கங்கா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

விழித்துப்பார் புலத்தெம் சனமே
கண் முன்னே ஊரைச் சுருட்டிய கும்பல்
ஈழவிடுதலை பேசிய படியே மீள வருகிறது
இந்திய அரசை கெஞ்சிப் பார்ப்போமென
புலி எதிர்ப்பு புத்திமான்களும் புலிப்பினாமிகளும்
டெல்லி நோக்கிய நடையும் பறப்புமாய்
அடுத்த சதிக்கும் கூட்டு அமைக்கப்படுகிறது

 

வாண வேடிக்கைக்கு திரிமூட்டிய செம்மல்களிடம்

நாடு கடந்து ஈழம் மீளச் சாகடிக்கப்படுகிறது
ஊர்விட்டோடித் தசாப்தங்கள் கடந்தும்
ஆண்ட பரம்பரைக் கதைகளோடு தான்
புலுடாப் பாராளுமன்றம் உடைபாடுகழுடன் கடிபடுகிறது

முப்படையும் கட்டியும்
முள்ளி வாய்க்கால் வரையும்  துடித்து மடியென
கப்பலுக்காய் காக்க வைத்தவர்கள் யார்
உடலில் கட்டிய குண்டோடு கரும்புலிகளாய்
வெடித்துச் சிதறிய போராளிகள்
தியாகத்தை தின்று கொழுப்போர் யார்

எங்களிடமும்
உழைப்பைத் தின்னும் அட்டைகள் கிடக்கிறதென்பதை
புலத்துத் தமிழன் உணருதல் நிகழுமோ
எல்லாத் தேசத்திலும் ஏழையிருக்கிறான்
எம் விடுதலைக்கு உதவ  தோழமை கொள்வோம்

நந்திக் கடலில் நாம் கற்றுக் கொள்ள வேண்டியது
இந்தியாவை மீறி எதுவும் நடக்காதென்பதல்ல
சொந்த மக்கள் பலத்தோடு
சிங்கள முஸ்லீம் மலையக மக்களையும்
சேர்த்திணைத்தே வெல்லலாம் என்பதே

வாழ்ந்த கூடுகள் குஞ்சுகள் குதறப்பட்டடும்
ஈனத் தமிழனாய் புலத்திலிருந்து
ஈழம் கேட்பது யாருக்காய் சொல்லுங்கள்
வாழும் மக்கள் தீர்மானிக்கட்டும்
கூடி வாழ்தலும் பிரிந்து போதலும் அவர்கள் உரிமை!.

-கங்கா

10/04/2011