ராஜீவின் வாரிசுக்கு ஈழக்குருதி தேவைப்படுகிறது……

 

 

ஈழவிடுதலைக் குருதியில் கொழுத்தது
இந்தியதேசத்து நேரு குடும்பம்
ஆழஊடுருவி வளர்த்துச் சிதைத்தது
காந்தியதேசத்து காருண்ய அரசியல்

தலைமுறையே மறக்காது

கொலை வெறிகொண்ட அமைதிப் படையை
விலைபோகும் நிலையிலில்லை- இளையோர்கள்
கொன்றழித்த கொதிப்படங்காதிருக்கிறது வன்னிநிலம்

தண்டகாராப் படுகொலையை கண்கொண்டுபார்
தவிக்கின்ற ஏழைகளை ஏனென்றுகேள்
காஸ்மீரில் மடிவது யாரென்று சொல்
வாரிசு அரசியலுக்கு இன்னமும்
ஈழத்தவர் குருதியுமா தேவைப்படுகிறது

எல்லாத் தலையீடும்
தலைமுறையை அழித்தது
எங்கள் தவிப்பெலாம்
இந்திய நிறுவனங்களாய் எம்மண்ணில் முளைத்தது
நாம் நொந்து துடித்ததெல்லாம்
மன்மோகன் மகுடமாய் நிலைத்தது

நரியைப் பரியாக்குவதாய்
அரசியல் புலிகள் ஆய்வுகள் எழுதும்
ஈழத் தமிழன் இன்னமும் எஞ்சியுள்ளான்
தமிழ் நாடே ஆடுகளமென -ஈழ உணர்வாளர்
டெல்லியை உலுப்ப வாக்கெடுக்க வருவர்
நளினியின் சிறைவாழ்வு பேசுபொருளாகும்
வன்னி அவலத்தொடு
அண்ணன் சீமானும் அடியெடுத்து வைக்கிறார்

ஓட்டுப் பொறுக்கிகளிற்கும்
உயிரைக் குடிப்போருக்கும் உறைக்கச் சொல்கிறோம்
இந்திய தேச உழைப்பவரே எம்உறவு
ஏழைப் பழங்குடியினர் எம் இரத்தம்
நெஞ்சு நிமிர்த்தி
நீதிக்காய் குரல் கொடுப்போர் எம்சொந்தம்
பஞ்சத்துள் வாழினும் பகை எதிர்த்து
இந்தியப் போர் அரசை
எதிர்கொள்வோர் எம் தோழமைகள்……….

இந்திரா வாரிசு அரசியலுக்கு இன்னமும்
ஈழத்தவர் குருதியுமா தேவைப்படுகிறது


Last Updated on Saturday, 08 January 2011 14:23