Tue04232024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
ஒடுக்கப்பட்ட மக்களும் - செல்லன் கந்தையாவும்

ஒடுக்கப்பட்ட மக்களும் - செல்லன் கந்தையாவும்

2003 யாழ் நூலகத்தை ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்த ஒர...

புது அவதாரமெடுத்துள்ள வெள்ளாளியம்

புது அவதாரமெடுத்துள்ள வெள்ளாளியம்

2003 இல் யாழ் நூலக திறப்புவிழாவை புலிகள் எதற்காக த...

அமெரிக்காவின் நிறவொடுக்குமுறையும் - இலங்கையில் இனவொடுக்குமுறையும்

அமெரிக்காவின் நிறவொடுக்குமுறையும் - இலங்கையில் இனவொடுக்குமுறையும்

அளவிலும்; பண்பிலும் ஒடுக்குமுறைகள் வேறுபட்டாலும், ...

முதலாளித்துவ

முதலாளித்துவ "சொர்க்கத்தில்" மனிதர்கள் வாழ முடியுமா!?

அமெரிக்காவின் நிறவெறி ஆட்சிக்கு எதிராக, மக்கள் போர...

கொரோனாவின் ஏஜண்டுகளாகியுள்ள பார்ப்பனிய காவி காப்பரேட் பாசிட்டுகள்

கொரோனாவின் ஏஜண்டுகளாகியுள்ள பார்ப்பனிய காவி காப்பரேட் பாசிட்டுகள்

கொரோனா வைரஸ் தொற்றும் - மரணங்களும், கொரோனாவின் இயற...

பொருளாதார நெருக்கடி அரசியல் நெருக்கடியாக மாறும் - என்ன செய்ய வேண்டும்?

பொருளாதார நெருக்கடி அரசியல் நெருக்கடியாக மாறும் - என்ன செய்ய வேண்டும்?

செல்வந்தர்கள் தொடர்ந்து செல்வத்தைக் குவிப்பதையே, ம...

Back முன்பக்கம்

தயவு செய்து பெரியாரை விட்டு விடுங்கள் சீமான்களே!!

  • PDF

கம்யுனிஸ்ட்டு கட்சி அறிக்கையை,ஆசான்கள் கார்ல் மார்க்சும்,பிரடெரிக் ஏங்கெல்சும் உலகதொழிலாளர்களிற்கு தந்த மாபெரும் ஆவணத்தை,தமிழ்மண்ணின் உழைப்பாளிகளிற்கும்,இடதுசாரி முற்போக்கு சக்திகளிற்குமாக முதல் தமிழ்மொழிபெயர்ப்பை  பெரியார்,பொதுவுடமைக்கட்சியின் சிங்காரவேலனாருடன் சேர்ந்து கொண்டு வந்தார். கடவுளை பரப்புகிறவன் அயோக்கியன்,கடவுளை நம்புகிறவன் முட்டாள் என்று வாழ்நாள் முழுவதும் மதங்களிற்கு எதிராக,மூடநம்பிக்கைகளிற்கு எதிராக போராடினார்.  பார்ப்பனக் கொடுங்கோன்மையை,மனிதர்களை சாதி பிரித்து உயர்வு,தாழ்வு கற்பிக்கும் சதியை சாடினார். "நான் பிராமணர்களது சாதி ஒடுக்குமுறை பற்றி பேசினால் சந்தோசப்படும் வேளாளர்களும்,செட்டியார்களும் தாழ்த்தப்பட்ட மக்களின் நிலை குறித்து,அவர்களை மற்ற தமிழ்சாதியினர் சமமான மனிதர்களாக மதித்து நடக்காத சாதிவெறி குறித்து பேசும் போது மெளனமாக இருக்கிறார்கள்" என்று சாதிப்படிமுறையின் கீழ் உள்ளவர்களை ஒடுக்கும் இரட்டைவேடம் போடுபவர்களை சாடினார்.

பெண்களை ஒடுக்குவதற்கு கர்ப்பப்பை ஒரு காரணம் என்றால் அந்த கர்ப்பப்பையை அறுத்தெறியுங்கள் என்று முழங்கினார். "பெண் ஏன் அடிமையானாள்" என்பது பெண்விடுதலை குறித்து அவர் எழுதிய புத்தகம். அவர் பெண்விடுதலைக்கு காட்டிய ஆதரவை கண்ட பெண்கள் அமைப்பினரே அவரை பெரியார் என்று முதலில் அழைத்தனர். அம்பேத்கார் தனது சகோதரி என்று அழைத்த மீனாம்பாள் தான் அவரை பெரியார் என்று அறிவித்தார்.


"நமது மதம் சாதியை காப்பாற்றும் மதம்","நமது தமிழ் மொழி சாதியை காப்பாற்றும் மொழி" என்று அவர் தமிழ்மொழியின் மீது படிந்திருந்த சாதிக்கறையை எடுத்துக் காட்டினார். பொதுவில் இருக்கும் நம்பிக்கைகளை,வழிபாடுக்ளை உடைத்தெறிவதால் தனக்கோ அல்லது இயக்கத்திற்கோ பொதுமக்களின் ஆதரவு குறைந்து விடக்கூடும் என்று கணப்பொழுது கூட அவர் தயங்கியதில்லை. ஏனென்றால் வாக்குப்பிச்சைக்காக ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு மாதிரி பேசும் அரசியல்வாதி அல்ல அவர். தமிழ்மொழியை வைத்து பிழைப்பு நடத்தும் வியாபாரிகளிற்கு மாறாக மொழி என்பது தொடர்பு கொள்வதற்கான ஒரு ஊடகமே தவிர வேறு ஒன்றுமில்லை. எமது மொழி என்பதற்காக தமிழ்மொழியில் படிந்துள்ள சாதி,மத அடையாளங்களை ஏற்றுக் கொள்ள வேண்டியதில்லை என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.


அதனால் தான் தமிழ் இனவெறியர்கள்,சைவத்தமிழ் சகதிக்குள் ஒழிந்து கொண்டு இருப்பவர்கள் அவரை தமிழ்மொழியை பழித்தவர் என்று பொய் கூறுகிறார்கள். கம்பராமாயணத்தின் புராணப்புழுகுகளிற்காக அவர் அதனை நிராகரித்த போது கம்பரின் கவித்திறனையும்,இலக்கிய நயத்தினையும் அவர் அறியாமல் குறை சொல்கிறார் என்று கதை பேசிக் கொண்டிருக்கிறார்கள். னா,ணா,லை,ளை போன்ற எழுத்துச் சீர்திருத்தங்களை எத்தனையோ ஆண்டுகளிற்கு முன்னரே தனது எழுத்துக்களில் பயன்படுத்தியவர் அவர் என்பது போன்றவைகளை மறைத்து விட்டு பொய்களை புனைந்து கொண்டிருக்கிறார்கள்.


இந்த புரட்சிக்காரனிற்கும், அ.தி.மு.க என்னும் ரெளடிகள் கூட்டத்தின் தலைவனான எம்.ஜி.ராமச்சந்திரனிற்கும் சீமானின் நாம் தமிழர் கட்சி "வீர வணக்கப் பொதுக்கூட்டம்" நடத்துகிறது. தனது பெரும்சொத்தை பகுத்தறிவு இயக்கத்திற்காக செலவிட்டவர் பெரியார். படங்களில் நடிக்கும் போது கறுப்புப்பணத்தில் லட்சங்களை பதுக்கியவர் புரட்சிவாத்தியார். பிறகு ஆட்சிக்கு வந்ததும் சாராய உடையார்,எத்திராஜ் முதலியார் போன்ற கள்ளச்சாராய,கட்டைப்பஞ்சாயத்து ரெளடிகள் மூலம் ஊழல் செய்தார். "பெண் ஏன் அடிமையானாள்" என்று பெண்விடுதலைக்கு குரல் கொடுத்தார் பெரியார். தனக்கு சினிமாவில் இருந்த செல்வாக்கை வைத்து நடிக்க வரும் பெண்களை ஆசைகாட்டி,பயமுறுத்தி அடிமைகளாக்கியவர் எம்.ஜி.ஆர். மூடநம்பிக்கைக்கு முதல் எதிரி அந்தக் கிழவன். இருக்கிற அம்மன் போதாது என்று கர்நாடகத்து மூகாம்பிகை அம்மனையும் தமிழ்நாட்டுக்கு பரப்பியவர் வாத்தியார்.(கர்நாடகத்து அம்மன்கள் என்றாலே அவருக்கு தனி விருப்பம் தான்).


அந்தக் கிழவன் இறந்து இத்தனை வருடங்களாகி விட்ட போதிலும் இன்றைக்கும் மக்கள் போராட்டம் எதிலும் அவனின் தொண்டர்கள்,அவனின் கொள்கைகளை பின்பற்றுபவர்கள் முன்நிற்கிறார்கள். இவரிற்கு தாமரைக்கனி,ராபின் மொயின் என்பவனோடு சேர்ந்து கொள்ளை அடித்த மாண்புமிகு மந்திரி,சபாநயகர் போன்ற பதவிகளிற்கு பெருமை சேர்த்த காளிமுத்து,கள்ளச்சாராயம் காய்ச்சிய பணத்திலே கல்வி வியாபாரம் செய்யும் ஜேப்பியார்,கட்டைப்பஞ்சாயத்து ரெளடி மதுசூதனன்,இன்றைய அடிமைகள் என்று ஊழல்பணியை ஒழுங்காக தொடருகிறார்கள். அவரின் அதிகாரபூர்வ அரசியல்வாரிசின் கொள்ளைகளை,அராஜகங்களை,பார்ப்பன வெறியை தனியே எடுத்து சொல்லத் தேவையில்லை.


