Language Selection

ஒப்பாரி,
ஒப்பாரி இது ஈழப்போர் தந்த ஒப்பாரிங்கோ!

 

பானையிலே போட்டரிசி
பாடையிலே போட்டழ பாதகர்கள் தரவில்லை
பாதகர்கள் தந்திருந்தால்
பால்வார்த்துப் பார்திருப்பேன்!

 

பாவீ நானும் பட்டழ
பரதவித்துப் போனாயோ?
மாவீரர் மகனென்ற மமதையிலே மடி மறந்து போனதுவோ?

 

மந்திகைக்குப் போன கதையாய்
மாசம் சுமந்த கதை போச்சு
மக்களில்லா வீட்டிற்கு மகத்துவமுண்டோ?

 

மடைச்சி நானும் மயங்கிப்போனேன்
மாவீரர் கதைகேட்டு
மகனே உனைமறந்த மரக்கட்டையை மன்னிப்பாயோ
என்ர குஞ்சரமே கொழுக்கட்டையே!

 

2
குஞ்சரமே குளத்தடியே
கொப்பனுக்குக் கற்கண்டே
கொட்டி வைத்த முத்தெல்லாம் மோதுண்டு சிதறியதோ?
மோடர் மலம் மிதித்திட்டால் மூன்றிடத்தில் நாசமென்று
சீலைக்குள்ள தவம் கிடந்து சிக்கனமாய் பெத்த குஞ்சே!

 

சண்டாளி நானெருத்தி சகதிக்குள்ளே கிடந்தழ
சாய்த்துவிட்டார் உனையல்லோ!
சாய்த்து வைத்த சுளகுபோல சாய்ந்தாயோ நீயுமங்கு?
ஏழை பெத்த பிள்ளையெல்லாம் எதிரயிடம் செத்துப்போக
கட்டுடலாய் காத்துவிட்டார் தத்தமது உடலையெல்லாம்

 

காயடித்த கடுகுப்பிஞ்சகள் கருகிவிழ
காலிப்பயல்கள் கதைபோட்டார் மாவீரர் திரைபோட்டு
கால்வலிக்க நடக்கின்றோம் மகவுகளின் உடல் புதைத்த குழி தேடி
காலமெல்லாம் கனவுகளாய் அவர் முகங்கள்

 

3

நாசமாய்ப்போனவங்கள் தேசத்தை ஆளயிங்கு
நாயிலும் கேவலமாக நான் கிடந்து அழுந்திடவோ?
நாதியில்லை நக்குவதற்கு
நமக்கிங்கு நல்வாழ்வாம் கடவுளிட்ட கற்கண்டே
கனியமுதே தேனமுதே

 

கக்கூசு கழுவவைக்கும் காலிப்பயல்கள்
சாதியப் பெருந்தடிப்பில் சதிராடி தமிழீழக் குரலெடுக்க
நாடுவொன்று வேண்டுமென்று நாங்களிங்கு செத்துப்போனோம்

 

;சின்னவயசுப் பயல்களெல்லாம் இப்போ
சீட்டியடிச்சுப் போகையிலே
சித்திரமே பத்திரமே
சிணுங்குகிறேன் உனை நினைத்து

 

கூட்டிவைத்துக் கதை சொன்னார்
கும்மியடி தமிழ் என்றார்
குரைத்து நின்ற எதிரொலியில் குறைகளெல்லாம் குறையுமென்று
குனிந்து நாங்கள் கும்பிட்டோம்

 

குனிந்த தலை நிமிர்வதற்குள் குடிகுலைந்துபோக
குளமாடி நின்ற கண்கள் குளிருடலில் புதைந்தனவே
குஞ்சரமே குண்டலமே நீ
வெஞ்சமரும் வேதனையாய் உணர்ந்தாயோ?

 

4

ஆருதாம் இருந்தென்ன
ஆனை கட்டி வாழ்தென்ன?
அமெரிக்கா சொன்னவுடன் அத்தனையும் பறந்துவிடும்
அப்பனுக்கு வைத்தநேத்தி அம்போவென்று போனதுவே!

 

பெட்டுகமே புத்தகமே
பேதையிங்கு தவிக்கையிலே
போண்டியான கோசங்களும் போடும் வரி கொஞ்சமல்ல
வாழ்ந்து நீயும் பார்திருந்தால் நிம்மதிக்காய் வாய்திறப்பாய்
போட்டிருப்பார் உன் கழுத்தில் தமிழினத்தின் துரோகியென்று

 

அம்மாவின் அருமருந்தே அப்பனுக்குப் பொக்கிசமே நீ
கச்சைக்குள்ள வெடி சுமந்த காலமெல்லாம்
கற்பம் கரைந்த கதையாச்சு

 

கண்மணியே கடைக்குட்டியே நீ
கால்தெறிக்கப் போனயோ அன்றி
போகுமிடம் தெரியாது பொழுதெல்லாம் அலைந்தாயோ?

 

வெஞ்சமரும் வேதனையும்
நீ சுமந்த காலமெல்லாம் நான் கலங்கி
நிம்மதிக்காய் அம்மனிடம் மோதிக்கொண்டு

நெஞ்சு நோக வீடுமீளும் காலமதை நீயறிவாய்

 

இன்றோ நித்தமொரு குண்டுபோட்ட ஆமிக்காரன்
நெஞ்சளக்கும் நேசமானாம் கண்ணியத்தின் காவலனாம்
கட்டிப்போட்டுக் கதைசொல்லும் காரியக்குட்டிகளும்
கனவானாய் மாறிவிட்ட தமிழீழத்தாகமும்
சேர்த்துக்கொண்ட சொத்துகளின் சொந்தக்காரர்

 

காட்டிக்கொடுத்தார் பட்டியலில்
காவுகொண்ட குஞ்சரங்கள் ஆயிரமாயிரமாம்
கொண்டைபோட்ட பெண்டுகளின் கோவணத்துள் வெடியமுக்கி
கொலைகொண்ட கோரமெல்லாம் கோசங்களின் கோவணத்துள்!

 

5

கட்டிவைத்து உதைத்தவர்களும்
கழுத்தறுத்துப் பார்த்தவர்களும்
சிரட்டையிலும் போத்தலிலும் நீரருந்த வைத்தவர்களும்
கட்டிவைத்த மனைகளுக்குள் நாம் எட்டிப்பார்க்க மறுத்தவர்களும்
தமீழக்கோட்டைக்குள் சோடிசேர அழைத்தார்கள்

 

சேர்ந்து தோள் கொடுத்த நம்மை
அடக்கிவிட துடிக்குமிவர் ஈழமெனும் கோசத்தால்
ஈட்டியெய்தார் எம் முதுகில்
சொந்த வாழ்வின் சுகத்துக்காய் இன்னுமெமை ஏய்த்தபடி

 

ஐயா குஞ்சரமே!
மாலைவேளை மதியை கருமேகம் காவுகொள்ள நீ
மிதமான கனவோடு மிதிவெடியும் தாட்டு வைத்து
காத்தருந்த காலமதை பெத்தமனம் பித்தாகி பேசும் வாய்க்கு மொழியில்லை

 

கள்ளமனம் படைத்த காசுக்கார கூட்டமின்று
சிங்களத்துச் சந்தையிலே கடைவிரித்துச் சமாதானம் விற்க
கட்டுக் கட்டாய் பணம் சேரும் அவர் கணக்கில்
வறிய நாம் வாடுகிறோம் வாழு;விழந்த எங்கள் மழலைகளுக்காய்

 

தொட்டிலுக்குள் போட்ட குழவி
தொலைந்துவிடும் ஒரு நொடியில்
தோள்கொடுக்கப் போனதாகச் சேதி வரும் மாலைதனில்
மாறி மாறிப் பார்த்துவிட்டு மயங்கிவிடும் தாய்மனது!

 

மடிகடித்த நினைவுகளும் மங்கலாக வந்துபோகும்
வார்த்தையின்றிச் சோர்ந்துவிடும் வந்து போகும் உணர்வுகளும்
வானுயர்ந்த நோக்குக்காகவா
வாழ்விழந்தோம் இன்றுவரை?.

-ப.வி.ஸ்ரீரங்கன்


Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது