இலங்கை அரசு இனவழிப்பு யுத்தத்தை நடத்தியது மட்டுமின்றி, பல முனையில் பாரிய பல்வேறு போர்க்குற்றங்களை செய்ததும் உலகறிந்தது. புலிகளால் நலமடிக்கப்பட்ட தமிழ் மக்கள், தங்கள் சொந்த வாழ்வியல் அனுபவம் மூலம் இதை நன்கு அறிவார்கள். ஐ.நா மற்றும் மேற்கு அறிக்கைகள் தான், இதற்கு சான்று தர வேண்டும் என்று கனவு காண்பவர்கள் யார் என்றால், புலிதனத்தை அரசியலாகக் கொண்ட வலதுசாரிகள் தான். அரசு செய்தது போன்று பல போர்க்குற்றங்கள் செய்த கும்பல்தான், அதை ஆதரித்து நின்ற புலத்து புலிக் கும்பல் தான், தங்களை மூடிமறைத்து ஐ.நா அறிக்கை ஊடாக அரசியல் நடத்துகின்றனர்.
இறுதி யுத்தத்தில் மக்களை யுத்தப் பிரதேசத்தில் பணயம் வைத்தவர்கள் புலிகள். மக்கள் படுகொலை செய்யப்பட்ட நிலையில் அவர்களை விடுவிக்காது மட்டுமின்றி, இதைக் காட்டி தம்மை பாதுகாக்க முனைந்தனர். உண்மையில் மக்களை கொல்வதை ஊக்குவித்ததன் மூலம், தாங்கள் தப்பிப் பிழைக்க முனைந்தனர். தம்மைத் தற்காத்துக்கொள்ள பிணத்தைக் காட்டி, புலிகள் அழுது புலம்பினர்.