இந்தியப் படையின் வெளியேற்றமும் வடக்குக்-கிழக்கில் புலிகளின் ஆதிக்கமும்
இலங்கையில் நிலைகொண்டிருந்த இந்தியப்படையின் வெளியேற்றத்தையடுத்து பிரேமதாச தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசும் தமிழீழ விடுதலைப் புலிகளும் வடக்கு-கிழக்கு இணைந்த மாகாண சபைக்கெதிராக ஒன்றிணைந்து செயற்பட்டுக்கொண்டிருந்தனர். பிரேமதாச தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசுடன் கைகோர்த்துக் கொண்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் உலகின் நான்காவது பெரிய இராணுவத்தை தமது போராட்டம் மூலம் விரட்டியடித்துவிட்டதாகக் கூறி ஆர்ப்பரித்தபடி வன்னியில் அடர்ந்த காடுகளுக்குள் தலை மறைவாக ஒளித்திருந்த புலிகள் மீண்டும் மக்கள் வாழும் பகுதிகளுக்கு திரும்பியிருந்தனர். ஆனால் இலங்கையிலிருந்து இந்தியப்படை விலகிக்கொண்டதென்பது தமிழீழ விடுதலைப் புலிகளின் இந்தியப்படைக்கெதிரான தாக்குதல்களால் மட்டுமே நிகழ்ந்ததென்ற கருத்தானது தவறானதாகும். இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் பின் இந்தியாவிலும் இலங்கையிலும் நிகழ்ந்த அரசியல் மாற்றங்கள் - பாராளுமன்றத் தேர்தல்கள் - இந்தியப்படை இலங்கையில் இருந்து வெளியேறுவதற்கு காரணங்களாக அமைந்திருந்தன.