யாழ்ப்பாண மக்களைக் கதிகலங்க வைத்த "மண்டையன் குழு "
"தீப்பொறி" குழுவின் கொள்கை மற்றும் வேலைத்திட்டம் குறித்த நகல் டொமினிக்கால் எழுதி முடிக்கப்பட்டிருந்தது. செயற்குழு உறுப்பினர்களால் நகல் படிக்கப்பட்டு அது குறித்த விவாதங்கள் ஆரம்பமாகியிருந்தன. இதேவேளை மூதூரிலிருந்து யாழ்ப்பாணம் வந்து தங்கியிருந்த சசி தேசிய இனப்பிரச்சனை குறித்த தனது கருத்துக்களையும் அதற்கான தீர்வுகளையும் எழுத்து மூலமாக முன்வைத்திருந்தார்.
"தீப்பொறி"க்குழுவின் தேசிய இனப்பிரச்சனை குறித்த பார்வையும் அதற்கான தீர்வும், சசியினுடைய தேசிய இனப்பிரச்சனை குறித்த பார்வையும் அதற்கான தீர்வும் அடிப்படையில் நேரெதிராகவே காணப்பட்டது. "தீப்பொறி"ச் செயற்குழுவின் பெரும்பான்மையினரின் கருத்தின் அடிப்படையில் முன்வைக்கப்பட்ட கொள்கைத்திட்டம் சசியால் உடன்பாடு காணமுடியாததொன்றாக காணப்பட்டிருந்தது. தேசிய இனப்பிரச்சனை குறித்த சசியின் கருத்துக்கள் மற்றும் அவரால் எழுத்து மூலம் முன்வைக்கப்பட்ட அறிக்கை குறித்து "தீப்பொறி"ச் செயற்குழுவின் கருத்தை டொமினிக்கும் ரகுமான் ஜானும் சசியுடன் சந்திப்பை ஏற்படுத்தி தெரிவித்திருந்தனர்.