பாலியல் வல்லுறவுத் தலைநகரான டெல்லியில், துணை மருத்துவ மாணவி மீதான கும்பல் பாலியல் வல்லுறவுக் கொடூரத்தைத் தொடர்ந்து, உழைக்கும் மக்களும் பெண்களும் இளைஞர்களும் ஆத்திரமும் கோபமும் கொப்பளிக்க வீதிகளில் திரண்டு போராடினார்கள். இப்போராட்டங்களாலும், பொதுக்கருத்தும் பொதுமக்களின் நிர்ப்பந்தங்களும் பெருகியதாலும் பாலியல் வல்லுறவுக் குற்றங்களுக்கு எதிராக விரைவு நீதிமன்றங்களை அமைக்கவும், தலைநகர் டெல்லியில் பாலியல் வல்லுறவுக் குற்றங்களைத் தடுக்கவும், பெண்களின் பாதுகாப்பைக் கண்காணிக்கவும் அரசாங்கம் உறுதியளித்துள்ளது. மேலும், டெல்லியில் பாலியல் சீண்டலுக்கும் வன்முறைக்கும் ஆளாகும் பெண்கள் இதுபற்றி புகார் கொடுக்க 181 என்ற தொலைபேசி எண் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இது விரைவில் அனைத்து மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றும் மைய அரசு அறிவித்துள்ளது.
Read more...
|