Language Selection

தேசம் தொலைத்தோம்...?


மக்களே,உங்களது இராச்சியத்தின் மீது
விசுவாசமாக இருக்கும் நான்
எல்லாம் வல்ல உங்கள் கிருபையின் தயவால்
சத்தியத்தைத் தரிசித்து,
என்னால் கண்டடைந்த உங்கள் ஒளியை
உலகுக்கு ஒப்புவிக்கிறேன்:


ஓரத்தே நீரின்றித் தவிக்கும் தவளைபோல் நான் ஊரின்றித் தவிக்கிறேன்.


என் பிள்ளைகளுக்கோ அப்பா,அம்மா தேசம் புரிந்திருக்க மனமாகினும்-இந்தத்தேசத்தை நிசத்தில் பார்க்க முடியவில்லை-ஈழம் எனது தாயகம்!



நாளைய பொழுதுக்கும் வேலைக்கு வருவதற்காக மட்டும் படியளக்கும் என் வேலைத்தல உரிமையாளர்கள் இந்த வகைக்களுக்கான தேவைகளை எப்படிக் கவனிப்பார்கள்?இந்தாண்டு விடுமுறையானது பியர் போத்தலோடு போகிறது.பொழுதுபோக்குத் தோட்டத்தில் அமர்ந்துள்ள நான் ஒரு கவிதைத் தொகுப்புக்குள் வாழ முற்படுவதுகூட ஒரு விசித்திரமான உணர்வினாற்றாம்.தேசம்-தாயகம்.உயிரினுள் உறங்கும் ஏதொவொரு வலி மேலெழுகிறது.நாடற்றவனின் குறிப்புகள் எனது வலியையும் தனக்குள் இணைத்துவிடுவதால் அது பொதுவானவொரு தளத்தில் நமது குறிப்புகளாகிறது.


கடனில் மூழ்கித் தொலையும் பொழுது. சும்மா தருவதுபோன்று பணம் தந்த சிட்டி பாங்(நாளை இன்னொரு பெயரோடு என்னைக் கொல்லும் இந்த வங்கி.பிரான்சின் பகாசூரக்(;(Crளூdit Mutuel)கடனளிக்கும் வங்கி சிற்றி பாங்கை இன்று வேண்டுகிறது.) என்னை முழங்காலோடு முறித்து விட்டகொடுமையிலிருந்து மீண்டுவிடுவதற்குள் ஐந்தாறு கவிதைகளோடு-கண்ணீரோடு நான் கரைந்து விடுவேன் போலுள்ளது.



"நகரம் பிதுக்கித் தள்ளுகிறது
தனக்கான அவதிகளினு}டு
என்னையும்


ஒரு செர்ரிப் பூ
உதிர்ந்து
நிலத்தை வந்தடைவதற்குள்
மலைபோல குவிகின்றன
கட்டவேண்டிய கடன் பில்கள்..."



மார்பு தட்டும் மண்டையும்,தானென்ற அகங்காரமும் நிறைந்த மனிதர்களை நாம் தமிழகத்துச் சின்னத்திரைகளில் அனுபவிக்கின்றோம்.ஓரத்தில் மிக நொந்துகொள்ளும் ஆணவத்து அதிகாரத்தால் மனதுடையுந்தருணங்கள் பல.இங்கே, மனிதர்கள் நிசத்தை மறைத்துக்கொண்டு கோடிகளில் வாழும் தருணத்தில் நாம் கடன்களோடு வாழுகின்ற உண்மை முகத்துள் ஒரு அதிசயமான வாழ்வாதாரத்தைக் கனவுக்குள் உள்வாங்குகிறோம்.பணம் மட்டும் போதுமாக இருந்தால் வாழ்வு சுகமாக இருக்கும்.


நினைத்தவுடன் எதனையும் ஆட்கொள்ள அதுதானே அவசியமானது?


இதனாற்றான் வள்ளுவனும்"பொருளில்லாருக்கு இவ்வுலகம் இல்லை"என்றான் போல்.


"நகரம் ஏற்றுக் கொள்வதில்லை
வீடற்றவர்களை மட்டுமின்றி
மனதில் ஈரலிப்புள்ளவர்களையும்..."




எனது சுயம் நெஞ்சில் ஈரத்தோடு,தனது தேசத்தையும்,குடும்பத்தையும் தாங்கிக் கனவோடு எதிர்காலத்தை எதிர்கொள்கிறது.வானம் முட்டும் ஈரமனம் தோன்றிக்கொண்டே உலகத்தின் வலியைத் தனதாக்கித், தான் மட்டும் அதிகாரத்திலிருந்தால் இந்தக் கொடுமை எனக்கு- "இவர்களுக்கு"நிகழாதென்கிறது மனம்.என்னை தூக்கி இந்த உலகத்தின் விளிம்பில் வைத்துக் கொள்கிறேன்.இப்போது நான் விளிம்பு மனிதானாகிவிட்டேன்.எனக்குள் வலிகளும்-வேதனைகளும் உங்களைப் போலவேதாம் உண்டு.இதனால்தாம் நான் பொதுவாக இருக்கிறேன் என்ற உணர்வோடு வருகிறேன்.மிகச் சமீபத்து நடாத்தைகள் என்னனுள் பாரிய தாக்கத்தைச் செய்திருக்கிறது.இதனால் எனது மனதில் ஈரம் அதிகமாகிறது.ஏனெனில், நான் தேசம் தொலைத்தவன்.அந்த வலிகள் நம்மை அடிமைகொண்ட முறைமைகளோடு தினமும் ஒரு கனவுக்காலத்தை நமக்குள் தோற்றிக் கொள்ளும்போதெல்லாம் நெஞ்சில் ஈரலிப்பான கனிவும் மற்றவர்களை மனிதர்களாக உணரும் ஒரு தியான நிலையை எனக்குள்ளும் இந்த டி.ஜே.க்குள்ளும் தோற்றிவித்துள்ளது.நாம் மனிதர்கள்.



நகர்ப்புறத்து வாழ்வியல் மதிப்பீடுகளால் தகர்ந்துபோகும் மனிதம் மற்றுமொரு புறமாக மகத்துவத்துக்கான தேர்வை செய்கிறது.இந்தத் தேர்வு தேவாலயங்களில் செபஞ் சொல்வதிலிருந்து தன்னை மீடெடுக்க முனைவதில் மட்டுமே ஆர்வமாக இருக்கிறது-பக்கத்தில் மனிதர்கள் உயிரோடு எரிக்கப்படும்போது.


ஆம்!தேசத்தைத் தொலைத்தவர்களில் பலர் தமது இருப்புக்கு எதிரான பலவிதமான விளைவுகளை எதிர் கொள்வதில்"தீயினால்"சுடுதலும் ஒன்று.நகரங்கள் இனவாதத்தைத் தள்ளிக்கொண்டே மனித நேயம் பற்றிய புதுக்கவிதையும் பாடுகிறது.அத்தகைய தருணத்தில் நெஞ்சில் ஈரலிப்போடு இருக்கும் விளிம்பு மனிதர்கள் வாழ்வுக்கான தேடலோடு பாதுகாப்புத்தேடி நகரத்தை அண்மிக்கும்போது அங்கே உதிரி மானுட வாழ்வு அவர்களை-எம்மை எட்டிப்பார்கிறது.நாம் உயிர்வாழ்வதற்காக உழைத்து உருக்குலைகிறோம்.



"நீயொரு
மரம் நட முயல்கின்றாய்
எனக்குள்..."



இது இலகுவானது இல்லை.நான்-நாம் சலனப்பட்டவாழ்விலிருந்து என்னை-எம்மை மீட்பதற்காக எத்தனையோ தவங்களில் உலாவருகிறோம் இ.ல்லையா?



இதிலொன்று ஓடாய் உழைத்துச் சாவதில் நான், என்னைப் புனரமைக்கிறேன்.இங்கே, எனது மனதும் வெறும் புல் பூண்டே முளைக்க முடியாத தரிசு நிலத்தைப்போல் காய்ந்து வெந்துலர்ந்து விடுகிறதே!இங்கே இன்னொரு பசுமையை நீ வரவழைப்பதற்காக மரம் நாட்டுவது தகுமா?


"தரிசாகிக் கொண்டிருக்கும் மனிதில்
அவ்வளவு இலகுவல்ல
தளிரொன்று அரும்புவது."



நடப்பில்லுள்ள ஒழுங்கின்மீது கைகளை நீட்டிக்குற்றுஞ் சொல்லும் மொழியைத் தகர்த்துவிட்டு குறியீடுகளால் சுட்டப்படும் இந்த மொழிக்குச் சொந்தக்காரன் "நாடற்றவனின் குறிப்புகள்"சொன்ன இளங்கோ.மிகவும் கவனத்தோடு வாசிக்கப்பட வேண்டிய உணர்வுகளை எழுத்தில் வடித்துவைத்துவிட்டு ஓரத்தில் ஒதுங்கிவிடும் புதிய கவிதை மரபுக்கு இளங்கோவும் சொந்தக்காரனாக இருப்பது ஆச்சரியமானது.புலம்பெயர்ந்து கனடாவில் வாழ்ந்து வாழ்வின் அனைத்துச் சங்கதிகளையும் மிக இலகுவாக அனுபவிக்கக் கூடிய நிலையில் இருக்கும் இளைஞனிடம் அடி நாதமாக மனிதம் இழையோடுவது மிக ஆச்சரியமானதாகும்.இந்த ஆச்சரியமான உந்துதலுக்கு ஈழத்துப் போரின் மிக யதார்த்தமான தாக்கம் உந்து சக்தியாகும்.


தன்னையும்,தான்சார்ந்த புறவுலகத்தையும் மனித முகத்தோடு தரிசிக்கும் எழுத்துக்கள் நமது சமுதாயத்தில் அருகி வரும்போது இன்றைய நாடற்றவனின் குறிப்புகள் இதை உடைத்து இதோ எனது வாழ்வு உன்னையும்,என்னையும் இணைத்ததே என்று தனது இருப்பை எனக்குள் பிரதியிடுகிறது.இது,அபாரமான மனிதத்தொடுதலே!


இளங்கோவின் உணர்வு வரிகள் மிகம் மனிதத்தோடும் மனித உந்துதலோடு மிடுக்காகப் பயணிப்பவை.இவரது தொகுப்புள் உள்ள பல்வேறு உணர்வு நறுக்குகள் மிகவும் மனிதவிருப்புகளோடு நம் முன் எழுந்து நடைபயில்பவை.நாம் ஒன்றித்தே செல்வதற்குத் தயாராகும் வாழ்வின் விருப்போடு மிகவும் நெருங்கி நம்மீது பரிவாகவும் பழக முற்படுபவை.தோளில் கரம்பதித்துக்கொண்டே மிக நெருக்கமாக நமது அந்தரங்கத்தை நம் கண்முன் கொணர்ந்து நம்மை எச்சரித்துவிட்டுச் செல்லும் பற்பல மனிதத் தெறித்தல்களை நாடற்றவனின் குறிப்புக்கள் நாம் இனம் காணமுடியும்.


"குழந்தைகள்
காணாமற் போகின்றார்கள்
கடத்தப்படுகின்றார்கள்
காவும் கொள்ளப்படுகின்றார்கள்."



வரிகள் மெல்லியவை.ஆனால், இவற்றுக்குள் உள்ள வலி மிக வலியது.இன்றைய இளையவரின் வாழ்வைச் சிதிலமாக்கும் பொருளுலகத்தில் நாமும் சிறார்களாய் இருந்தோம்.நமது மழலைகளும் அவ்வண்ணமே இருக்கிறார்கள்.எங்கள் வாழ்வில் தரிசித்திருக்கக்கூடிய உலகை இன்றைய சிறார்கள் தரிசித்திருக்க வாய்ப்பில்லை.சிறார் பருவம் திருடப்படுகிறது.ஒருபுறம் கல்விக்காக மறுபுறம் போருக்காக-நாட்டிற்காக.குடும்பங்கள்-பாடசாலைகள் குழுந்தைப் பருவத்தைக் கொன்று குவித்துவிட்ட வெறும் ஜந்திரங்களை உருவாக்கத், தேசமோ தனது விடிவுக்காகச் சிறார்களைப் போரில் இறக்கிக் கொன்று தள்ளுகிறது.இரண்டும் ஒரிடத்தில் சேரும்போது நிகழ்வு ஒன்றேதாம்.



"87களில்
கொடுமிருளாய்த் துரத்திய
சம்பங்களில்
எனது பிராத்தனை
என்றுமே வளர்ந்துவிடக் கூடாது
என்பதாய் இருந்தது


இன்றும்
எத்தனை குழந்தைகள்
பாயில் மூத்திரம் பெய்தபடி
இரவுகளை வெறித்துப் பார்க்கின்றனவோ...?"



மனிதவிருத்தி,மனிதவிருத்தி என்று கூறுகிறோமே அது என்ன?


மனித இருத்தல் வெகுவாகப் பொருள் நலனோடு பிணைக்கப்பட்டபின் அந்த இருத்தலை உறுதிப்படுத்துவது அல்ல சிதைப்பது இன்னொரு சக்தியினால் என்றாகிறது.நான் நாளை உயிரோடு இருப்பதும்,இல்லாதிருப்பதும் நிலவும் அதிகாரத்தினாற் தீர்மானிக்கப்படும்போது எனக்குள் நிலவும் சுதந்திரம் மாயைகிறது.எனது சுயத்தில் எங்கோவொரு வெளியில் உயிர்த்திருத்தல் என்ற ஏக்கம் ஒட்டிக்கொள்கிறது.நான் கனவுகாணும் பட்டாம் பூச்சி உலகம் என்னிடமிருந்து பறித்தெடுக்கப்படுகிறது.அத்தகைய உலகத்தைப் போரினால் கருக்கியபடி நான் இன்னொரு உலகுக்குள் திணிக்கப்படுகிறேன்.அங்கே,நான் மகத்துவமான ஒரு உலகத்தின் கதா நாயகனாக வர்ணிக்கப்பட்ட இன்னொரு உலகம் ஜந்திரத்தனமான எனக்குள் பிணைக்கப்படுகிறது.இது கொடூரமான உளவியல் தாக்கத்தை எனக்குள் நிகழ்த்திக் காட்டியிருப்பினும் பொது மனிதக் கதையாடலில் எனக்குள் இன்னொரு உலகம் கட்டியமைக்கப்படுகிறது.



2:


நம்மை நாம் தொலைத்தோம்...?




விளாமரத்துக் காய்களுக்காய்க்
கல்லடித்த பள்ளி வாழ்வு
மாதாகோயில் படிக்கட்டில் தொலைந்தது தோழமை
தூரத்துக்கு வந்தபின்
தொலைந்தான் சன்னதி தோளோடு நிமிர்ந்து!



கூடித் திரிந்து,குளம்கண்ட மாத்திரத்தில் துள்ளிக் குதித்து நீராடிய பொழுதெல்லாம் தொலைந்திருக்கு.இன்றோ சிறுபகுதி சிறாரிடம் கேம் போயும்,நெற்றோன்டோ டி.எஸ்.சும் மகிமை பெற்றுவிட்டபோது,இந்தப் புவிப்பரப்பில் பெரும் பகுதி மழலைகள் தம்மைத் தொலைத்து உலக விளையாட்டு வீரர்களுக்காக உடை,பாதணி பின்னுகிறார்கள்.தான் பிறந்த குடும்பத்தின் ஒரு நேரக்கஞ்சிக்கு உழைக்கும் மழலை அதே கதியில் தேசத்துக்காகவென்ற கோதாவில் சிறார் இராணுவமாக்கப்பட்டு பலிக்கடாவாக ஆயுதம் தரித்திருக்க,


"எழுதி முடிக்கும்
ஒவ்வொரு வாக்கியத்திலும்
தெறித்திருக்கிறது துயரம்..."


எதைப்பற்றிச் சிந்தித்திருப்பினும்,நாடற்றவர்களின் வாழ்வுக்குள் நிலுவுகின்ற வலியிருக்கிறதே-அது சொல்லி மாளாதது!மழைபொழியலாம்,பறவைகள் பேசலாம்.பாடும் மீன்களும் துள்ளிக்குதிக்கலாம்.ஆனால்,நமது மனம்மட்டும் மெளனத்தால் வருடப்பட்ட வலியைத் தினம் மறப்பதற்காய் இவற்றை இரசிப்பதாகச் சாட்டை செய்யும்.எமது வலிகள் எம்மைத் தினம் பதம்பார்த்திருக்கத் தேசத்தில் எமது சிறார்கள் எவருக்காகவோ-எதுக்காகவோ செத்துமடிகிறார்கள்.இங்கே, இளங்கோவின் கவிதை மனம்மட்டும் எல்லாவகை மெளனத்தையும் மிக நுணுக்கமாக உடைத்துவிட்டு,மரணசாசனம் எழுதப்பட்ட உலகப்பரப்பில் மடிந்துவிடும் சிறார்களைக் காணுவதற்காக-காப்பதற்காகத் தனது உணர்வுகளோடு உறக்கமற்று இருக்கிறது.இந்த மனதின் பிழிவு இயற்கையின் பொழிவோடு உறவாடும் புவிப்பரப்பை நனைத்துவிடும் குருதியாக இனம் காணுகிறது.ஆம்!இன்று மழை பொழிகிறதோ இல்லையோ தினமும் சிறார்கள் குருதி சிந்துகிறார்கள்.அது,தேசத்துக்காகவோ அல்லது தெருவில் படுத்துறங்கும்போது மேட்டுக்குடி வாகனத்தின் சில்லுகளின் திமிர்த்தனத்துக்கோ அல்லது அன்னையின் வயிற்றை நிரப்புவதற்காகவோ குழந்தைகள் குருதி சிந்திக்கொண்டே சாகிறார்கள்.மிக யதார்த்தமாகச் சொல்லுகின்ற இந்த மொழி, கவிதைக்கான புதியவொரு தெரிவைக் கொண்டியங்குகிறது.அது குழந்தைகளின் அழிவை ஒப்புவமைக்குட்படுத்தும்போதே அவர்கள் வாழும் வாழ்விட நிலப்பரப்பை அவர்களது குருதியே கரைப்பதாகச் சொல்லிக் குமுறுகிறது.இது,ஒருவகையில் புதியதொரு அத்தியாயத்தை நமக்குள் திறந்துவிடுகிறது.நாம் தரிசிக்கவேண்டிய மனிதம் குறித்து சொல்லிவிடும் மிக நேர்த்தியான அழகை கீழ்வரும் உணர்வு நறுக்கின் வீச்சில் பொலிந்து மேவுவதைத்தாம் மனிதத்தொடுதல் என்பது.இளங்கோவிடம் காணும் கவிதைக் கருக்களெல்லாம் மிக ஆழமாக நாம் உணரும் மனிதத்தைக் குறித்த தெரிவுகள்(பொதுப்புத்தியகற்றிய மாற்றுச் சிந்தனை)-பரிவுகள்-வாழும் ஆசைகள் என்ற தளத்தில் வைத்துச் சிந்திக்கக்கூடிய உணர்வு நிலைகளாகவே நாம் உணர்கிறோம்.



"மழை பொழிந்து
குழந்தைகள் குதூகலிக்கவேண்டிய
நிலப்பரப்பை
குருதியலைகள் மூர்க்கமாய்
கரைத்துக்கொண்டிருக்கின்றன..."


சுடுகலம் சுதந்திரத்துக்காகப் பிறந்திருக்கிறதாகவே தாங்கிக்கொள்ளும் தோளும்,மனமும் எண்ணிக்கொண்டிருக்க,இளமையைத் திருடுகிறது ஆயுதவியாபாரம்.அதன் நடுவே நொந்துபோன இனத்தின் விடுதலை சூழ்ச்சிகளோடு பின்னப்பட்டிருக்கிறது.வாழ்வினது ஆதாரமாக இருக்கும் நிலம் உயிரோடு உரிமைகட்டிப் பேசுகிறது.உப்பற்ற உடலுக்கு ஒருவேளை ஆகாரந்தர மறுக்கும் அரசு-அமைப்பு கட்டிவைத்திருக்கும்"பொதுப் புத்தியில்"குருதி அலைகள் வாழும் அத்தனை ஆதாரங்களையும் மூழ்கடிக்கிறது.மனம் நொந்துவிடுவதல்ல இந்தக் குறிப்புக்குள்.ஏனெனில்,


"ஒரு முத்தத்தையும்
இன்னொரு முத்தத்தையும் பிரிப்பது
வினாடிகள் அல்ல
விரலிழுக்கும் துப்பாக்கி விசை."


மனித மனம் சுகத்துக்காக ஏங்கியிருப்பதும்,தன்னைக் குறித்தான பாதுகாப்பு உணர்வினாலும் தினமும் சாகா வரம் வேண்டிக் கொள்கிறது.இது இயல்பு.என்றபோதும்,இயற்கையின் விதிகளுக்கு மாறாக மரணத்தைக்காவிவரும் புறவுலகத்துப் பொதுத் தேவையானது எப்பவும் பொருளுலகத்தின் புதியபாணிக் கவர்ச்சி வாதத்தோடு"தேசம்-தியாகம்"பற்றிக் கதைவிடுகிறது.இறுதியில் இழக்கப்படும் மனித இருத்தலோ எந்த மகத்துவம் வேண்டிக் குருதி சிந்துகிறதோ அது வர்த்தகத்தினது வியூகத்தின் மகிமையாகிறது.பொல்லாத வாழ்வு.சின்னஞ்சிறாரைக்கூட வேட்டையாடும் ஒரு உலகை இந்தப் புவிப்பரப்புக் கொண்டிருக்கிறது.எனினும், இந்த இடர்விட்டு இடம் தேடியலைந்து உயிர்த்திருக்க இந்தச் சிறார்களால் முடிவதில்லை.திறந்த வெளிச் சிறையில் கட்டாயமாகக் கடத்தப்பட்டு ஆயுதம் தரிக்கப்பட்டு பலிக்கு அனுப்பப்படும் ஒவ்வொரு சூழலிலும் இந்தச் சிறார்களின் மனது, வலசைபோய் தகுந்த இடம் தேடும் பறவைகளைக்கண்டு ஏங்குகிறது!ஒரு கட்டத்தில் பசுமையான புவிப்பரப்பு என்னைக் கொல்கிறது.இது, எதற்காகப் பசுமையோடு விரிந்து மேவுகிறது?நான் ஆயுததாரியாக்கப்பட்டுக் கட்டாயமாகக் கொல்லப்படும் கணம் வரை எனது மனதில் ஏதோவொரு மூலையில் எல்லைகள் இழந்த புவிப்பரப்பின் இருத்தல் ஏக்கமாகிறது-இது உயிரின்மீதான நேசம்,வாழ்வுமீதான பற்றுப் பாசம்.நான் தடையின்றி எனது உயிர்த்திருப்புக்காக இந்த எல்லைகளை உடைத்தாக வேண்டும்-முடியுமா?


இங்கே,


"பசுமை விரித்த புல்வெளியில்
மஞ்சளாய் பூத்திருக்கிறது
நேசம்
வலசைபோய்
மரங்களில் வந்தமரும் பறவைகளின்
சிறகில் மிதக்கின்றன
எல்லைக் கோடிலில்லா நிலப்பரப்புகள்..."



வாழ்சூழல் பாதிக்கும்போதோ பறவைகள் கண்டம்விட்டுக் கண்டம் தாண்டுகின்றன,அவைகளைக் கைதுபண்ணிக் கஷ்ரடியில் இட்டுவிடுவதற்கு இந்த மனிதர்களுக்கு எவரும் பட்டயம் எழுதிக் கொடுக்கவில்லை அவைகளின் வாழும் வலயத்தை.சுதந்திரமாகவே வாழுகின்றன பறவைகள் என்று மனித மனம் எண்ணுகிறது.நினைத்த பொழுதுகளில் பாதுகாப்புத் தேடிக்கொள்ளும் அவை.அதுபோன்று நானோ அல்லது நீயோ ஆகமுடியாது.கடைக்கோடி யுத்தத்துள் மூழ்கித் தவிக்கும்போதும் உயிரைக்காத்துக்கொள்ளும் மனதுக்கு தேசங்களின் சட்டங்கள்-எல்லைகள் பெரும் மதில்களாகத் தடைகளைப் பிணைத்திருக்க மனிதம் குற்றுயிரோடு ஏங்கிச் சிதைகிறது.ஆப்பரிக்கக் கண்டத்த மனிதர்கள் மகத்துவமான வளங்கள் நிறைந்த தமது பூர்வீக நிலத்தை இழந்து கடல்தாண்டி ஐரோப்பிய நுழைவாயிலான ஸ்பெயினுக்குள் குற்றுயிரோடு கால்பதிக்கக் கடலில் மூழ்கிறார்கள் நேற்றுவரை.மாண்டுபோனவர்கள் கடலோடு அள்ளுபட்டுப்போனபின் ஒருசிலரைக் கைது செய்த எல்லைகள்,எனக்கும்-உனக்கும் சுதந்திரஞ் சொல்கின்றன.இந்த எல்லைக்கோடறியாப் பறவைகளின் சிறகைக் கனவுக்குள் திணித்துவிட்ட இந்தப் பயணம் மனிதர்களுக்கு வசமாவதில்லை.ஒரு புள்ளியில் மனிதம் சிறையுண்டு கிடக்கிறது.இது மனிதர்களே மனிதர்களுக்கான தடைக் கற்களாக இருப்பதற்கு எடுக்கப்பட்ட உடமைகளின் தெரிவில் தோன்றிய வரலாறு.எனினும், வாயினுள் மென்று தொண்டைக்குள் திணிக்கப்படும்வரை சுதந்திரம் இருப்பதென்ற இந்தத் தேசங்களின் வரைவிலக்கணத்தில்தாம் எத்தனைவகையான தடைக்கற்கள்?மனிதம் சிறகுகொண்டு விடுதலைக்காகப் பறந்துவிடுவதில் தோல்விகண்டுவிடுகிறது!



"மதியப் பொழுதில்
பெயரறியா நிலப்பரப்பை
உதிர்க்கும் பறவை
எனக்காய் விட்டுப் போகின்றது
நெடுந்தூரப் பிரிவின்
வாதையை."



நாடுதாண்டி உயிர் தப்பினேன் அல்லவா?எனது வலி நெடியது.அது நெடுந்தூரத்துத்துக்குத் தள்ளப்பட்ட எனது இருப்போடு உறவாடும் தாயகத்தின் மடியில் எனது நீண்ட மனதைக் காவித்திரியும் தென்றலுக்குத் தெரியும்.இந்தப் பெயரறிந்திருக்க முடியாத புதிய நிலப்பரப்பை வந்தடைந்த எனது உயிர்ப்புக்குப் பறவையின் சிறகடிப்பில் உதிர்ந்துபோகிறது காலம்!காலத்தில் தவித்திருக்கும் எனது மனதுக்குக் கூட்டு வாழ்வு மட்டுமே கைகூடவில்லை.சுற்றுஞ் சூழலிழந்தும் சொந்தக் குடிலையிழந்த நெஞ்சுக்குப் பிரிவினது வலி நெடியகதையாகிறது.அதை எனது இயல்புக்கு மாறாக இந்தப் பட்ஷி தனது சிறகு விரிப்பில் வாதையைச் செப்பிச் செல்கிறது.



இங்கே, நான் பாடுகின்றதும் ஒருவிதத்தில் என்னை மீடெடுத்து மறு வார்ப்புச் செய்திடவே.எனது பிரிவின் தொடர்ச்சியான வலி எனது உறவுகளை விடுவதில்லை.அவர்களும் சொந்த நாட்டுக்குள்ளேயே நாடற்றவர்களாக இருக்கின்ற ஈழத்துப் போர் அரசியலில் எனது ஓலம் ஒரு நாடோடியைப்போல அல்ல-அது நானேதான்,இப்போது இந்த நாடோடியின் இதழ்கள் முணுமுணுக்கின்றன:


"எனக்கான
எல்லாப் பாடல்களும் தீர்ந்துவிட்டன
சிலிர்ப்பூட்டும் இசைக் கோர்வைகளற்று


முதலாம் பக்கம் விரிக்கும் முன்னரே
முடிவை வாசித்துவிடும்
வாசிப்பனுபவமாய் அலுப்புடன் படபடக்கின்றன
வாழ்வின் பக்கங்கள்


எல்லை கடந்த கடல் நீரேரியில்
மண்ணைப்பிரிந்துவிடா வைராக்கியத்துடன்
இறுகப் பற்றிய மண்ணின் மணம்
கரைந்து
மறுகரத்தில் அகப்படாது விழிந்தோடிய
நீரைப்போல ஆயிற்று
இன்று,
ஊரின் நினைவுகள்


"யாதும் ஊரே யாவரும் கேளிர்"
எனும் ஒற்றைப்பாடலில் உயிர்த்திருக்கும் கணியனுக்கு
எப்போது திரும்பினாலும் காத்திருக்கும்
ஓர் ஊர் வாய்த்திருக்கலாம்


பிரியமுற்று
காதல் சொல்லத் தயங்கிய
இந்தப் பெண்ணின் விழிகள் பார்த்து
விடைபெறல் இயலாது


அன்பைத் தவிர
எதையும் பிரதிபலிக்கத் தெரியாத அம்மாவுக்கு
எழுப்ப எழுப்ப
நத்தையைப் போலச் சுருண்டுகிடக்கும் போர்வை
ஞாபகப்படுத்தக்கூடும்
எனது இல்லாமையை


தடயங்களின்றி
இந்த ஆண்டு இப்படி இறப்பு
இன்னபிற குறிப்புகளின்றி
பெயரறியா வனாந்தரத்தில்
கொண்டாட விரும்புகிறேன்
எனது மரணத்தை."


பிரிவு-தொலைவு,இல்லாமை-வெறுமை.இத்தனையும் ஒருங்கே பெற்றவர்கள் நாம்.ஓரத்தில் உழன்று வாழ்வு நாறிப்போகிறது!


சவக்கிடங்குகள் நிரம்பி வழியும் தேசத்தில் இல்லாமை என்பது இருவகைப்பட்டது.


ஒன்று உயிரற்றுப் போய் இருப்பிழத்தல் மற்றது முகம் தொலைத்துப்போன திசையில் சவங்களாக வாழ்வைத் தேடுவது.


இந்த இரண்டும் சாரத்தில் ஒன்றெனினும் செத்தவர்கள் செத்தவர்களே.


சாவதற்காக அதைத் தினம் தேடுவதில்தாம் சாவினது வலி அதிகமாகிறது.


இந்தப் பூமிக்கு நான் வரக் காரணமாகவிருந்தவளுக்கு எனது இல்லாமை போர்வையின்வழி ஞாபகப்படுத்தும் நான் உண்மையில் அன்பையும்,அரவணைப்பையும் மீளப்பெறும் எதிர்பார்ப்பில் தவிப்பதன் தொடர்ச்சியாகவே அங்ஙனம் முணுமுணுக்கிறேன்.அன்னையின் அகத்துக்குள் நான் இருக்கிறேன்.அவள் வாழ்வின் பெரும்பகுதி எனக்குள்ளே விரிகிறது.


ஒருவகையில் நான் அவளை மனதில் காதலியாகச் சுமக்கிறேன்.
அவளைப் பிரியும்போது என்னால் விழிகளோடு வழிகள் பொருத்த முடியவில்லை.நான் இந்த வலிக்காக நொந்து தொலைகிறபோது எனது மரணங்குறித்து எந்தத் தடயமும் இருக்கக்கூடாது.இது எனது நிலைத்த இருப்பை இல்லாதாக்கும் கயவர்களை நோக்கியே நான் பாடுகிறேன்.நான் இருப்பதாகவே அன்னை எண்ணிக்கொண்டாகவேண்டும்.


எனது அழிவில் திணறும் பெத்தமனம் என்னை வருத்தும்.அவளது பூரிப்புக்கு எனது மரணம் குறுக்கே நிற்பதை நான் ஒருபோதும் அனுமதியேன்!


நான் வாழ்வினது எல்லாப் பக்கங்களையும் வாசிக்கிறேன்.அது இயல்பான எனது சுயத்துக்குச் சுகமான சங்கீதமாகிறது.எனினும்,இந்த வாழ்வு அலுப்பூட்டுகிறது.போர்,அழிவு,தேசம் தொலைத்தல்,குண்டடிபட்ட குருதி சிந்தும் உடலம்,ஊனம் மிக்க தேசத்தின் ஓழுங்கின்மீதான எனது விருப்பு எள்ளளவும் விட்டுப்போகாத திசையில் நான் மரணிக்கின்றதைத் தவிர வேறு வழி எனக்கில்லை.



3:

மனிதக் கணம்"கவிதை"ஆகிறது.


"இன்றைய பொழுதில்
ஒரு போரிலிருந்து
இன்னொரு போரைத் தொடக்குதல் குறித்து
எல்லாத் திசைகளிலிருந்தும்
ஆர்ப்பரித்துப் பேசுகிறார்கள்


ஒரு மனிதனை
சிதைக்காமல் தடுக்கும்
மிக எளிய சமன்பாடுகள்
ஒவ்வொரு அழிவின்
தீராநடனங்களிடையே
சுடர்விட்டொளிர்வதை
நிசப்போரின் கொடூரமறியாக்கண்கள்
கவனிப்பதேயில்லை."


டி.ஜே.தமிழனின் கவிதைகளைக் கவிதையென்றழைக்க மனதுக்கு முடியவில்லை-அது வாழ்வு.ஒரு பொழுதேனும் நாம் துய்க்கக் காத்திருக்கும் சாந்த வாழ்வை-தோழமையை-நெருக்கத்தை உணர்வது ஒரு தவ நிலை.எங்குமே அநுபவித்திருக்கமுடியாத மனிதக் கனவைக் கொண்டியங்கும் இளங்கோவின் மொழியைக் குறித்துக் "கவிதை-உணர்வு நறுக்கு-அநுபவம்-வாழ்வு" என்றெல்லாம் சொல்லிப் பார்க்கிறேன்.ஆனால்,எதுவுமே இந்த இயங்கு நிலையைச் சரியாகப் பொருட்படுத்துவதாக நான் உணரவில்லை.


மரபுசார்ந்த கவிதை என்ற வடிவத்துக்குள் நியாயப்படுத்தப்பட்டிருக்கும் தர்ம நியாயங்கள் பல.மரபுக் கவிதையென்றும்,புதுக் கவிதையென்றும் இன்னும் பி.ந.கவிதையென்றும் தொடரும் மெத்தப்படித்தவர்களின் புரட்டு வித்தகத் துண்டுகளின் பின்னே, குறும்பா-கைக்கூ என்று தொட்டுக்கொண்ட இந்தக் கவிதை இன்று உவமையிழந்த அநாதையாகப் பல வடிவில்.


"உவமையும் பொருளும் தம்முள் ஒத்தன என்று உலகம் அறிந்து ஒப்புமாறு உவமை அமையவேண்டும்"-இல்லையா?


மிக நெருக்கமாக உவமையணியைத் தனது அநுபவத்துக்குள் நுழைத்துக் கவிதை சொல்ல இளங்கோவால் முடிகிறதே."யாதும் ஊரே யாவரும் கேளிர் ஒற்றைவரியில் உயிர்த்திருக்கும் கணியன்"என்று மிகச் சாதாரணமாகச் சில உண்மைகளை உவமையாக்கி வைக்கும் பக்குவம் எல்லோருக்கும் அமைவதில்லை.இன்றைய மனித அவஸ்த்தையில் இந்த வடிவம் எப்போதோ செத்தழிந்துவிட்டது.கவிதை அநுபவமான காலத்தில் தேவராம்,திருவாசகம் என்னைப் பாதித்தது.பின்னாளில் கம்பனது கவிதை மொழி பிடித்துக்கொண்டது.ஆனால்,


"இளங் கதிர் ஞாயிறு எள்ளும் தோற்றத்து
விளங்கு ஒளி மேனி விரி சடையாட்டி
பொன் திகழ் நெடு வரை உச்சித் தோன்றி
தென் திசை பெயர்ந்த இத் தீவத் தெய்வதம்
சாகைச் சம்பு-தன் கீழ் நின்று"


என்று, மனிதம் செறிந்த மணிமேகலை என்றோ அறிமுகமாச்சோ-அன்றிலிருந்து இன்றுவரையும் எனது மனதில் பற்பல ஒளிக் கோலங்களை சாத்தனார் காவியம் ஏற்படுத்திக்கொண்டேதாம் இருக்கிறது.


எளிமை
மனித அழகு
எவரையும் ஒழுங்குபடுத்தமுடியமெனும் நம்பிக்கை
மொழியின் ஆளுமை
இலக்கணக் கட்டு
இடரேயில்லாத உவமைகள்
உருவகம்
உள்ளுறை
இறைச்சி...என்றெத்தனையோ அணிகள்கொண்டு சாத்தனார் என்னைப்படுத்திய பாடு மிகநேர்த்தியானது.



மணிமேகலைக்கான பதிகம்-முன்னுரையே சம்பு என்பவள்,கதிர்களைக்கொண்ட இள ஞாயிற்றின் ஒளியை இகழும் தோற்றமுடையவள் எனும் எதிர்மறையானவொரு உவமையாக எடுதாளப்பட்டு,எழில் மிகு மேரு மலையின் உச்சியில் தோன்றுவதுமாகவும்,பின்பு தென் திசை வந்து (நாவலந்) தீவின் காவற் தெய்வமாக விளங்குகிறாள் என்பதாகவும் ஆரம்பிக்கும் இந்த மணிமேகலைப் பதிகம் உண்மையில் எனக்குள்"ஒளியாக-அறிவுறும் ஒரு தியான நிலை"என்பதாகவே அநுபவமாகிறது.இது அறிதலை உவமையாக்கிற ஒரு பண்பைக் கொண்டியங்குகிறது.சம்பு ஒரு பெண்ணாக-தெய்வமாகக் காட்டப்படினும்,எனது கணிப்பின்படி அவள் அறிதலின் படி நிலைகளைக் கொண்ட சிந்தனையாகவே இருக்கிறது.


இந்த நிலைக்குள்ளே மனித உணர்வுகளின் வெளிப்பாடுகளைப் படைப்பு என்ற நிலைக்குள் கட்டுப்படுத்தும் வித்தக நிலையை நான் மறுத்துவிடுவதால்,கவிதை என்பதை நீங்க வைத்து "உணர்வினைச் சிதைக்கும் மொழிக்கு"கவிதை வடிவம் சொல்லிக்கொள்ள விரும்பவில்லை.இதன்மீது கட்டிவைத்துக் கதைவிடும்"யாப்பு இலக்கணம்"பண்டிதர்களின் பல்லாக்காகவே எனக்குப்படுகிறது.நான் உணர்வதைச் சொல்ல முடியாத மொழிக்கு பட்டுக் குஞ்சம் வைத்துப் பல்லாங்கு பாடும்போது அங்கு "யாப்பு இலக்கணம்"இருக்கலாம்.ஆனால்,மனித வாழ்வு-அதன் அநுபவம்,சிந்தனை இருப்பதாக எவருஞ் சொல்ல முடியாது!


இந்த மணிமேகலை சந்தங்களாக விரிகின்றதும்,யாப்புக்குள் அமைய வருடிய எளிய மொழியைக் கொண்டிருப்பதும் ஒரு புதிய வகையிலான மரபோடு(மனித அழகைப் பிரதானப்படுத்தும் மொழி)விரிவதும் இலக்கியச் சிறப்பில்லை.மாறாக,மனிதம் நிறைந்தது என்றே நான் சொல்வேன்.


இப்போது இளங்கோவிடம் வருவோம்.அதாவது,நாடற்றவனின் குறிப்புச் சொன்ன இளங்கோவைச் சொல்கிறேன்-நீங்கள் சிலம்புக்காரனை எண்ணிக்கொள்ள வேண்டாம்.மனிதம் நிறைந்த அநுபவங்களாகவேதாம் டி.ஜே.யின் உணர்வினது மொழிகள் நம்மோடு ஒலிக்கின்றன.மிக எளிமையான மொழி.ஆனால்,இறுகிய வார்த்தைகள்.மிகத் தாரளமற்ற மிகச் சுருங்கிய சொற்களைக்கொண்டு உணர்வதைக் குறித்திருக்கும் பண்பு இளங்கோவின் வாழ்வுக்குள் சிக்குண்டுள்ளது.


ஈழத்துக் கதையாளர்களை-கவிதையாளர்களை மிகச் சமீபத்தில் வைத்து வாசிக்கும்போது,அவர்களிடத்தில் விருத்தியாகி வந்த பாண்டித்தியக் காய்ச்சல் இந்த இளங்கோவிடம் அறவே இல்லாது போகிறது.உணர்வை மொழிக்குள்ளிருந்து விடுவிக்கும் நீண்ட போராட்டத்தில் இளங்கோ மெல்ல இணைகிறார்.முடிந்தவரை எகிறித் தவிக்கும் உணர்வைத் தான் கொண்டியங்கும் மொழிக்குள்ளிருந்து பிரித்தெடுத்துத் தந்ததே டி.ஜே.யின் சிறப்பு.


இந்தச் சிறப்புக்கான உதாரணமாக "இருத்தல்களின் மீது கவியும் இன்மைகள்" எனும் நறுக்கை எடுத்தால் பொருந்தும்.


"செம்மஞ்சளாய்
இலைகள் உதிர்ந்து கொண்டிருந்த பருவத்தில்
முன்பொரு முறையும் சென்றிராத
சிறு தீவுக்குப் பயணித்திருந்தேன்


ஒரு மதுபான விடுதியின்
இருட்டு மூலையில்
என் கோப்பையை நிறைக்கும்
மதுவினைப்போல்
பரவியிருந்தது வெறுமை


அந்நியமான சூழலின்
தோலின் நிறத்தை நிராகரித்து
மொட்டவிழ்க்கும் தோழமை
அழகு நிறைந்தது


இப்போது
நமது உதடுகளில்
நுரைத்துத் ததும்புகின்றன
வார்த்தைகளும் மதுவும்


திடீரென
நடன அரங்கிற்கு இழுத்துச்சென்று
ஆட்டத்தின் எந்தவிதியும் அறியாவென்னை
soca நடனம் இணைந்தாடச் சொல்கிறாய்


மதுவும் இசையும்
நரம்புகளைத் துளைக்க
தளும்பாதிருப்பர் அறிவுஜீவிகள்
நான் உன் பிரியத்துக்குரியவன்
ஆடுகின்றேன்


வாரமொன்று கழிந்து
புறப்படுகையில்
பேரூந்து யன்னலில்
அலைந்து திரிந்த தேக்கமிலை
காலம் முழுவதற்குமான
நமது பிரிவுத் துயரை
காவிச் செல்கிறது


இந்நள்ளிரவில்
நீ சமைத்துப் பரிமாறிய
உன் கலாச்சாரத்துக் கார உணவும்
soca நடன அசைவுகளும்
ஒரு கடிகாரத்தின் முட்சப்தத்தைவிடவும்
அதிகம் தொந்தரவு செய்கின்றன


நீயும் எழுத்தக் கூடும்
தென்னை சூழ்ந்த கடற்கரையில்
ஊரின் ஞாபகம் வந்து
விழிகளிரண்டில் ஈரஞ்சுமந்த
ஒரு நாடற்றவனின் குறிப்பினை."


இலகுவானவொரு மொழியுள் தேக்கி வைத்திருக்கும் மிக நேர்த்தியான மனிதமொழியை பிரித்தெடுத்து நான் சிதைக்கின்ற வேலைக்குள் வதைபடுவதற்கு இந்த அநுபவம் என்னை இதுவரை துரத்துகிறது- முடியவில்லை.அன்பு-நட்பு என்பது மிக உண்மையான மனித நிலை.இந்த உண்மை என்பதை பொதுப்புத்தியுள் திணித்து எவரும் விளங்க முற்படுமிடத்து எனது உண்மை உண்மையில்லை.எனக்கு நண்பர்கள் எவருமில்லை.தெரிந்தவர்கள்-பழக்கமுள்ளவர்கள் உண்டு.நட்பு-நண்பர் என்பதை நான் வடிவத்துள் அடக்கங்கண்ட அர்த்தப்பாட்டோடு சொல்வதில்லை.அத்தகையது நட்புத்தாமா என்று நான் எனக்குள் கேட்டு வைப்பதுண்டு.

மேலே இளங்கே மனித உணர்வினது உச்சமான நட்பு நிலை-அன்பு நிலை-பாசம் குறித்து உணர்வதை வெளிப்படுத்துகிறார்.சிக்கமன் பொறைட்டின் உளவியற் பகுப்பாய்வைக்கடந்து ஆய்வற்ற-அறமற்ற மனிதப் பொது நிலைக்குள் நான் சஞ்சரிக்கிறேன்.அங்கே,எனக்காகக் கட்டிவைத்துள்ள இந்தப் பாசத்துக்குள் எந்த "ஆய்வும்"வந்து குடுமியில் பிடித்து அர்த்தஞ் சொல்ல முனைதல் என்னையும்,எனது மனிதக் குணத்தையும் கொச்சைப்படுத்துவதை அந்த நவீனத்துவம்-இந்த நவீனத்துவம் என்பதையோ அல்லது யதார்த்தவாதம்-ரியலிசம் என்றதைப் புனித்தப்படுத்தும் நோக்கங்கட்கமைய விளக்க முற்படுவதையோ எனது அநுபவம் மறத்தொதுக்கிறது.ஒரு தொகுப்புக்குள் அநுபவமான வாழ்வைக் கவிஞனது உள்ளத்தைக் கண்டு வாழ முற்படுவதே எனது குறிப்பின் நோக்கம்.

என்னைப் பொறுத்தவரை மெய்ப்பாடு என்பது உடம்பினது வழியாக(அடிக்காதீர்கள்.அது புலன்களின் வழியாகவென்று வித்துவான்கள் சொல்வார்கள்)உணர்ச்சியை-அநுபவத்தை-மனித நிலையை-உயிரின் தவிப்பைப் புலப்படுத்துவதாகும்.இந்த நிலையை ஒத்த இளங்கோவின் உயிரின் தவிப்பைப் பாருங்கள்:

"மதுவும் இசையும்
நரம்புகளைத் துளைக்க
தளும்பாதிருப்பர் அறிவுஜீவிகள்
நான் உன் பிரியத்துக்குரியவன்
ஆடுகின்றேன்"

பிரியத்துக்குரியவனாகும் இளங்கோ மனது துள்ளித்திரிகிறது.காடுமேடெல்லாம் இறக்கை விரிக்கும் இந்த மனதுக்கு உலகத்தின் அனைத்து எல்லைகளும்,எல்லைகள் அல்லவே.இது,

"அந்நியமான சூழலின்
தோலின் நிறத்தை நிராகரித்து
மொட்டவிழ்க்கும் தோழமை
அழகு நிறைந்தது"

என்று தனக்கான புதிய தத்துவத்தைத் தனது வாழ்நிலையிலிருந்து பாடமாகக்கொள்கிறது.இதன் உலகம் மிகவும் விரிந்தது.ஒரு சிறு தருணத்தில் தன் உயிரையே வழங்கக் காத்திருக்கும் இந்த ஆற்றல்மிக்க மனித நிலை மிக உயர்ந்த நட்போடு வாழ்வைத்தினம் புதிப்பிக்கிறது.இன்றைய முட்கள் நிறைந்த நவீன அடிமைத்தனமிக்க சமூக அமைப்புள் இதுவொரு கலகக் குரலாக-உயிராக இந்த மனித சமுதாயத்தின் அடித் தளத்திலே ஊற்றெடுத்தபடி நம்மையெல்லாம் வியாபிக்க, நமக்குள் அண்மிக்கிறது புதிய வேதம்.தோழமையின் உயிர்த்திருப்புக் காமத்தோடு கைகுலுக்கும்-வீரத்தோடும் கை குலுக்கும்.இதுதான் பொருள்வாழ்வில் நமக்கு அநுபவமானது.ஆனால்,இதைக் கடந்தவொரு உலகம் உயிரின் தவிப்பில் உலாவருகிறது.இதுதான் மோன நிலை-தியான நிலை என்றெல்லாம் முற்றும் துறந்தவர்கள் சொல்வார்கள்.இந்த முற்றையும் திறக்காத என் பரதேசி நிலையுள் இது வாழும் ஆசை என்றாக விரியும்.இந்த ஆசை தன்னைச் சுற்றிய பெளதிக உலகத்தைப் புரிவதிலும்-நேசிப்பதிலும் தன் மோனத் தவதைக் குவிக்கிறது.அங்கே,

"இந்நள்ளிரவில்
நீ சமைத்துப் பரிமாறிய
உன் கலாச்சாரத்துக் கார உணவும்
soca நடன அசைவுகளும்
ஒரு கடிகாரத்தின் முட்சப்தத்தைவிடவும்
அதிகம் தொந்தரவு செய்கின்றன"

என்று நான் உணரும்போது, மனிதவாழ்வு விருப்பின் அதி உச்சமான தருணம் உயிரின் ஓசையாக எனக்குள் பிரதி செய்யப்படுகிறது.இது, என்னைத் தொந்தரவும் செய்கிறது.நான் சார்ந்து வாழ்பவன்.எனக்கு மற்ற உயிரோடு கலக்கும் அவா எனது மனத்தில் சதா கசிந்தபடியேதாம் இருக்கும் .இதை மேன் மேலும் மெருகுப்படுத்தும் எதிர்ப்பால் வினை எனது மறு உற்பத்தியை நோக்கிய வரம்பில் காதற்கீதம் சொல்லும்.அது, மனிதம் தளர்ந்து சோம்பிய நிலையுள் புத்துணர்வுக்காக ஏங்கும் நிலை.இதை நானோ நீயோ தகவமைத்துத் தரவில்லை.இது இயற்கையின் கொடை.இதை இன்னொரு மாகாக் கவிஞனான கையின்றிக் கையின(Heinrich HEINE)சொல்லும் மொழியினு}டாக நான் உறுதிப்படுத்தமுடியும்.இவனும்,டி.ஜே.தமிழனும் நெருங்கி வரும் நல்லதொரு இடம் மனிதத் தவநிலையாக இருக்கிறது.இருவரது பாடலும் ஒரு சமாந்திரமான மனிதத் தேர்வை நோக்கிச் செல்கின்றன.


Drei und Dreissig Gedichte


(Die Loreley)
Ich weiss nicht,was soll es bedeuten,
Dass ich so traurig bin;
Ein Maerchen aus alten Zeiten,
Das kommt mir nicht aus dem Sinn.

Die Luft ist kuehl und es dunkel,
Und ruhig fliesst der Rhein;
Der Gipfel des Berges funkelt
Im Abendsonnenschein."-என்று கையின பாடுவதும் மனிதத் தவநிலையாகும்.முப்பத்தி மூன்று கவிதைகளுக்குள் கையின கட்டிவைத்திருக்கும் மனிதம் இயற்கையோடு,சமூதாய வாழ்வோடு-வெறுமையோடு-தனிமையோடு,பிரபஞ்சத்தோடு-தன்னைச் சுற்றிய அனைத்தோடும் உறவாடும் தவநிலையாக விரிகிறது.

"எனக்குப் புரியவில்லை,அதற்கான அர்த்தம்,
மிகவும் கவலையோடு இருக்கிறேன்,
பண்டையக் காலத்துப் புனைகதை ஒன்றினால்,
இது எனது மனதிலிருந்து விலகுவதாகவில்லை.

காற்றுக் குளிருகிறது கூடவே இருட்டாக இருக்கிறது
ரையின் ஆறு அமைதியாகப் பாய்ந்தோடுகிறது
மலையுச்சியின் முனை ஒளிருகிறது
மாலைச் சூரிய ஒளியுள்..."

கையின கலக்கமுறுவதும்-களிப்புறுவதும்பின்பு வெறுமைப்பட்டுக்கிடக்கும் வீட்டினது முன் ஆகாயத்தைப் பார்க்கும் பொழுதுகளும்,நாடற்றவனின் புரிதலுக்குள் சிக்குப்படும் நேசமும்-பாசமும்,வெறுமையும் ஒன்றின் தொடர்ச்சியாக எனக்குள்ளும் விரிவதின் தருணம்தாம் எமக்கான மனித இருத்தலும்-இன்மையுமாகும்.எனவே,

"நீயும் எழுத்தக் கூடும்
தென்னை சூழ்ந்த கடற்கரையில்
ஊரின் ஞாபகம் வந்து
விழிகளிரண்டில் ஈரஞ்சுமந்த
ஒரு நாடற்றவனின் குறிப்பினை."


பண்டைய இலக்கியத்துள் காதலன்,தன் காதலியின் அல்குலையும்,இடுப்பையும் உவமை வாயிலாக வர்ணிப்பான்.


"அவாப் போல அல்குல் அகன்றது,சான்றோர் கேள்வி அறிவுபோல இடுப்பு நுண்மையானது"என்றும் வர்ணிக்கின்ற சூழலில் காதலனின் உணர்வுநிலை-வாழ்வு,நெருக்கமுற முனையும் ஆசைக்குப் பின்பான வாழ்தல் வெளிப்படுகிறது.இத்தகைய நிலைமையானது எல்லாவகை நியாயங்களுக்கும்,எல்லைப்படுத்தல்களுக்கும் உட்பட்டுக்கிடக்க முனையாது தனது சுய தெரிவை மிக இலகுவாகத் தேர்ந்து கொள்கிறது.இது இடம்,பொருள்,ஏவல்-காலம் என்ற தர்க்க நிலைமைகளைப் பொருட்படுத்துவதில்லை.இங்கே,


"திடீரென
நடன அரங்கிற்கு இழுத்துச்சென்று
ஆட்டத்தின் எந்தவிதியும் அறியாவென்னை
soca நடனம் இணைந்தாடச் சொல்கிறாய்"


என்று கூறும் நான்.அதே கணத்தில் எல்லையில்லாப் பறவையாக எனது சிறகை விரித்து ஆடுவேன்.அது என்ன பெயரிட்டு அழைத்தாலும் நான் ஆடும் நாட்டியம் மனிதத்தின் வாழும் விருப்பு.இந்த விருப்பே என்னைச் சகலவிதத்திலும் அசைக்கிறது.இதுள் நாம் மகிழ்ந்திருக்கிறோம்,அன்று எனது மண்ணில் இதே மகிழ்வு எனக்குள்ளும் ஊருக்குள்ளும் பாயும் நதியாகத் தடம் புரண்டோடிய காலவெளியில்,நினைவு குத்திநிற்கிறது.இதோ அந்த வாழ்வின் சுவடு:

"மகிழ்வின் சாயல் கலந்துருகிய அக்கணத்தில்
புத்தரையும் காந்தியையும் குழைத்துப் பூசியபடி
அந்நியமான சிலர்
எங்கள் தேசத்தில் பரவினர்
எந்தக் கேள்வியுமில்லாது


சிரித்தபடி வந்தவர்கள்
முகங்கள் இறுகியபடி
முள்ளுக் கம்பிகளுக்குள் புதைந்ததற்கு
காலம்மாறி வீசிய
அமைதியின் புயலும் காரணமெனலாம்"


-அமைதியின் மணம்.இப்படியாக நம்மை நடாற்றில் தள்ளிய நெடும்பொழுது இன்னும் விடிந்த பாடில்லை!நெருப்புக்குள் தேடிக்கொண்டிருக்கும் குளிர்மைக்காக நெருங்க மறுக்கும் உண்மை, ஒரு பொழுதாவது நம்மை அண்மித்தாகவேண்டும்.இளங்கோ மிக அழகாகவே அந்த உண்மைகளின் பின்னே அணிவகுத்துத் தனது நாடற்ற நிலைக்குள் உணர்ந்தவற்றைக் குறிப்புகளாக்குவதில் மிக நேர்த்தியாகத் தன்னையும் புறவுலகத்தையும் உணர்ர்ந்துகொள்கிறார்.இந்த உணர்வின் வெளிப்பாடுகள், மனித நிலையை மறுத்தொதுக்கித் தனிநபர் வாதத்தின் பாரிய உச்சபச்சக் கணைகளை அள்ளியெறியவில்லை.மாறாகத் தன்னையிழந்த பொது மனிதக்கூட்டில் தானும் ஒரு குஞ்சு என்று கீதம் இசைக்கிறது,டி.ஜே.யின் கவிதைகள்.


கழிந்தது பொழிந்தென வான் கண் மாறினும்
தொல்லது விளைந்தென நிலம்வளம் கரப்பினும்
எல்லா உயிர்க்கும் இல்லால் வாழ்க்கை
இன்னும் தம்என எம்மனோர் இரப்பின்
முன்னும் கொண்டிர்என நும்மனோர் மறுத்தல்
இன்னா தம்ம
-புறம் 208.

ப.வி.ஸ்ரீரங்கன்.
18.07.2008


Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது