Language Selection

கலையரசன்,ஈழநானூறும் புலம்பெயர் படலமும்"என்ற உங்கள் நூலிலிருந்த இந்தத் துண்டை வாசிக்கும்போது,நீங்கள் ஒரு இனத்தின் மீது நிகழ்ந்த இனவழிப்பு அரசியலை மிக மலினப்படுத்தப்பட்ட தலையங்கத்தில் புனைவாக மாற்ற முனைகிறீர்கள் என்று உணர்கிறேன்.


இது தமிழ் பேசும் மக்களது வரலாறு.
 
புலம் பெயர்ந்தது-ஈழப்போராட்டம்-இனக் கலவரங்கள் அனைத்தும் மிக ஸ்த்தூலமான பொருளாதாரத்தை அடைப்படையாகக்கொண்ட முரண்பாடுகளாலும்-அதன் தெரிவில்-இனங்களுக்கிடையிலான மூலதனத் திரட்சி-முதலீடு மற்றும் அதன் பாத்திரம்-இடம் எனப் பற்பல கட்டங்களாக இவை இனங்களுக்கிடையில் முரண்பாடாக விரிகிறது.
 
இத்தகைய வரலாற்றுக் கட்டங்களை மிகவும் குறுகிய புரிதலைக்கொண்டு எவரும் எழுதிவிடமுடியாது.
 
மனித சமூகத்தையும் அதன் பொருளாதார வாழ்வையும்,மானுடவியல் மற்றும் மார்க்சியக் கண்ணோட்டத்தோடு புரிவதற்கு முனையாத எந்த ஆய்வும் சரியான அடைப்படை உண்மைகளைக் கண்டவைதற்கு முடியாது.நாம் வர்க்கச் சமுதாயமாகப் பிளந்து கிடக்கின்றோம்.இங்கே வர்க்க ரீதியான நலன்கள் பற்பல முரண்பாடுகளையும் அதன் வாயிலான கிளை முரண்பாடுகளையும் இலங்கைபோன்ற பல்லின மக்கள் வாழும் தேசத்தில் உருவாக்கிறது.
 
வெறுமனவே,மேலெழுந்த புரிதலை வைத்துத் தமிழ்பேசும் மக்களது வரலாற்று நிகழ்வுகளை எழுதமுடியாது.அதற்குப் பலபேர்களது கூட்டு உழைப்பும்,சுயதிருப்தி-விருப்புக்கடந்த மிக உயர்ந்த ஆய்வு மனப்பாண்மையும்,வரலாற்று பொருள்முதல் வாதமும்-இயக்கவியல் பொருள்முதல்வாதமும் மிகத் திறம்படக் கைவசப்பட்டவர்களே இதைக் குறித்துப் பகுப்பாய்வு செய்ய முடியும்.
 
இனக்கலவரத்தை வெறுமனவே"யாழ்ப்பாணத்தவர்களது"பதவி ஆசையைக் காரணங்காட்டியேதாம் நிகழ்த்தப்பட்டதென்பது எவ்வளவு சிறுபிள்ளைத்தனமானது?
 
இலங்கையில் 1911 இல் ஏற்பட்ட இஸ்லாமியர்களுக்கும்,சிங்களவர்களுக்கும் ஏற்பட்ட கலவரம் எத்தகையது?இதன் பின் தமிழ் மக்கள்மீது நடாத்தப்பட்ட தாக்குதல்கள்-கலவரங்கள்,கண்டியச் சிங்களவருக்கும் கரையோரச் சிங்களவருக்குமுள்ள தலைவெட்டல்கள் என்பவையெல்லாம் நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.இவைகளுக்கான அடிப்படை முரண்பாடுகள் எங்ஙனம் தோற்றம் பெற்றதென்பதை மார்க்சியக் கண்ணோட்டத்தோடு பார்க்கப்பட்டாகவேண்டும்.அங்கே பொருளாதாரம் அடிப்படையாக முன்னிற்கிறது.இனங்களுக்கிடையிலான பொருளாதாரச் சுழற்சியை இனங்கண்டாக வேண்டும்.வளர்ச்சி-பங்கீடு,சந்தைப்படுத்தல் என்பவை இனங்களுக்கிடையில் எத்தகைய முறைமைகளில் முரணாக விரிந்தன என்பதெல்லாம் அவசியமான முறைமைகளில் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்படவேண்டும்.
  
