Language Selection

எங்கும் ஒரு புதிர். ஆச்சரியம் கலந்த அங்கலாய்ப்பு. இருப்புக் கொள்ளாத புலம்பல். வரட்சியுடன் கூடிய எதிர்பார்ப்பு. நம்பிக்கை வெளிப்படுத்தும் ஆரூடங்கள். இதுவே அன்றாட செய்திகள், கட்டுரைகள். எல்லாம் இதற்குள் சுத்தி சுத்தி ஒப்பாரி வைக்கின்றன. புலி செய்தி மீடியாக்கள் கூட, எதிரியின் கூற்றுகளையும் எதிர்பார்ப்புகளையும் சொல்லியே, தமது சொந்தப் பிரமையை தக்க வைக்கின்ற அரசியல் அவலம்.

உண்மையில் என்ன நடக்கின்றது என்பதை, சண்டையில் ஈடுபடும் புலிகள் முதல் அரசு வரை கூட புரியாத புதிராகவே உள்ளது. புலிகள் ஒவ்வொரு பிரதேசமாக இழக்க, அரசு ஒவ்வொரு பிரதேசமாக முன்னனேறுகின்றது. எப்படி இது சாத்தியமானது? என்ன தான் நடக்கின்றது?

 

புலிகள் ஒரு எதிர்தாக்குதலை நடத்தவே, தந்திரமாக பின்வாங்குவதாக நம்பும் பிரமை அதிகரித்துள்ளது. எதிர்த்தாக்குதல் நடத்தப்படலாம் என்ற கனவு, எதார்த்தத்தில் எதிர்பார்க்கப்படுகின்றது.

 

புலிகளின் தலைவர் பிரபாகரன் எல்லாளன் படையை தளபதிகளுக்கு காட்ட வெளிக்கிட்டது முதல், தளபதிகள் மிக விரைவில் வெற்றித் தாக்குதல் என்ற அறிக்கைகள் விட்டு, அவை ஒய்ந்துள்ள நிலையிலும், கனவுகள் பிரமைகள் நம்பிக்கைகளாகின்றது.

 

புலிகள் முதல் அரசு வரை இப்படி நம்புவது, ஒருதலைப்பட்சமாக அதிகரித்து பல்வேறு ஊகங்களாகின்றது. இந்த எல்லைக்குள் ராஜதந்திரிகள் முதல் தொடர்ச்சியாக கருத்துரைப்பவர்கள் அனைவரும், இப்படியே இதற்குள்ளேயே கருத்துரைப்பதுடன், அதையே எதிர்பார்த்தும் காத்துக்கிடக்கின்றனர். நிலைமையை ஆராய அடிப்படையான தரவுகளின்றி, கடந்தகால அனுமானங்களில் இருந்து இவை வெளிப்படுகின்றது.

 

நாங்கள் மட்டும் இதற்கு மாறாக, மாறுபட்ட கருத்துக்களை முன்வைக்கின்றோம். இது மற்றவர்களுக்கும் எமக்கும் இடையிலான அடிப்படையான அரசியல் வேறுபாடுகளில் இருந்து, வேறுபட்ட முடிவுகளுக்கு வந்தடையக் காரணமாகின்றது.

 

பலரும் புலிகளின் கடந்த வரலாற்று ஒட்டத்தின் ஊடாக அனுமானங்களை, முன் முடிவுகளையும், எதிர்பார்ப்புகளையும் அடிப்படையாகக் கொண்டு கருத்துரைக்கின்றனர். ஆனால் நாங்கள் அதில் இருந்து மாறாக, புலிக்கும் மக்களுக்கும் இடையிலான உறவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களில் இருந்து கருத்துரைக்கின்றோம். நாங்கள் எதார்த்த உண்மைகளில் இருந்து நிலைமையை அவதானிக்க, மற்றவர்கள் கற்பனை நம்பிக்கைகளில் இருந்து கருத்துரைக்கின்றனர். முன் முடிவுகளில் இருந்து, விம்பத்தை உருவமாக்க முனைகின்றனர்.

