Language Selection

 

இலங்கை மக்கள் எந்தச் சந்தர்ப்பத்திலும் இனம்,மொழி,மதங் கடந்து, தாம் அனைவரும் இலங்கையின் குடிகள்-உழைப்பவர்கள் என்றுகூவி அணிதிரளமுடியாதளவுக்குத் தமிழ்-சிங்களக் குறுந்தேசிய வெறிகளை மக்கள் விரோத அதிகார வர்க்கம் திட்டமிட்டுப் புனைகிறது! மக்கள் தத்தமது முயற்சியிலும்,உழைப்பிலும் காலத்தைக் கழித்துவரும்போது இத்தகைய மனித விரோதிகள் தத்தமது இருப்புக்காகப் புதிய,புதிய பாணியில் இனவாதத்தைக் கக்கி வருகிறார்கள்.இத்தகைய இனவாதிகள் கட்டித் தகவமைக்க முனையும் கருத்துவெளியானது இலங்கையில் வாழும் அனைத்து இனங்களுக்கும் எதிரானது!

"தமிழீழம்" கதை புனைந்து மக்களின் வாழ்வைக் கருவறுத்தவர்கள்,

யுத்தத்தைச் சொல்லி இதுவரை பணப்பெட்டிகளை நிறைத்தவர்கள்,

சுனாமியைச் சொல்லிச் சுதந்திரமாக உலக மக்களின் உதவிகளைச் சொந்தச் சொத்தாக்கியவர்கள்,

இலட்சம் மக்களின் உயிர்களைக் குடித்தபின்பு இன்னும் தமிழீழம் கேட்டுவருபவர்கள்,

தமது பிள்ளைகளை வெளிநாடுகளுக்கனுப்பிப் பாதுகாத்தவர்கள் மாற்றான் பிள்ளைகளைப் பிடித்துக் களத்துக்கு அனுப்புவதில் முனைப்புடையவர்கள்,

யாழ்ப்பாணத்திலிருந்து 24 மணி நேரத்துக்குள் முஸ்லீம் மக்களை அடித்துதைத்து வெருட்டி அகதியாக்கியவர்களென இந்தத் தமிழ்த் தேசியக் கயவர்கள் எல்லோருமாகச் சேர்ந்து,

மக்களை இன்னும் ஒட்டச் சுரண்டுவதற்குப் பெயர் "கண்ணீர் வெள்ளம்"எனப் புரிந்துகொண்டால்-

நீலிக் கண்ணீர் வடித்துக் கண்ணீர் வெள்ளம் கதைவிட்டுக் காசு சேர்ப்பதற்கும், பொருத்தமாக இனவாத்தைத்யே தெரிவுக்குட்படுத்தி,அதையே மிகக் காட்டமாகவும்,நுணுக்கமாகவும் விதைத்துப் புலம் பெயர்ந்து மேற்குலகில் வாழும் இலங்கைத் தமிழர்களை ஒட்டச் சுரண்டுவதற்கும்,சுரண்டிய பணத்தை வைத்துச் சொத்துச் சேர்ப்பதற்கும் யாழ்பாணத்தில் வெள்ளத்தில் மிதக்கும் அப்பாவி மக்களின் வாழ்வே இப்போது இத்தகைய திருடர்கள் அனைவருக்கும் கூடவே, தீபம் தொலைக்காட்சி நிறுவனத்துக்கும் அவசியமான விளம்பரமாகிறது,என்ற முடிவுக்கு வருவதில் எந்தத் தப்புமில்லை!-இதுவே, கடந்தகாலச் சுனாமி நிதி சேகரித்தவர்கள் நமக்குத் தந்தபாடம் என்பதும் நாம் கண்ட வரலாறு.


இத்தொலைக்காட்சியானது இதுவரை புலிகளின் ஊடகங்கள் செய்த வேலையை இப்போது திறம்படத்தாமே செய்து, புலிப் பினாமிகளுக்குச் சேவை செய்வதில் தனது பங்கைக் குறிவைத்து இயங்குகிறது.அதற்காகச் சுனாமியில் செத்தவர்களின் பிரேதங்களை இன்னுமொரு சுற்றுக்குவிட்டுக் காசுசேர்க்கும் கயமைத்தனத்தோடு காரியமாற்றுகிறது.

