Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அரசியல்/சமூகம் இரண்டு ஆணுறைகளும், ஒரு கறுப்பு டோக்கனும்

இரண்டு ஆணுறைகளும், ஒரு கறுப்பு டோக்கனும்

  • PDF

பெண்களை விளங்கிக் கொள்ள முடியாது என்பார்கள். எனக்கு சின்ன விடயங்களையே விளங்கிக் கொள்ள முடிவதில்லை, இந்த லட்சணத்தில் பெண்களை எப்படி புரிந்து கொள்ள முடியும். பள்ளிக்கூடத்தில் வாத்திமார்கள் உனக்கு படிப்பை தவிர மிச்சம் எல்லாம் ஏறும் என்று அடிக்கடி அன்பாக ஆசிர்வாதங்களை வாரி வழங்குவார்கள்.

எங்களது கல்லூரி ஆண்களால், ஆண்களிற்கு, ஆண்களிற்காக நடத்தப்பட்ட ஒரு காய்ஞ்சு போன பூமி. சொன்னால் நம்ப மாட்டீர்கள் ஒரு ஆசிரியையோ, ஒரு பெண் ஊழியரோ கிடையாது. கல்லூரி விடுதியில் கூட பெரியபண்டா, சின்னபண்டா என்று சிங்கள தொழிலாளிகள் தான் வேலை செய்தார்கள்.

இது இப்படி என்றால் ஊரிலே இருந்த பெட்டைகள் ரொம்ப விவரமா இருந்தாளுகள். முயல் பிடிக்கிற நாயை மூஞ்சியைப் பார்த்தாலே தெரியும், இவனுகள் எதையுமே பிடிக்க லாயக்கில்லாதவனுகள் என்று அவளுகளிற்கு அந்த வயதிலேயே தெரிந்து விட்டது. எங்களைக் கண்டாலே முகத்தை சுழிச்சுக் கொள்ளுவாளுகள். இப்பவும் மனிசி என்னைக் கண்டதும் வீணாய்ப்போனவன் வாறன் என்பது போல முகத்தை சுழிப்பது தனியான சோகக்கதை.

பெண்கள் யாரை விரும்புகிறார்கள், ஏன் விரும்புகிறார்கள் என்பது பைதகரசின் தேற்றத்தை விட கஸ்டமாக இருந்தது. ஆனால் படிப்பை பற்றி கவலைப்படாதது போலவே பெண்களின் உளவியலைப் பற்றியும் கவலைப்படாமல் கண்ணில் பட்ட பெண்களை எல்லாம் காதலித்தோம்.

என் நண்பர் மிக இனியர்

சுடு சொல்லை அறியார்

கண்ணீரின் துளி போல

காதல் என்னும் நதியில் கலப்பதற்கே உயிர் செய்த

காதல் உரு ஆனார்

 

போகட்டும்

இன்று முதல் கசப்புகளை வாங்கிப் புசிக்கிறேன்

அதெற்கென்ன

என் மனதை,என்றும்

நோகாது வைத்திருக்க வேண்டுமென எண்ணேன்

நொந்தவர் தான் வாழ்க்கையிலே சாதனைகள் செய்தார்

ஆதலினால்

என் மனதைக் கல்லாக்கிக் கொள்வேன்

அம்பு வரும்

அது முறியும்

நான் நடந்து செல்வேன்

என்று சண்முகம் சிவலிங்கம் நண்பர்களைப் பற்றி எழுதியதை போல, எத்தனையோ பெண்கள் திரும்பி பார்க்காமல் விட்டாலும் நாங்கள் கவலைப்படாமல் கடந்து சென்றோம். வேம்படியில் படிக்கும் ஒரு பெட்டை எங்களது ரியுசன் வகுப்பிற்கு புதிதாக வந்தாள். சிவகுமாரன் அடுத்தநாளே அவளை உயிருக்கு உயிராக காதலிக்க தொடங்கி விட்டான். அவளது நினைப்பாகவே இருப்பதாகவும், சாப்பாடு கூட சாப்பிட முடியவில்லை என்று லிங்கம் கூல்பாரில் சர்பத் குடிக்கும் போது சொன்னான். அந்த நாளைய கடிதங்களில் தவறாது இடம் பெறும் "அலைகடல் வற்றினாலும் என் அன்புக்கடல் வற்றாது" என்ற வசனத்தை எல்லா நிற பென்சிலாலும் எழுதி அவளிடம் கொடுத்தும் விட்டான். அடுத்த நாளே மறுமொழி வந்தது. "செருப்பு பிஞ்சிடும், பண்ணைக்கடல் வற்றினாலும் என் பகைக்கடல் வற்றாது". அவள் வேலணையில் இருந்து ஒவ்வொரு நாளும் வேம்படிக்கு வாறவள். மண்வாசனை, கடல்வாசனையோடு மறுமொழி வந்தது.

