Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அரசியல்/சமூகம் தாராளவாதப் பொருளாதாரமும் இலங்கையும்

தாராளவாதப் பொருளாதாரமும் இலங்கையும்

  • PDF

பல்வேறு அரசியல் சித்தாந்தங்களினதும் போக்குகளினதும் மையப் பொருளாகவிருப்பது சுதந்திரம் என்பதாகும். ஆனால் நேரெதிரான அர்த்தங்கள் இந்த ஓரே வார்த்ததைக்குள் சுமத்தப்பட்டுள்ளது. சோசலிசம்; பசியிலும் வறுமையிலிருந்தும் விடுதலை பெறவேண்டும் என்கிறது. அனர்க்கிசம் தன்னுடைய வாழ்வை தானே ஆளவேண்டும் என்கிறது. தாராளவாதம் என்பது தனியொருவன் தன்னுடைய மகிழ்ச்சியை எட்ட முயற்சிப்பதற்கு குறுக்கீடுகள் தடைகளின்றிய சுதந்திரம் வேண்டும் என்கின்றது. 1776 ம் ஆண்டில் இந்த தாராளவாதத்தின் தந்தை எனப்படும் ஆடம் சிமித் இனால் வெளிவிடப்பட்ட  «An Inquiry into the Nature and Causes of the Health of Nations»  நூலின் மூலம் இக்கோட்பாடுகள் தோற்றம் பெற்றது. அன்று முதன்மையானதாக நடைமுறையிலிருந்த வர்த்தகக் கோட்பாடுகள், வணிகக் கொள்கையுடன் எதிர்நிலையெடுத்தது. அன்றைய வணிகக் கொள்கை ஒவ்வொரு நாடுகளும் தங்களுடைய பொருளாதாரநலன்களை உறுதியாக வைத்திருக்க வேண்டுமாயின் எவ்வளவு கூடுமானவரை ஏற்றுமதியினை அதிகரிக்க முடியுமோ அதே வீதத்தில் இறக்குமதியையும் குறைந்தளவாக பேணவேண்டும் என்ற சிந்தனையே வணிகக் கொள்கையின் அத்திவாரம்.

 

இதற்காக கையாளப்பட்ட வழிமுறைகளுள் பலவாறான தண்டாப்பண வசூல் மற்றும் வர்த்தக நிபந்தனைகளும் விதிக்கப்பட்டன. ஆங்கிலேய பாராளுமன்றத்தில் The navigation act எனப்படும் சட்டம் இயற்றப்பட்டது. இன்னுமொரு மூன்றாம் நாட்டுக்குச் சொந்தமான கப்பல்களில் பொருட்களை ஏற்றுமதி இறக்குமதிகள் மேற்கொள்ளவதற்கு இச்சட்டம் தடை செய்தது. இங்கிலாந்தின் கப்பல் போக்குவரத்து துறையின் வளர்ச்சியினை தூண்டுவதற்காக இச்சட்டம் இயற்றப்பட்டது. நெதர்லாந்து அன்றைய பிரமாண்டப் பலம் பெற்றிருந்த கடற்போக்குவரத்து துறையின் மூலம் பாரிய சக்தி பெற்றிருந்ததை சிதைக்கும் வண்ணம் இச்சட்டம் இயற்றப்பட்டது. சிமித் இவ்வாறான வணிக வர்த்தகக் கொள்கையினால் வாணிபம் கட்டுப்படுத்தப்படுமாயின் பொருளாதார வளர்ச்சி முன்னேற்றம் தடுக்கப்படுகிறது என்ற வாதத்தினை முன்னெடுத்தார்.

தாராளவாதம் என்பதன் ஆங்கிலப்பதம் லிபரலிசம்- லிபர் என்கின்ற இலத்தீன் சொல் ஆங்கிலத்தில் Free அதாவது கட்டின்றியது என்று அர்த்தப்படும். இஸ்ம் என்பது –direction எனப் பொருள்படும். அதாவது திசை எனப் பொருள்படும். தாராளவாதம் என்பது தனிமனித நடவடிக்கைகள் சமூகத்தின்றும் சுயாதீனமாக கட்டின்றி இருக்க வேண்டும் என்கின்றது.

சமுதாயம் எப்போது பெறுமதி பெறுகிறதெனின் அதன் தனி அங்கமான ஒரு தனிமனிதனுடைய மேம்பாட்டுக்கு அச்சமூகம் வாய்ப்பளிக்கின்றபோது மட்டுமே என்பதுதான் லிபரிசலிசக் கோட்பாடாகும். அதாவது தனிமனித பொருளாதார நடவடிக்கைகளுக்கு எந்தவித கட்டுப்பாடுகளும் சமூகத்தினால் விதிக்கப்படக் கூடாது. அது கட்டின்றி இயங்க வேண்டியதொன்று. அப்பொருளாதார நடவடிக்கைகள் சுதந்திர தனிமனிதத் தீர்மானங்களின்படி இயக்கப்பட வேண்டுமெயொழிய சமூக மற்றும் அரச விதிகள் அங்கெல்லாம் மூக்கினை நுழைத்து தலையீடு செய்யக் கூடாது.

இக்கோட்பாடு 1700 இன் பிற்பகுதியிலும் 1800 களின் ஆரம்ப காலத்திலும் உருவானது. நோக்கம் மிகவும் தெளிவானது. அதாவது முன்னர் சொன்னது போல் வணிகம், மற்றும் பொருளாதார நடவடிக்கைகளின் மேலான அரசு கட்டுப்பாடுகளை இல்லாதொழிப்பது என்பதே அதன் அடிப்படை.

படைப்பாற்றல் மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு (Inovation) நிலப்பிரபுத்துவ சிந்தனை தடையாயிருக்கின்றது. எனவே பண்டைய தாராளவாதம் எல்லாத் தடைகளையும் அகற்றக்கோரியது. அரசினது முக்கிய கடமை எதுவெனில் சமூகத்தில் அமைதி குலையாமல் சட்டம் மற்றும் ஒழுங்குகளை பேணும் கடமையை மேற்கொண்டால் மட்டும் போதுமானது. அதாவது பொலிஸ் இராணுவ படைகளைக் கொண்டு சமூகத்தில் அமைதி ஒழுங்கு குலைகிற வேளைகளில் மட்டும் அதனை அடக்கி அமைதியையும் ஒழுங்கையும் நிலைநாட்டும் நடவடிக்கையை மேற்கொள்வது மட்டுமே அரசினது தனி ஒரு கடமை, மற்றைய பொருளாதார நடவடிக்கைகள் எல்லாவற்றையும் தனியார்கள் பார்த்துக்கொள்ள விட்டுவிட வேண்டும் என்பது இக்கோட்பாட்டின் அரசு பற்றிய முடிவாகும்.

ஒவ்வொரு தனிமனிதனையும் தனிமனித பெறுமதிகளையும் உயர்த்திப் பிடித்து முதன்மைப்படுத்துவதும், சமூகம் என்பது தனிமனிதனுக்கு இரண்டாம் நிலைப்பட்டதே என்பதுவும் இங்கு பொருள் கொள்ளப்படுகின்றது.

நவதாராள பொருளாதாரம் பொருளாதார காரணிகளை கட்டுப்படுத்துதில் அரச பொதுத்துறைகளின் கைகளிலிருந்து தனியார் துறைக்கு அவை மாற்றப்படவேண்டும் என்பதாக சமூகப் பொருளாதார கோட்பாட்டை வரையறுக்கின்றது.

நவ தாராளவாதப் பொருளாதாரம் அரசுக்கு உருவாகும் பற்றாக்குறைக்கான செலவுகள், மானியங்களை மட்டுப்படுத்தல், வரித்தளத்தை விரிவுபடுத்துதன் மூலம் வரிவிதிப்பு சீர்திருத்தங்களை மேற்கொள்ளல், நிலையான பணமாற்று வீதத்தை நீக்குதல், கட்டுபடுத்தலுக்கும் காப்புக்கும் உள்ளான வர்த்தக சந்தைகளை தனியாருக்கும் பெரும் மூலதனத்துக்கும் திறந்துவிடுதல், அரசு நடாத்தும் வணிகங்களை படிப்பபடியாவோ அல்லது முற்றாகவோ தனியார் மயமாக்குதல், தனியார் சொத்துரிமை மற்றும் வங்கிகள் மீதான அரச கட்டுப்பாடுகளை நீக்குதல் அல்லது தளர்த்துதல் என்பனவற்றை நடைமுறையாகக் கொண்ட ஒரு பொருளாதார சுரண்டல் முறையாகும். இவற்றினை நடைமுறைப்படுத்தும் அரசினை உத்தரவாதப்படுத்திப் பேணுவதாகும். நவதாராளமய பொருளாதாரத்தின் பார்வையில் அரசு நவதாராள பொருளாதார நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படாதபடி மற்றும் அமைதி குலையாத சூழ்நிலையை சட்டம் மற்றும் நீதி நிர்வாகங்கள் ஊடாக பாதுகாத்துக் கொள்ளும் காவல்காரன் நிலையினைக் கொண்டிருந்தல் மட்டுமே என்பதாகும். இந்தக் காவல்காரன் நிலையைக் கூட அது அஞ்சுவதால் நவதாராளமய பொருளாதாரத்தின் பார்வையில் அது தவிர்க்க முடியாது பிசாசு.

இலங்கையில் ஒவ்வொரு துறைகளிலும் நவதாராளவாதப் பொருளாதாரத்துக்கான மறுசீரமைப்புக்கள் செய்யப்பட்டு வருகின்றது. சட்டங்கள் மாற்றியமைக்கப்படுகின்றன.

கல்வி ஒரு வர்த்தகப் பொருள், நீர், விவசாயப் பொருட்கள் விதைகள் (விதைகளுக்கான உரிமம்) எல்லாமே வர்த்தகப் பொருட்களாக்கப்பட்டு பல்தேசியக் கொம்பனிகளில் கைகளில் தாரைவார்த்துக் கொடுக்கப்படுகின்றன.

போராட்டம் பத்திரிகை இலக்கம் 3

1977ம் ஆண்டின் புதிய தாராளமயவாத (திறந்த பொருளாதாரக் கொள்கை) முதலாளித்துவ சீரமைப்புக்களின் பின் ஏகாதிபத்தியவாதிகளினால் 'பசுமைப் புரட்சி" என்ற பெயரில் பல மாற்றங்களை விவசாயத்துறையில் ஏற்படுத்தின..

'பசுமைப் புரட்சி" என்ற பெயரில் நடைமுறையிலிருந்த சூழல்நட்புறவான விவசாய முறைகளை ஒழித்து, விதைகள் மற்றும் விவசாய உள்ளீடுகளை பெறுவதில் இருந்த விவசாயிகளின் சுயாதீனத்தன்மை இல்லாது ஒழிக்கப்பட்டு, விவசாயத்துறை முற்றிலுமாக பன்னாட்டுக் கம்பனிகளின் சந்தையாக மாற்றப்பட்டது. இதன் காரணமாக விவசாய இரசாயனங்களை உற்பத்தி செய்வதில் கம்பனிகளிடையே பலத்த போட்டி ஏற்பட்டது. சந்தைப்போட்டி காரணமாக ஆபத்தான இரசாயனங்களை ஆபத்தான அளவுகளில் தனது உற்பத்திகளில் பயன்படுத்தின. 1980 களில் லத்தீன் அமெரிக்கா, ஆபிரிக்கா மற்றும் ஆபிரிக்கக் கண்ட நாடுகளில், பன்னாட்டுக் கம்பனிகளே, விவசாய இராசாயனங்களை விற்பனை செய்வதற்காக, நோய் பீடைகள் மற்றும் நோய்களை பரப்பியமையை உதாரணங்கள் மூலம் அறியலாம். இலங்கையும் இந்நிலைமைக்குள் அகப்பட்டுள்ளதுடன், பன்னாட்டு கம்பனிகள் இலாபம் உழைப்பதற்காக விவசாயிகள் தங்கள் உயிர்களை இழக்க வேண்டி ஏற்பட்டுள்ளது. வடமத்திய மாகாணத்தில் கடும் தாக்கம் செலுத்தும் சிறுநீரக நோயும் இலாபத்தை மட்டுமே இலக்காக கொண்ட சுற்றாடல் தொடர்பாகவோ மனித வாழ்க்கை தொடர்பாகவோ சற்றும் கவலை கொள்ளாத மூலதனத்தை பெருப்பித்துக் கொள்வதை மட்டும் நோக்காகக் கொண்ட முதலாளித்துவத்தின் சீரழிப்பே ஆகும்.. ஏனைய துறைகளைப் போல் விவசாயத்துறையிலும் தன் ஆதிக்கத்தை செலுத்தியுள்ள ஏகாதிபத்தியமும் இலங்கையில் திணிக்கப்பட்ட முதலாளித்துவத்தின் பிற்போக்குத்தனமும் விவசாயிகளின் வாழ்வை மேலும் அனர்த்தத்திற்குள்ளாக்கியுள்ளது. வடமத்திய மாகாணத்தில் தாக்கம் செலுத்தும் சிறுநீரக நோயிற்கும் சூழலில் சேர்க்கப்படும் நச்சுப்பதார்த்தங்களுக்கும் தெளிவான தொடர்பிருப்பது நன்கு தெளிவான பின்பும், விவசாயத்தில் பயன்படுத்தும் இரசாயனங்கள் தொடர்பாக கொள்கை ஒன்றையேனும் ஆட்சியாளர்களினால் வகுக்க முடியாமையானது அவர்களின் கையாலாகாத நிலையைக் காட்டுகிறது.

மறுபுறம் சிறுநீரக நோய் ஏற்படுவதற்கு நச்சுப்பதார்த்தம் நிறைந்த குடிநீரும் காரணம் என்பதும் தெளிவாகும். விவசாய நிலங்களிற்கு அண்மையில் அமைந்திருக்கும் நீர்நிலைகளில் இருந்து குடிப்பதற்கான நீரைப் பெறுபவர்கள் இத்தாக்கத்திற்கு ஆளாகின்றார்கள். காரணம் விவசாய நிலங்களில் பயன்படுத்தப்படும் நச்சுப்பதார்த்தங்கள் நீருடன் கலப்பதற்கான சந்தர்ப்பங்கள் அதிகமாகும். சுத்தமான குடிநீரை பெறுவது மனிதனின் அடிப்படை உரிமையாகும். அவ் உரிமையைக் கூட ஆட்சியாளர்களினால் உறுதி செய்திட முடியவில்லை.

பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான இலவச சிகிச்சை வழங்க முடியாத, விவசாய இரசாயனங்களின் தரம் தொடர்பான குறைந்த வரையறையைக் கூட உருவாக்க முடியாத, சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க கவனம் செலுத்தாத முதலாளித்துவ அரசாங்கம் எமக்குத் தெரிவிப்பது என்ன? உரிமைகளை வென்றெடுக்கக் கட்டாயமாக போராடியே ஆக வேண்டும். மனித வாழ்க்கை மற்றும் சுற்றாடல் தொடர்பாக சற்றும் கவலைப்படாமல் இலாபம் பெறுவதை மட்டுமே இலக்காகக் கொண்ட இந்தச் சமூக பொருளாதார முறையை மாற்றியாக வேண்டும்.

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

போராட்டம் இதழ் 5

திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேசத்தில் அமைந்துள்ள ஒரு தமிழ்க்கிராமமே சம்பூராகும். யுத்தத்தின் போது புலிகள், இராணுவம் என்று இருதரப்பாலும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு, இறுதியில் சம்பூரில் விமானத்தாக்குதல் மேற்கொண்டபோது மக்கள் தங்கள் உடமைகளை விட்டுவிட்டு பக்கத்து கிராமங்களில் தஞ்சமடைந்தனர். இந்த மக்களின் காணிகளை சுவீகரித்த அரசு அதனை இந்தியா, பிரேசில், அவுஸ்ரேலிய கம்பனிகளுக்கு மில்லியன் கணக்கான டொலர்களுக்கு குத்தகைக்கு வழங்கியுள்ளது. இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் காணிகளில் 97 சதுரக்கிலோமீற்றர் நிலப்பரப்பினை அரசாங்கம் இதற்காக ஒதுக்கியுள்ளதாக ரம்புக்வெல கூறியிருந்தார்.

இந்த நிலங்களில் நிலக்கரிசூளை, இரும்பு உருக்குச்சூளை, பாரிய இயந்திரங்களைப் பொருத்தக்கூடிய வலயமொன்றை மிஷேல் பல்தேசிய நிறுவனம் அவுஸ்திரேலியா, பிரேசில் மற்றும் இலங்கை ஆகியநாடுகளுடன் இணைந்து உருவாக்குவதற்கான திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளது. இதை விட இந்தியா அனல் மின்நிலையம் ஒன்றை கட்டிவருகின்றது. ___________________________________________________________________________________________________________________

போராட்டம் இதழ் 5

தாராளமயக் கருத்துக்களை பாதுகாக்க வேண்டிய மாபெரும் கடமையை வாசு, டியூ, திஸ்ஸ போன்ற பழைய இடதுசாரிகள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே, தாராளமய பாத்திரத்தையே இடதுசாரியத்தின் பாத்திரமாக மக்கள் கருதிக் கொண்டிருக்கிறார்கள். _______________________________________________________________________________________________________________

கொழும்பில் இருந்து 20 கிலோமீற்றர் தூரத்தில் உள்ள கம்பஹா மாவட்டத்தில் இருந்த கையுறை தயாரிக்கும் தொழிற்சாலையின் கழிவு நீர், நிலத்தடி நீரை மாசுபடுத்தி வந்தது. இதனால் 15க்கு மேற்பட்ட கிராம மக்களின் குடிநீர் நஞ்சா கிய நிலையில், அரச அதிகாரிகளிடம்; முறையிட்டனர். நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அரசுடன் நடந்த உயர்மட்ட பேச்சு வார்த்தைகள் தொடர்ந்துதோல்வி பெற்ற நிலையில், வெலிவெரியாவில்

ஆயிரக்கணக்கில் திரண்ட மக்கள் ஜனநாயக வழியில் வீதியில் இறங்கினர். தங்கள் அடிப்படை தேவையான குடிநீரை மக்கள் கோரியதை, மக்கள் விரோத அரசால் பொறுத்துக் கொள்ள முடியாது பன்னாட்டு தரகு நிறுவனத்துக்காக பாய்ந்து குதறியது.

இலங்கையில் மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனமான ஹேலீஸ் குழுமத்தைச் சேர்ந்த டிப்ட் புராடக்ட்ஸ் என்ற கையுறை தயாரிக்கும் தொழிற்சாலைக்காகவே, மக்கள் மேல் அரச பயங்கரவாதத்தை ஏவியது. இந்திய முதலீட்டாளர்களான பாலாஜி ஷிப்பிங் இன் முக்கிய பங்குதார நிறுவனமும் கூட.

இந்த பின்னணியில் ஆளும் வர்க்கங்களுக்கும் ஆளும் தரப்புகளுக்கும் பெயரவிலான இருந்த இடைவெளி அருகி வரும் பாசிசப் பின்னணியில், அரச பயங்கரவாதம் மிகக் குரூரமான வடிவத்தை பெற்றுவருவதை வெலிவெரியா சம்பவம் எடுத்துக் காட்டுகின்றது. தமிழ் மக்கள் தங்கள் உரிமையைக் கேட்ட போது ஒடுக்கிய அதே இராணுவம் தான், குடிக்க சுத்தமான நீரை கேட்ட போது ஒடுக்கின்றது.

மக்கள் தங்கள் உரிமைகளை கோரி போராடும் போது, ஒடுக்கும் கைக் கூலி இராணுவம் தான் இலங்கை இராணுவம்.

தமிழ் மக்களின் உரி;மைப் போராட்டத்தை ஒடுக்க முற்றுமுழுதாக சிங்களவரைக் கொண்டு உருவான இலங்கை இராணுவம் தான், சிங்கள மக்கள் போராடும் போது பாய்ந்து குதறுகின்றது. முள்ளிவாய்கால் போன்ற அதே வன்முறையையும், அதே படுகொலைகளையும் அரங்கேற்றி அதை இன்று மூடிமறைக்க முனைகின்றது.

வெலிவேரிய படுகொலை,

'இராணுவம்" பற்றிய பொது விம்பங்களையே தகர்த்து இருக்கின்றது. தமிழர்கள் 'சிங்கள இராணுவமாகவும்" சிங்களவர்கள் 'தங்களுடைய இராணுவ மாகவும்;" கற்பித்திருந்த பொது நம்பிக்கைகளையும், அனுமானங்களையும், முடிவுகளையும் தகர்த்து இருக்கின்றது. இலங்கை இராணுவத்தை இனி இலங்கை மக்கள் இன ரீதியாக அணுக முடியாது என்பதையும், இலங்கை அனைத்து மக்களும் உணரும் வண்ணம் வெலிவெரியா சம்பவம் உணர்த்தி நிற்கின்றது.

சுற்றுச் சூழலை அழித்து, நிலத்தடி நீரை நஞ்சாக்கும் செயலை ஆதரித்த அரசின் செயல் தேசபக்த செயலா என்று கேள்வியை இன்று எழுப்பி இருக்கின்றது. இதை எதிர்த்த மக்களின் செயற்பாடு தான், தேசபக்த செயற்பாடு என்பதை மட்டுமின்றி, அரசுக்கு எதிரான தேச பக்த போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய அவசியத்தை மக்களுக்கு உணர்த்தி இருக்கின்றது. அரசு யாருடன் நிற்கின்றது என்ற உண்மையை, சிங்கள மக்கள் மேலான தனது அரச பயங்கரவாதம் மூலம் போட்டு உடைத்திருக்கின்றது. இதுவரை தமிழ்மக்களை ஒடுக்கும் தேசபக்த சக்தியாக கட்டமைத்த போலியான பேரினவாத தேசியவாதத்தை, அனைவரும் இனம் காண வைத்திருகின்றது. அரசின் தேசபக்தி என்பது சுரண்ட உதவுவதும், சுரண்டலை பாதுகாப்பதும் தான். நீண்ட காலமாக மக்களை மதத்தின் பெயராலும், இனத்தின் பெயரால் பிரித்து வைத்திருந்தவர்கள் இவர்கள் தான். இதன் மூலம் மக்களை எதிரியாகவும், நண்பனாகவும் சித்தரித்த, தங்கள் மக்கள் விரோத போக்குகளை இனித் தொடர முடியாது. சிங்கள மக்களுக்கு தாங்கள் யார் என்பதை, அரச பயங்கரவாதம் மூலம் வலாற்றுப் பாடத்தைக் கற்பித்து கொடுத்து இருக்கின்றனர்.

______________________________________________________________________________________

2005 ஜுலை 4ம் திகதி இந்தியா, சீனா உள்ளிட்ட 36 நாடுகளோடு ஒப்பமிடப்பட்ட ஒப்பந்தத்திற்கு ஏற்ப, இலங்கையில் அதிவேக பாதை தொகுதிகளை அமைத்து அவற்றை ஆசிய அதிவேக நெடுஞ்சாலை வலையமைப்போடு 2016 ல் இணைத்துக் கொள்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

ஆசியாவின் உத்தேச அதிவேக நெடுஞ்சாலை மற்றும் புகையிரத பாதை

தற்போதைய மாவத்தகம, பொல்கஹவெல, மீரிகம, கட்டுநாயக, பியகம, ஹொரண, சீத்தாவக, கொக்கல, மிரிஜ்ஜவெல, வதுபிட்டிவல, மல்வத்தை மற்றும் கண்டி ஆகிய பிரதேசங்களை ஏற்றுமதி தயாரிப்பு வலயங்களாக விரிவாக்கப்படுவதோடு, முல்லைத்தீவு, மாங்குளம், மன்னார், கப்பல்துறை, தம்புள்ளை, மட்டக்களப்பு மற்றும் அம்பாந்தோட்டை ஆகியன பிரதேசங்களில் புதிய ஏற்றுமதி தயாரிப்பு வலயங்கள் நிறுவப்படும்.

இந்த வரைவில் அடங்கியுள்ள புதிய அதி வேக நெடுஞ்சாலைகள் அனைத்தும் சூழல் பாதுகாப்பு நிலங்கள் ஊடாகவே அமைக்கப்படுகின்றன. உதாரணமாக, உலக உரிமையாக பெயரிடப்பட்டுள்ளதும், மிகத் தொண்மையான காடாக அறியப்பட்டுள்ளதுமான சிங்கராஜ வனம் இரண்டு முறை இரண்டாக்கப்படுகிறது. அதிவேக நெடுஞ்சாலை மற்றும் கேபில்கள் அமைக்கும் நடவடிக்கைகள் காரணமாக இரண்டாகப் பிரிக்கப்படும். முழு காட்டின் பரப்பளவில்; 39வீதமாகும்.

அதே போன்று அதி நாகரிக பிரதேசங்கள் அமைத்தல், சிறப்பு உல்லாசப் பிரயாண வலயங்களை அமைத்தல் போன்றவற்றின் ஊடாக பாரிய காடழிப்பும் நடந்து கொண்டிருக்கிறது. பிபிலை- நில்கல பகுதி இயற்கை சூழல் பாதுகாப்பு உல்லாசப் பயண வலயமாக பெயரிடப்பட்டு, அங்கு ஹோட்டல்கள் அமைப்பதற்கு அனுமதியளித்திருக்கின்றமை பாரதூரமான சூழல் அழிவுகளை ஏற்படுத்தக் கூடியதாக உள்ளது.

அதிவேக நெடுஞ்சாலைகள், தொலைத்தொடர்பு கேபில் அமைத்தல், மற்றும் உல்லாசப் பயணத்துக்கான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தல் போன்றவற்றின் காரணமாக அழிவுகள் ஏற்படக்கூடியதும், சூழல் ரீதியில் முக்கியத்துவமிக்க இடங்களாகவும் உள்ள உடவளவை தேசிய வனப்பூங்கா, வெடஹிர மலை, லுனுகம்வெஹெர, பாந்துநாகல, வீரவில, நிமலவ, புன்தல, உஸ்ஸசன்கொட, கதிர்காமம், கட்டகமுவ, ருஹ{னு யால, சாகம, புத்தங்கள, உல்பஸ்ஸ, எகொடயாய, மஹகனதராவ, அனுராதபுரம், மிஹிந்தலை, ரிடிகல, கஹகல்ல, பல்லெகலை, சீகிரிய, மின்னேரிய, கிரிதலே, எலஹெர, பகமூன, கவுடுல்ல, சோமாவதிய ஹெவல் ஹெடவர்க், சுண்டிக்குளம், வில்பத்து, யோதவௌ, செங்கலடி, மதடு காப்பு பகுதி, முதுராஜவலை, கலமெட்டிய, பெரியகச்சி, பிபில, நில்கல, ஆகிய பகுதிகள் இருக்கின்றன.

இவற்றில் சில இயற்கை வனப்பாதுகாப்புகளாக இருப்பதோடு, மேலும் சில இயற்கை சரணாலயங்களாகும். 1983 ஆகும்போது இலங்கையின் மொத்த நிலப்பரப்பில் 27 வீதமாக காணப்பட்ட காடுகள் 2011 ஆகும்போது 18.8 வீதமாக குறைந்து காணப்பட்டது. இயற்பியல் வரைவு செயற்படும் பட்சத்தில், 2030 ஆகும்போது, இலங்கையின் வனப் பிரதேசம் 13.0 வீதமாக குறைந்து விடும். தொண்மையான காடுகளை அழிப்பதில் உலகின் 4வது இடத்தில் இருக்கும் இலங்கை, இந்த வரைவிற்கு ஏற்ப, இரண்டாவது அல்லது மூன்றாவது இடத்திற்கு முன்னேறக் கூடும். காடுகள் அழிக்கப்படுவதன் காரணமாக நிலத்திற்கு அடியிலான நீர் குறைந்து வருவதோடு, இலங்கையிலிருக்கும் 103 நதிகளில் பெரும்பாலானவை நீர் வற்றிய ஆறுகளாக மாறிக் கொண்டிருக்கின்றன. தற்போதைய திட்டங்களுக்கு ஏற்ப, நீர்பற்றாக் குறையை உருவாக்கி நீரை விற்பனைப் பொருளாக ஆக்குவதன் மூலம், ஒடுக்கப்பட்ட மக்களின் தண்ணீர் உரிமை பறிக்கப்படக்கூடிய ஆபத்தும் இருக்கின்றது. உலகிலேயே உயிரியல் பன்முகத்தைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கையும் சேருகிறது, இலங்கைக்கு மாத்திரம் இயற்கையாகவே உரித்தான சிறப்பு தாவர வகைகள் 89ம், விஷேட விலங்கினங்கள் 330ம் உள்ளன. இலங்கையில் மாத்திரம் 125 விஷேட ஊர்வனங்கள் காணப்படுவதோடு, சிறப்பு கலப்பினங்கள் 96வீதமுமாகும். சூழல் அழிப்போடு, இந்த மதிப்புவாய்ந்த உயிரினங்களும் அழிந்து விடும். காடுகள் அழிக்கப்படுவதனால் உருவாகும் அடுத்த பிரச்சினை என்னவென்றால், யானை மற்றும் மனிதர்களுக்கிடையிலான மோதல். யானைகளின் எண்ணிக்கை குறையக் கூடிய நிலை உருவாகக் கூடும். 2008ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட ' தேசிய யானைகைள் முகாமைத்துவ கொள்கை" மூலம் காடுகள் அழிக்கப்படுவதால், இடம் பெயரும் யானைகள் 50 சதுர கிலோ மீட்டர் விஸ்தீரணமுள்ள சிறிய காடுகளுக்கு அடைக்கப்பட்டு விடும். அதன் வேலிகளை உடைத்துக் கொண்டு வெளியே வரும் யானைகள் 'வெறிபிடித்த யானைகள்" என அடையாளப்படுத்தப்பட்டு, தனியாருக்கு கொடுப்பதற்காக சட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இயற்பியல் வரைவு நடைமுறைப்படுத்தப்படும் கையோடு இந்த நிலை மேலும் மோசமடையும்.மறுபுறம், அரசாங்கம் தனது வரைவின் மூலம் விவசாயிகளுக்கு காணி வழங்கப் போவதில்லை.

பன்னாட்டு நிறுவனங்களுக்கே காணி வழங்கப்படும். நாட்டின் பல பிரதேசங்கள் ' வர்த்தக விவசாய வலயங்களாக" பெயரிடப்பட்டுள்ளதோடு, அவற்றில் மரக்கறி, பழ வகைகள், நிலக்கடலை, பாம் ஒயில், மற்றும் வர்த்தகத்திற்கான மரங்கள் நடல், போன்றவற்றிற்காக பன்னாட்டு நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படும். வட மாகாணத்தின் மொத்த நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பகுதியை இதற்காக ஒதுக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 'வர்த்தக விவசாய வலயம்" அமைக்கப்படுவதன் மூலம், விவசாய தொழிற்றுறை அழிக்கப்பட்டு நிர்க்கதிக்குள்ளாகும் விவசாயிகள் நிறுவனங்களில் அடிமைகளாக வேலை செய்ய நேரிடும், இவ்வாறு நிறுவனங்களுக்கு நிலம் வழங்குவதனால் மேலும் பல பாதிப்புக்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. இந்த நிறுவனங்கள் இலாபத்தை மாத்திரம் நோக்கமாகக் கொண்டு செயற்படுவதனால், மனித உயிர்களைப் பற்றியோ, சூழல் அழிவைப்பற்றியோ கவலைப்படாமல், விவசாய இரசாயனத்தை அதிகளவில் பயன்படுத்தும். அதன் காரணமாக நிலத்திற்கடியிலான நீர், மண், மற்றும் உயிரினங்கள் அழிக்கப்படும். தற்போது ~டோல்| மற்றும் ~சீ.ஐ.சீ | நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள 65,000 ஏக்கர் நிலத்தில் நடந்திருக்கும் அழிவுகளைப் பார்க்கும்போது இதனை அறிந்து கொள்ள முடியும். தற்போது பாரிய பிரச்சினையாக காணப்படும் சிறுநீரக செயலிழப்பு நோய் போன்றவை மேலும் அதிகரிக்கக் கூடும். வர்த்தக விவசாய வலயங்கள் மூலம், பாரிய சூழல் அழிவுகளும், சமூக ரீதியிலான சீரழிவுகளும் ஏற்பட்டு நிறுவனங்களின் இலாபம் மேலும், மேலும் உயர்ந்து செல்லும். மறு பக்கத்தில் இலங்கையில் அமைக்கப்படவிருக்கும் அதிவேக நெடுஞ்சாலைகளின் நீளம் 11,697 கிலோ மீட்டர்களாகும். அவற்றை அமைப்பதற்காக 280.7 மில்லியன் கன மீட்டர் மண் தேவைப்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதற்கு பெருமளவில் மலைகள் வெட்டப்படவிருப்பதோடு, அந்த மண் நெடுஞ்சாலை அமைப்பதற்கு பயன்படுத்தப்படும். இதனால், மண்ணின் சமநிலை சிதைவதோடு, பூகோள மாற்றத்தினால் வடிகால் முறைகளில் கூட மாற்றம் ஏற்படும். இது வறட்சி, வெள்ளம், மண்சரிவு போன்ற இடர்களுக்கு காரணமாக இருக்கும். இலங்கையின் மக்கள் பரம்பல் முறையை மாற்றியமைப்பதே இயற்பியல் வரைவின் நோக்கமாக இருக்கின்றது. அதன்படி மக்கட் தொகையில் பெரும்பாலானவர்களை நகர்புறங்களில் குடியேற்றி விட்டு, எஞ்சிய நிலங்கள் விடுவிக்கப்படும். இவ்வாறு நிலம் விடுவிக்கப்படுவது உல்லாசப் பயணத்துறைக்கு அல்லது பல்தேசிய நிறுவனங்களுக்கு நிலம் வழங்குவதற்காகவேயாகும். இதில் கேலிக்குறிய விடயம் என்னவென்றால், முன்வைக்கப்பட்டிருக்கும் விளக்கங்களும், வாதங்களும் தான். மக்களை தமது இருப்பிடங்களிலிருந்து அகற்றிவிட்டு, இந்த திட்டத்திற்கு ஏற்ப மீள் குடியேற்றம் செய்வதற்காக முன்வைக்கப்பட்டிருக்கும் ஒரு விடயம் என்னவென்றால், 'அனுமதியற்ற குடியிருப்பாளர்கள்" என்பதுதான். இவ்வாறு 'அனுமதியற்ற" லேபலை ஒட்டி லட்சக்கணக்கான ஒடுக்கப்பட்ட மக்கள் நகரங்களிலிருந்து வெளியேற்றப்படுவார்கள். இதிலுள்ள பாரதூரமான விடயம் என்னவென்றால் கொழும்பு நகரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்விருப்பதோடு. கண்டி, காலி போன்ற நகரங்களிலும் இந்த திட்டம் செயற்படுத்தப்படும். ஒடுக்கப்பட்ட மக்களை நகரங்களிலிருந்து விரட்டிவிட்டு, நவ நகரங்களில் மத்தியதர வர்க்கத்தினரை குடியேற்றி வேறுபட்ட மக்கள் கலந்து வாழும் இடங்களாக மாற்றுவதேயாகும். விஷேடமாக கொழும்பு போன்ற நகரங்கள் ' ஏழைகள் இல்லாத " நகரங்களாக மாற்றுவதோடு, ஏழ்மையை ஒழித்துக் கட்டுவதற்குப் பதிலாக ஏழைகள் நகரங்களிலிருந்து விரட்டப்படுவார்கள். இதற்காக முன்வைக்கப்பட்டிருக்கு மற்றைய வாதம், 'இடர் முகாமைத்துவமாகும்" இந்த நகைப்பிற்கிடமான வாதத்திற்கேற்ப, கடற்கரையை அண்டிய நிலப்பகுதி சுனாமி ஆபத்து ஏற்படக்கூடிய பிரதேசமாகும். மலைப் பிரதேசங்கள் மண்சரிவு அபாயம் இருப்பதனால் மக்கள் வசிப்பதற்கு உகந்த இடங்களல்ல. அந்தப் பிரதேசங்களில் வசிக்கும் மக்களும் அங்கிருந்து வெளியேற்றப்படுவர். உல்லாசப் பிரயாண வலயங்கள் அமைப்பதற்காக கடற்கரையை அண்டிய நிலங்களிலிருந்து மக்கள் வெளியேற்றப்படுவதற்கு இதனை ஒப்பிடலாம். இவ்வாறாக பல்வேறு நகைப்பிற்கிடமான காரணங்களை முன்வைத்து மக்கள் தற்போது வாழ்ந்து வரும் பிரதேசங்களிலிருந்து அவர்களை வெளியேற்றுவதன் ஊடாகவும் அதி நகர்புற பிரதேசங்களை அமைப்பதன் ஊடாகவும் சமூகத்தில் எப்படியான விளைவுகளை உண்டாக்கும் என்பதை கவனித்துப் பார்க்க வேண்டும். இதன் மூலம் இலங்கை மக்களினதும், மதங்களினதும் வியாபித்தல் முறையில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு, வர்க்கங்களின் வியாபித்தல் முறையில் மாற்றம் செய்வதற்கும் திட்டமிடப்பட்டிருப்பது தெரிகிறது. அது ஒரு விதத்தில், வலுக்கட்டாயமாக கலப்பதற்கான திட்டமாகவும், மறுபக்கத்தில், அனைத்து வசதிகளையும் கொண்ட மத்திய தர வர்க்கத்தினர் வசிக்கும் பிரதேசங்கள் மற்றும் எவ்வித வசதிகளும் இல்லாத ஒடுக்கப்பட்ட மக்கள் வாழும் பிரதேசங்களாகவும் குடியிருப்பு முறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான திட்டமும் இதில் அடங்கியுள்ளது. இலங்கையில் நவ தாராளமய முதலாளிய மறுசீரமைப்பிற்குத் தேவையான சமூக பின்புலத்தை உருவாக்குவதோடு, அதனால் ஏற்படக்கூடிய பின்விளைவுகள் கவனத்தில் எடுக்கப்படவில்லை.

