Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
ஒடுக்கப்பட்ட மக்களும் - செல்லன் கந்தையாவும்

ஒடுக்கப்பட்ட மக்களும் - செல்லன் கந்தையாவும்

2003 யாழ் நூலகத்தை ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்த ஒர...

புது அவதாரமெடுத்துள்ள வெள்ளாளியம்

புது அவதாரமெடுத்துள்ள வெள்ளாளியம்

2003 இல் யாழ் நூலக திறப்புவிழாவை புலிகள் எதற்காக த...

அமெரிக்காவின் நிறவொடுக்குமுறையும் - இலங்கையில் இனவொடுக்குமுறையும்

அமெரிக்காவின் நிறவொடுக்குமுறையும் - இலங்கையில் இனவொடுக்குமுறையும்

அளவிலும்; பண்பிலும் ஒடுக்குமுறைகள் வேறுபட்டாலும், ...

முதலாளித்துவ

முதலாளித்துவ "சொர்க்கத்தில்" மனிதர்கள் வாழ முடியுமா!?

அமெரிக்காவின் நிறவெறி ஆட்சிக்கு எதிராக, மக்கள் போர...

கொரோனாவின் ஏஜண்டுகளாகியுள்ள பார்ப்பனிய காவி காப்பரேட் பாசிட்டுகள்

கொரோனாவின் ஏஜண்டுகளாகியுள்ள பார்ப்பனிய காவி காப்பரேட் பாசிட்டுகள்

கொரோனா வைரஸ் தொற்றும் - மரணங்களும், கொரோனாவின் இயற...

பொருளாதார நெருக்கடி அரசியல் நெருக்கடியாக மாறும் - என்ன செய்ய வேண்டும்?

பொருளாதார நெருக்கடி அரசியல் நெருக்கடியாக மாறும் - என்ன செய்ய வேண்டும்?

செல்வந்தர்கள் தொடர்ந்து செல்வத்தைக் குவிப்பதையே, ம...

Back முன்பக்கம்

காஞ்சிபுரம்: வைணவப் பார்ப்பனர்களின் தீண்டாமை வெறி!

  • PDF

“யாருங்க இந்தக் காலத்துல சாதி பாக்குறாங்க” என்ற கீறல் விழுந்த ரிக்கார்டை பலமுறை கேட்டிருக்கிறோம். கேவலம், கோவில் பிரசாதத்தை வழங்குவதில் கூட சாதியும், சாதித் திமிரும் கடைபிடிக்கப்படுகிறது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? இந்தியாவின் சமூக வாழ்வில் பல்வேறு தளங்களில் சாதி கடைபிடிக்கப்படுகிறது என்பதற்கு இந்தப் பிரச்சினை ஒரு சான்று. அதுவும் இறைவன் சன்னிதியிலேயே நடக்கிறது என்றால் மற்ற இடங்களில் அதன் பரிமாணங்களை உணர முடியும்.

நாடெங்கிலும் இருக்கும் இந்து மத கோயில்களில் ‘பார்ப்பன சாதியைச் சேர்ந்தவர்கள் மட்டும்தான் பூசாரி ஆக முடியும்‘ என்பதில் ஆரம்பித்து பிரசாதம் செய்வதற்கு கூட பார்ப்பனர்கள்தான் தகுதி உடையவர்கள் என்று சாதி முறை அமல் படுத்தப்படுவதை நாம் பார்க்கிறோம்.

நாட்டின் சட்டங்கள் சொல்வது என்ன?

தமிழ்நாடு கோவில் நுழைவு உரிமை சட்டம் 1947ன் 3வது பிரிவில் இப்படி சொல்லப்பட்டிருக்கிறது.

Right of all classes of Hindus to enter and offer worship in temples – (1) Notwithstanding any law, custom or usage to the contrary, [every Hindu irrespective of the caste or sect to which he belongs] shall be entitled to enter any Hindu temple and offer worship therein in the same manner and to the same extent as [Hindus in general or any section of Hindus]; and [no Hindu] shall, by reason only of such entry or worship whether before or after the commencement of this Act, be deemed to have committed any actionable wrong or offence or be sued or prosecuted therefor.

கோயில்களில் நுழையவும் வழிபாடு நடத்தவும் இந்துக்களின் அனைத்து பிரிவினருக்கும் இருக்கும் உரிமை – (1) வேறு எந்த சட்டம், பழக்கம் அல்லது நடைமுறை இதற்கு மாறாக இருந்தாலும், எந்த சாதி அல்லது பிரிவைச் சேர்ந்த ஒவ்வொரு இந்துவுக்கும், எந்த இந்து கோவிலிலும் நுழையவும் இந்துக்களில் எந்த ஒரு பிரிவினரும் வழிபாடு செய்யும் அதே முறையில் வழிபாடு நடத்தவும் உரிமை உண்டு. இந்த சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்னதாகவோ, நடைமுறைக்கு வந்த பிறகோ அப்படிப்பட்ட ஆலய நுழைவு அல்லது வழிபாடு செய்வது தண்டிக்கப்பட வேண்டிய குற்றச் செயலாக கருதப்படக் கூடாது. அவர்கள் மீது வழக்கு தொடுக்கவோ, வழக்கு போடவோ கூடாது.

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை சட்டம் பிரிவு 106ல் இப்படி சொல்லியிருக்கிறார்கள்.

Removal of discrimination in the distribution of prasadams and theerthams

106. Notwithstanding anything in this Act or in any text, rule or interpretation of Hindu law, or any custom or usage as part of that law or any other law or in any degree of Court, there shall be no discrimination in the distribution of any prasadam or theertham in any religious institution on grounds only of caste, sex, place of birth or any of them.

பிரசாதம் அல்லது தீர்த்தம் வழங்குவதில் பாகுபாட்டை நீக்குதல்

106. இந்த சட்டம் அல்லது வேறு எந்த உரை, விதி அல்லது இந்து சட்டத்தின் புரிதல், அல்லது அந்த சட்டத்தின் ஒரு பகுதியான வேறு எந்த பழக்கம், நடைமுறை அல்லது நீதிமன்றத்தின் உத்தரவு இவை மாறுபட்டிருந்தாலும், எந்த ஒரு மதத் தலத்திலும் பிரசாதம் அல்லது தீர்த்தம் வினியோகம் செய்வதில் சாதி, பாலினம் அல்லது பிறந்த இடம் அல்லது மூன்றையும் அடிப்படையாகக் கொண்டு பாகுபாடு காட்டப்படக் கூடாது.

காஞ்சிபுரம் கோயில்கள் – சாதி கட்டுமானத்திற்கு ஒரு உதாரணம்

காஞ்சிபுரத்தை சேர்ந்த வைணவ கோவில்களில் பிரசாதம் வழங்குவதிலும், நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடி வழிபடுவதிலும் கடைபிடிக்கப்படும் சாதி அடிப்படையிலான ஒதுக்குமுறை பற்றிய விபரங்களை தெரிந்து கொள்ள அந்நகரைச் சேர்ந்த திரு D மாதவன் என்பவரிடம் பேசினோம். இந்த சாதிய முறையை எதிர்த்து கடந்த 10 ஆண்டுகளாக போராடி வருகிறார் வைணவ அடியாரான திரு மாதவன்.

2003-ம் ஆண்டுக்கு முன்பு காஞ்சிபுரத்தில் இருக்கும் சுமார் 14 வைணவ கோயில்களில் பிரசாதம் (புளியோதரை, பொங்கல், சுண்டல், இட்லி, வடை, பாதுஷா, லட்டு, அக்கார வடிசல்) வழங்கும் போது பார்ப்பன சாதியைச் சேர்ந்தவர்களை உட்கார வைத்து பரிமாறும் அதே நேரத்தில் மற்ற சாதியினரை உட்கார விடாமல் மிரட்டி எழுப்பி நிற்க வைத்துதான் பிரசாதம் வழங்கிக் கொண்டிருந்தார்கள்.

கோயிலில் வழிபாடு, உற்சவ நேரத்தில் பாடல்களை பாடும் பார்ப்பன சாதியைச் சேர்ந்த ஊழியர்கள் வழிபாட்டு பாடல்களை பாடுவார்கள். கடைசி 2 பாடல்களை பாடும்போது எல்லோரும் எழுந்து நிற்கும் படி மணியக்காரர் (கோவில் மேலாளர்) உரத்த குரலில் உத்தரவு போடுவார். அப்போது யாரும் உட்கார்ந்திருக்க முடியாது. பாடல்களை பாடி முடித்து பிரசாதம் வந்தவுடன் மேனேஜர் ‘எழுந்தருளி இருங்கோ’ என்று அழைப்பார். உடனேயே பார்ப்பன சாதியினர் அனைவரும் உட்கார்ந்து விடுவார்கள். மற்றவர்கள் உட்கார அனுமதி கிடையாது. யாராவது உட்கார்ந்தால் மிரட்டி எழுந்திருக்க சொல்வார்கள்.

வரதராஜபெருமாள் கோவில் என்று மக்களால் அழைக்கப்படும் தேவராஜ சுவாமி திருக்கோவிலில் தீர்த்தம் வழங்கும் போது பார்ப்பனர்களுக்கு முறையாக வரிசையாக கொடுத்து விட்டு மற்ற சாதியினரை அடித்துப் பிடித்து தீர்த்தம் பெற்றுக் கொள்ள வைப்பார்கள்.

சாதி பாகுபாட்டை எதிர்த்து அடியார்கள் போராட்டம்

பஞ்ச சமஸ்காரம் என்ற முறையில் வைணவ அடியார்களாக தீட்சை பெற்றுக் கொண்ட பக்தர்கள் பலர் இராமானுஜரை பின்பற்றி பக்தி மார்க்கத்தில் நாலாயிர திவ்ய பிரபந்தத்தை மனப்பாடம் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களில் ஒருவரான திரு மாதவன் மற்றும் உடன் சேர்ந்த அடியார்கள் பலர் இந்த நடைமுறையை கண்டித்து அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்று கோரினார்கள். கோயிலில் அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்ற நாட்டின் சட்டத்தையும், பொதுவான மனித உரிமையையும் அடிப்படையாகக் கொண்டு பிரசாதம் வழங்கும் முறையில் பாகுபாடு, தீர்த்தம் வழங்குவதில் அலட்சியம் போன்றவற்றை தட்டிக் கேட்டார்கள்.

தமது உரிமையை நிலைநாட்ட வலுக்கட்டாயமாக உட்கார்ந்து பிரசாதம் வாங்க காத்திருக்க முயற்சி செய்தபோது, நின்று கொண்டிருப்பவர்களுக்கு மட்டும் பிரசாதம் கொடுத்து விட்டு உட்கார்ந்திருப்பவர்களை புறக்கணித்து விட்டு போய் விட்டார்கள் கோவில் ஊழியர்கள்.

2003-ம் ஆண்டு திருக்கச்சி நம்பி திருமால் அடியார் சேவை சங்கம் என்ற அமைப்பை ஏற்படுத்தி சின்ன காஞ்சிபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்கள். காவல் துறையின் விசாரணை முடிந்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும் கட்டத்தில் அதிகார மையங்களில் இருக்கும் பார்ப்பனர்களின் தலையீட்டால் குற்றச்சாட்டு முதல் அறிக்கை தாக்கல் செய்யப்படாமலேயே கைவிடப்பட்டது.

அறநிலையத் துறை ஆணையும் பின் நிகழ்வுகளும்

அதைத் தொடர்ந்து இந்து அறநிலையத்துறைக்கு இந்த விவகாரத்தைப் பற்றி புகார் அனுப்பினார்கள் வைணவ அடியார்கள் குழுவினர். அந்த புகாரின் அடிப்படையில் காஞ்சிபுரம் இந்து சமய அறநிலையத் துறையின் உதவி ஆணையர் கையொப்பமிட்ட ஆணை பிறப்பிக்கப்பட்டது.

