யாபா மறுத்துள்ளார். “தமிழக முதல்வர் கருணாநிதி கூறியிருப்பது குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது” என்கிறார் அவர். இலங்கை அரசின் கொள்கைப்படி தமிழர்கள் மறுகுடியமர்த்தப்படுவர் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். என்ன இலங்கை அரசின் கொள்கை? தமிழர்களை மொத்தமாக குடியமர்த்தி தமிழர் பகுதிகளாக மீண்டும் இருக்கவிடப்போவதில்லை சிங்களவர்களையும் சேர்த்து குடியமர்த்திவிடவேண்டும் என்பதுதான். அதற்காகத்தான் கன்னிவெடிகள் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக இனவழிப்பு முடிந்ததிலிருந்து கூறிக்கொண்டிருக்கின்றனர்.

மூன்று லட்சம் தமிழர்களை இத்தனை மாதங்களாக முட்கம்பி சிறைகளுக்குள் ஏன் அடைத்து வைத்திருக்கவேண்டும்? ஏகாதிபத்தியங்களுடனான ஒப்பந்தங்கள் இன்னும் நிறைவடையவில்லை. சிறப்பு பொருளாதார மையங்களை எங்கு எவ்வளவு அளவில் அமைப்பது எந்த்ந்த இடங்களில் மக்களை மீள்குடியேற்றுவது? அவர்களின் வேலை வாய்ப்பிற்கான (அதாவது முதலாளிகளின் தேவைக்கு) கட்டுமானங்களுக்கு யார் பொறுப்பேற்பது? என்பன போன்ற பேரங்களில் இன்னும் நிறைவு எட்டப்படவில்லை. அடுத்து போர்க்குற்றங்களுக்கான தடயங்களை அழிப்பது. இதுபோன்ற காரணங்களுக்காகத்தான் தமிழர்கள் இன்னும் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். போர் நடந்து கொண்டிருந்தபோது அவர்களின் உரிமைகளைப்பற்றி பேசாமல் தமிழர்களை கொல்கிறார்கள் என்று இரக்கத்தை காட்டி உரிமைகளை மறைத்ததுபோலவே இப்போதும் சாப்பாட்டிற்கு சிரமப்படுகிறார்கள், குடிதண்ணீருக்காக நீண்ட வரிசையில் நிற்கிறார்கள், மாற்றுடை இல்லாமல் அவதிப்படுகிறார்கள், பருவமழை வந்தால் தாங்கமுடியாத துன்பத்திற்கு உள்ளாவார்கள் என்று அவர்களின் சிரமங்களை காட்டி உண்மையை மறைக்கிறார்கள்.

இங்கிருந்து சென்ற குழு, அது அரசுக்குழுவானாலும் தனிப்பட்ட குழுவானாலும்; அனைத்துக்கட்சியானாலும் தனிக்கட்சியானாலும் தமிழர்களை இத்தனை காலமாய் அடைத்துவைத்திருக்கும் உண்மையான காரணத்தை வெளிப்படுத்தமுடியுமா இவர்களால்? இலங்கை அரசுக்கு எப்படி அவைகளை மறைக்கும் தேவையிருக்கிறதோ அதேபோல் இந்திய அரசுக்கும் இருக்கிறது. அந்த தேவை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இல்லாமல் போய்விடுமா? இதை உணராமல் இன்னும் இந்திய அரசின் தயவில் ஈழத்தமிழர்களுக்கு நல்லது நடந்துவிடும் என நம்புவது முட்டாள்தனமானது. இந்த முட்டாள்தனத்திலிருந்து வெளிவருவதுதான் அவர்களுக்கு நாம் செய்யவேண்டிய கடமையின் முதற்படி.

http://senkodi.wordpress.com/2009/10/24/சிங்களம்-சென்றுவந்தோம்/

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது