2013 பொதுவில் இலங்கையில் உள்ள அனைத்து உழைக்கும் மக்களும் அரசியல், பொருளாதார ரீதியில் பாரிய சவால்களுக்கு உட்பட்ட ஆண்டாகும். அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு எதிரான போராட்டங்கள், சுத்தமான நீர் வழங்க கோரிய போராட்டங்கள், ஆட்கடத்தல்கள் படுகொலைகளையும் நிறுத்தவும் மனித உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கான என்ற கோரிக்கையுடனான போராட்டங்கள் ஆகியன மக்களின் எதிர்ப்பை அரசியல் அதிகார மையத்துக்கு வெளிப்படுத்தி நின்றன. எனினும் மக்களின் இந்த போராட்டங்கள் எவ்விதத்திலும் வெளிப்படாத, பிரதிபளிக்காத பிரதேசமாக மலையகம் காணப்பட்டது. மலையக மக்கள் முகம்கொடுக்கும் பொதுப் பிரச்சினைகளுக்கும் (பொருட்களின் விலைவாசி அதிகரிப்பு, மனித உரிமை மீறல்கள், தனியார்மயம், இலஞ்ச ஊழல் அதிகரிப்பு) தமக்கே உரித்தான விசேட பிரச்சினைகளுக்கும் (சம்பள கூட்டு ஒப்பந்தம், வீடு, காணி, கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு) குரல் கொடுக்காமல் இருப்பதற்கான காரணம் என்ன? ஏனைய பிரஜைகளைவிட பொதுப் பிரச்சினைகளில் அதிகம் பாதிப்பவர்களாகவும் விசேடமாக பாரபட்சங்களுக்கும் உள்ளாக்கியுள்ள நிலையில் மலையக மக்களின் மௌனம் ஆழமாக பரிசீலிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். மலையக அரசியல் தலைமைகள் பொதுவில் அரசாங்கத்திற்குச் சார்பாக இருப்பதனால் அரசாங்கத்திற்கு எதிராக எந்த நடவடிக்கையையும் எடுக்கக் கூடாது என்ற மக்களின் எண்ணத்தினால் இந்த மௌனம் நிலவுகின்றது என்றோ அல்லது மலையக மக்களை சரியாக வழிநடத்த மாற்று கொள்கையுடனான வேலைத்திட்ட நடைமுறையுடனுமான அரசியல் சக்தி இன்மையினாலே என்று நோகுவது கோளாறுகளைக் கொண்டதாகும்.
Read more...
|