காசு பணம் நிலம் சாதி குலம் மதம்..!?

உப்பினில் மீனினம்

உப்பியே காய்கின்ற

வெம்மணற் கரையோரம்..,

மரக்கலம் தனித் தனி

அலையுடன் மோதிய

வீரங்கள் பல பேசும் - ஆங்கே

பனையொடு தென்னையும்

தனித்தனி வளர்ந்ததில்

தனிமரத் தோப்பாகும் - அதில்

தனி நின்று அறுகின்ற

அடம்பன் கொடி சேர்ந்து - தம்

பலத்தினைப் பறைசாற்றும்.

 

தொன்மைகள் பேசியே

வன்முறை ஆள்கின்ற

நான்கின நாடுதனில்..,

சிங்களர் - தமிழரும்

மனிதத்தில் ஒருமித்த

கருத்தினிற் பொதுவாகி - நாம்

சுயத்துடன் வாழ்கின்ற

உரிமைக்குப் போரிடும்

மக்களாய் மலர்ந்திடவே - எம்

பொத்திய கரங்களால்

வானையே உடைக்கின்ற

வீரங்கள் விளைந்தோங்கும்.

 

'சேர்"களும் ஜீ.ஜீ.யும் தொடர்

செல்வா  அமீரர் கோட்டை(ப்)

பிரிவினில் சதிராடி - அவர்

தொடர் கொடியெனத் தூக்கிய

தானைத் தளபதி தம்பியர்

தும்பியர் துப்பாக்கி வரையாக...

 

காசு பணம் நிலம்

சாதி குலம் மதம்  - என்ற

விசங்கள் ஒளிந்திருக்கும் - இந்த

இனவாத மதவாத சதிகார

அரசியல் தினம் தினம்

மனிதச் சாவினில் சதிராட - இவர்

சிற்சிலர் சேர்ந்திவை  - நின்

தாய்மொழி எனச் சொல்லி - அதில்

உந்தனை உப்பாக்கி - தம்

கொலைவெறி தீர்த்திட

உந்தனை அழைப்பவர் தாம்,

நின் தாய்மொழி என(ப்)

பேசிடும் குரல்களை

வெறிமொழி ஆக்கினர், ஏன்..?

 

இவர் தன்னிலை வெறிகளை

உந்தனில் நோகாமல்

ஏற்றிடும் ஊசிகளால்..,

இத்தனை ஆண்டாண்டாய் - எம்

மக்களைக் கொன்ற வரலாற்றில்

உண்டு களிக்கின்றார்.

 

இவர் தாம் ஆண்டபரம்பரை

எனச் சொல்லிடும் போதினில்..!

மீண்டும் மீண்டும் உனை

ஆண்டு சிறக்கின்றார் - இதில்

இந்தியின் இராமன் ஆண்டாலும்

இலங்கையின் இராவணன் ஆண்டாலும்

எம் மக்கள் அடிமையேதான்.

 

இந்நிலை உடைத்தே நாம்

பொது மக்கள் சபையினில்

நல் வாழ்வினைக் கண்டிடவே..,

 

மக்களை அழிக்கின்ற

ஆதிக்கப் பேய்களை - அதன்

அடிமைப் பூத சுலோகங்களை..,

 

அனைத்தின மக்களும்

அடம்பன் கொடி யொப்ப(த்)

திரண்டே பகையாட..,

பறந்தே பகை ஓடும்

பாறியே அவை வீழும்  - எம்

பொத்திய கரங்களால்

பாசிசம் உடைத்திட

வாருங்கள் தோழர்களே..!

மக்கள் போராட்டத்தில்

சேருங்கள் தோழர்களே..!!

 

-     மாணிக்கம்

03.06.2013

Last Updated on Saturday, 29 June 2013 15:17