Sat05042024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்

மாடு மேய்ப்பவன்

  • PDF

மாடுமேய்ப் பவனிடம் எனக்கென்ன வேலை?
வஞ்சிஎன் றழைத்தான் ஏனென்றேன் மாலை!--
மாடுமேய்ப் பவனிடம் எனக்கென்ன வேலை?

பாடொரு பாட்டென்றேன் பாடி இருந்தான்
பைந்தமிழ் கேட்டுநான் ஆடி யிருந்தேன்--
மாடுமேய்ப் பவனிடம் எனக்கென்ன வேலை?

"ஓடையில் தாமரை வாடிடும்" என்றான்
உள்ளங்கை விரித்தும் கூப்பியும் நின்றேன்
"வாடாத தாமரை உன்முகம்" என்றான்
மலர்காட்டி முகங்காட்டி வாய்பார்த்து நின்றேன்
"கூடியிருக்க" என்றான் கைகோத்து நின்றேன்
காடும் கமழ்ந்தது நான்விட் டகன்றேன்--
மாடுமேய்ப் பவனிடம் எனக்கென்ன வேலை?

காளைசொற் படிமறு நாளைக்குச் சென்றேன்
"கனிபோன்ற தென்பாங்கு பாடாயோ?" என்றான்
வேளை யாகிவிடும் என்று நவின்றேன்
விரும்பிப் பசுக்கறந்து "குடி" என்று நின்றான்
ஆளன் கொடுத்தபா லாழாக்குப் பால் என்றேன்
"அல்லடி காதற் கலப்பால் தான்" என்றான்--
மாடுமேய்ப் பவனிடம் எனக்கென்ன வேலை?

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp093.htm#dt102