தமிழனாவது, மசிராவது சாதி தாண்டா எல்லாம்!!

அவன் மனிதன் இல்லை, தமிழன் இல்லை. அவன் பறையன், ஏழை. அவனிற்கு காதல் வர வேண்டுமென்றால் இன்னொரு பறைச்சி மீது தான் காதல் வர வேண்டும். அவள் வன்னியப்பெண். அவளிற்கு மனதில் காதல் அரும்பும் போது அவள் தனது காதலனின் சாதிச்சான்றிதழை வாங்கிப் பார்க்க வேண்டும். அவன் வன்னியனாக இருக்க வேண்டும். வேறு உயர்சாதி என்றாலும் காதலிக்கலாம். ஆனால் தப்பித்தவறியும் தாழ்த்தப்பட்டவனாக இருக்கக் கூடாது. மீறி இளவரசன், திவ்யா போல திருமணம் செய்து கொண்டால் தந்தை தற்கொலைக்கு தள்ளப்படுவார். தாய் மன உளைச்சலில் நோயாளி ஆக்கப்படுவார். மணப்பெண் தந்தையின்றி தவிக்கும் தன் பெற்றெடுத்த தாயிற்காக காதலை, கண் நிறைந்த கணவனை துறப்பாள். இறுதியில் அவன் தன் உயிர் துறப்பான்.


ஜந்தறிவு கொண்டவை என்று மனிதனால் சொல்லப்படும் மிருகங்கள் பருவகாலங்களில் உறவு கொள்ளும் போது, அந்த ஜோடியின் உறவிற்குள் அடுத்த மிருகங்கள் மூக்கை நுழைப்பதில்லை. பிராமணச்சிங்கம், வன்னியச்சிங்கம், பறைச்சிங்கம் என்று பாகுபாடு பார்ப்பதில்லை. சிங்கமும், புலியும் உறவு கொண்டு லைகர் (LIGER) என்ற புதிய இனத்தையே உருவாக்கி இருக்கின்றன. ஆனால் கல் தோன்றி மண் தோன்றா காலத்திற்கு முன் தோன்றிய மூத்தகுடிக் கூட்டத்திற்கு காதலிக்க வேண்டுமாயின் சாதிவெறி நாய்களின் சங்கத்தில் அனுமதி பெற வேண்டும்.


காதலிப்பதற்கு, மணம் செய்வதற்கு இரு மனங்கள் தான் தேவை என்ற அடிப்படை உயிரியல் இந்த சாதிவெறி நாய்களின் தலைவனான மெத்தப் படித்த மேதாவி மருத்துவனிற்கு தெரியவில்லை. கறுப்புக்கண்ணாடியும், காற்சட்டையும் போட்டுக் கொண்டு தன் சாதி பெண்களை பள்ளனும், பறையனும் மயக்குகிறார்கள் என்று பெண்களை அது கேவலப்படுத்துகிறது. குச்சிமிட்டாயும், குருவிரொட்டியும் குடுத்து குழந்தைப்பிள்ளைகளை கூட்டிப் போகிறார்கள் என்று அது கூக்குரல் இடுகிறது.


இந்த லட்சணத்தில் இந்த பன்னாடைகள் தமிழ், தமிழர், தமிழ்நாடு என்று இனத்திற்காகவும், மொழிக்காகவும், நாட்டிற்காகவும் உயிரையும் கொடுப்போம் என்று வீரவசனம் பேசுகின்றன. பல்லாயிரம் போராளிகள் பாடுபட்டு கொண்டு வந்த பகுத்தறிவும் சமுகநீதியும் தான் தங்களின் கொள்கையும் என்று பல்லைக் காட்டுகின்றன. இது பத்தாது என்று கார்ல் மார்க்சின் படத்தை வேறு மேடைகளில் வைத்து நாங்களும் பாட்டாளிகள் தான் என்று பம்முகின்றன. பெரியார் இருந்திருந்தால் செருப்பாலேயே இந்த வெங்காயங்களை வெளுத்திருப்பார். தமிழ்நாட்டு தமிழர்கள் இருவரை வாழவிடாமல் கொலை செய்த இந்த சாதிச்சாக்கடை பன்னிகள் தான் ஈழத்தமிழர்களின் தோழர்களாம். இலண்டன் வரை கூப்பிட்டு மாநாடு நடத்துகிறார்கள் இளிச்சவாய் ஈழத்தமிழர்கள். எஞ்சி இருக்கும் ஈழத்தமிழரில் எவராவது சாதி மாறி மணம் செய்தால் அங்கு வந்தும் கொலை செய்யக் கூடிய கொடியவர்கள் தான் இவர்கள். மகிந்து இனப்படுகொலையாளி என்றால் இவர்கள் சாதிப்படுகொலையாளிகள்.


சவுதியின் மதச்சட்டங்கள் பணக்கார வெள்ளை நாடுகளை சேர்ந்தவர்கள் குற்றம் செய்தால் தொட்டுக் கூட பார்ப்பதில்லை. ஏழைத்தொழிலாளர்கள் என்றால் ஏன் என்று கூட கேட்காமல் தலையை வெட்டும். அது போல இவர்களின் சாதிச்சட்டங்களும் இவர்களின் சாதிப்பெண்கள் வேறு உயர்சாதி ஆண்களை கலியாணம் கட்டும் போது சத்தம் போடாமல் வாயையும், மற்றதையும் பொத்திக் கொள்ளும்.


கொப்புக்கு கொப்பு பாயும் கொரில்லா போல தமிழ்குடிதாங்கி மருத்துவர் அய்யா தேர்தலிற்கு தேர்தல் கட்சி தாவி அரசியல் கூட்டுக்கலவி செய்யும் போது சாதியோ, இனமோ பார்ப்பதில்லை. அது நான் பார்ப்பனத்தி தான், என்னை ஆட்டவோ அசைக்கவோ முடியாது என்று பார்ப்பனியத்தின் நச்சுவேர்களை அறுத்தெறிந்த தமிழ் மண்ணிலேயே நின்று தம்பட்டம் அடிக்கும் ஜெயலலிதா என்றாலும் சரிதான், ஈழத்தமிழரின் இரத்தம் குடிக்கும் சோனியாவின் காங்கிரசு என்றாலும் சரிதான். மகனிற்கு மந்திரிப்பதவி கொடுத்தால் போதும்.


இளவரசனின் இரத்தம் குடித்த பின்னும் இவர்களின் சாதிவெறி சற்றும் குறையவில்லை. வேலை இல்லாதவனிற்கு காதல் எதற்கு, அறியாப் பருவத்தில் ஆசைப்பட்டால் இப்படித்தான், வாழ்க்கை வீணாகி விடக்கூடாது என்ற அக்கறையில் தான் அய்யா அட்வைசுகளை அள்ளி விட்டார் என்று அகிம்சை பேசுகின்றன. நாய்களே, அவர்களின் வாழ்க்கையை தீர்மானிப்பதற்கு நீங்கள் யார்? வேலையில்லாத வன்னியர்கள் எவரும் காதலிக்கவில்லையா? இளவயதில் மணம் செய்து கொண்டதில்லையா? அப்போதெல்லாம் உங்களின் ஊத்தை வாய்கள் ஏன் ஊளையிடவில்லை.


அவன் மனிதன் இல்லை, தமிழன் இல்லை. அவன் பறையன், ஏழை. அவன் வன்னியப் பெண்ணை காதலிக்க கூடாது. அவர்கள் வன்னியர்கள். உயர்ந்த சாதி. வன்னிய குல சத்திரியர்கள். ஏனெனில் அவர்களின் ஆண்குறிகளில் சாதி பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டு இருக்கிறது. ஆளுக்கொரு சாதி, சாதிக்கொரு சங்கம், சங்கத்தை வைத்து கட்சி, கட்சியை வைத்து மக்களை கொள்ளயடிப்பது, சாதிப்பெருமை பேசி கொலை செய்வது தான் ஆயிரம், ஆயிரம் மனிதர்கள் தம் உழைப்பையும், உயிரையும் கொடுத்து போரிட்ட தமிழ்மண்ணின் கையறுநிலையா? பகுத்தறிவும், சமத்துவமும் சேர்ந்து இவர்களிற்கு பாடை கட்ட வேண்டும்.

Last Updated on Wednesday, 10 July 2013 06:55