 

புலிகள் ஒரு இராணுவம் என்ற வகையில் அது கொண்டுள்ள பலம், புலித் தலைவர்களின் உறுதி குறையாத அதே மூர்க்கம் எதுவும் வெளிப்படையாக மாறிவிடவில்லை. புலியைப் பற்றிய மதிப்பீடுகள், இங்கிருந்து தான் 99.9 சதவீதமானவை வெளிவருகின்றது. ஆய்வுகள், கருத்துகள் இங்கிருத்து தான் உருவாக்கப்படுகின்றது. புலிகளின் வெளிப்படையான மாறாத் தன்மையை அடிப்படையாகக் கொண்டு, முன் கூட்டிய எதிர்பார்ப்புகள், அனுமானங்கள் செய்யப்படுகின்றது. தகவல் உலகை இது ஆக்கிரமிக்கின்றது. புலிகள் முதல் அரசுதரப்பு தகவல் வரை, இதுதான் மையச் செய்தியாகின்றது.

 

யுத்தத்தில் முன்னேறும் அரசும் கூட, புலியின் எதிர்த்தாக்குதல் தயாரிப்பா, புலிப் பின்வாங்கலா என்று அச்சமுறுகின்றது. அந்தளவுக்கு புலிகளின் யுத்தமுனைகள் பாரிய எதிர்ப்பின்றி வெல்லப்படுகின்றது. அரசு திகைத்துப் போயுள்ளது.

 

பின்வாங்கல் என்பது முன்னேறுவதற்கான சுயவிமர்சனத்தை அடிப்படையாக கொண்டது. இவ்வாறா புலிகள் செய்கின்றனர். மூதூர் முதல் துணுக்காய் … என்று, பாரிய நிலப்பரப்பில் புலிகள் பின்வாங்கினர் என்பது, தமது சொந்தக் காதில் பூ வைப்பது தான்.


புலிகள் பின்வாங்குகின்றனரா! தோற்கின்றனரா! சரி இது எதுவாக இருந்தாலும், பேரினவாதத்திற்கு இது எப்படி சாத்தியமானது என்பது அவர்களுக்கு கூட புதிராகவே உள்ளது. யுத்த நிலைமையை ஆய்வு செய்யும் எழுத்தாளர்கள் கூட, அதிர்ந்து போயுள்ளனர். எதிர்க்கட்சிகள் அரசு சொல்வது பொய்யாகக் கூடாதா, என்று எதிர்பார்க்கின்றனர்.

 

எங்கும் ஒரு எதிர்த்தாக்குதல் எதிர்பார்க்கப்படுகின்றது, விரும்பப்படுகின்றது. அரசு இதற்கு ஏற்ப பிரதிபலிக்கின்றது. இதை புலிசார்பு தகவல்கள் முக்கியத்துவம் கொடுத்து வெளியிடுவதுடன், தமது சொந்தப் பிரமையை மெருகூட்டுகின்றனர். இப்படி புலி தனது சொந்த எதிரியின் கருத்துகள் மூலம், புலியின் எதிர்பார்ப்பை மேலும் வெம்பவைக்கின்றனர்.

 

நாங்கள் இதில் இருந்து மாறுபட்ட வகையில், புலிகள் பின்வாங்கவில்லை அவர்கள் தோற்கின்றனர் என்பதை சொல்கின்றோம். இந்த தோல்வியை மக்கள் புலிக்கு கொடுக்கின்றனர் என்ற உண்மையை நாம் மட்டும் தான் கூறுகின்றோம். புலியின் எதிரி கூட இதைப் புரிந்து கொள்ளவில்லை. இந்த நிலையில் புலிகள் எப்படித் தான் இதைப் புரிந்து கொள்ளமுடியும்.

 

மக்கள் புலிகள் உறவில் ஏற்பட்ட மாற்றத்தை, நாம் மட்டும் தான் தெளிவாக தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வந்துள்ளோம். இதை புலிகள் கவனத்தில் எடுக்கவில்லை என்பதோடு, மாறாக மக்கள் புலிகள் உறவை மேலும் மோசமாக்கினர். இந்த வகையில்

 

1. புலிகள் மக்கள் உறவு இன்று எப்படி உள்ளது?


2. புலியின் அணிகளுக்கும், புலித் தலைமைக்கும் இடையில் உள்ள உறவு எப்படி உள்ளது?