இலண்டனிலுள்ள சில மேட்டுக்குடித் தமிழர்களின் கயமைத்தனமான கூச்சலோடு, தொலைக்காட்சியில் தோன்றும் இந்தக் கேடுகெட்ட "கோட்-சூட்" கயவர்கூட்டம் இன்னொருமுறை புலம்பெயர்ந்த மக்களைச் சுரண்டித் தமது வருவாயைப் பெருக்கக் கத்துவது மக்களின் நலுனுக்கானதாக இருக்கமுடியாது!காசு சேர்ப்பதற்கு இலகுவானவொரு வழியை மிக இலகுவாகத் தெரிந்துகொண்டவர்கள் யுத்தத்தில் பாழாய்ப்போன மனிதர்களையும்,சுனாமியில் செத்த பிணங்களையும் காவி வந்து,அதைவைத்துப் பிழைப்பதற்கெடுக்கும் இந்த முயற்சியில் மீளவும், இலங்கையின் இனங்களுக்கிடையிலான இனவாத முரண்பாட்டையும் தொடர்ந்து கூர்மைப்படுத்துவதிலும் தமது இருப்புக்கும்,புலியின் இருப்புக்கும் மிக நெருங்கிய முறையில் சேவை செய்கிறார்கள்।இந்தச் சேவையை மக்களது நலனுக்கானதாகச் சொல்லிப் புலம் பெயர் மக்களின் உழைப்பைச் சுரண்டிக் கொழுக்க முனையும் இவர்கள் இதுவரை மக்களுக்குச் செய்தது என்ன?

"தமிழர் புனர்வாழ்வுக்கழகம்,
சிறங்கை
உதவுங்கரங்கள்,
வெண்புறா" இப்படி எத்தனை பேர்களைச் சொல்லி இக் கயவர்கள் நம்மைச் சுரண்டினார்கள்!

சுனாமியைச் சொல்லி,இறந்த மக்களின் உடலங்களை இனரீதியாகப் பிரித்துத் தமிழர்களே சுனாமியில் மிகுதியாக இறந்தார்கள் என்பதும்,தமிழ்ப் பிரதேசங்களே சுனாமியில் மிகவும் பாதிப்படைந்ததென்றும் கூறுபவர்கள், இலங்கை அரசு எதுவுமே செய்யாது உலக உதவிகளைச் சிங்கள மக்களுக்கே பயன்படுத்தியதாகவும் பூச் சுற்றுகின்ற வேலையூடாக இனவாதத்தோடு கோடுகிழித்துத் தமது கைகளுக்குப் பல கோடிகளைத் திரட்ட இன்னொரு வியாபாரத்தைச் செய்வதில் மேலும் பல்லாயிரம் மக்களைப் பலியெடுக்க முனைதல் மிகவும் கேவலமானது.இத்தகைய மனிதர்கள் இலங்கை அரசை எதுமே செய்யவில்லையெனும் அதே கருத்தையும் பார்வையையும் ஏன் வன்னியில் அரசாட்சி செய்யும் புலிகள்மீது இதுவரை செய்யவில்லை?

சுனாமியில் சேர்க்கப்பட்ட நிதியுதவிகளை இவர்களும்,புலிகளும் மனச் சுத்தியோடு மக்களுக்குப் பகிர்ந்தளித்தார்களா?அந்த மக்களுக்கு மறுவாழ்வளிகத்தக்க என்ன முன்னெடுப்பைச் செய்தாகள்?


அந்தச் சுனாமிச் சாவுகளை வைத்துப் படங்காட்டிப் பிழைத்தவர்கள், இறுதியாக இலங்கை அரசுக்குப் பறி கொடுத்த பணத்தின் தொகை 72 மில்லியன்கள் இலங்கை இரூபாயாகும்.இவர்கள் மேற்குலகத்திடமும்,அமெரிக்காவிடமும் பறிகொடுத்த தொகைகள் பல்லாயிரம் கோடிகளைத்தாண்டும்.அதைவிட இன்று மக்களின் அவலத்தையும்,தமிழீழத்தையும் சொல்லிக் காசு-நிதி சேகரித்த இத்தகைய கயவர்கள் எத்தனை ஆயிரம் கோடிகளுக்குச் சொந்தக்காரர்களாகத் தமது வளத்தைப் பெருக்கியுள்ளார்கள்?

ரஜனிகாந்தை வைத்து 150 கோடி இந்திய இரூபாய்களுக்குப் படந்தயாரிப்பதுவரை நமது மக்களின் சில்லறைகளை இவர்கள் குவித்து வைத்திருக்கிறார்கள்.இவர்களே,இப்போதும் அதே கதைகளோடு இனவாதத்தையும் ஒருங்கே சேர்த்துக் குழைத்துக் காசு சேர்ப்பதற்கு இலகுவான-இசைவான புலம் பெயர் தமிழ் மனத்தை உருவாக்க இந்தக் கேடுகெட்ட தீபம் தொலைக்காட்சி உடந்தையாக இருக்கிறது!