“காஞ்சீபுரம் நகரில் உள்ள வைணவ திருக்கோயில்களில் சாதிபேதமற்ற வழிபாடு அமைதியும், பிரசாதம் தீர்த்தம் விநியோகம் நடைபெறுவதிலும் இந்து அறநிலைய ஆட்சித் துறை சட்டம் பிரிவு 106 மற்றும் அதன் விதிகளின் கீழ்ப்படியும் கண்டிப்பாக உறுதி செய்யப்படுதல் வேண்டும். குறிப்பாக வைதிகர் அல்லாத பாகவதர் என்னும் பிரிவினரையும் மற்றும் பல சமூகத்தைச் சேர்ந்த பக்தர்கள் அனைவரையும் பிரசாதம் வழங்குதலின் போது தாங்கள் பிராமண சமூகத்தார் அல்ல என்பதற்காக கண்டிப்பாக எழுந்து நின்று பிரசாதம் பெறுமாறும் தனியாக மற்றொரு பகுதிக்கு செல்லுமாறும் வற்புறுத்துவதாக புகார்கள் வரப்பெறுகிறது. யதோத்தகாரி பெருமாள் திருக்கோயிலில் எழுந்த புகார் குறித்து தல விசாரணை செய்த உதவி ஆணையர் நேரடியாக திருக்கோயில் நிர்வாகியருக்கும் வேத பிரபந்த கோஷ்டியினருக்கும் திருக்கோயில் சம்பிரதாயப்படி முன்னுரிமை அளித்து பிரசாதம் தீர்த்தம் வினியோகம் செய்யலாமே தவிர

1. வழங்கும் விதத்திலும்

2. வழங்கும் இடத்திலும்

3. வழங்கும் முறையிலும்

எந்த வித பாகுபாடும் காட்டலாகாது என்ற தற்போதைய சட்ட நிலை எடுத்து கூறப்பட்டது. ஆனால், மேற்படி வழிபாடு மற்றும் பிரசாத விநியோகங்களில் ஆலய பழக்க வழக்கம் என்ற பெயரால் பிராமணர் அல்லாத இந்து சமூகத்தினருக்கும் பாகுபாடு பாராட்டப்படுமெனில் அந்தந்த திருக்கோயில் நிர்வாகி மற்றும் மேற்படி குற்றத்திற்கு பொறுப்பான தனியார் ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை முகவரியில் காணும் திருக்கோயில் நிர்வாகியருக்கு உறுதியாக சுட்டிக் காட்டி இச்சுற்றறிக்கை அனுப்பப்படுகிறது.”

இந்த அறநிலையத் துறை அதிகாரியாக இருந்த திரு ஞானசம்பந்தன் சுற்றறிக்கையை கீழ்க்கண்ட கோயில்களுக்கு அனுப்பினார்.

யதோத்தகாரி பெருமாள் திருக்கோயில்

கூரத்தாழ்வார் திருக்கோயில்

பிரவான வண்ணர் திருக்கோயில்

அஷ்டபுஜப் பெருமாள் திருக்கோயில்

விளக்கொளி பெருமாள் திருக்கோயில்

தேவராஜ ஸ்வாமி திருக்கோயில் (வரதராஜ பெருமாள் கோவில் என்று மக்களால் அழைக்கப்படுகிறது)

பெரும்பாலான கோவில்களில் உட்கார்ந்து பிரசாதம் வாங்குபவர்களை விரட்டுவதை நிறுத்தி விட்டார்கள்.  தீர்த்தம் கொடுப்பதிலும் பாகுபாட்டை சரி செய்து விட்டார்கள். நாட்டின் சட்டம் சுமார் 55 ஆண்டுகளுக்கு பிறகு நடைமுறைக்கு வந்திருக்கிறது.

இந்த ஆணைக்குப் பிறகும் தனியார் நிர்வாகத்தில் இருக்கும் யதோத்தகாரி கோவிலில் நடைமுறையை மாற்றிக் கொள்ளவில்லை. வரதராஜபெருமாள் கோவிலில் தென்கலை பிரிவினருக்குச் சொந்தமான இரண்டு துணைக் கோயில்களில் முறையை மாற்றாமல், பார்ப்பனர்களுக்கு கோயிலின் உட்பிரகாரத்தில் வைத்தும், மற்றவர்களுக்கு வெளியில் திண்ணையில் வைத்தும் பிரசாதம் வழங்கும் பழக்கத்தை தொடர்ந்தார்கள்.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் தனது ஆணையை அமல்படுத்த அரசு நிர்வாகத்தால் முடியவில்லை. ‘அரசு ஆணை மதிக்கப்படா விட்டால் அதை தட்டிக் கேட்கத்தான் நீதிமன்றங்கள் இருக்கின்றன’ என்று நீதிமன்றத்தை அணுகினார் திரு மாதவன்.

