மீன் உள்ளிட்ட கடல் வகை உணவுகளைச் சாப்பிட்டால் இதய நோய் வராது என்பது அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. மீன் உள்ளிட்ட கடல் உணவு வகைகளை தொடர்ந்து நாம் சாப்பிட்டு வந்தால் இதய ரத்த நாளங்களில் கொழுப்பு படியாது என்பது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க காலேஜ் ஆப் கார்டியோலோஜி பத்திரிகையில் இந்த ஆய்வு குறித்து விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. கடல் வாழ் மீன் வகைகளில் உள்ள ஒமேகா - 3 எண்ணெய் இதயத்தின் ஆரோக்கியத்தை பராமரிக்கிறது. ஜப்பானில் இதய நோய் மற்றும் மாரடைப்பு மிக மிகக் குறைவாக இருப்பதற்கு அவர்களது அன்றாட உணவில் மீன் இடம் பெறுவதே காரணம். 40 வயதிலிருந்து 49 வயதுக்குள்பட்ட 868 பேர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களில் 281 பேர் ஜப்பானைச் சேர்ந்தவர்கள். 306 பேர் வெள்ளையர்கள். 281 பேர் அமெரிக்காவில் வசிக்கும் ஜப்பானியர்கள். இவர்களுக்கு ரத்த பரிசோதனை உள்பட அனைத்து சோதனைகளும் செய்யப்பட்டன. இதய ரத்த நாளங்களின் அடர்த்தி, கொழுப்புச் சத்து ஆகியவை கணக்கிடப்பட்டன. அதுபோல் ரத்தத்தில் கால்சியத்தின் படிவு எவ்வளவு என்பதெல்லாம் சோதனை மூலம் பதிவு செய்யப்பட்டது. இதில் மீன்களை அதிகம் சாப்பிடும் ஜப்பானியர்கள் உடலில் இதய நோய்களைத் தடுக்கும் ஒமேகா 3 எண்ணெய் மற்றவர்களை விட இரண்டு மடங்கு அதிகம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. வெள்ளையர்களுக்கும் அமெரிக்காவில் வாழும் ஜப்பானியர்களுக்கும் ஒமேகா - 3 எண்ணெய் ஒரே அளவில்தான் இருந்தது. எனவே மீன்களை அதிகம் சாப்பிடும் ஜப்பானியர்களுக்கு ரத்தத்தில் ஒமேகா - 3 எண்ணெய் அதிக அளவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. |
||
|
< Prev | Next > |
---|