சமவுரிமை இயக்கத்தையும் அதன் போராட்டங்களையும் முடக்க அரசு இன்று "சமவுரிமை"யை உச்சரிக்கத் தொடங்கியிருக்கின்றது. அந்தவகையில் சமவுரிமை இயக்கம் முன்வைத்துள்ள சமவுரிமைக்கான திட்டம் தான் அரசின் திட்டம் என்பது போல அரசுக்கு ஆதரவான வகையில் சிலர் பிரச்சாரத்தை தொடங்கி இருக்கின்றனர். அரசின் "சமவுரிமை" தான், ஒடுக்கப்பட்ட மக்களின் சமவுரிமைப் போராட்டம் என்று கூறுகின்ற இவர்கள் அரசு உச்சரிக்கும் சமவுரிமைக்கும்; ஒடுக்கப்பட்ட மக்களின் சமவுரிமைப் போராட்டத்திற்கும் இடையில் உள்ள அரசியல் வேறுபாட்டை அரசியல் நீக்கம் செய்துவிடுகின்றனர். அரசியல் உள்ளடக்கமற்ற சொற்களைக் கொண்டு, மக்களை மந்தையாக மேய்க்கின்ற அரசியல் எல்லைக்குள், இதை குறுக்கிக் காட்டி விடுகின்றனர்.
இலங்கையில் இனங்களுக்கும் மதங்களுக்கும் "சமவுரிமை" இருக்கின்றது என்று ஆளும் வர்க்கமும் அரசும் கூறுகின்ற கூற்றுக்கும், சமவுரிமையைக் கோரி போராடும் எமது போராட்டமும் ஒன்றா!? இரண்டும் "ஒன்று" என்கின்றனர். ஒரே "நேர்கோட்டில்" இருப்பதாக கூறுகின்றனர். இப்படி அரசின் செயற்பாட்டுக்கு ஆதரவாக இன்று பிரச்சாரம் செய்கின்றனர். அனைத்தையும் திரித்தும் புரட்டி அரசியல் விபச்சாரம் செய்கின்றனர். புரட்சிகர அரசியலை அரசியல் நீக்கம் செய்வதன் மூலம், மலிவான இழிவான அரசியலை செய்ய முனைகின்றனர். இதை நம்புகின்றவர்கள் இந்தப் பிரச்சாரத்தில் உள்ள மக்கள் எதிர்ப்பு அரசியலை விளங்கிக் கொள்ளாமல் இன்னமும் அரசியல் கற்றுக்குட்டியாகவே இருக்கின்றனர்.புலிகள் இருந்த காலத்தில் ஜனநாயகத்தை நாங்கள்; கோரிய போது, அரசும் கூட புலிகள் மறுத்த ஜனநாயகத்தை பற்றிப் பேசியது. புலிகள் நாங்கள் கோரிய ஜனநாயகத்தையும், அரசும் பேசிய ஜனநாயகத்தையும் ஒன்று என்று கூறி பாசிசத்தை மக்கள் மேல் ஏவியது. இதைபோல் தான் அரசு சொல்கின்ற "சமவுரிமை" யும் சமவுரிமை இயக்கத்தினது சமவுரிமைக்கான கோசங்களும் இரண்டும் ஒன்று என்று கூறி சமவுரிமை போராட்டத்தை காட்ட முனைகின்றனர்.
Read more...
|