இன்று,சுனாமி நிதிக்கு என்ன நடந்தது?அப்பணத்தை வைத்து ஆயுதங்களும் அவரவருக்கு வீடுகளுமாக வேண்டிக் குவித்தவர்கள்,அந்த மக்களை அம்போவென விட்டத்தன் சாட்சிகளை பாதிக்கப்பட்ட மக்களின் கண்ணீர்க் கதைகளுடாக நாம் அனைவரும் கண்டறியமுடியும்.

யாழ்ப்பாணத்திலிருந்து அடித்துவெருட்டப்பட்ட முஸ்லீம்கள் இன்னும் தமது வரலாற்று மண்ணில் வாழ முடியாது புத்தளத்தில் அகதிகளாகச் செத்து மடிவதை இத்தகைய திருடர்கள் எப்போதாவது "ஒப்புக்காவது" பேசுகிறார்களா?அவர்களது வாழ்வாதாரத்தைச் சிதைத்த இந்தக் கேடுகெட்ட "தமிழீழ யுத்தம்"எத்தனை ஆயிரம் மக்களை இதுவரை பலியாக்கியது-கொலை செய்தது?

இன்னும் மக்களை அழிப்பதற்கும்,அவர்களின் வாழ்வைச் சிதைப்பதற்கும் முனைப்புடைய இக் கயவர்கள், இலங்கையில் வெள்ளாத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகக் காசு சேர்க்கிறதான பாவனையில் தொடர்ந்து இனவாதத்தை ஊட்டி வளர்ப்பதிலும்,தமிழ்க் குறுந்தேசியவாதத்தைத் தொடர்ந்து நிலைப்படுத்துவதிலும் கவனமாக இருக்கிறார்கள்.இதுவே,தம்மைக் காப்பதற்கான தெரிவாக இனவாதத்தைத் தூண்டும் இவர்கள் இதுவரை செய்தவை இலட்சம் மக்களைக் கொன்றுகுவித்ததைத் தவிர வேறொன்றும் இல்லை. கூடவே, முஸ்லீம் மக்களின் அவலத்தை-அடித்து வெருட்டியத் தமிழ் இனவாதச் சகதியை மிக நேர்த்தியாகத் தமது கோட்-சூட்டுக்குள் மறைத்து விடுகிறார்கள் இந்தக் கயவர்கள்!

தமது இருப்புக்காகவும்,நல் வாழ்வுக்காகவும் இலட்சம் மக்களையே யுத்தத்தில் கொன்று போலித் "தமிழீழக் கோசம்"போட்டுவரும் இந்தக் கேடான மேட்டுக்குடித் தமிழர்கள், நமது மக்களின் அவலத்தைத் தமது பணப்பெட்டிகளை நிரப்ப எடுக்கும் முயற்சிக்காகப் பயன்படுத்துவது மிகவும் கேவலமானது.இதைத் தடுப்பதற்கான எந்த முயற்சியும் அவசியமானது.

மக்கள் தத்தமது உறவுகளைக் காப்பதற்குத் தாமே மனமுவந்து உதவிகளைச் செய்வதற்கு இடையில் இத்தகைய கயவர்கள் அவசியமில்லை!

இவர்களது நடாத்தையைச் சுனாமி நிதியோடு நாம் பார்த்துவிட்டோம்.எனவே,இத்தகைய கயவர்களின் நீலிக் கண்ணீரை நம்பிச் சில்லறைகளை இழக்காது,ஒவ்வொரு புலம்பெயர்ந்த இலங்கை மக்களும் தத்தமது உறவுகளுக்கு அவசியமான நிதிகளை அவர்களுக்கு நேரடியாக அனுப்பி வைக்க, இன்று எம் முன் உள்ள தெரிவாக வெஸ்ற்றன் யூனியன் வங்கியின் பணமாற்றே சாலச் சிறந்தது.இலங்கையில் பாதிப்படைந்த குடும்பங்கள் பலவற்றின் கிட்டிய-எட்டிய உறவுறுப்பினர்கள்தாம் புலம்பெயர்ந்து இங்கு வாழ்வதால் அவரவர் இதைச் செய்யும்போது, பணமானது தகுந்த வகையில் பாதிக்கப்பட்ட மக்களைச் சென்றடைகிறது!

பாதிக்கப்பட்ட மக்களைச் சொல்லிப் பணஞ் சேகரித்த இந்தத் தமிழ் வியாபாரிகளை இனியும் நம்புவது நம்மை நாமே ஏமாற்றுவதில் முடியும்!

மக்களின் எந்த அவலத்தையுஞ் சொல்லிக் காசு புடுங்கும் மிகக் கெடுதியான சமூகக் குற்றத்துக்கு உடந்தையாக இருக்கும் தீபம் தொலைக்காட்சியோ, சமீக காலமாகக் காட்சிப்படுத்தும் இனவாதஞ்சார்ந்த கருத்துப் பரப்புரைகளுக்கு ஏதுவாக, இப்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களினது அதிமானுடத்தேவைகளும்,சுனாமியில் செத்தவர்களின் உடலங்களும் மிக அவசியமான பின்னணிகளாகவும்,இனவாதத்தை மேலும் விருத்தியாக்கித் தொடர்ந்து தக்கவைப்பதற்கும்,இலங்கையில் யுத்தத்தை அனைத்து வகையிலும் மக்கள்மீது திணிக்கவும்,அவர்களது குழந்தைகளைப் பலியெடுக்கவும்,தத்தம் தேவைக்கேற்ற முறையில் பணஞ் சம்பாதிக்கவும்-இவையனைத்துக்குமாக இனவாதம் ஒன்றே அவசியமாக இருக்கிறது தீபம் தொலைக்காட்சிக்கு.இதன் தெரிவு, நமது தலையில் மேலும் குண்டுகளை இலங்கைச் சிங்கள இராணுவம் கொட்டுவதாக இருக்கும்! இத்தகைய யுத்தச் சூழலால் தாம் பிழைத்துவிடலாமென இந்தக் கயவர் கூட்டம் கணக்குப் போடுவதன் முன் உதாரணங்களே இலட்சம் மக்களை இதுவரை பலி கொண்டதை நாம் ஒருபோதும் மறத்தலாகாது!

இலங்கையில் நிரந்தரமாக நடைமுறைப்படுத்தப்படும் யுத்தம், சிங்கள ஆளும் வர்க்கத்துக்கு மட்டுமல்ல அது தமிழ் வியாபாரிகளுக்கும் நல்ல வரும்படியை மக்களின் அழிவில் தந்துகொண்டே இருக்கிறது.இதன் சாட்சிகள் பல. சிற்றூர்களான ஜக்கச்சிக்கும், பளைக்கும் இடையில் கிடக்கும் கரந்தைக் குளத்தில் இருக்கும் பாரிய தென்னந்தோப்புக்களுக்கு இதுவரை எந்தக் குண்டும் விழாததும்,கடலில் மீன் பிடிக்கத் தடைவிதித்தபடி டின் மீன் இறக்குமதிமூலமாகக் கோடிகோடியாகச் சம்பாதித்த கொழும்பு வாழ் தமிழ்த் தரகு முதலாளிகளுக்கும் இராணுவத்தோடு நல்ல வகையான உறவுகள் புலிகளைப் போன்றே தொடர்கின்றன.

எனவே,எத்தகைய வடிவிலும் இனவாதமும்,தொடர்ந்த நிதித் திரட்டல்களும்,வியாபாரங்களும் நமக்குள் தொடர்கதையாக வரும்.வெவ்வேறு காலக்கட்டத்தில் வெவ்வேறு முகங்கள் நமக்குள் அறிமுகமாகிறது.அவைகள், மறக்காது இனவாதம்,சிங்கள இனவெறுப்பு,தமிழீழம் என்று மொழிபெயர்க்கிறது.நம்மை அகதிகளாக்கி, நமது மக்களைத் தொடர்ந்து அழித்த இந்தப் பேர்வழிகளை இனம் கண்டு, நிராகரிப்பதற்கு முதலில் இத்தகைய தீபம் தொலைக்காட்சிகளை பார்ப்பதற்காகச் சந்தா அட்டைகளை வேண்டுவதைத் தவிர்த்து விடுதலே மேலானது.

சிங்களவர்கள் மத்தியில் மாத்தையாப் போடும் தீபம் தொலைக்காட்சியில் தோன்றுபவர்கள்,தமிழ்மக்கள் மத்தியில் சிங்களவர்களோடு இணைந்துவாழ முடியாதென்கிறார்கள்!வியாபாரிகள்,வியாபாரிகள்தாமெனத் தமிழீழ விடுதலை வியாபாரிகளிடமிருந்து நன்றாகவே கற்க முடியும்!இவர்கள் தமது வளங்களைப் பெருக்குவதற்கு இன்னும் எத்தனை மனிதர்களின் தலையை உருட்டுவாகள்?இதையும்,இனிமேல் நாம் அனுமதிக்கத்தான் முடியுமா?


ப.வி.ஸ்ரீரங்கன்
28.12.2008

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது