2003 யாழ் நூலகத்தை ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்த ஒருவரின் தலைமையில் திறப்பதை தடுத்து நிறுத்திய வெள்ளாளியம், இன்று திடீரென தோன்றி நாங்கள் அதை சாதி அடிப்படையில் தடுக்கவில்லை என்று புதிய பித்தலாட்டத்தை தொடங்கினர். இதையடுத்து அன்று யாரை தலைமை தாங்கக் கூடாது என்று கூறினரோ, அந்த செல்லன் கந்தையாவிடம் எடுக்கப்பட்ட பேட்டியொன்று வெளியாகியுள்ளது. வரலாற்று மோசடி - தொடரும் ஒடுக்குமுறை சார்ந்த ஆவணமாகிவிட்டது.
இந்த பேட்டி குறித்தும், வடிவம் குறித்தும், நோக்கம் குறித்துமான வெள்ளாளியப் புலம்பல்கள் எல்லாம், தங்கள் சாதிய ஒடுக்குமுறை சமூகத்தின் பெருமிதங்களை பாதுகாக்கவே ஒழிய உண்மையை தரிசிப்பதறகாக அல்ல..
இந்தப் பேட்டியானது அரசியல்ரீதியாகவும் – அனுபவரீதியாகவும் நாம் முன்வைத்த உண்மையை உறுதி செய்கின்றது. புலிகளின் தேசியம் வெள்ளாளிய தமிழ் தேசியமல்ல, சாதி ஒழிப்பைக் கொண்டது என்ற மாயைகளை, மீளத்; தகர்த்து இருக்கின்றது. செல்லன் கந்தையா போன்றோர் ஒடுக்கும் வெள்ளாளிய சமூக அமைப்பைப் பாதுகாக்கும் அரசியல் பயணத்தின் போது, சாதி எப்படி குறுக்கிடும் என்பதற்கான உதாரணமாகி விடுகின்றது.
ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்து எந்த உயரத்தில் பறந்தாலும், சாதிய சமூகம் குறுக்கிடுகின்ற தருணங்கள் தற்செயலானதல்ல. பறக்கும் உயரங்கள் எதுவாக இருந்தாலும், சமூகத்தின் கீழ் தான் பறக்க முடியும். சமூகத்தின் மேலாக பறப்பதாக நினைப்பது, வெள்ளாளிய மயமாக்கம் தான். வெள்ளாளிய வாழ்க்கையை உயரமாகக் கருதி, அதை எட்டிப்பிடிப்பது அல்லது அதற்கு மேலாக தன்னை கருதுவது, வெள்ளாளிய மயமாக்குவது.
பொருளாதார ரீதியாக மேலே சென்றுவிட்டால் சாதி ஒழிந்துவிடும் அல்லது ஒழிந்துவிட்டது என்று கருதுவது, ஒடுக்கும் தனியுடமைவாதக் கண்ணோட்டமே. இது சாதிய சமூக அமைப்பில் வெள்ளாளியமாகும்.
இப்படி தாங்கள் «மேலே» வந்துவிட்டமாக நம்புபவர்கள் சாதிய சமூக அமைப்பின் சடங்குகள் பண்பாடுகளை பின்பற்றுவது மட்டுமின்றி, அதை முன்னின்று செய்பவராக மாறிவிடுகின்றனர். சாதிய சமூக அமைப்பை பாதுகாக்கும் வெள்ளாளிய அரசியல் - இலக்கியத்துக்குள்; சங்கமித்து, சாதியில்லை என்று கூவுவதன் மூலம் நவீன வெள்ளாளியத்தின் பாதுகாவலாராகி விடுகின்றனர். சமுதாயத்தின் வளர்ச்சியில் ஏற்படும் கால இடைவெளியானது, ஒடுக்குமுறையின் வடிவங்களை சூட்சுமாக நுணுக்கமாக வேறுவிதமாக மாற்றுகின்றது. இதை அடிப்படையாக கொண்டு, இன்று வெள்ளாளிய ஒடுக்குமுறையே கிடையாது என்று கூறுவது தான் நவீன வெள்ளாளியம். இந்த ஒடுக்குமுறையை செய்பவர் வெள்ளாளனாக கூட இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
Read more...
|