இலங்கையின் இனக் கலவரத்தைப் புரிந்து கொள்வதற்குக் குறைந்த பட்சமாவது குமாரி ஜெயவர்தனாவை ஆவது படித்துக்கொள்ள வேண்டும்.இது ஆலோசனை அல்ல.உங்களது கட்டுரை மிகத் தவறான முறையில் வர்க்கங்களுக்கிடையிலான முரண்பாட்டையும்,இனங்களுக்கிடையிலான முதலாளித்துவ வளர்ச்சியில், ஆளும் வர்க்கங்களுக்குள் ஏற்பட்ட போட்டிகளையும் புரிய வைக்கிறது.அரச ஜந்திரத்தில் உறுப்புக்களாகவிருந்த யாழ் மேட்டுக் குடிகளது பதவி ஆசையைக் காரணங்காட்டிக் கலவரங்கள் நிகழ்ந்ததென்பது,தனிப்பட்ட இரு இனங்களுக்கிடையிலான பதிவிப்போட்டியாக விளக்கங்கொள்வது மிகக் கொடுமையானது.வரலாறு என்பது கதை எழுதும் வேலை அல்ல.அல்லது தனிநபரது ஆளுமைக்கும் உட்பட்டது அல்ல.அது ஒரு மிகப் பெரும் ஆய்வு மட்டத்துக்குள் பலபேர்களது கூட்டு உழைப்போடு மிகக் கறாரான மார்க்சியப் புரிதலோடு எழுதப்பட்டாக வேண்டும்.
 
இதைக் குறித்து, உலகை இனங்காண மார்க்சினது கூற்றைப் பாருங்கள்: வரலாறு கண்ட யுத்தங்கள் யாவும் வர்க்கங்களுக்கிடையிலானது"என்கிறார்.
 
இன்றைய புலிகளது தோல்வியைப் பாருங்கள்!
  
இதை மனம்போன போக்கில் எழுதிவிட முடியுமா?
 
வரலாற்றில் புலிகளது போராட்டத்தை எழுதுவதற்கு-அதன் காரணங்கள்,தோல்வியினது பாத்திரம்,அவர்கள் கொண்டிருந்த வர்க்க அரசியல்,இவைகளை மிகக் குறுகிய வட்டத்துக்குள் வைத்து எவரும் எழுதிவிட முடியாது.இதைப் போன்றதேதாம் இனக்கலவரங்களுக்குள் நிலவிய முரண்பாடுகளை ஆய்வு செய்வதும்,அதையொட்டிப் படைப்பதும்.
 
"ஈழநானூறும் புலம்பெயர் படலமும்"என்று மிகக் கேலித்தனமாக நமது சமூக வாழ்வியல் பிரச்சனைகளை எழுதுவது மிகக் கெடுதியானது.அக நானூறு-புற நானூறு என்ற பண்டைய இலக்கியத்துள் நிலவிய மானுட தரிசனத்தை மானுடவியற் கண்ணோட்டத்துடன் பார்த்து ஆய்வு செய்யும் இன்றைய மாணவன்,அக் காலக்கட்டத்து சமூக நடிவடிக்கையைப் பொருளாதார வாழ்வோடு இணைத்து, அதற்கு அர்த்தங்கற்பிக்க முனைவதில் கண்டடையும் உண்மை புறநிலையின் தன்மையில் எழுந்த சிந்தனை எங்ஙனம் வாழ்நிலையைத் தீர்மானித்தென்பதும், அங்ஙனமே வாழ்நிலை-எங்ஙனம் உணர்வைத் தீர்மானித்துக் கொண்டதென்பதை வரலாற்றில் மனிதர்களை வைத்துப் பார்க்கும்போது-அங்கே பொருளாதார முரண்பாடுகளையும், மனித வர்க்க நிலைகளையும் கண்டடைய முடியும்.இவ்வண்மையேதாம் இன்றைய மனித வாழ்வையும், இன்னொரு கட்டத்தில் பார்க்க முடியும்.இவற்றைக் குறிப்பது எதற்காகவென்றால்,உங்களது பிழையான-தவறான புரிதல்கள் நாளைய சுமுதாயத்துக்குத் தவறான புரிதல்களை கொடுக்கப்படக் கூடாது என்பதற்கே.
  
அடுத்து,1983 ஆம் ஆண்டுக் கலவரம் என்பது வெறுமனவே சிங்களக்காடையர்களது பங்குபற்றலுடன் நடாத்தி முடிக்கப்பட்டது அல்ல.அதற்குள் பல்லினக் குழுக்கள் பங்குகொண்டுள்ளன.இவற்றை வழி நடாத்திய அரச வன்முறை ஜந்திரத்துக்கு, ஆளும் அரசினது ஒத்துழைப்பு இருந்ததென்றால் அவ்வரசுக்குப் பின்னாலுள்ள ஆளும் வர்க்கத்தினது பாத்திரம் எத்தகையது?
 
இவற்றைக் குறித்துப் பர்ப்பதே வர்க்கக் கண்ணோட்ட ஆய்வு.
 
இதுதாம் வரலாற்றுப் பொருள் முதல்வாதக் கண்ணோட்டத்துடன் இயக்கவியல் பொருளாதாரப் புரிதலை சமூக இயக்கத்துள் உண்மைகளைக் காணப் பயன் படுத்துவது.இதை மறுத்தொதுக்கிவிட்டு,எடுத்தேன் கவிழ்த்தேன் பாணியில் இனக் கலவரத்தைப் புனைவது கண்டிக்கத்தக்கது.
 
எமது புலப் பெயர்வைக் குறித்து மலினப்படுத்தப்பட்ட முறையில்"படலம்"போட்டுச் சொல்ல முடியாது.
 
இவைகளுக்குப் பின்னால் நிகழ்ந்த சமூகசீவியச் சிதைவு-வாழ்சூழற்பாதிப்பு அதன் காரணமாகவெழுந்த உயிர் வாழ்வு அச்சம்,அதன் வாயிலாக எழுந்த சமூக அசைவியக்கம் இப்படிப் பல படிமுறைகளைப் புரிந்தே எதையும் எழுத முடியும்.இது பாட்டி வடை சுட்ட கதை அல்ல!
 
மார்க்சியத்தைப் புரிந்து,சரியான ஆய்வைக்கொண்டு எழுதவும்.
 
அடுத்து-
 
இந்துக் கல்லூரியில் திரண்ட அகதிகள் அங்கே கோடு கிழித்துச் சாதியத்தை நிலை நாட்டியது என்பதெல்லாம் வெறுமனவே குறியீடுகளாகச் சொல்ல முடியாது.இதற்குப் பின்னாலுள்ள உளவியற் சூழலையும் அறிந்து எழுத வேண்டும்.அதாவது, பெரு நகரத்தில் எப்படி-எங்கே சாதிகள் இனங்காணப்பட்டன,இவையூடாக கலவரத்துள் சிக்குண்ட மானூடரது உளவியற்றாக்கத்தில் சாதியத்தின் தெரிவு சாத்தியமாகுமா என்ற வரலாற்றுத் தர்க்கம்- உண்மைகள் அவசியமானது.இதைக் குறுகிய அரசியலாக்க முனைவது கபடம் நிறைந்தது.
 
உங்கள் "ஈழநானூறும்,புலப்பெயர்வுப் படலத்தின"; ஒரு சிறு துண்டே இப்படியென்றால் முழு நூலிலும் என்ன அபத்தம் உண்டோ யாரறிவார்?
 
மீளவுஞ் சொல்கிறேன்: வரலாற்று நிகழ்வுகளை தனிப்பட்ட ஒருவர் எழுதிவிட முடியாது.அது, பற்பல ஆய்வுகளுக்குள் உட்படுத்தப்பட்டுக் கூட்டாக எழுதப்பட வேண்டியது.அதுவும் மார்க்சிய-வர்க்கப் புரிதலோடு,அன்றைய சூழலில் இயங்கிய பொருளாதாரப் போக்குகளை மிகக் கவனமாகப் புரிந்தே எழுத வேண்டும்.
 
இல்லையேல் இன்னொரு சாண்டில்யன் பாணியில்தாம் இது முடியும்.
 
இந்தத் துண்டுக் குறிப்பே மிக அபத்தமானமுறையில் வரலாற்றையும், அதன் பாத்திரத்தையும் குறித்துச் சொல்கிறதென்றால்,அச்சில் வரும் முழு நூலது உள்ளடக்கமும் எத்தகைய புரிதலைத் தரப்போகிறது நமது இளைய தலை முறைக்கு?
 
சமூக நடாத்தைகளை பரபரப்பு முறையில் எழுதி விற்க முடியாது.இது சுத்த சிறுபிள்ளைத் தனமானது!இத்தகைய எழுத்து, ஏன்?-என்று கேள்வி கேட்டுக்கொண்டால்,அதன் அவசியம் எதற்கென்று புரியும்.
 
எழுத வேண்டுமென்பதற்காக எழுதி, நமது மக்களை மேலும் மொட்டையடிப்பது சமூகத்துக்குத் தீங்கு விளைவிக்கும்.-அவ்வளவுதாம்.
 
ப.வி.ஸ்ரீரங்கன்
26.07.09


Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது