போர் வேண்டும்……

இரத்தக்களரியில்
அழிவுகாவியம் படைத்த எழுதுகோல்கள்
ஈழப் போர் எழுமென முரசறைகின்றன
காசியண்ணரின் உணர்ச்சிப்பெருக்கு
ஈழமண் எரிய எரிய
தீப் பிளம்பாய் தீட்டிய வரிகள்
நாற்பதாயிரம்
இளையதலைமுறையை கருக்கிப்போட்டது

 

கையறு நிலையில்
கடல் நீர் ஏரியில்
குண்டு பட்டுச் சிதைந்து
மிச்சமும் வீழ்ந்ததே காசியண்ண
நீங்கள் குந்தியிருக்கும் தேசத்து
கோமகன்கள் தடாகத்தில்
எங்கள் குருதிதிதான்
ஈழப்போர் வெடிக்குமென தொட்டெழுதுக

எஞ்சிய தலைமுறையின் மூளைக்குள்
ஏன் வீழ்ந்தோமென சிந்திக்காதிருக்க
காசியண்ணைக்குப் போர் வேண்டும்
ஏய்த்துப் பிழைத்த அரசியல்
கண்ணீரில் தள்ளிய சதிமறைக்கப்
காசியண்ணைக்குப் போர் வேண்டும்
ஆம் போரிடுவர்
எம் தேசமக்களெலாம் சேர்ந்தெழும்
உரிமைக்காய் போர் வேண்டும்
உழைப்பவன் ஆட்சிக்காய்
ஒருமித்தெழுகின்ற போர் வேண்டும்
வீதியெங்கும் செம்பதாகை
ஏந்தி அணிவகுக்கும் போர்வேண்டும்

வீணருக்கு இரத்தப் பொட்டிட்டே
போரெழுந்து
தமிழர் புதைகுழியானது வன்னிநிலம்
யாரெழுந்தும்–நீ
போரிடென்றால் இனி நம்பார்
தாம் எழுந்தே அணிவகுப்பர் பார்……

கங்கா
15/11/2011

 

Last Updated on Wednesday, 18 January 2012 10:28