____________________________________________________________________________________________________________________

நாடு பூராவும் சுதந்திர கல்வி வலயங்கள் முதலீட்டாளர்களுக்கு

வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட கல்விக்காகத் தேவைப்படும் வசதிகளை ஸ்தாபிப்பதற்காக நாடு பூராவும் சுதந்திர கல்வி வலயங்களை நிறுவுவதற்கு அரசாங்கம் தயாராகி வருவதோடு, இவற்றை தனயமார் முதலீட்டார்களிடம் ஒப்படைக்க தயாராகி வருகிறது.

கம்பஹா, புத்தளம், கிளினொச்சி, ஹம்பந்தோட்டை, திருகோணமலை மற்றும் கண்டி ஆகிய பிரதேசங்களில் இவ்வாறான கல்வி வலயங்களை அமைக்க அரசாங்கம் திட்டமிட்டு வருவதாக உயர் பல்வி அமைச்சின் செயலாளர் கூறுகிறமார்.

' மேற்படி சுதந்திர கல்வி வலயங்கள் தொடர்ப்பாக எதிர்வரும் வரவு-செலவு திட்டத்தின்போது முன்மொழிவாக உட்படுத்துவது தொடர்பில் நாங்கள் ஆலோசித்து வருகிறோம். இதன்போது தனியார் முதலீட்டாளரொருவருக்கு 100 ஏக்கர் காணி வழங்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்டிருக்கிறது. முதலீட்டாளரால் இந்த வலயத்தில் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களை அமைக்க முடியும். அதோடு தனியார் துறையோடு இணைந்து விடுதிகள், விளையாட்டுத் திடல்கள் போன்ற வசதிகளை முன்னேற்றவும் முடியும்" என உயர் கல்வி அமைச்சின செயலாளர் குறிப்பிட்டார்.

Last Updated on Wednesday, 05 February 2014 16:35