Language Selection

ஆவீன மழை பொழிய இல்லம் வீழ....

இங்கு எதுவும் ஈனவில்லை. கடும் மழையும் பொழியவில்லை. எனினும்

என் வீடு வீழ்ந்தது. சிதறுதேங்காய் போன்று சிதறியபடியே கற்கள்

உருண்டன.

கூடவே கோதாரி புடிச்ச உடம்பும் சிதறிப் பிய்ந்தது.

ஆவீன மழை பொழிய இல்லம் வீழ...

நாசியேவ குண்டு பொழிய இல்லம் வீழ மெய் சிதற

அகத்தடியாள் விம்மியழ வாரிசு வதங்கித் துவள....

இருப்பைக் காக்கத்தான் யாவும்.

 

ஈழத்தை விட்டு ஜேர்மனியில் வாழ்வதும் சாவதும் இருப்பைப் பற்றிய

கனவின் உந்துதலால்தாம்.

நீண்டு வளையும் உணர்வுகளுக்கு குறியீடு எதுவுமில்லை.

சிதறிய கற்களுக்குள் சின்னதாய் முனகல்.

மனைவி.

ஒலி.

எதிரொலி!

என் செவிப்பறை இரைச்சலில் வலுவிழந்தது.

பிரபஞ்ச இரைச்சல்.

ஒலியைத் தவிர வேறெதுவுமில்லை. அத்வைதம் மனதில் விரிந்தது.

ஒலியே அநாதி!

சற்றுமுன் வெடித்த குண்டின் ஒலி எனக்கு அநாதியாகவே பட்டது.

ஈழத்துப் பிரஜை என்ற உந்துதலோ என்னவோ!

அகத்தடியாள் மெய் நோக அடிமை சாக....

என் அகத்தடியாள் அழுதாள்.

மெய் நோக நோக விம்மி விம்மியழுதாள்.

அடிமை?

இவ் லோகத்தின் அடிமை??

தான் அடிமையென்று உணர்வதற்குள்ளேயே அடிமை செத்தது.

என் வீரியத்தின் மகுடம் துவண்டு கிடந்தது. மூச்சில்லை.

முகங்கற்குவியலுக்குள்.

நாடி நரம்புகள் வலுவிழக்க என்னால் அவனைப் பார்க்க

முடியவில்லை.

உச்சியிலிருந்து குருதி கசிந்தது.

அவன்மீது கட்டப்பட்ட கனவுகள் கோடி. தவிடுபொடி யாவும்.

என் மீது நான் கொள்ளும் பச்சாதாபம் அவனுருவில் வலிமை சேரும்.

எனக்காக எதிர்காலம் முற்றுப்புள்ளியாய் போனபோது, அவன் எனக்கு

ஆரம்பத் தொடரானான். இதற்குக் குண்டு முற்றுப்புள்ளி வடிவில்

வந்து சேர்ந்தது.

இயலாமை மீண்டும் உச்சியில் ஏறியமர்ந்து ஊனப்படுத்தியது

என்னை.

அவன் மனிதத்தை(சஞ்சிகை) இறுகப்பற்றியிருந்தான்.

குருதியினால் அiதைத் தூய்மைப்படுத்தவா...?

போன கிழமைதாம் அது தபாலில் வந்தது. சுவிசிலிருக்கும் சில தமிழ்

நண்பர்களின் முயற்சி அது.

மனிதம் மீது கவிந்த வெறுப்புத்தானே குண்டுகள் வடிவில்

குடிகளுக்குள் வருகின்றன?

மாவீரம் போகுதென்று விதை கொண்டோட

வழியிலே கடன்காரன் மறித்துக்கொள்ள....

இருப்பதே வாடகைக்குடியில் இதற்குள் விளைவிப்பதற்கேது நிலம்?

ஒரு

நாளைக்கு உடம்புக்கு முடியாது போனால் வாடகைவீட்டு ஞாபகம்.

கிருஷ;ணனின் பிரமாண்ட காட்சியில் வாயில் விரியும் கோறையாக....,

அதற்குள் மானுடம் புழுவாக நெளியும் காட்சியாக விரியும்.

நேற்றும் வேலைக்குப் போனபோது என்னுடன் வேலைபார்க்கும் என்

நண்பன் ஞானத்தின் பெயரை நேர அட்டவணையில் இருந்து

நீக்கியிருந்தார்கள். போனமாதம் வேறொரு தொழிலாளியை வீட்டுக்கு

அனுப்பியபோது தட்டந்தனியனாக நின்று எதிர்த்தவன்.

டொச்சில்'Ausbeutung Systeme" (சுரண்டல் பொறிமுறை)

என்று கோசம் போட்டவன்.

நேற்று....

இன்று நான், என் குடும்பம் வெடிகுண்டுப் புகைக்குள் குருதி சிந்தி....

உயிர் கொடுத்து....

இடிபாடுகளுக்குள் இருந்து என்னால் எதுவும் செய்யமுடியவில்லை.

வேலைக்குப்போக முடியாமல் நேர்ந்ததையெண்ண அது பயமாகி என்

வீட்டு இழப்பைக்கூட மறக்கடிக்கிறது சில விநாடிகள்.

டொச்லாண்ட் புகைகளின் பின்னே...

எனக்கு ஈழம் இப்போ சிறப்பானதாகப்பட்டது.

யுத்தத்தை மறுத்து,

தூக்கம் வரும்போது தூங்கி, பசி வரும்போது

கொட்டாவி விட்டு மிஞ்சினால் மூக்கறச்சிக் கீரையுடன்

காலந்தள்ளி.... அமைதியாய் உடல் அசைந்து உயிர்தாங்கும்.

டொச்லாண்ட் எனக்கு எல்லாம் வழங்கி இருந்தது. ஆனால் குண்டை

எப்போது வழங்குமென்று தெரியாமற்போய்விட்டது! தெரிந்திருந்தால்....

என்வீரியம்.... என் கனவு.... என் மனைவி....

நான் அகோர இடிபாடுகளுக்கிடையில் இருந்து என்னை விடுவித்து, என்

மனைவியை.... என் மழலையை அண்மிக்க முயற்சித்து தோற்றேன்.

சில நிமிடங்கள் கழிய.... கீக், கீக் ஒலி செவிகளில் பட்டுத்

தெறித்தன.

இது எனக்கு அதே குண்டு வெடிப்பின் ஒலியை ஞாபகமூட்டியது.

நான் பிரபஞ்ச இரைச்சலுக்குள்....

இப்போது அத்வைதம் அம்மணமாய் எனக்குள் சதிராடியது.

சிவப்பு வான்களில் வந்தவர்கள் ஓடியடித்து எமை அண்மித்தனர்.

அவர்கள் Notruf காரர்கள் (அவசர அழைப்புக்காரர்கள்)

கற்குவியல்களுக்குள்ளிருந்து என் மழலையை இழுத்தெடுத்தார்கள்.

அது துவண்டுவிட்டது.

நான் அப்பன் என்று கூறிக்கொள்ள இயலவில்லை. அப்பனுக்குரிய

முறையில் அவனைப் பார்க்கவில்லை. அவன் வாழ்நாளில் பல மணி

நேரங்களை நான் அவனுக்காகச் செலுத்தாமல் புத்தகங்களுடன்

செலுத்தினேன். மழலையொலி கேட்டு ஆனந்தமடையாமல் நூ

ல்களுக்குள் புழுவாகிப் போனதாலேயோ என்னவோ அவன்

என்னைவிட்டு இப்போது வெகுதூரம் சென்றுவிட்டான். நான் எனக்குள்

நொந்து வெதும்பினேன்.

இனி இங்கு எந்த சவக்காலையில் நிம்மதியைத் தேடுமோ?

நான் இதையறியேன்.

ஏதோவொரு மூலையில் உணர்வு மரத்தவளாய் மனைவி.

அவள் விழிகள் வீங்கி நீர் சுரந்து.... அகோரமான வாழ்வுப் படலத்தை

சொல்லாமற் சொன்னது.

இருவிழி சிந்தும் நீரைப் பாராதே என்

இதயம் மகிழ்வதைப்பார்! என்று அவைகள் கூறவில்லை.