நீதிமன்ற உத்தரவும் அதற்கான மரியாதையும்

2008-ல் விமலநாதன் என்ற வக்கீலை அணுகி அவர் மூலம் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஐப்பசி மாதம் தீபாவளி நேரத்தில் அக்டோபர் 30, 2008 அன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஏ கே கங்குலி மற்றும் நீதிபதி பி ஜோதிமணி ஆகியோரின் பெஞ்சுக்கு விசாரணைக்கு வந்தது. புகைப்படங்கள் மூலம் கோவிலில் நடக்கும் ஒதுக்குமுறையைய விளக்கியதும் அறநிலையத் துறையின் ஆணையை அங்கீகரித்து அதை உறுதியாக செயல்படுத்தும்படி நீதிபதிகள் உடனடியாக உத்தரவு பிறப்பித்தனர். கலெக்டருக்கும், கோயில் நிர்வாக அதிகாரிகளுக்கும் வக்கீலே கடிதம் எழுதி அனுப்பினார்.

காஞ்சிபுரம் மாவட்ட காவல் துறை ஆணையர் மட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடு செய்து கொடுத்து கடைசி நாள் பண்டிகையில் அனைத்து சாதியினரும் வரதராஜ பெருமாள் கோவிலைச் சேர்ந்த உப கோவிலான மணவாளமுனி சன்னதியின் உள் மண்டபத்தில் நுழைந்து வழிபாட்டில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது ‘சூத்திரால்லாம் கோயிலுக்குள் வந்து விட்டார்கள்’ என்று பார்ப்பன சாதியினர் தகராறு செய்தனர் (வீடியோ). 1959 கோயில் நுழைவு உரிமை சட்டம் அந்த கோயிலில் 50 ஆண்டுகளுக்குப் பிறகுதான் அமலுக்கு வந்தது.

24.1.2008 குமுதம் ரிப்போர்ட்டர் இதழிலும், அதே மாதத்தில் நக்கீரன் இதழிலும் இது பற்றிய விபரங்கள் வெளியாகின.

இவ்வளவுக்கும் பிறகும் யதோத்தகாரி கோவிலிலும், வரதராஜ பெருமாள் கோவிலைச் சேர்ந்த உப கோவிலான மணவாள முனி சன்னதியிலும் பிரசாதம் வழங்கும் முறையிலும், கோயிலில் நுழைந்து வழிபாடு செய்வதிலும் சாதி அடிப்படையில் பாகுபாடு காட்டுகிறார்கள். நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடல்களை கற்றுத் தேர்ந்து வைணவ பஞ்ச சமஸ்காரங்களை தவறாமல் கடைப்பிடிப்பவர்களாக இருந்தாலும், வழிபாட்டு பாடல்களை பாடும் ஊழியராக மற்ற சாதியினரை சேர்த்துக் கொள்வதில்லை. அத்தகைய தேர்ச்சி இல்லாதவர்களாக இருந்தாலும் பார்ப்பன சாதியினரை சேர்த்துக் கொள்கிறார்கள். அந்த குழுவினர் மட்டும்தான் வழிபாடு நடக்கும் போது உள் மண்டபத்தில் அனுமதிக்கப்படுகிறார்கள். அந்த நேரத்தில் மற்றவர்கள் உள்ளே நுழையவோ பாடல்களை பாடவோ அனுமதிப்பதில்லை. ‘நாலாயிர திவ்ய பிரபந்த பாடல்களை மற்றவர்கள் பாடுவது சட்டப்படி தவறு’ என்ற அவதூறையும் சொல்லி வருகிறார்கள் பார்ப்பனர்கள்.

பாடல் வழிபாடு முடிந்து பிரசாதம் வழங்கும் போதும் உள் மண்டபத்துக்கு அனைத்து பக்தர்களையும் அழைத்து தீர்த்தமும் பிரசாதமும் வழங்காமல் பெரும்பகுதி பிறசாதி பக்தர்களை வெளியிலேயே நிற்க வைத்து வெளியில் வந்து பிரசாதம் வழங்குகிறார்கள். உள்ளே வரத் துணியும் மற்ற சாதியினரை ‘சாமிக்கு அபச்சாரம்’ என்று உளவியல் ரீதியாக மிரட்டி சட்டத்தை கடைப்பிடிக்காமல் போக்கு காட்ட முயற்சிக்கிறார்கள். 2011 அக்டோபர் 30ம் தேதி மணவாளர் மாமுனி சன்னிதி கோயிலில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இதற்கு சாட்சியாக உள்ளன்.

‘பிராமணாளுக்கு’ உள்ளே – ‘சூத்ராளுக்கு’ வெளியே

மக்கள் போராட்டம்தான் ஒரே வழி

சட்டத்திலும், அறநிலையத் துறை ஆணையிலும், நீதிமன்ற உத்தரவிலும் தெளிவாக சொல்லியிருப்பது போல ‘சாதி, பாலினம், பிறந்த இடம் இவற்றை மட்டும் அடிப்படையாகக் கொண்டு கோவியில் வழிபாடு நடத்த அல்லது கோவிலில் நுழைய அனுமதி மறுக்கப்படக் கூடாது’. அவற்றை எல்லாம் துச்சமாக மதித்து தமது வருணாசிரம சாதீய அடக்குமுறையை இன்னமும் கைப்பிடிக்கும், இந்து மத கோயில்களை தமது பிடிக்குள் வைத்திருக்கும் சிறுபான்மை பார்ப்பனர்களை எப்படி வழிக்கு கொண்டு வருவது?

இந்தியாவின் சாதி பிரிவினை வெளிப்படையாக தெரிவதில்லை. யாரையும் பார்த்தவுடன் வன்னியர் யார்? ஆதிதிராவிடர் யார்? கவுண்டர் யார்? பள்ளர் யார்? என்று நிறம் பிரிக்க முடியாது. முகத்தைப் பார்த்து யாரையும் ஜாதி சொல்ல முடியாது. அமெரிக்காவின் இனப் பிரிவினை வெளிப்படையாக தெரியும் தோலின் நிறத்தை அடிப்படையாகக் கொண்டது.  ‘இந்த ஒடுக்கலைக் காட்டிலும் எங்கள் நாட்டில் இருக்கிற ஜாதிய ஒடுக்குமுறை கொடுமையானது. ஆனால் இதைச் சொல்லாமல் பார்த்துக்கொள்கிற வேலையை பார்ப்பனீயம் இன்றும் இங்கே செய்து கொண்டிருக்கிறது’ என்று அம்பேத்கர் சொல்லுகிறார்.

அமெரிக்காவின் கறுப்பு இன மக்கள் சிறுபான்மையினராக இருந்த போதும் இனவெறியை கடைப்பிடித்த பெரும்பான்மை வெள்ளை இனத்தவருக்கு எதிராக தமது குடியுரிமைகளை நிலைநாட்ட 1960களில் மேற்கொண்ட போராட்டங்கள் புகழ் பெற்றவை. ஆனால் நாமோ இன்னும் இத்தகைய இழிவுகளை கண்டும் காணாமலும் சகித்துக் கொள்வது சரியா?

கறுப்பர் இன போராட்டக் குறிப்பு

காஞ்சிபுரம் கோயில்களில் கடைபிடிக்கப்படும் ஒதுக்குமுறையை போன்ற அடக்குமுறைக்கு ஆளான கறுப்பு இன மாணவர்கள் நடத்திய போராட்ட விபரம், இந்து மதத்தைப் பின்பற்றும் மக்களுக்கு போராடுவதற்கான வழிமுறையை காட்டுகிறது.

1960ம் ஆண்டு பிப்ரவரி 1ம் தேதி மாலை 4.30 மணிக்கு வடக்கு கரோலினாவின் கிரீன்ஸ்பரோ நகரில் இருக்கும் வுல்ஸ்வோர்த் என்ற உணவு விடுதியில் நான்கு கறுப்பு இன கல்லூரி மாணவர்கள் மதிய உணவு மேசையில் உட்கார்ந்தார்கள். கறுப்பு இன மாணவர்களுக்கு மதிய உணவு பரிமாற மறுத்து விட்டார்கள் விடுதியினர். L வடிவத்தில் அமைந்த 66 பேர் உட்காரக் கூடிய நீண்ட மதிய உணவு மேசையின் இருக்கைகள் வெளளை இனத்தவர்களுக்கு மட்டும் என்று ஒதுக்கப்பட்டிருந்தன. கறுப்பு இனத்தவர் நின்று கொண்டேதான் சாப்பிட வேண்டும்.

மாணவர்கள் மாலை 5.30 மணிக்கு கடை மூடப்படுவது வரை உட்கார்ந்திருந்தார்கள். அடுத்த நாள் காலையிலும் கடைக்கு வந்து உள்ளிருப்பு போராட்டத்தை ஆரம்பித்தனர். 27 ஆண்களும் 4 பெண்களும் உணவு மேசைகளில் உட்கார்ந்து கொண்டு தமது கல்லூரி பாடங்களை படித்துக் கொண்டிருந்தார்கள். புதன் கிழமை போராட்டக் காரர்களின் எண்ணிக்கை 80ஆக உயர்ந்தது, வியாழக்கிழமை 300ஆக பெருகியது. சனிக்கிழமை இந்த உள்ளிருப்பு போராட்டத்தில் 600 பேர் சேர்ந்திருந்தார்கள்.

அடுத்த திங்கள் கிழமை போராட்டம் பக்கத்து நகரங்களுக்கும் பரவியது. வியாழக் கிழமையும் வெள்ளிக் கிழமையும் போராட்டம் விர்ஜினியா, தெற்கு கரலினா, டென்னஸ்ஸி மாநிலங்களுக்கும் பரவியது. மாத இறுதிக்குள் தெற்கு மாநிலங்கள் இந்த உள்ளிருப்பு போராட்டம் அனைத்திலும் பரவி சுமார் 70,000 மாணவர்கள் கலந்து கொண்டிருந்தார்கள். ஆயிரக்கணக்கான பேர் கைது செய்யப்பட்டார்கள். இன்னும் பல ஆயிரக் கணக்கானவர்கள் அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டார்கள். அடுத்த பத்து ஆண்டுகளில் அமெரிக்கா முழுவதும் பரவிய குடியுரிமை இயக்கத்தின் ஆரம்பமாக இந்த உள்ளிருப்பு போராட்டம் அமைந்தது.

இந்து மத கோவில்களில் இந்து மதத்தை பின்பற்றும் மக்கள் இத்தகைய உள்ளிருப்பு போராட்டங்களை நடத்துவது மிகவும் தேவையான ஒன்று. சட்டத்தை பொறுத்தவரை ஆகம விதிகள், இறை நம்பிக்கையாளர்களின் மத உரிமை என்ற பெயரில் பார்ப்பனியத்தின் தீண்டாமையை சட்டப் பூர்வமாகவே வழங்குகிறது. இன்னொரு புறம் அப்படி பாகுபாடு காட்டக் கூடாது என்ற பிரிவுகளை மேலே பார்த்தோம். இந்த முரணை ஒழித்து அனைவருக்கும் அனைத்து உரிமை என்பதை இந்து மதத்தில் கொண்டு வரவேண்டுமானால் பல சமத்துவ போராட்டங்கள் நடத்தியாக வேண்டும். நடத்துவோம்.

______________________________________________________

- வினவு செய்தியாளர்.

இக்கட்டுரையின் சுருக்கம் புதிய கலாச்சாரம் மே 2012ல் வெளிவந்துள்ளது

சமூகவியலாளர்கள்

< August 2012 >
Mo Tu We Th Fr Sa Su
    1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30 31    

AllVideos Reloaded

புதிய ஜனநாயகம் :- புதியவை