நேசன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

"வங்கம் தந்த பாடம்" : வரலாற்றிலிருந்து படிப்பினை பெறாத நாம்.

யூலை 1983 இற்குப் பின் இலங்கையின் இனப்பிரச்சனை என்பது வெறுமனவே இலங்கையின் உள்நாட்டு விவகாரமாக மட்டுமல்லாது, உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த ஒரு கவலைக்குரிய விவகாரமாகவும், இந்திய அரசைப் பொறுத்தவரை அவர்கள் நலன்களின் "அக்கறைக்குரிய" விவகாரமாகவும் காணப்பட்டது. இதனால் இலங்கையின் இனப்பிரச்சனையில் இந்தியாவின் தலையீட்டுக்கான சாத்தியப்பாடுகள் உணரப்பட்டது.

 

 

 


வங்கதேச விடுதலைப் போராட்டத்தின் போதும், வங்கதேசப் பிரிவினையின் போதும் இந்திய அரசு செயற்பட்ட விதம் குறித்தும், வங்கதேசப் பிரச்சனையை தனது நலன்களுக்கு பயன்படுத்துமுகமாக வங்கதேசப் போராளிகள் மீது தனது செல்வாக்கைப் பிரயோகித்தது குறித்தும், இறுதியில் வங்கதேசப் பிரிவினையின் பின் உண்மையான தேசபக்தர்களையும் புரட்சியாளர்களையும் சிறைகளில் அடைத்து தூக்கிலிட்டதுமான வங்கதேசத்தின் படிப்பினைகளை தமிழில் மொழிபெயர்த்து வெளிக்கொண்டு வருவதென்று அன்றைய புளொட் மத்தியகுழுவின் முடிவின்படி ” வங்கம் தந்த பாடம்” என்ற சிறிய கையடக்கத் தொகுப்பு 1983 புரட்டாதி மாதம் யாழ்ப்பாணத்தில் அச்சிட்டு வெளியானது. அன்று இதை வெளிக்கொண்டு வந்ததன் நோக்கம் வங்கதேசப் பிரிவினையின் போது ஏற்பட்ட அனுபவங்களிலிருந்து பெற்ற படிப்பினைகளை அமைப்பில் உள்ளோருக்கும், மக்களுக்கும் தெளிவுபடுத்துவதும் எமது போராட்டம் குறித்தும் அதில் இந்தியாவினுடைய தலையீடு குறித்தும் விழிப்புடன் செயற்பட வேண்டும் என்பதுமேயாகும். ஆனால் "வங்கம் தந்த பாடம்" யாழ்ப்பாணத்தில் வெளியிட்டுக் கொண்டிருக்கும் போதே இந்திய அரசுக்கூடாக புளொட் உறுப்பினர்களுக்கு பயிற்சியளிப்பதற்கான முயற்சிகளும் இந்தியாவில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. "வங்கம் தந்த பாடம்" வெளியிட்ட பின்பு இந்தியாவிற்கு இளைஞர்களை பயிற்சிக்கு அனுப்புவது ஆரம்பமாகியது. வங்கம் தந்த பாடத்தை படிப்பினையாகக் கொள்ள வேண்டும் என்று சொன்ன நாம் அந்தப் படிப்பினைகள் எல்லாவற்றையும புறந்தள்ளி வைத்துவிட்டு இந்தியாவின் வலைக்குள் மிக இலகுவாக இழுத்துச் செல்லப்படலானோம். நாம் வரலாற்றிலிருந்து படிப்பினையைப் பெறாதது மட்டுமல்லாமல் எமது கருத்துக்களுக்கும் நடைமுறைக்குமிடையேயான முரண்பாடாகவும் இது அமைந்தது எனலாம்.

80 களின் ஆரம்பத்தில் "இந்தியா வரும் தமிழீழம் எடுத்துத் தரும்" என்ற கனவு தமிழ்மக்கள் மத்தியிலும் தமிழ் தலைமைகள் மத்தியிலும் காணப்பட்டது. வங்கம் தந்த பாட அனுபவங்களுக்குப் பின்பும், இந்திய இராணுவம் இலங்கையில் காலடி பதித்த பின்னான அனுபவங்களுக்குப் பின்பும், 30 வருட கால ஈழவிடுதலைப் போராட்டத்தின் கசப்பான நடைமுறை அனுபவங்களுக்குப் பின்பும் கூட பிற்போக்கு இந்திய அரசியல்வாதிகளும் அமெரிக்க, பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகளும் "தமிழீழம்" பெற்றுத்தருவார்கள் என்று இன்னும் நம்பிக்கை கொள்ளும் தமிழ்மக்களும் தமிழ்த் தலைமைகளும் கடந்தகால எமது போராட்ட வரலாற்றிலிருந்து சிறிதளவேனும் பாடத்தைக் கற்றுக்கொள்ளவில்லை என்பதையே காட்டி நிற்கின்றது. பிற்போக்கு இந்திய அரசியல்வாதிகளினதும், அமெரிக்க மற்றும் பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகளினதும் நலன்கள் தமிழ்மக்களின் நலன்களுக்கும் ஒட்டுமொத்த இலங்கை மக்களின் நலன்களுக்கும் நேரெதிரானவை என்பது தான் உண்மை. தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் சிங்கள முற்போக்கு சக்திகளுடனும் உழைக்கும் மக்களுடனுமான ஜக்கியப்பட்ட போராட்டத்தின் மூலமாகத்தான், அவர்களின் துணை கொண்டுதான் வெல்லப்படமுடியும்.

புளொட்டில் முரண்பாடுகளின் தோற்றுவாய்கள்

புளொட் தனது கடந்தகால "இரகசிய" அல்லது "தலைமறைவு" என்ற நிலையிலிருந்து வெளியே வரத்தொடங்கியிருந்தது. இந்தியாவுக்குப் பயிற்சிக்கு ஆட்களை அனுப்புதல், அரசியல் பாசறைகள், மக்கள் அமைப்புக்களை உருவாக்குதல், என்பனவெல்லாம் ஒருவகை "அசுர" வேகத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இவற்றுக்கெல்லாம் மக்களது ஆதரவும், ஒத்துழைப்பும், பங்களிப்பும் கூட கேள்விக்கப்பாற்பட்டதாக இருந்தது. பேரினவாத அரசுக்கெதிராக சாத்தியமான அனைத்துவழிகளிலும் போராடுதல் என்பதே எமது நிகழ்ச்சிநிரலாக இருந்தது.

(உமாமகேஸ்வரன்)

இந்தக் காலப்பகுதியில் புளொட்டின் தலைமை பற்றியும், செயலதிபர் உமாமகேஸ்வரன் பற்றியும் உயர்ந்த மதிப்பும் தலைமை விசுவாசமும் என்னிடமும் இருந்தது என்று சொல்லவேண்டும். இதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன.

 

(சந்ததியார்)

1) புளொட் பற்றியும், உமாமகேஸ்வரன் மற்றும் சந்ததியார் பற்றியும் ஏற்கனவே மக்கள் மத்தியில் இருந்த நல்ல அபிப்பிராயமும் பிரபல்யமும். கூடவே "தமிழீழத்தின் குரல்" வானொலிச் சேவையை (ஈழப்போராட்ட வரலாற்றில் முதன்முதலில்) உருவாக்கி அதனுடாக வெளிக்கொணர்ந்த கருத்துக்கள்.

2) புளொட்டில் தளத்தில் செயற்பட்ட பெரும்பான்மையான மத்தியகுழு உறுப்பினர்களிடையே காணப்பட்ட கடின உழைப்பும எளிமையான வாழ்க்கையும்.

 

( கொக்குவில் சிவா - உரிமை கோரப்படாமல் கடத்திப் புலிகளால் கொலை செய்யப்பட்டார்)

புளொட்டின் இராணுவப்பிரிவு தளத்தில் பார்த்தன் தலைமையில் செயற்பட்டு வந்தது. பார்த்தனுடன் இணைந்து மல்லாவிச்சந்திரன், கொக்குவில் சிவா, திருகோணமலை கிறிஸ்டி போன்றோர் செயற்பட்டு வந்தனர். இராணுவ தகவல் சேகரிப்பு பிரிவுக்கு பொறுப்பாக ரமணன் செயற்பட்டு வந்தார்.

(சுப்பிரமணியம் சத்தியராஜன் 1962 -2001)

சுழிபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆரம்பத்தில் பாலமோட்டை சிவத்தின் தலைமையிலும் பின்னர் அவர் இந்தியாவுக்கு பயிற்சிக்கு சென்றதன் பின் மீரான் மாஸ்டரின் கீழ் "சுந்தரம் படைப்பிரிவு" என்று செயற்பட்டுக் கொண்டிருந்தனர். வவுனியாவில் யக்கடையா இராமசாமி (பின்னர் புளொட்டினால் கொலை செய்யப்பட்டார்), வவுனியா தம்பி (பின்னர் புலிகளால் கொலை செய்யப்பட்டார்) போன்றோர் "காத்தான் படைப்பிரிவு" என்றும் செயற்பட்டுக் கொண்டிருந்தனர். யக்கடையா ராமசாமி, தம்பி போன்றோர் பார்த்தனின் தலைமையின் கீழ், பார்த்தனின் வழிகாட்டலில் செயற்பட்டுவந்த அதே நேரம் சுந்தரம் படைப்பிரிவினரோ தன்னிச்சையான போக்கில் செயற்படலாயினர். இந்தக் காலப்பகுதியில் புளொட்டின் அரசியல் பிரிவுக்கும் இராணுவப் பிரிவுக்கும் இடையே (குறிப்பாக சுந்தரம் படைப்பிரிவுக்குமிடையே) சில முரண்பட்ட போக்குகள் காணப்பட்டது மட்டுமல்லாமல் இராணுவப் பிரிவுக்குள்ளேயேயும் கூட முரண்பட்ட போக்குகளை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. ஒரு அமைப்பினது ஒருங்கிணைக்கப்பட்ட, மத்தியப்படுத்தப்பட்ட செயற்பாடு என்பதற்கு மாறாக, சில தன்னிச்சையான போக்குகள் அங்கும் இங்குமாகத் தென்பட்டன.

சுழிபுரத்தை மையமாகக் கொண்டியங்கிய "சுந்தரம் படைப்பிரிவினர்" இராணுவப் பொறுப்பாளர் பார்த்தனின் கட்டுப்பாட்டுக்குள் இல்லாதது மட்டுமல்லாமல், தளத்தில் அன்று இயங்கிய நிர்வாகத்துக்கும் கட்டுப்படாதவர்களுமாக இருந்தனர். பார்த்தனிடம் காணப்பட்ட மகத்தான ஆற்றல், மனோதிடம், ஆளுமை அனைத்துமே சுந்தரம் படைப்பிரிவினரை கையாளும் விடயத்தில் பெருமளவு வெற்றியளிக்கவில்லை. அன்று தளத்தில் செயற்பட்ட நிர்வாகம் கூட (காந்தன் - ரகுமான் ஜான் தள நிர்வாகப் பொறுப்பாளராக இருந்தார்). சுந்தரம் படைப்பிரிவினரை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதில் வெற்றிபெறவில்லை. இத்தகைய முரண்பாடுகளை நான் புளொட்டில் இணைந்த ஆரம்ப காலங்களில் அவதானித்திருந்த போதும் இந்த முரண்பாடுகள் எதிர்காலத்தில் அமைப்பின் வளர்ச்சிக்கு பாதகமாக அமையும் என்று அன்று நான் கருதியிருக்கவில்லை. காரணம், இந்த முரண்பாடுகளை அன்றைய யாழ் மாவட்டப் பொறுப்பாளர் சத்தியமூர்த்தியும் தள இராணுவப் பொறுப்பாளர் பார்த்தனுமே நேரடியாக முகம் கொடுத்து அவற்றை கையாண்டதால், இந்த முரண்பாடுகளில் இருந்த ஆழத்தன்மையையோ அல்லது இந்த முரண்பாடுகளால் அமைப்புக்கு ஏற்படும், ஏற்படப்போகும் பாதிப்புக்களையோ என்னால் உணரமுடியாமல் இருந்தது.

(தொடரும்)

14/05/2011

1. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 1

2. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 2

3. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 3

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது