தீபச்செல்வன் குளோபல் தமிழ்நியூஸ் இணையத்தில் தமிழ்-சிங்கள மக்கள் இணைந்து போராடுவதை எதிர்த்து "எங்கள் துயரம் தெற்கு மக்களுக்கு தெரியாததா?" என்று கேட்டு எழுதுகின்றார். இதில் அவர் "நம்மில் சிலர் தெற்கு மக்களையும் இணைத்துக்கொண்டே போராட வேண்டும்" என்று கூறுவதை எதிர்த்து குறுந்தேசிய இனவாத தர்க்கத்தை முன்வைக்கின்றார். இங்கு "நம்மில் சிலர்", என்று கூறுவது, எம்மைக் குறித்தது கூட. அத்துடன் "தெற்கு மக்களையும் இணைத்து" போராடக் கூடாது என்கின்றார். இது வெறும் தீபச்செல்வனின் கருத்துமட்டுமல்ல, சிங்கள ஒடுக்கப்பட்ட மக்களுடன் இணைந்து போராட தயாரற்ற அனைவரினதும் நிலையும் இதுதான். இந்தநிலையில் "எங்கள் துயரம் தெற்கு மக்களுக்கு தெரியாததா?" என்று வேறு கேட்கின்றார்! சரி இணைந்து போராடுவது தவறா? இது தமிழ் மக்களின் பிரச்சனை மறுத்து விடுமா? இணைந்து போராடாமல் தீர்வு காணத்தான் முடியுமா? சொல்லுங்கள் எப்படி என்று? "நம்மில் சிலரான" நாங்களும் வருகிறோம். அரசுடன் பேசுவதும், இந்தியாவுடன் சேர்ந்து கூத்தாடுவதும், ஏகாதிபத்தியத்துடன் கூடுவதும் தான் உங்கள் வழி. நாங்கள் இதை மறுத்து, மிகத் தெளிவாக கூறுகின்றோம், தமிழ்-சிங்கள மக்கள் இணைந்து போராடாது, தமிழ்மக்கள் மேலான இனவொடுக்குமுறையை வேறு எந்தவழியிலும் தீர்க்க முடியாது. அவை அனைத்தும் தமிழ் மக்களுக்கு எதிரானது தான். தமிழ் மக்கள் தமக்காக தாம் போராடுவார்களாக இருந்தால், அவர்கள் சிங்கள முஸ்லீம் மலையக மக்களுடன் இணைந்து தான் போராடுவார்கள். இதற்கு வெளியில் வேறு உண்மை மாற்று கிடையாது.
Read more...
|