சுதன், ரமேஸ் விடுதலையும் புலிகளின் ஆயுதங்களும்
சுமார் இரு நாட்களின் பின்னர் சுதன், ரமேஸ் போன்றவர்களை ரெலோவின் வீட்டிற்குள் புகுந்து கியு பிரான்ஞ் பொலிசார் மீட்டெடுத்தனர். இந்த நேரத்தில் தான் நாம் அடுத்தகட்டமாக என்ன செய்வது? எப்போ நாட்டுக்குப் போவது? எமக்குச் சாப்பிடுவதற்கே கஸ்ரமான நிலையில் பொருளாதார வசதிகளை எப்படி ஏற்படுத்துவது? என்றெல்லாம் பல பிரச்சினைகள் எமக்குள் இருந்தன. அதனால் அவற்றைத் தீர்ப்பதற்காக ஒரு கூட்டத்தைக் கூட்டினோம். அந்த நேரத்தில் சிலர் வெளியேறி ஒதுங்கப்போவதாகக் கூறினார்கள். விசேஷமாக வெளியேறி ஒதுங்கப்போவதாகக் கூறும் தோழர்களுக்கு உயிர் பாதுகாப்பு என்பது மிகவும் பிரச்சினைக்குரியதொன்று. என்றாலும் அந்த நிலைக்கு தள்ளப்பட்டதற்கு ரெலோ முக்கிய காரணமாகும்.
விடுதலையாக்கப்பட்ட சுதன், ரமேஸ் போன்றவர்களைச் சந்தித்து நடந்த சம்பவங்களை விளக்குமாறு கேட்டோம். அவர்கள் தாம் புலிகளின் வலைக்குள் விழுந்து விட்டது உண்மை என்பதை ஒப்புக்கொண்டனர். அத்துடன், புலிகளிடம் ஆயுதம் வாங்கி ரெலோத் தலைவரைக் கடத்திக் கொண்டு போய் மத்தியகுழு அமைப்பது தொடர்பாக சில முடிவு செய்தவுடன் தாம் அவரை விட்டுவிடுவதாக நினைத்திருந்தோம் என்றும் தாங்கள் ஏமாற்றப்பட்டு விட்டோம் எனவும் கூறினர். நாம் கேட்ட கேள்விகள் சில. உங்களிடம் ஆயுதம் இல்லையா? மத்தியகுழுப் பிரச்சினையை இவ்வாறுதானா கையாளுவது? அக்கேள்விகளுக்கு அவர்களின் பதில் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கவில்லை. அதனால் அவர்களை வெளியேற்றி விட்டுத் தொடர்ந்து வேலை செய்வதாக முடிவு செய்தோம். அவர்கள் புலிகளுடன் சேர்ந்து வேலைசெய்ய முடிவு செய்தனர்.
Read more...
|