ஒடுக்கப்பட்ட மக்களின் இன ஐக்கியம் என்பது இன்று ஒரு புதிய சிந்தனை முறை மட்டுமல்ல, வாழ்க்கை முறையுமாகும். இதனால் இன்று புரட்சிகரமான அரசியல் கூறாக இருக்கின்றது. புரட்சிகரமான சிந்தனையையும், நடைமுறையையும் கொள்ளாது, மக்களுக்கு எவரும் வழிகாட்ட முடியாது. இவ்வகையில் அனைத்துவிதமான சமூக ஒடுக்குமுறைகளையும் முரணற்ற வகையில் எதிர்த்துப் போராடுபவராக இல்லாத வரை, மக்களை வழிகாட்டிச் செல்ல முடியாது. இவ்வாறில்லாமல் நாங்கள் நேர்மையானவராகவும், உண்மையுள்ளவராகவும், வெளிப்படையானவராகவும் இருக்க முடியாது.
கடந்தகால தேசியம் பற்றிய மீள்பார்வை, இனங்களுக்கு இடையிலான ஐக்கியத்துக்கு முன்நிபந்தனையானது. இன ஐக்கியம் என்பது தொடரும் அரசியலின் நீட்சியல்ல. ஜக்கியத்தின் தேவை என்பது இன்று தவிர்க்க முடியாத அரசியல் தெரிவல்ல. மாறாக மறுக்கப்பட்ட மனிதப்பண்புகளை மீட்டெடுக்கும் போது அதுவே ஐக்கியமாகவும், அந்தத் தெரிவே மனித இருப்பின் தேவையுமாகும். இந்த அடிப்படையில் சமவுரிமைக்கான அமைப்பு தன்னை முன்னிறுத்தி இன்று போராடுகின்றது. சமவுரிமைக்கான புரட்சிகர அரசியல் போராட்டம் என்பது இன்று அனைவருக்குமான மறு அரசியல் சந்தர்ப்பமாகவும் இருப்பதோடு, விமர்சனபூர்வமாக கடந்தகாலத்தை மீள்பரிசீலனை செய்வதற்குரிய அரசியல் வாய்ப்பையும் வழங்குகின்றது. ஒடுக்கப்பட்ட மக்களின் இன ஐக்கியத்துக்காகப் போராடுவது என்பது, சமூகத்தின் மீது அக்கறையுள்ள அனைவரதும் அரசியல் தெரிவாக மாறவேண்டும்.
Read more...
|