ஏழு வயதே எழிற்கருங் கண்மலர்!
ஒருதா மரைமுகம்! ஒருசிறு மணியிடை!!
சுவைத் தறியாத சுவைதருங் கனிவாய்!
இவற்றை யுடைய இளம்பெண் அவள்தான்,
கூவத் தெரியாக் குயிலின் குஞ்சு,
தாவாச் சிறுமான், மோவா அரும்பு!
தாலி யறுத்துத் தந்தையின் வீட்டில்
இந்தச் சிறுமி யிருந்திடு கின்றாள்;
இவளது தந்தையும் மனைவியை யிழந்து
மறுதார மாய்ஓர் மங்கையை மணந்தான்.
புதுப்பெண் தானும் புதுமாப் பிளையும்
இரவையே விரும்பி ஏறுவர் கட்டிலில்!
பகலைப் போக்கப் பந்தா டிடுவார்!
இளந்தலைக் கைம்பெண் இவைகளைக் காண்பாள்!
தனியாய் ஒருநாள் தன்பாட் டியிடம்
தேம்பித் தேம்பி அழுத வண்ணம்
ஏழு வயதின் இளம்பெண் சொல்லுவாள்:
"என்னை விலக்கி என்சிறு தாயிடம்
தந்தை கொஞ்சுதல் தகுமோ? தந்தை
அவளை விரும்பி, அவள் தலைமீது
பூச்சூடு கின்றார்; புறக்கணித் தார்எனை!
தாமும் அவளும் தனியறை செல்வார்;
நான்ஏன் வெளியில் நாய்போற் கிடப்பது?
அவருக்கு நான்மகள்! அவர்எதிர் சென்றால்,
நீபோ! என்று புருவம் நெறிப்பதோ?"
பாட்டி மடியிற் படுத்துப் புரண்டே
இவ்வாறு அழுதாள் இளம்பூங் கொடியாள்.
இந்நிலைக்கு இவ்வாறு அழுதாள் - இவளது
பின்நிலை எண்ணிப் பாட்டி பெரிதும்
அழுத கண்ணீர் வெள்ளம், அந்தக்
குழந்தை வாழ்நாட் கொடுமையிற் பெரிதே.
http://www.tamilnation.org/literature/bharathidasan/mp165pennulagam.htm#dt134
குழந்தை மணத்தின் கொடுமை
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Helvetica Segoe Georgia Times
- Reading Mode