மணல்சுடும்; வழிச்செல் வோர்கள், இறங்கியும் ஏறியும் போய் அணகரை மேட்டின் அண்டை அடர்மர நிழலில் நின்று தணலேறும் தம்கால் ஆற்றிச் சாலைகண் டூரைக் காண்பார். அணிநிலம் நடுவில் ஆற்றுப் பாதை "வான்வில்" போல் தோன்றும்.
வெள்ளம் வருமுன்
வெப்பத்தால் வெதும்பு கின்ற வெளியெலாம் குளிர்காற் றொன்று தொப்பென்று குதிக்க, அங்கே துளிரெலாம் சிலிர்க்கக் கண்டேன். எப்பக்கம் இருந்தோ கூட்டப் பறவைகள் இப்பக் கத்துக் குப்பத்து மரத்தில் வந்து குந்திய புதுமை கண்டேன்.
வெள்ளத்தின் தோற்றம்
ஒலிஒன்று கேட்டேன். ஓஓ புதுப்புனல்! பெரிய வெள்ளம், சலசல என்று பாய்ந்து வரக்கண்டேன் தணல் நிறத்தில் நிலவொத்த நிறம்க லந்து நெடுவானின் சுடரும் வாங்கிப் பொலிந்தது! கோடை யாட்சி மாற்றிற்றுப் புரட்சி வெள்ளம்.
ஒரேவகை ஆடை பூண்ட பெரும்படை ஒழுங்காய் நின்று சரேலெனப் பகைமேற் பாயும் தன்மைபோல் ஆற்று வெள்ளம், இராவெல்லாம் நடத்தல் கண்ட இருகரை மரங்கள், தோல்வி வராவண்ணம் நெஞ்சால் வாழ்த்தி மலர்வீசும் கிளைத்தோள் நீட்டி!
உழவர் முயற்சி
ஆற்றுவெள் ளத்தைக் காணச் சிற்றுரார் அங்கு வந்தார்! போற்றினார் புதுவெள்ளத்தைப்! புகன்றனர் வாழ்த்து ரைகள்! காற்றாகப் பறந்து சென்று கழனிகள் மடைதி றந்து மாற்றினார் வாய்க்கால்! மற்றும் வடிகாலை மறித்தார் நன்றே!
ஆற்று நடை
நோய்தீர்ந்தார்! வறுமை தீர்த்தார், நுற்றுக்கு நுறு பேரும்! ஓய்வின்றிக் கலப்பை துக்கி உழவுப்பண் பாட லானார்! சேய்களின் மகிழ்ச்சி கண்டு சிலம்படி குலுங்க ஆற்றுத் தாய்நடக் கின்றாள் வையம் தழைகவே தழைக என்றே!