Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அரசியல்/சமூகம் அவனும் என்னை மாதிரி ஒரு கெட்டிக்காரன் தான்

அவனும் என்னை மாதிரி ஒரு கெட்டிக்காரன் தான்

  • PDF

பிறந்த ஊர், சுற்றியுள்ள மனிதர்களை நேசிப்பதில் இருந்து பெருகும் மனிதநேயம், அன்பு, தோழமை என்பனவே யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்னும் சர்வதேசியம் சார்ந்த சிந்தனைகளாக விரிவடைகின்றன. அந்த மண்ணையும், மனிதர்களையும் விட்டு வெகுதூரம், நீண்டகாலம் பிரிந்து வந்தாலும் பன்னிரண்டு வருசத்திற்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சிப்பூவைப் போல அல்லாமல் தினமும் மலரும் மல்லிகையைப் போல் மனதின் ஒவ்வொரு மூலையிலும் அந்த நாட்களின் இன்பங்களும், துன்பங்களும் வாசமாய் வீசுகின்றன.

பச்சை பசேல் என்ற சோலைகள் இல்லை, மயில்கள் தோகை விரிக்கும் காடுகள் இல்லை. நெடிய கரும்பனை கூடல்களும், அனல் காற்று வீசும் பாலை நிலமும் தான் எனது ஊர். ஆனால் பரதேசியிலும் பரதேசியாக பாதம் வலித்து நிற்கையில், வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களே என்னிடத்தில் வாருங்கள் என்று ஆறுதல் தருகிறது தவழ்ந்து விளையாடிய தாய்மண் பூமி.

சுப்புலக்சுமி என்னும் இசைக்குயில் நகுமோ என்று ஊனினை உருக்கிப்பாடுகையில் வராத இன்பம், தமிழுக்கு அமுதென்று பேர் என்று பாரதிதாசனின் பைந்தமிழ் பாடலை சுசிலா என்ற கானப்பறவை வானப்பரப்பு எங்கும் நிறைய பாடுகையில் வருகிறதே! அது போல ஆயிரம் ஆயிரம் கதைகளை தினம் தினம் கேட்டாலும் வராத சிரிப்பு அறியாப்பருவது ஒரு நினைவில் பொங்கி வழிகிறது. அந்த கதைகளும், கதைமனிதர்களும் எல்லா ஊரிலும் இருக்கிறார்கள். எனது ஊர் மனிதர்களின் கதைகள் இவை. 


எங்கள்
ஊரில் கந்தையா அப்பு என்னும் முடி வெட்டும் தொழிலாளி. கந்தையா அப்பு என்று ஒரு கொஞ்சப்பேர் தான் கூப்பிடுவோம். மிச்சப்பேர் எல்லாருக்கும் கந்தையா தான். எனேன்றால் அம்பட்டர் எப்படி அப்புவாகவோ, அண்ணனாகவோ முடியும் என்ற சாதித்திமிர். வயது குறைந்ததுகள் எல்லாம் கந்தைய்யா என்று கூப்பிடும் போது வாட்டமோ, மனக்கசப்போ அவர் முகத்தில் தெரிவதில்லை. ஊரை நம்பி வாழும் குடிமகன் எப்படி ஊரைப் பகைக்க முடியும். கந்தையா என்று பெயர் வைத்திருந்தாலும், அவர் ஒரு கத்தோலிக்க கிறிஸ்தவர். சாதிக்கொடுமைகளினால் சமயம் மாறியிருக்க வேண்டும். என்றாலும் அவர் அதைப்பற்றி ஒரு போதும் கதைப்பதில்லை. ஊரின் கந்தசுவாமி கோவிலிற்கும், ஊராரிற்கும் அவரின் சாதியினர் செய்ய வேண்டிய வேலைகளை அவர் தான் செய்வார். பிறந்தவுடன் முப்பத்தொராம் நாள் மொட்டை அடிப்பதிலிருந்து, இறந்த பிறகு கொள்ளிக்குடம் உடைத்து வழியனுப்பி வைப்பது வரை அவர் தான் செய்வார். வாழ்வும், சாவும் அவரோடு தான்.

என்றாலும் எதாவது சடங்குகளை மறந்து போய் விட்டாலோ, சொன்ன நேரத்திற்கு அவரால் வர முடியாமல் போய்விட்டாலோ சாதிப்புத்தியை காட்டி விட்டான் என்று கோரமுகம் காட்டுவார்கள். அவரிற்கு மரியாதை கொடுக்காமல் நடத்துகிறீர்கள் என்று இளைஞர்கள் சண்டை போட்டால் எல்லாம் சாதிமுறைப்படி, சமயமுறைப்படி தான் செய்கிறோம் என்று மயிர் புடுங்குவார்கள் பெரிசுகள். ஆனால் ஒரு கிறிஸ்தவரைக் கொண்டு தான் தங்களது சைவமுட்டையிலே மயிர் புடுங்குகிறோம் என்பதிலே எந்த விதமான கூச்சமோ, வெட்கமோ அவர்களிற்கு வந்ததில்லை.

எல்லா முடிவெட்டும் தொழிலாளர்களையும் போல கந்தையா அப்புவும் நல்ல சுவாரசியமாக கதைப்பார். ஆனால் முடிவெட்டும் கலை தான் அவரிற்கு கை வரவில்லை. ஒவ்வொரு பெடியன்களிற்கும் ஒவ்வொரு ஸ்டைல் சொல்லி முடி வெட்டுவார். கடைசியிலே பார்த்தால் எல்லாப்பெடியன்களிற்கும் தலையிலே கரிச்சட்டியை கவிட்டு விட்டது போல இருக்கும். முடி குறைவாக இருக்கும் பெட்டைகளிற்கு அவர் சொல்லுவார் நான் ஒரு தைலம் வைச்சிருக்கிறேன் அதை தலையிலே போட்டு தேச்சால் உடனே கரடி மாதிரி கனக்கமுடி வளரும். ஆனால் அதை உமக்கு தர முடியாது. ஏனென்றால் அதை தலையிலே வைச்சு கையாலே தேய்க்கும் போது கையிலே முடி வளர்ந்து விடும் என்பார். தைலம் வைக்க விட்டாலும் இவளுகள் கரடி மாதிரித் தான் இருக்கிறாளுகள் என்று நாங்கள் சிரிச்சுக் கொள்ளுவோம்.

எங்களது சொந்தக்காரர் ஒருவருக்கு முடி கொட்ட தொடங்கியிருந்தது. தலை இழுக்கும் போது முடி உதிர்ந்து தோளிலே விழுகிறது என்ன செய்யலாம் என்று அப்புவிடம் ஆலோசனை கேட்டார். இதெல்லாம் ஒரு பிரச்சனையோ என்று சிரிச்ச அப்பு சொன்னார், தலை இழுக்கும் போது தோளிலே ஒரு துண்டை போட்டுக்கொண்டு இழுங்கோ, முடி துண்டிலே விழும் முதுகிலே விழாது. பல்லைக் கடிச்சுக் கொண்டு இருந்த நாலு முடியையும் பிய்ச்சுக்கொண்டு அந்த இடத்தை விட்டே ஓடிப்போனார் அவர்.

தமிழ்ச்சமுதாயத்தில் முடிவெட்டுபவர்கள் பெரும்பாலும் மருத்துவர்களாகவும் இருந்திருக்கிறார்கள். புதுமைப்பித்தனின் "நாசகாரக்கும்பலில்" வரும் மருத்துவரைப்போல, கந்தையா அப்புவும் ஊரிலே நாட்டு மருத்துவம் பார்ப்பதுண்டு. ஆனால் அதுவும் அவரது முடிவெட்டும் கலை மாதிரித்தான். என்னவோ எல்லாம் சொல்லி மருந்து கொடுப்பார். ஆனால் வருத்தம் கொஞ்சமும் மாறாது. ஒருமுறை பக்கத்து ஒழுங்கையில் இருக்கும் மலர் அக்காவிற்கு காய்ச்சல் வந்தது. கந்தையா அப்பு தான் எதோ மருந்து கொடுத்தார். மலர் அக்காவால் எழும்பி நிற்க முடியாத அளவிற்கு வருத்தம் கூடிவிட்டது. அந்த நேரத்தில் மிகவும் பிரபலமாக இருந்த டொக்ரர் பிலிப்பிடம் கூட்டிக்கொண்டு போவதற்கு வெளிக்கிட்டார்கள். அவரது மருத்துவமனை யாழ்ப்பாணம் பிரதான வீதியில் இருக்கிறது. அக்காவை காரிலே ஏற்றிக் கொண்டு இருக்கையில் பெடல்கட்டை எல்லாம் உடைஞ்சு போய் இருக்கும் தனது சைக்கிளில் கெந்திக்கொண்டு வந்த அப்பு காரை பார்த்தவுடன் நின்று, எங்கை பிள்ளையை கொண்டு போறீங்கள் என்று கேட்டார். இல்லை கந்தையா,பிள்ளைக்கு காய்ச்சல் கூடி விட்டது அது தான் டொக்ரர் பிலிப்பிடம் கூட்டிக்கொண்டு போறோம் என்று தயங்கியபடி சொன்னார் மலரக்காவின் அப்பா. அவனும் என்னை மாதிரி ஒரு கெட்டிக்காறன் தான் பயப்பிடாமல் கூட்டிக்கொண்டு போங்கோ என்றார் அப்பு. காய்ச்சலில் நிற்க முடியாமல் நின்ற மலர் அக்காவே விழுந்து விழுந்து சிரிச்சா.

பல வருடங்களிற்கு பிறகு ஊரிற்கு போன போது அப்புவை தெருவிலே பார்த்தேன். மிகவும் தளர்ந்து போயிருந்தார். போர் அவரது வாழ்வை, அவரது குடும்பத்தை எப்படி எல்லாம் சிதைத்தது என்பதை சொல்லும் போது  குரல் நடுங்கியது. அதெல்லாம் போகட்டும்,  ஆனால் முப்பத்தொன்றுக்கு என்ரை மடியிலே வைச்சு முடி வழிச்ச எத்தனையோ பிள்ளைகள் எனக்கு முதலே போயிட்டுதுகளே அதைத்தான் என்னாலே தாங்க முடியாமல் இருக்கு என்னும் போது கன்னங்களில் கண்ணீர் வழிந்தோடியது. சாதி, சமயம், இனம், மொழி கடந்த அன்பு என்பதை மட்டுமே அறிந்த ஒரு கிழவனின் கண்ணீர் அது.

-07/08/2012

Last Updated on Sunday, 12 August 2012 05:25