Sat04272024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்

உலகப்பன் பாட்டு

  • PDF

பகுத்தறிவு மன்றத்தில் உலகம்என்ற
பழயமுத லாளியினை நிற்கவைத்து
மிகுத்திருந்த உன்நன்செய், புன்செய்யாவும்
வெகுகாலத் தின்முன்னே, மக்கள்யாரும்
சுகித்திருக்கக் குத்தகைக்கு விட்டதுண்டோ ?
சொல்!என்றேன்; உலகப்பன் ஆம்ஆம்என்றான்.
வகுத்தஅந்தக் குத்தகைக்குச் சீட்டுமுண்டோ
வாய்ச்சொல்லோ என்றுரைத்தேன். வாய்ச்சொல்என்றான்.

குத்தகைக்கா ரர்தமக்குக் குறித்தஎல்லை
குறித்தபடி உள்ளதுவா என்றுகேட்டேன்.
கைத்திறனும் வாய்த்திறனும் கொண்டபேர்கள்
கண்மூடி மக்களது நிலத்தையெல்லாம்
கொத்திக்கொண் டேப்பமிட்டு வந்ததாலே
கூலிமக்கள் அதிகரித்தார், என்னசெய்வேன்!
பொத்தல்இலைக் கலமானார் ஏழைமக்கள்;
புனல்நிறைந்த தொட்டியைப்போல் ஆனார்செல்வர்.

அதிகரித்த தொகைதொகையாய்ச் செல்வமெல்லாம்
அடுக்கடுகாய்ச் சிலரிடம்போய் ஏறிக்கொண்டு
சதிராடு தேவடியாள் போல்ஆடிற்று!
தரித்திரரோ புழுப்போலே துடிக்கின்றார்கள்;
இதுஇந்நாள் நிலைஎன்றான் உலகப்பன்தான்!
இந்நிலையி லிருப்பதனால் உலகப்பாநீ
புதுக்கணக்குப் போட்டுவிடு; பொருளைஎல்லாம்
பொதுவாக எல்லார்க்கும் குத்தகைசெய்.

ஏழைமுத லாளியென்ப தில்லாமற்செய்
என்றுரைத்தேன். உலகப்பன் எழுந்துதுள்ளி,
ஆழமப்பா உன்வார்த்தை! உண்மையப்பா,
அதற்கென்ன தடையப்பா, இல்லையப்பா;
ஆழமப்பா உன்கருத்து, மெய்தானப்பா,
அழகாயும் இருக்குதப்பா, நல்லதப்பா,
தாழ்வுயர்வு நீங்குமப்பா, என்றுசொல்லித்
தகதகென ஆடினான். நான்சிரித்து,

ஆடுகின்றாய் உலகப்பா! யோசித்துப்பார்!
ஆர்ப்பாட்டக் காரர்இதை ஒப்பாரப்பா!
தேடப்பா ஒருவழியை என்றுசொன்னேன்.
செகத்தப்பன் யோசித்துச் சித்தம்சோர்ந்தான்.
ஓடப்ப ராயிருக்கும் ஏழையப்பர்
உதையயப்ப ராகிவிட்டால், ஓர்நொடிக்குள்
ஓடப்பர் உயரப்பர் எல்லாம்மாறி
ஒப்பப்பர் ஆய்விடுவார் உணரப்பாநீ!

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp165puthiyaulagam.htm#dt153