இதிலே அவர்கள் வாத்தியாரிற்கு அவர்கள் ஈழத்திற்கு உதவிய தலைவர் பட்டம் கொடுத்திருக்கிறார்கள். இந்த பச்சைப்பொய்யை பற்றி முன்பொரு பதிவிலே எழுதியதை மீள குறிப்பிடுகிறேன். இவரின் ஈழ ஆதரவிற்கு உதாரணமாக எண்பதுகளின் ஆரம்பத்தில் மதுரை உலகத்தமிழ் ஆராய்ச்சி மகாநாட்டின் போது நடந்த நிகழ்வொன்றை குறிப்பிடலாம். யாழ் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர்களான பட்டிமன்ற புகழ் ஜெயராஜ் (நால்வருணக் கோட்பாடு,சைவசமயம் என்பவை புனிதமானவை என்று பேசித்திரிகிறாரே அவர்தான்), குமரகுருபரன் போன்றவர்களால் அகில இலங்கை கம்பன் கழகம் தொடங்கப்பட்டது. இந்த கழகத்திற்கும் மாநாட்டிற்கு அழைப்பு கிடைத்தது. அந்த மேடையிலே எம்.ஜி.ஆர் முன்பு ஜெயராஜ் பேசிய போது ஈழத்தமிழர்களிற்கு தமிழக அரசு உதவ வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.


அசத்தலான ஒரு மறுமொழியை அரசியலறிவு மிகுந்த நம்ம வாத்தியார் கொடுத்தார். நீங்கள் என்னை கேட்டா போராட வெளிக்கிட்டீர்கள்? ஒரு வாசகம் என்றாலும் திருவாசகம். மதுரையே கலங்கிப்போச்சு. மறுநாள் இலங்கை, இந்திய பத்திரிகைகள் எல்லாம் கோபால் பல்பொடி விளம்பரத்தைக் கூட ஒதுக்கி வைத்து விட்டு வாத்தியின் அரசியலறிவையும், ராசதந்திரத்தையும் கொட்டை எழுத்துக்களில் வெளிப்படுத்தினார்கள். இலங்கை முழுவதும் வாத்தியின் கொடும்பாவிகள் கொழுத்தப்பட்டன. இந்த அரசியல் கோமாளி தான் நம்ம மீட்பராம்.


இந்திரா காந்தியை அவசரகாலச்சட்டத்தின் போது கூட ஆதரித்த ஒரு கட்சித்தலைவர் என்றால் அது நம்ம வீராதிவீரன் எம்.ஜி.ஆர் தான். அதற்கு அடுத்த தேர்தலில் மொரார்ஜி தேசாய் பிரதமராக வந்த போது மொரார்ஜியின் காலிலே விழுந்த தன்மானச்சிங்கம் நம்ம வாத்தியார். மொரார்ஜியை கவிழ்த்து விட்டு சரண்சிங் ஆட்சிக்கு வந்தவுடன், சிங்குடன் கூட்டு என்று ஆட்சிக்கு யார் வந்தாலும் நின்னையே கதியென்று சரணடைந்தவர் நம்ம ஆளு. அவர் புலிகளிற்கு மத்திய அரசையும் மீறி கோடி, கோடியாகக் கொடுத்த கொடைவள்ளல் என்று சிலர் சிந்து பாடுவதுண்டு. எந்த மத்திய அரசையும் மறந்தும் கூட பகைக்காத இந்த சுத்த வீரன் மத்திய அரசின் ஆணையின்றி தனது பணத்தை கொடுத்தாராம். தனது படங்களிலே நடிப்பு என்றால் என்னவன்றே தெரியாமல் ஓடித்திரியும் வாத்தி, றோவினது உளவு நாடகங்களிலே, சும்மா சொல்லக்கூடாது நல்லாவே நடிச்சிருக்கு. "இந்த உதவிகள்" தான் மக்கள் போராட்டமாக படிப்படியாக வளர வேண்டிய போராட்டத்தை வீங்க வைத்து ஈழத்தை சுடுகாடாக்கியது.


தமிழ் இனவெறி,சந்தர்ப்பவாத அரசியல்,தேர்தலில் நின்று முதலமைச்சராக வேண்டும் போன்றவைகளின் கலவையாக பால் தாக்கரே ஈழமக்களிற்கு ஆதரவு,இலை மலர்ந்தால் ஈழம் மலரும்,ஈழத்திற்கு உதவிய தலைவர் எம்,ஜி.ஆர் என்று எதை வேண்டுமானாலும் பேசுங்கள். ஆனால் அந்த போராளியை,கலகக்கார கிழவனை இதற்குள் இழுக்காதீர்கள். தயவு செய்து விட்டுவிடுங்கள்.

Last Updated on Saturday, 28 December 2013 09:32

சமூகவியலாளர்கள்

< December 2013 >
Mo Tu We Th Fr Sa Su
            1
2 3 4 5 6 7 8
9 10 11 12 13 14 15
16 17 18 19 20 21 22
23 24 25 26 27 29
30 31          

AllVideos Reloaded

புதிய ஜனநாயகம் :- புதியவை