3. புலி அணிக்கும் மக்களுக்கும் இடையில் உள்ள உறவு எப்படி உள்ளது?


4. புலித் தலைமைக்கும் மக்களுக்கும் இடையிலான உறவு எப்படி உள்ளது?

 

இது தான் யுத்தத்தின் போக்கை தெளிவாகத் தீர்மானிக்கின்றது. பலரும் இதற்கு வெளியில் மாறுபட்ட வகையில் யுத்தத்தின் போக்கைப் பார்க்கின்றனர்.

இந்த நிலையில் நாங்கள், இதுதான் யுத்தத்தின் போக்கை தீர்மானிக்கின்றது என்கின்றோம். அமைதி சமாதானம் என்று புலிகள் பேசத் தொடங்கிய காலத்தில், புலிகள் மக்களுடன் கொண்டிருந்த உறவுக்கும், இன்றைய அவர்களின் உறவுக்கும் இடையில் பாரிய இடைவெளி ஏற்பட்டுள்ளது.

 

இதை எம்மைத் தவிர, வேறு யாரும் ஏற்றுக்கொள்வது கூட கிடையாது. நாங்கள் மட்டும் தான் மக்களில் இருந்து, இந்தப் பிரச்சனையை அணுகுபவர்கள். நாங்கள் தெளிவுபடவே கூறுகின்றோம், அமைதி சமாதானத்துக்கு முந்தைய நிலைமையை விட, இன்று புலிகள் மக்கள் உறவில் முறுகல் நிலையையும், பாரிய பிளவையும் ஏற்படுத்தியுள்ளது. இதை யாரும் மறுக்க முடியாது.

 

புலிகள் ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட கட்டுப்பாடு நிறைந்த இராணுவம் என்ற வடிவத்தைக் கடந்த, அராஜகத் தன்மை கொண்ட மக்களுக்கு எதிரான ஒரு இராணுவமாக சீரழிந்து விட்டது. மக்களைக் கண்காணித்து, தண்டனை வழங்கும் புலிக் கும்பல், உதிரித்தனமான அராஜகம் மூலம் மக்களைப் பந்தாடுகின்றனர்.

 

ஈவிரக்கமற்ற, மனிதாபிமானமற்ற, மாபியாக் கும்பலாக அன்னியமாகிய கும்பல்கள் தான், மக்களை ஈவிரக்கமின்றி கண்காணிக்கின்றது. யுத்த முனையில் மக்களுக்காக போராட முனைகின்ற பிரிவு ஒருபுறம், மறுபக்கத்தில் அந்த மக்களையே அடக்கியொடுக்கும் அதிகாரக் கும்பல்கள் மறுபக்கம். இதனால் யுத்த முனையில் உணர்வு பூர்வமாகவே போராடும் ஆற்றல் இயல்பாகவே செத்துப்போகின்றது.

 

யுத்தமுனை தொடக்கம் வாழ்வுக்காய் போராடும் மக்கள் வரை, எங்கும் அதிருப்தி. வாய்விட்டுக் கூட புலம்பமுடியாத வாழ்வியல் துயரங்கள். ஒருபுறம் எதிரி, மறுபுறம் புலி.

 

இதற்குள் வாழ்வதற்கான போராட்டம். இதற்குள் போராட்டம் சீரழிந்துவிட்டது. ஊழல், இலஞ்சம் கொண்ட அமைப்பாக, கண்காணிப்புக்கு பயந்து நடக்கும் எல்லைக்குள் புலி சீரழிந்து விட்டது. சொந்த உணர்வு உணர்ச்சி சார்ந்த போராட்ட நேர்மைக்கு பதில், புலியின் கண்காணிப்புக்கு உட்பட்டு உயிர்வாழும் ஒரு நேர்மையற்ற பொய்யான அமைப்பாகிவிட்டது.

 

புலிக் கண்காணிப்பு இல்லையென்றால், புலியையே புலி விழுங்கிவிடும் அளவுக்கு, போராட்ட உணர்வு செத்துவிட்டது. புலி சுயநலம் சுய தியாகத்தை மிஞ்சி விடவில்லை. மக்களுக்காக போராடாத ஒரு இயக்கத்திடம், சுயதியாகம் இருக்கமுடியாது, சுயநலம் தான் ஆட்சி செய்யும்.

 

இதற்குள் வாழும் மக்கள், புலியின் கண்காணிப்பை மீறி வாழ பழகிவிட்டனர். எல்லா வடிவிலும், தம் சொந்தக் குழந்தைகளைப் பாதுகாக்க நடத்தும் போராட்டம், நம்பமுடியாத அளவுக்கு புல்லரிக்க வைப்பவை. புலியையே மிஞ்சுகின்றனர். ஆயிரம் ஆயிரம் நம்ப முடியாத கதைகள் உண்டு. ஒரு சில உதாரணங்கள் பார்ப்போம்.

 

1. புலியின் கட்டாயப் பயிற்சியில் இருந்து தப்பி வர என்ன செய்கின்றனர். புலியின் இராணுவ உடைகளை (ஊடுருவித் தாக்குபவனும் இதையே செய்கின்றான்) அணிந்து, எல்லை ஒரங்களில் அவற்றை களைந்துவிட்டு தப்பி வருகின்றனர். இதை வழிகாட்டிச் செல்லும் வழிகாட்டிகளும், கூலிக்கு உருவாகியுள்ளனர். புலியின் இராணுவச் சீருடையை கொடுப்பது, புலியில் உள்ள உறவினர்கள் தான். அண்மையில் இப்படி தப்ப முயன்று கைதான சம்பவத்தின் போது, கைதானவருக்கு கட்டாயப் பயிற்சியும், தந்தைக்கு பாதாள சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டது. தந்தையிடம் மீட்க பல இலட்சம் பணம் இலஞ்சமாக கோரப்பட்டது.

 

2. ஒரு இளம் பெண்ணை கட்டாயப் பயிற்சிக்கு இட்டுச்செல்ல புலிகள் முயன்ற போது, அவரை பெற்றோர் புலிக்கு எதிராக (இப்படி நிறைய சம்பவம் வெளிவருகின்றது) ஒளித்துவைத்தனர். அவருக்கு 18 வயதானவுடன் அவசரம் அவசரமாக திருமணம் செய்து வைத்தனர். இந்த பெண் கர்ப்பமாகிவிட்டாள். இதன் பின் அப்பெண்ணை கண்டுபிடித்த புலிகள், பெண்ணை கர்ப்பத்துடன் கடத்திச்சென்றனர். கர்ப்பத்தை அழித்து, தமது போராட்டத்துக்குள் இணைத்தனர்.

 

3. கட்டாயப்பயிற்சிக்கென பலோத்காரமாக அழைத்துச் செல்லப்பட்ட இளம்பெண் ஒருவர் தப்பியோடியுள்ளார். அவர் எங்கு தப்பிச் சென்றார் என்பது யாருக்கும் தெரியாததாக உள்ளது. ஆனால் அப் பெண்ணின் தாயார் மகள் தப்பிச் சென்றதற்காக சிறைப் பிடிக்கப்பட்டுள்ளார். தாய் சிறையில் மகளோ எங்கிருக்கிறார் என்பது யாருக்கும் தெரியவில்லை. மகள் மீண்டும் திரும்பினால் மட்டுமே தாய் விடுவிக்கப்படுவார்.

 

இப்படி எத்தனையோ சம்பவங்கள். இப்படி திரட்டப்பட்டவர்கள் உள்ளடங்கத் தான், போர்முனை தோல்வியும் சரி அவர்களின் மரணங்களும் நிகழ்கின்றது. இதையே தியாகம் என்கின்றனர்.

 

எத்தனையோ சம்பவங்கள், கண்ணீர் கதைகள். இளம் வயதுத் திருமணங்கள், பொருந்தாத் திருமணங்கள், விருப்பமற்ற திருமணங்கள். தப்பியோடும் சம்பவங்கள். புலிக்கு பயந்து நடுங்கும் உளவியல் அவலங்கள்.

 

இந்தளவையும் தாண்டி மயிர் கூச்செறியும் வகையில், புலிக்கு எதிராக மக்கள் தப்பியோட வைக்கும் போராட்டங்கள். இப்படி மக்கள் புலிக்கு எதிராகவே இயங்கும் வகையில், அவர்கள் சிந்தனை செயல் எல்லாம் அமைந்துவிடுகின்றது. அச்சம் பீதி கடந்த நடவடிக்கைகள், இயல்பாகவே புலிக்கு எதிராக பழக்கப்பட்டு விடுகின்றது. வாழ்வதற்கு முனையும் மக்களுக்கு, வேறு வழி கிடையாது.

 

புலிகள் இதைக் கட்டுப்படுத்த அவர்கள் செய்யக் கூடியது, காட்டுமிராண்டித்தனமான தண்டனைகளைத் தான். அச்சத்தை மனித உணர்வாக்கும் வண்ணம், உதிரியான லும்பன் வன்முறைகள். விளைவு மாயமான சுடுகாட்டில், மக்கள் புலிகளை மெதுவாக எரிக்கின்றனர்.

 

உண்மையில் புலிகளில் போராடும் அணிகளின் உணர்வு, பாரிய உளவியல் சிக்கலுக்குள் சிக்கி மரணித்துவிட்டது. யாருக்கு எதற்கு யுத்தம்? தன்னால் துன்படும் இந்த மக்களின் வாழ்வுக்காகவா, என்ற இந்தக் கேள்வி அவர்களிடம் போராட்ட உணர்ச்சியையே அழித்துவிட்டது. அவன் தனது சொந்தத் சாவைத் தவிர, வேறு எந்த உணர்ச்சியுமற்ற பிணமாகவே செத்துக் கிடக்கின்றான். இதைத்தான் பேரினவாத அரசு தனது சொந்த வெற்றியாக்குகின்றது.

 

யுத்த முனையில் திணிக்கப்பட்டு, கண்காணிக்கப்படும் யுத்தத்தில், உணர்வு பூர்வமாகவும் உணர்ச்சி பூர்வமாகவும் ஒருவனால் போராட முடிவதில்லை. இந்த புதிய சூழலை புரிந்துகொள்ளாத யாராலும், புலியை மதிப்பிடவே முடியாது.

 

புலித்தலைமை முதல் புலிக்கு எதிராக தும்முபவர்கள் வரை, புலிகளின் எதிர்த்தாக்குதல் பற்றிய பிரமையுடன் காத்துக்கிடக்கின்றனர். ஆனால் இது சாத்தியமில்லை என்பதை, போராடுபவனின் உணர்வு சொல்லுகின்றது.

 

இதை செய்யும் மனோபலத்தை, போராடுபவன் கொண்டிருக்கவில்லை. ஏதாவது தப்பித்தவறி அது நடந்தால், அவை தற்செயலானது. அதாவது இரண்டு இராணுவங்கள் என்ற வகையில் நடக்குமே ஒழிய, அவை உணர்வுபூர்வமானதாக அமையாது. அது எப்போதோ செத்துவிட்டது. தமிழ் தேசியப் போராட்டம் போல் தான் இதுவும் செத்துவிட்டது.

 

பி.இரயாகரன்
03.08.2008

 

 


Most Read

முற்றவெளியில் பிணத்தை எரிக்க, கொள்ளிக்கட்டை கொடுத்த வெள்ளாளியப் பண்பாடு

யாழ். நாகவிகாரை விகாராதிபதியின் உடலை யாழ் முற்றவெளியில் எரிக்க வேண்டும் என்று அடம்பிடிக்க, அதை எதிர்க்கும் அளவுக்கு இனவாத - இந்துத்துவ சாதிய அரசியல் நடந்தேறியிருக்கின்றது. மக்களை ஒடுக்குவதையே தங்கள் அரசியலாகக் கொண்ட ஒடுக்கும் தரப்புகள், ஒடுக்கப்பட்ட தமிழ்மக்களின் மேலான தங்கள் அதிகாரத்தை அரசியல் மயமாக்கும் அரசியலாக, தகன நிகழ்வை மாற்றியிருக்கின்றனர்.

பிரமுகர்கள் மரணமாகும் போது பொதுவெளிகளில் தகனம் செய்யும் புத்த மதத்தின் மரபை, ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் முதுகில் போட்டு எரிப்பதற்;கு "நல்லாட்சி" அரசு கங்கணம் கட்டி நின்று, அதை தங்கள் அதிகாரங்கள் மூலம்  அரங்கேற்றினர். இந்த இனவாத அரசியல் பின்னணியில் "நல்லாட்சி" அரசின் தூண்களான கூட்டமைப்பின் அனுசரணையுடனேயே, இந்த முரண்பாடு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான அரசியலாக்கப்பட்டது.

வேள்வியை தடைசெய்யக் கோரும் வெள்ளாளிய இந்துத்துவம்

யாழ் குடாநாட்டில் மிருகபலி மூலம் நடைபெறும் வேள்வியானது பாரம்பரிய வரலாறு கொண்டது மட்டுமின்றி ஆதி மனித வழிபாட்டு முறையின் தொடர்ச்சியாக இருக்கின்றது. இது காலகாலமாக இந்து வெள்ளாள சாதிய வழிபாட்டு முறைக்கு முரணாகவும் இருந்து வருகின்றது. ஆதிமனித வழிவந்த ஒடுக்கப்பட்ட சாதிகளால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட மிருக பலி மூலமான வழிபாட்டு முறையானது, ஒடுக்கும் சாதியைச் சேர்ந்த மக்களையும் தனக்குள் உள்வாக்கிக் கொண்டதுடன் வேள்வியான உணவுக் கொண்டாட்டமாக மாறி இருக்கின்றது. இறைச்சி விரும்பி உண்ணும் உணவாக மாறி இந்து-சாதி பண்பாட்டு கூறுகளை அழிக்கின்றது. இதானல் இதை சாதிய இந்துத்துவவாதிகள் தடை செய்யக் கோருகின்றனர்.

மிருக பலி !?

இலங்கையில் மாடு வெட்டுவதை தடை செய்வது பற்றி ஜனாதிபதி கூறியதாக செய்திகள் வெளிவந்திருக்கின்றது. உழைக்கும் மக்கள் மாட்டு இறைச்சியை தங்கள் உணவாக உண்பதை சமூக பண்பாடாகக் கொண்டவர்கள். இதற்கு எதிராக "மாடு புனிதமானது" என்றும் மாட்டு இறைச்சியை உண்ணக் கூடாது என்ற பிரச்சாரத்தை வெள்ளாள சாதிய இந்துத்துவ மதவாத சக்திகள் முன்னெடுத்து வந்ததுடன், மாட்டு இறைச்சியை ஓடுக்கப்பட்ட சாதிகளின் "இழி' உணவாக காட்டி வந்தனர். அதேநேரம் பௌத்த மத அடிப்படைவாதிகள் கூட இதே இந்துத்துவ சாதிய அடிப்படையில் முன்வைத்து வந்ததுடன் முஸ்லீம் மக்களின் உணவுப் பண்பாட்டுக்கு எதிரான பிரச்சாரமாகவும் இதை முன்னெடுத்து வருகின்றனர்.

உலகை குலுக்கிய வர்க்கப் புரட்சியின் 100 ஆண்டு

மார்க்சியம் என்பது கற்பனையல்ல. மானிட வாழ்வியலைப் பற்றிய தத்துவமே மார்க்சியம். மார்க்சிய தத்துவத்தின் நடைமுறையே, 1917 உலகைக் குலுக்கிய வர்க்கப் புரட்சியாகும்.

இந்தப் புரட்சி தனியுடமைக்கு எதிரான வர்க்கப் புரட்சி என்பதாலே, எல்லாப் புரட்சிகளிலும் இருந்து வேறுபட்டு நிற்கின்றது. இதனாலேயே 1917 நடந்த புரட்சி, உலக வர்க்கப் புரட்சிக்கான ஆயுதமாகி நிற்கின்றது. எல்லாவிதமான ஒடுக்குமுறைகளுக்;கும் எதிரான உண்மையான நேர்மையான தத்துவமாக மார்க்சியம் இருப்பது போல், 1917 புரட்சியே இன்றைய புரட்சிகளுக்கு எல்லாம் நடைமுறையாகவும் இருக்கின்றது. இது தான் இன்றைய எதார்த்தம்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

MOST READ