யோகன் நல்ல ராசியானவன், கல்யாணராசி. ஆனால் அவனுக்கில்லை அவன் பாக்கிற பெட்டைகளிற்கு. அவன் யாரிற்கு பின்னால் திரிந்தாலும் அவளுகளிற்கு அவன் தனது காதலை சொல்ல முதலே கலியாணம் முடிந்து விடும். ஒரு நாளிரவு வயலடியில் வைச்சு தண்ணி அடிச்சுக் கொண்டிருந்தோம். எல்லோருக்கும் நல்லவெறி. நிலாவெளிச்சத்தில் அரகர சிவசிவ சம்போ என்ற பாடலை தமிழில் உள்ள கெட்டவார்த்தைகள் எல்லாம் சேர்த்து பாடிக்கொண்டிருந்தோம். யோகனிற்கு பக்கத்திலே மணி இருந்தான். திடீரென்று பெருங்குரல் எடுத்து அழுது கொண்டே "என்னைப் பார்த்து ஏண்டா இப்படிக் கேட்டாய்" என்று யோகன் மணியை பார்த்து கத்தினான். நாங்கள் ஒன்றும் விளங்காமல் முழித்தோம். யோகன் சொன்னான், மணி கேட்டானாம் "என்ரை அக்காவுக்கு கனநாளாக மாப்பிள்ளை பார்க்கிறம், ஒண்டும் சரிவரவில்லை. நீ கொஞ்ச நாளைக்கு அவளுக்கு பின்னாலே சுத்திறியா" என்று.

அப்போது சென்னையிலே இருந்தோம். நண்பர் ஒருவர் பாலியல் தொழிலாளிகளை பற்றி ஒரு ஆய்வு செய்து கொண்டிருந்தார். அவர் பாலியல் தொழிலாளிகளை நேரில் சந்தித்து பேச வேண்டுமென்று சொன்னார். ஆய்வு என்று சொன்னால் அனுமதிக்க மாட்டார்கள் என்பதால் ஒரு தரகர் மூலம் வாடிக்கையாளர்கள் போல ஒரு வீட்டிற்கு போனோம். ஒரு கிழவர் கதவை திறந்தார். விவசாயம் பொய்த்து போனதால் ஊரை விட்டு வந்த விவசாயியாக இருக்கலாம். என்னையும் நண்பரையும் ஒவ்வொரு அறைக்குள்ளே  ஒரு கறுப்பு பிளாஸ்டிக் டோக்கனையும் கையிலே தந்து  அனுப்பி வைத்தார். இருட்டாக இருந்த அறைக்குள்ளே சிறுவிளக்கு ஒன்று மின்னியது. மல்லிகைப்பூவை தலையில் வைத்த பெண் ஒருத்தி மெல்லிசாக சிரித்தபடி கட்டிலில் இருந்தாள். நான் ஆய்வைப்பற்றி சொன்னேன். பேசுறதுக்கு பணம் கொடுத்தீங்களா என்று வியப்புடன் கேட்டாள். வசந்தியின் கதை ஒற்றைக்கதையல்ல. ஓராயிரம் பெண்கள் காதல் என்று, வேலை என்று, குடும்பத்திற்காக என்று பாலியல்தொழிலாளர்கள் ஆக்கப்படும் கதை. முதலில் தயங்கியவள் பிறகு தனது மனதில் இருப்பதை எல்லாம் சொல்லி விட வேண்டும் என்பது போல பேசிக்கொண்டே இருந்தாள்.

இது எதுக்கு என்று கையிலே இருந்த டோக்கனைக் கொடுத்தேன். இது தான் இன்னைக்கு எத்தனை பேரோடு படுத்தேன் என்ற கணக்கிற்கு. இதை எண்னித்தான் பணம் கொடுப்பாங்க என்றவள், கையிலிருந்த இரண்டு ஆணுறைகளை கட்டிலிலே போட்டாள். ஏன் இரண்டு என்ற எனது பார்வையை புரிந்து கொண்டவளாய் சொன்னாள். பொம்பிளைகளையே கண்னால் காணாதவங்க மாதிரி வெறியோட நடந்துக்கிறாங்க. புண்ணக்கிடுறாங்க. அது தான் ஒரே தடவையிலே ரண்டு போடச்சொல்லி குடுக்கிறோம் என்றபடி விரக்தியாய் சிரித்தாள். பணத்திற்காக இந்த தொழிலை செய்தாலும் நானும் ரத்தமும் சதையுமான ஒரு பொம்பிளை தானே, கேள்வி மனதைத் துளைத்தது. என்னவென்று சொல்வது. நட்சத்திரங்கள், நிலவு எதுவுமின்றி இருட்டாக இருந்த வானத்தை வெறித்துப் பார்த்து கொண்டு நின்றேன்.

 

-19/08/2012

Last Updated on Friday, 07 September 2012 10:53