சீரியநற் கொள்கையினை எடுத்துக் காட்டச்
சினிமாக்கள் நாடகங்கள் நடத்த வேண்டும்;
கோரிக்கை பணம்ஒன்றே என்று சொன்னால்
கொடுமையிதை விடவேறே என்ன வேண்டும்?
பாராத காட்சியெலாம் பார்ப்ப தற்கும்
பழமைநிலை நீங்கிநலம் சேர்ப்ப தற்கும்
ஆராய்ந்து மேல்நாட்டார் நாட கங்கள்
அமைக்கின்றார் முன்னேற்றம் அடைகின் றார்கள்.
ஒருநாட்டின் வேரிலுள்ள பகைமை நீக்கி
உட்புறத்தில் புத்தொளியைச் சேர்ப்ப தற்கும்
பெருநாட்கள் முயன்றாலும் முடியா ஒன்றைப்
பிடித்தபிடி யில்பிடித்துத் தீர்ப்ப தற்கும்
பெருநோக்கம் கொள்வதற்கும் பிறநாட் டார்கள்
நாடகங்கள், சினிமாக்கள் செய்வார். என்றன்
திருநாட்டில் பயனற்ற நாட கங்கள்
சினிமாக்கள் தமிழர்களைப் பின்னே தள்ளும்.
தமிழ்நாட்டில் நாடகத்தால் சம்பாதிப்போர்
தமிழ்மொழியின் பகைவரே! கொள்கை யற்றோர்!
இமயமலை யவ்வளவு சுயந லத்தார்
இதம்அகிதம் சிறிதேனு மறியா மக்கள்
தமைக்காக்கப் பிறர்நலமும் காக்க எண்ணும்
தருமகுண மேனுமுண்டோ இல்லை இந்த
அமானிகள்பால் சினிமாக்கள் நாட கங்கள்
அடிமையுற்றுக் கிடக்குமட்டும் நன்மை யில்லை .
முன்னேற்றம் கோருகின்ற இற்றை நாளில்
மூளிசெயல் தாங்காத நல்ல தங்கை
தன்னேழு பிள்ளைகளைக் கிணற்றில் போட்ட
சரிதத்தைக் காட்டுகின்றார் சினிமாக் காரர்
இந்நிலையில் நாடகத்தில் தமிழோ, காதை
இருகையால்மூடிக்கொள் என்று சொல்லும்
தென்னாட்டின் நிலைநினைத்தால் வெடிக்கும் உள்ளம்
செந்தமிழர் நிலைநினைத்தால் துடிக்கும் நெஞ்சம்!
http://www.tamilnation.org/literature/bharathidasan/mp166a.htm#dt261
நாடகம் - சினிமா நிலை
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Helvetica Segoe Georgia Times
- Reading Mode