இனிமேல் எந்தச் சந்தர்ப்பத்திலும் இம்மயானத்தில் எரியூட்ட எம் மக்கள் அனுமதிக்கமாட்டார்கள். அந்நிலை மாறுபட்டால் மேலும் போராட்ட களமாக மாறும் நிலையே உருவாகும். இதில் எமது மக்களும் சனசமூக நிலையமும் உறுதியாக உள்ளார்கள்” என கலைமதி கிராமத் தலைவரும் புதிய ஜனநாயக மார்க்ஸிஸ லெனினிஸக் கட்சியின் வட பிரதேச அமைப்பாளருமான செல்வம் என அறியப்பட்ட கார்திகேசு கதிர்காமநாதன் தேசம்நெற் இன் கேள்விகளுக்குப் பதிலளிக்கையில் செப்ரம்பர் 19 2017 இல் தெரிவித்தார். தேசம்நெற் இன் கேள்விகளுக்கு அவர் வழங்கிய பதில்கள் கீழே பதிவு செய்யப்பட்டு உள்ளது.
கிந்துசிட்டி மயானத்திற்கு அருகில் குடியேறியவர்கள் கார்திதிகேசு கதிர்காமநாதனால் (செல்வம்) திட்டமிட்டு மோசடி செய்து விற்கப்பட்ட காணிகளில் குடியேறியதாக உறுதியான ஆதாரங்கள் இன்றி குற்றம்சாட்டப்பட்டு இருந்தது. மேலும் இப்போராட்டமானது ஒரே சமூகத்திற்குள்ளேயான போராட்டம் என்றும் இதுவொரு சாதிய முரண்பாடு அல்ல என்றும் சிறுப்பிட்டி சமூக அமைப்புகளின் ஒன்றியம் ஓகஸ்ட் 20, 2017இல் ஓரறிக்கையை வெளியிட்டு இருந்தது. அதற்கு முன் யோ கர்ணன் தமிழ் பேஜ் என்ற முகநூலில் இக்குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார். இந்த மயான எதிர்ப்புப் போராட்டம் தமிழ் மக்களுக்கு எதிரானது என்றும் சிங்கள பேரினவாத அமைப்பான பொதுபலசேன இதற்கு நிதியளிக்கின்றது என்றும் யோ கர்ணனும் அவரது முகநூல் ‘உண்மைகாண்’ குழுவினரும் தீவிர பிரச்சாரம் செய்தனர். இதன் மூலம் மயான எதிர்ப்புப் போராட்டத்தை மழுங்கடிக்கவும் ஒடுக்குமுறைக்கு உள்ளானவர்கள் எக்காலத்திலும் அதற்கெதிராகப் போராட முடியாத நிலையை ஏற்படுத்துவதற்கு, அவர்களுக்கு பாடம் புகட்டும் ஆதிக்க குணாம்சத்தோடு பல்நிலைப்பட்ட சாதிமான்களும் களத்தில் குதித்தனர்.
Read more...
|