இயற்கை வலிமையுடையது.

சூட்சுமமாக சிலவற்றைச் சொல்லும்.

மனைவியின் விழிகள் எனக்கு இப்படியே பட்டது.

தன் தொப்புள் கொடியுடன் இணைத்து வைத்த இயற்கை, தற்போது

தன்னிடமிருந்து பறித்துக் கொண்டதாகப் பிதற்றினாள். துவண்டதை

அணைத்து மூர்ச்சையானாள்.

அவள் உடலெங்கும் இரத்தக் காயங்கள். தலையிலிருந்து குருதி

வடிந்து அவள் கூந்தலை சிவப்பாக்கியது.

என் குழந்தையின் பால்போச்சி ஒரு மூலையில் சிதறாமல் கிடந்தது.

என் குழந்தையும் இப்படி....

என் விழிகள் பனித்து மீசை வழியாக உதட்டை அடைந்தது.

உப்புநீர், சீதை சிந்திய கண்ணீர் மலைபோன்ற எதனூடோ சென்று

எங்கோ அடைந்ததாம். எனக்குள் ஒரு கம்பன் இருந்தால் எப்படி

வர்ணிப்பானோ தெரியாது.

ராமாயணத்தை சுவைபட விளக்கிய ஆசிரியர் சபாரட்ணம் என்

விழிமுன் வந்து போனார்.

எல்லாம் கனவுபோல் விரிந்து கொண்டன.

என் மனைவியையும் என் மழலையையும் கிடத்தியும் எடுத்தும்

சென்றார்கள். என்னைக் கைத்தாங்கலாய் கூட்டிச் சென்றார்கள்.

நேரம், அதிகாலை நான்கை நகர வைத்தியசாலை காட்டியது.

எனக்கு மருத்துவ விடுப்புத்துண்டு பத்து நாளைக்கு எழுதப்பட்டது.

கூடவே உடற் சிராய்ப்புக்கு பத்துக்கள் போடப்பட்டது.

மனைவியை விபத்து வாட்டில் போட்டு குருதியேற்றினார்கள். அவள்

கடுமையாகக் குண்டடிபட்டுவிட்டாள்.

நான் என் பிள்ளையை எங்கு எடுத்துச் சென்றார்களோ என்று

ஏங்கித் தவித்தேன்.

மனைவியின் உடல்நிலை இன்னும் பெரிய பேரிடியை எனக்கு

வழங்கிற்று. இவற்றையெல்லாம் உணர்ந்துகொள்ள எனக்கு

உணர்வும் உடல் இயக்கமும் இருந்தது.

என்ன பாவம் செய்தேனோ தெரியாது!

புண்ணியம் செய்திருந்தால் நானும் கூடவே போயிருப்பேன். இப்போது

நான்...

இருள் விடிந்து காலை மணி ஏழாகியது.

என் உடலில் வலுவிருந்தது.

வேலை ஞாபகத்திற்கு வர மருத்துவ விடுப்புத் துண்டு 

வழி வகுத்தது.

அத்துடன் வேலைத்தலம் நோக்கிப் போவதாக டாக்டரிடம் கூறி,

மனைவியைப் பார்த்து மனம் நொந்து வேலைத்தலத்திற்குச்

செல்லக் கிளம்பினேன். வழியில் ஞானம் எதிர்ப்பட்டான்.

என்ன மச்சான் உடம்பெல்லாம் கட்டுக்கள்

நான் மௌனமாகியிருந்தேன்.

மச்சான் போன மாதம் வேண்டிய ஆயிரத்தையும் தாவன்ராப்பா.

வீட்டுக்காரர் கொழும்பிலை வந்து நிற்கினம். இப்ப அவையளோடை

ரெலிபோன் கதைச்சிட்டு வரேக்கைதான் நீயும் கடவுளேயெண்டு

நேரிலை வாறாய். காசைத் தாவன்ரா.

ஆவீன மழை பொழிய இல்லாம் வீழ

அகத்தடியாள் மெய்நோக அடிமை சாக

மாவீரம் போகுதென்று விதை கொண்டோட

வழியிலே கடன்காரன் மறித்துக்கொள்ள....

வேலை போகுதென்று மருத்துவ விடுப்புக் கொண்டோட

வழியிலே கடன்காரன் மறித்துக்கொள்ளச்

சாவீடு என் வீட்டில் நிகழ

நான் விழி பிதுங்கி நிற்க...

ஞானம் என் நிலைமைகளை அறியும் நிலையிலில்லை.

பத்தாண்டுகளுக்குப்பின் பெற்றோர்களுடன் உறவாடிய நினைவில்

அவன் தன்னை மறந்திருந்தான்.

பின்னேரம் உம்மைச் சந்திக்கிறேன் என்றேன்.

சரி மச்சான்' ஏதோ சிந்தனைவயப்பட்டவனாய் விடைபெற்றான்.

அவனைப் பிரிந்து கிளம்பினேன்.

வானம் அழத்தொடங்கியது.

எனக்காக...?

குண்டுச்சிராய்ப்பினால் ஏற்பட்ட காயங்கள் வலியை அதிகமாக்கின

எனக்கு.

நிம்மதி இல்லை.

என் மழலை பற்றிய கனவுகள்.

வாழ்வின்மீது வெறுமை கவ்வியது.

வேலை ஏன்?

மருந்து விடுப்பேன்?

எல்லாம் போனபின் இவையிருந்து இலாபமென்ன?

பொன் எழில்கொள் மேனியைக்

கண்ணீரினால் கழுவி ஆறுவேனோ?

மீண்டும் வைத்தியசாலை நோக்கி ஓடினேன்.

இடையில் விம்மி விம்மி அழுது வீங்கினேன்.

என் செல்வத்தின் எழில் முகத்தைப் பார்க்க மனம் அவாப்பட்டது.

அவன் பொங்கி எழும் முழுநிலவுக்கு ஒப்பானவன். ஆனால் அகதி.

கண்கள் மீண்டும் பனித்தன.

விழிநீரினூடே அவன் மலர்ந்தான்.

விழி நீரிலாட அவன் மலர்ந்தான்.

குயிலும் கரும்பும் செழுந்தேனும்

குயிலும் யாழும் கொழும்பாகும்

அயிலும் அமுதம் சுவைதீர்த்த

மொழியைப் பிரிந்தான் அழியானோ...!

சீதைக்கும் ராமனுக்குமா இது பொருந்தும்....?

எனக்கும் தாம்!

என் மழலையை எந்தச் சவக்காலைக்கு

எடுத்துச்

சென்றிருப்பார்கள்...?

மனைவியின் நிலை எப்படியோ? கேள்விகள் நீண்டன.

இரத்தம் ஏற்றினார்கள். எய்ட்ஸ் இரத்தம் வேண்டாம். பிளாஸ்மா மூ

லம் வைத்தியம் பார்க்கச் சொன்னேன்.

டாக்டர்கள் கேட்கவில்லை.

அவள் நிலைமையை நானறியேன்.

ஓடினேன். ஓடினேன். என் குழந்தை நினைவால்.

அவள் நினைவால். வைத்தியசாலை அண்மித்தது.

என்னவளின் கட்டிலைச் சுற்றி பத்துக்கு மேற்பட்ட கருப்புத்

தலைகள் தென்பட்டன.

என்ன தம்பி உமக்கு இப்படி...? பெரியவர் ஒருவர் நா தளதளக்க

கேள்விக்குறியால் ஆறுதல்படுத்தினார்.

ஞானமும் மௌனமாகித் தலைகுனிந்து அவர்களுள் நின்றான்.

மனைவி கோமாவில் இருந்தாள்.

நான தலைமை வைத்தியரிடம் என் மழலைபற்றிய விபரம் அறியச்

செல்வதாய் அவர்களனைவருக்கும் கூறிச் சென்றேன்.

என் மழலையைப் பார்க்க யாவரும் வருவதாய்ச் சொன்னார்கள்.

பதில் கிடைத்தது.

தென் சவக்காலையில் மழலையின் உடலிருப்பதாய் பதில் வந்தது.

ஓடினேன் மீண்டும்.

அவர்களும் பின் தொடர்ந்தார்கள்.

பஸ், டிராம், கார் யாவுமே மெதுவாகச் செல்வதாய் உணர்ந்தேன்.

இதனாற் கால்களினால் ஓடினேன். ஓடினேன்.

பின் தொடர்ந்தவர்கள் எவரையும் திரும்பியபோது காணவில்லை.

இடைவழியில் களைப்புற்று வீதியோரம் வீழ்ந்தேன்.

இதயம் பலமாக அடித்தது. நெஞ்சு வலியெடுத்தது.

'மண் சுழன்றது. மால்வரை சுழன்றது,

மதியோர் எண் சுழன்றது, சுழன்றது

அவ்வெறி கடல் ஏழும்

விண் சுழன்றது ,விரிஞ்சன்

கண் சுழன்றது,சுழன்றது

கதிரொடு மதியும்.... 'என்று கம்பன் சொன்னதுபோல் நான் சுழன்றேன்.

வாய்மட்டும் அசைந்தது.

ஆவீன மழை பொழிய இல்லம் வீழ

அகத்தடியாள் மெய் நோக அடிமை சாக

மாவீரம் போகுதென்று விதை கொண்டோட

வழியிலே கடன்காரன் மறித்துக் கொள்ளச்

சாவோலை கொண்டொருவன் எதிரே தோன்றத்

தள்ளவொணா விருந்து வர சர்ப்பந்தீண்டக்

கோவேந்தர் உழுதுண்ட கடமை கேட்கக்

குருக்கள் வந்து தட்சணை கொடு என்றாரே எனப் புலம்பினேன்.

எனக்கு நீர்த்தாகம் எடுத்தது. நா வரண்டு கண்கள் இருண்டன.

சாவோலை கொண்டு யாரும் எதிரே தோன்றவில்லை. அது என்

வீட்டிலேயே நிகழ்ந்தது.

அகதி வாழ்வில் விருந்துக்கு வர யாருமில்லை.

கோவேந்தர்கள் கடமை கேட்க வந்தார்கள் குருக்கள் வடிவில் போன

கிழமை.

அவர்கள் அவசரகால யுத்தநிதி என்

விருப்பை அறியாமலே ஐந்நூறு

மார்க் என எழுதி ரசீது தந்து பணம் அபகரித்தார்கள்.

இவை யாவும் காட்சியுருவாகின.

கண்களை இருள் முழுமையாக கவ்வியது.

நான் மூர்ச்சையானேன்.

நினைவு திரும்பியபோது ஒரு வைத்திய சாலைக்கட்டிலில் கிடப்பது

புரிந்தது.

கண்ணெதிரே என் மழலை ஓடியாடுவது புலப்பட்டது.

விழிகளைக் கசக்கி மீண்டும் பார்வையைக் குவித்தேன்.

கண்ணீர் மட்டும் நிஜமாகிது.

விழிகளை இறுக மூடினேன்.

மனைவியின் ஞாபகம் பின் தொடர்ந்தது.

அகத்தடியாள் மெய்நோக...

அவள் இறக்கமாட்டாள் தன் மழலையின் உடலைப் பார்க்கும்வரை.

வைத்தியசாலைக் கட்டிலைவிட்டு எழ முயன்றேன். முடியவில்லை.

உடல் பலவீனப்பட்டுப் போய்விட்டது.

மீண்டும் என் மழலையின் பேச்சொலி செவிகளிற் பட்டுத் தெறித்தது.

இப்பேது கண்களில் இருந்து நீர் வரவில்லை.

வரண்ட பார்வையை சாளரத்துக்கூடாக வெளியில் செலுத்தினேன்.

வானத்தில் முழுநிலவு வட்டமிட்;டது. அது என் மழலையின்

நிர்மலமான தோற்றத்தை உரித்து வைத்தாற்போல காட்டி நிற்க.

என் வாய்மட்டும் ஆவீன மழை பொழிய இல்லம் வீழ...? என

முணுமுணுக்க விழிகள் பனித்தன.

 

10.12.1992

ப.வி.ஸ்ரீரங்கன்

 


Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது