Thu04182024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயகம் மோடிக்கு எதிரான வழக்கு: உச்ச நீதிமன்றத்தின் இரட்டை நாக்கு!

மோடிக்கு எதிரான வழக்கு: உச்ச நீதிமன்றத்தின் இரட்டை நாக்கு!

  • PDF

குஜராத் மாநிலத்தில் 2002  ஆம் ஆண்டு இந்து மதவெறிக் கும்பல் கட்டவிழ்த்துவிட்ட இனப்படுகொலையின் பொழுது கொல்லப்பட்ட காங்கிரசு கட்சியைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான இஹ்ஸான் ஜாஃப்ரியின் மனைவி ஜாகியா ஜாஃப்ரியும், இவ்வினப்படுகொலைகளுக்கு நீதி வேண்டிப் போராடி வரும் நீதி மற்றும் அமைதிக்கான குடிமக்கள் அமைப்பும் இணைந்து, "இவ்வினப்படுகொலை தொடர்பான வழக்கில் மோடியையும் மற்றும் அவரது சக அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட 62 பேரையும் குற்றவாளிகளாகச் சேர்க்க வேண்டும்; இவ்வழக்கை மையப் புலனாய்வுத் துறை விசாரிக்க வேண்டும்' எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தனர்.

 

 

கடந்த நான்காண்டுகளாக இம்மனு மீதான விசாரணையை நடத்தி வந்த மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு மன்றம், "இது நாள்வரை தமது கண்காணிப்பின் கீழ் நடந்துவந்த விசாரணை முடிவுகளின் அடிப்படையில் ஜாகியா ஜாஃப்ரியின் புகார் மீதான இறுதி முடிவை விசாரணை நீதிமன்றம் எடுக்க வேண்டும்; சிறப்புப் புலனாய்வுக் குழு தனது இறுதி அறிக்கையையும், இவ்வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் விசாரணை நீதிமன்றத்திடம் அளிக்க வேண்டும்;  இனி,  இந்த வழக்கைத் தாம் கண்காணிக்கப் போவதில்லை' எனத் தீர்ப்பளித்து, இவ்வழக்கைத் தொடங்கிய இடத்திற்கே திருப்பி அனுப்பிவிட்டது.  இத்தீர்ப்பின் சாதக  பாதக அம்சங்களுக்குள் புகுவதற்கு முன், ஜாகியா ஜாஃப்ரியின் புகார் மனுவின் பின்னணி யையும், அவர் எந்த நிலையில் நீதி வேண்டி உச்ச நீதி மன்றத்தை அணுகினார் என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமானது.

உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இனப்படுகொலைகளுள் ஒன்று, குஜராத் படுகொலை.  இந்து மதவெறிக் கும்பல் இப்படுகொலைகளை எவ்வளவு கொடூரமாகவும், வக்கிரமாகவும் நடத்தியது என்பதற்கு, குல்பர்க் சொசைட்டி குடியிருப்பு மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஒரு முக்கியமான  சாட்சியமாக உள்ளது.  இந்து மதவெறிக் கும்பல் இக்குடியிருப்பைச் சுற்றி வளைத்துத் தாக்கியபொழுது, அங்கு வசித்து வந்த இஹ்ஸான் ஜாஃப்ரி, அக்காலனியில் வசித்து வரும் முசுலீம்களுக்குப் பாதுகாப்பு அளிக்குமாறும், தங்களது உயிர்களைக் காக்குமாறும் மோடியையும், உயர் போலீசு அதிகாரிகளையும் திரும்பத்திரும்ப,  பலமுறை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கெஞ்சியிருக்கிறார்.  அதற்கு எந்தப் பலனும் கிட்டவில்லை.  இஹ்ஸான் ஜாஃப்ரியைத் தெருவுக்கு இழுத்துவந்து, அங்கஅங்கமாக வெட்டி, உயிரோடு நெருப்பில் வீசியெறிந்து கொன்றது, இந்து மதவெறிக் கும்பல்.  ஜாஃப்ரி மட்டுமின்றி, அக்காலனியில் வசித்து வந்த மேலும் 69 முசுலீம்களும் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர்.  இந்த குல்பர்க் சொசைட்டி படுகொலை முதலமைச்சர் மோடிக்கும், உயர் போலீசு அதிகாரிகளுக்கும் தெரிந்தே, அவர்களின் ஆசியோடுதான் நடந்தது என்பது அப்பொழுதே அம்பலமான உண்மையாகும்.

இப்படுகொலை தொடர்பான ஆதாரங்களைத் திரட்டிய ஜாகியா ஜாஃப்ரி, இவ்வழக்கில் மோடியையும் அவரது சக அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட 62 பேரையும் குற்றவாளிகளாகச் சேர்க்கக் கோரி, குஜராத் மாநில போலீசு தலைமை இயக்குநரிடம் அளித்த மனு நிராகரிக்கப்பட்டது.  பின்னர், ஜாகியா தனது கோரிக்கையை விசாரிக்கக் கோரி குஜராத் மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.  அவரது மனுவை நிராகரித்த உயர் நீதிமன்றம், சம்பந்தப்பட்ட விசாரணை நீதிமன்றத்தை அணுகுமாறு ஜாகியாவுக்கு அறிவுறுத்தியது. இத்தீர்ப்பை எதிர்த்து கடந்த 2008 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு மனுவொன்றை, நீதி மற்றும் அமைதிக்கான குடிமக்கள் அமைப்புடன் இணைந்து தாக்கல் செய்தார், ஜாகியா.

இம்மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்டு உச்ச நீதிமன்றம், ஜாகியாவின் குற்றச்சாட்டுகள் பற்றிய புலன் விசாரணையை சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் ஒப்படைத்தது.  நரேந்திர மோடி உள்ளிட்டுப் பலரையும் விசாரித்த சிறப்புப் புலனாய்வுக் குழு, நரேந்திர மோடிக்கு எதிரான சாட்சியங்கள் வலுவாக இல்லாததால், அவரைக் குற்றவாளியாகச் சேர்க்க முடியாது என உச்ச நீதிமன்றத்திற்கு அறிக்கை அளித்தது.  இந்த அறிக்கை இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்ற போதும், தெகல்கா வார இதழ் இதனை வெளியிட்டுச் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் முடிவுகளை அம்பலப்படுத்தியது. ( பார்க்க: புதிய ஜனநாயகம், மார்ச் 2011)

இதையே மறைமுகமாக உச்ச நீதிமன்றமும் ஒப்புக் கொண்டது. சிறப்புப் புலனாய்வுக் குழு தனது விசாரணையில் கண்டறிந்துள்ள உண்மைகளும், அந்த உண்மைகளிலிருந்து அது வந்தடைந்துள்ள முடிவும் ஒன்றுக்கொன்று பொருந்துவதாக இல்லை என விசாரணையின்பொழுது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். இதனிடையே, இவ்வழக்கின் அமிகஸ் கியூரியாக (நீதிமன்ற நண்பன்) ராஜு ராமச்சந்திரன் என்ற வழக்குரைஞரை நியமித்த உச்ச நீதிமன்றம், சிறப்புப் புலனாய்வுக் குழு அளித்த இரு அறிக்கைகளை ஆய்வு செய்து, தனது கருத்துக்களைத் தெரிவிக்குமாறு அவரைப் பணித்தது. அவர் அளித்த அறிக்கை சிறப்புப் புலனாய்வுக் குழுவின் மோசடியை அம்பலப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால், அமிகஸ் கியூரி  நீதிமன்றத்திற்கு அளித்த அறிக்கையைக் கருத்திற்கொண்டு, புதிய அறிக்கை அளிக்குமாறு சிறப்புப் புலனாய்வுக் குழுவிற்கு உத்தரவிட்டது, உச்ச நீதிமன்றம்.

சிறப்புப் புலனாய்வுக் குழு இவ்வழக்கு தொடர்பான விசாரணைகளை முடித்து மூன்றாவது அறிக்கையை உச்ச நீதிமன்றத்திடம் அளித்தது. மீண்டும் அவ்வறிக்கைகளை ஆய்வு செய்யுமாறு அமிகஸ் கியூரி ராஜு ராமச்சந்திரனிடம் கூறியது உச்ச நீதிமன்றம். அதுமட்டுமின்றி, நேரடியாக குஜராத்திற்குச் சென்று சாட்சிகளிடமும் விசாரணை நடத்தித் தனக்கு அறிக்கை அளிக்குமாறும் ராஜு ராமச்சந்திரனைக் கேட்டுக் கொண்டது.  இதன் அடிப்படையில் குஜராத்துக்கு நேரில் சென்ற அமிகஸ் கியூரி, சாட்சிகளிடம் நடத்திய விசாரணையை, உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் நடந்த இரண்டாவது விசாரணை என்று தான் சொல்ல வேண்டும்.  இவ்வழக்கு தொடர்பாகச் சிறப்புப் புலனாய்வுக் குழு நடத்திய விசாரணையை உச்சநீதிமன்றம் முழுமையாக நம்பவில்லை என்பதையும் இது எடுத்துக் காட்டுகிறது.

இப்படிபட்ட நிலையில் உச்ச நீதிமன்றம் தன்னிடமுள்ள இரண்டு அறிக் கை  க ளின்  தகுதியின் அடிப்படையில் இவ்வழக்கில் ஒரு முடிவை அறிவித்திருக்க முடியும்.  தற்பொழுது கிடைத்துள்ள சந்தர்ப்ப சாட்சியங்களின் அடிப்படையில், ஜாகியா கோரியபடி மோடியைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றியிருக்க முடியும்.  ஆனால், உச்ச நீதிமன்றமோ வழக்கை விசாரணை நீதிமன்றத்திடம் ஒப்படைத்துவிட்டது. முடிவு சொல்ல வேண்டிய தருணத்தில் சட்டத்தைக் காட்டி தந்திரமாக நழுவிவிட்டது. "வழக்கின் விசாரணை முடிந்துவிட்ட நிலையில் சட்டப்படி உச்ச நீதிமன்றம் இதற்கு மேல் எதுவும் செய்ய முடியாது.  வாதி, பிரதிவாதி இருவரின் சட்ட உரிமைகளையும் காக்கும் வகையில் இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக' சட்ட வல்லுநர்கள் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு வியாக்கியானம் சொல்கிறார்கள்.

உச்ச நீதிமன்றம் இந்து மதவெறி பயங்கரவாதக் குற்றங்களை மென்மையாக அணுகுவதை மூடிமறைப்பதற்கே இந்த நியாயவாத மெல்லாம் பயன்படுகிறது.  தற்பொழுது உச்சநீதிமன்றக் கண்காணிப்பின் கீழ் நடந்து வரும் அலைக்கற்றை விசாரணை தொடர்பாக நீதிபதிகள் வெளியிடும் கருத்துக்களை இந்த வழக்கின் தீர்ப்போடு ஒப்பிட்டால், உச்ச நீதிமன்றத்தின் காவித்தனம் அப்பட்டமாகத்தெரியும்.

அலைக்கற்றை ஊழல் வழக்கில் ப.சிதம்பரத்தையும் சேர்க்கக் கோரி சுப்பிரமணிய சுவாமி தாக்கல் செய்த மனு மீது நடந்து வரும் விசாரணையில் மைய அரசின் வழக்குரைஞர் பி.பி. ராவ், "விசாரணை முடிந்து சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பின், உச்ச நீதிமன்றம் வழக்கை கண்காணிப்பது முடிவுக்கு வந்துவிடும்.  எனவே, நீதிபதிகள் இந்த இலட்சுமணன் கோட்டைத் தாண்டக் கூடாது' என வாதிட்டு, இதற்கு ஆதரவாக ஜாகியா ஜாஃப்ரி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் மேற் கூறிய தீர்ப்பையும் எடுத்துக் காட்டினார்.

இந்த வாதத்தை ஏற்றுக்கொள்ள மறுத்த நீதிபதி கங்குலி, "இலட்சுமணன் கோடு புனிதமானதல்ல.  சீதை, இலட்சுமணன் கோட்டைத் தாண்டியிருக்காவிட்டால், இராவணனைக் கொன்றிருக்க முடியாது.  ஒரு வழக்கைக் கண்காணிப்பதற்கோ அல்லது அவ்வழக்கை மேலும் விசாரிக்க வேண்டும் எனக் கோருவதற்கோ உச்ச நீதிமன்றத்திற்கு உள்ள அதிகாரத்திற்கு முற்றாகத் தடை போட முடியாது.  ஊழல் என்ற நோய் எங்கும் பரவியிருப்பதால், மரபைப் புதுப்பிக்க வேண்டும்' எனக் கூறினார்.

ஊழலைவிட, இந்து மதவெறி பயங்கரவாதம் கொடிய ஆட்கொல்லி நோய் என்பதை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் புரிந்து கொள்வதற்கு இன்னும் எத்தனை முசுலீம்களின் உயிர்கள் பலியாக வேண்டும்? அலைக்கற்றை ஊழல் வழக்கில், நீதியை நிலைநாட்டுவதுதான் முக்கியம் என்றும், அதன் பொருட்டு மரபுகள், நெறிமுறைகள் என்ற "லட்சுமணன் கோட்டை'  தாண்டலாம் என்றும் வியாக்கியானம் அளிக்கும் உச்சநீதிமன்றம், குல்பர்க் சொசைட்டி வழக்கில், சிறப்புப் புலனாய்வுக் குழு மோடிக்கு சாதகமாக நடந்து கொள்கிறது என்று பச்சையாகத் தெரிந்த போதும், சட்டத்தையும் நெறிமுறையையும் பின்பற்றுவதாக பம்மாத்து செய்து நீதியைப் பலியிடுகிறது.

பாபர் மசூதி வழக்கில், "இந்து என்பது மதமல்ல அது ஒரு வாழ்க்கை முறை' என ஆர்.எஸ்.எஸ்.இன் கொள்கையையே தீர்ப்பாக அளித்ததில் தொடங்கி, தற்போது மோடி தப்புவதற்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் இந்தத் தீர்ப்பு வரையில், உச்ச நீதிமன்றத்தின் இந்து மதவெறிப் பாசத்துக்கு பல உதாரணங்களைக் காட்ட முடியும். இந்து மதவெறிப் படுகொலைகளால் பாதிக்கப்படும் முசுலீம்களை நம்பவைத்து கழுத்தறுப்பதன் மூலம், அவர்களைப் பயங்கரவாதத்தின் பக்கம் தள்ளி விடுகிறது நீதிமன்றம்.

உச்ச நீதிமன்றம் மோடியை நிரபராதி என்றும் கூறி விடவில்லையே எனச் சட்ட வல்லுநர்கள் இத்தீர்ப்பின் "மேதமை'யை எடுத்துக் காட்டுகிறார்கள்.  கேள்வியைப் புரட்டிப் போட்டால்தான் இத்தீர்ப்பின் ஆபத்தைப் புரிந்து கொள்ள முடியும்.

மோடியின் அதிகாரத்தின் கீழுள்ள ஒரு கீழமை நீதிமன்றம் மோடியைக் குற்றவாளியாக அறிவிக்கும் என நம்புவதற்கு ஏதாவது இடமுண்டா?  குஜராத் கலவர வழக்குகளில் ஒன்றான பெஸ்ட் பேக்கரி வழக்கு மும்பய் நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றத்தால் மாற்றப்பட்ட பிறகுதான், குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டனர்.  இவ்வினப்படுகொலை தொடர்பான ஒன்பது முக்கியமான வழக்குகளில் புலன் விசாரணையே ஒழுங்காக நடைபெறாததால், அவ்வழக்குகளின் விசாரணையை உச்ச நீதிமன்றம் சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் ஒப்படைத்திருக்கிறது. குஜராத் போலீசும் அம்மாநில நீதிமன்றங்களும் சேர்ந்து ஊத்தி மூடிவிட்ட 1,958 கலவர வழக்குகளை மீண்டும் விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், 117 வழக்குகளில் மட்டும்தான் குஜராத் அரசு விசாரணையை நடந்துவருகிறது.  இவை அனைத்திற்கும் மேலாக, குல்பர்க் சொசைட்டி வழக்கு நடந்துவரும் விசாரணை நீதிமன்றத்தின் நீதிபதி, குற்றவாளிகளை மென்மையாக அணுகி வருகிறார் என இந்த வழக்கில் சிறப்பு அரசு வழக்குரைஞராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.கே. ஷா வெளிப்படையாகவே குற்றஞ்சாட்டியுள்ளார்.  இத்தனைக்குப் பிறகும் மோடிக்கு எதிரான வழக்கை விசாரிக்கும் பொறுப்பை அதே விசாரணை நீதிமன்றத்திடம் ஒப்படைப்பதும் ஜாகியா ஜாஃப்ரியின் மனுவைத் தள்ளுபடி செய்வதும் ஏறத்தாழ ஒன்றுதான்.

அலைக்கற்றை வழக்கிலும், கருப்புப் பண வழக்கிலும் சி.பி.ஐ. விசாரணை குறித்து "துருவித் துருவி' விசாரிக்கும் உச்ச நீதிமன்றம், சி.பி.ஐ. முன்னாள் இயக்குநர் ராகவன் தலைமையில் இயங்கிவரும் சிறப்புப் புலனாய்வுக் குழு மோடிக்குச் சார்பாக நடந்து வருகிறது என்பது அம்பலப்பட்டுப் போன பிறகும், ராகவன் மீது மென்மையாகக் கூட கண்டனம் தெரிவிக்கவில்லை. தனது முதல் அறிக்கையில் மோடியை நிரபராதி என்று சொல்லியிருக்கும் சிறப்புப் புலனாய்வுக் குழு, தனது இறுதி அறிக்கையை விருப்பம் போலத் தயாரித்து, அதனை விசாரணை நீதிமன்றத்திடம் சமர்ப்பிக்கலாம் என்ற சுதந்திரத்தை நீதிபதிகள் வழங்கியிருக்கிறார்கள்.  மோடிக்கு எதிரானதாக இருக்கக்கூடும் எனப் பரவலாகக் கருதப்படும் அமிகஸ் கியூரி ராஜு ராமச்சந்திரனின் விசாரணை அறிக்கை, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படியும், சட்டத்தின்படியும் ஒரு காகிதக் கட்டு என்பதற்கு மேல் எந்த மதிப்பையும் விசாரணை நீதிமன்றத்தில் பெறப் போவதில்லை.

இனி என்ன? சிறப்புப் புலனாய்வுக் குழுவின் அறிக்கை மோடியைக் குற்றவாளியாக அறிவிக்காவிட்டால், ஜாகியா ஜாஃப்ரிஅதனை எதிர்த்து விசாரணை நீதிமன்றத்திலேயே வாதிடலாம்.  விசாரணை நீதிமன்றம் இவ்வழக்கிலிருந்து மோடியை விடுவித்துவிட்டால், ஜாகியா ஜாஃப்ரி அதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்திற்கும், பின்னர் உச்ச நீதிமன்றத்திற்கும் போகலாம். இதெல்லாம் இத்தீர்ப்பிலேயே தெளிவுபடுத்தப் பட்டிருக்கிறதாம். ஜக்கியா ஜாஃப்ரி நீதி வேண்டி உச்ச நீதிமன்றத்தை அணுகினார்; நீதிமன்றமோ, மோடி உயிரோடு இருக்கும் வரை வழக்கு முடியாமலிருப்பதற்கான வழியைத் திறந்துவிட்டிருக்கிறது. குஜராத்திலேயே ஆழக்குழி தோண்டிப் புதைக்கப்பட்டிருக்க வேண்டிய ரத்தக்காட்டேரியிடம், தேசிய அரசியலில் கால் வைப்பதற்கான ஆசையையும் கிளறிவிட்டிருக்கிறது.

யூதர்களைக் கொன்ற இட்லரைப் போல, போஸ்னியா முசுலீம்களைக் கொன்ற மிலோசேவிக் போல இனப்படுகொலை குற்றவாளியாக இந்திய மக்கள் முன் நிறுத்தப்பட வேண்டிய மோடி, வளர்ச்சியின் நாயகனாக, எதிர்காலப் பிரதம மந்திரி வேட்பாளராக ஊடகங்களால் மக்கள் முன் நிறுத்தப்படுகிறார்.ஜெயா திருந்திவிட்டாரெனப் புளுகி வரும் பார்ப்பன பத்திரிகைகள் அனைத்தும் மோடியும் திருந்திவிட்டதாகப் பிரச்சாரம் செய்கின்றன.

"கோத்ரா கலவரத்தில் நேர்ந்த தவறுகளுக்கு மக்களிடம் மன்னிப்புக் கேட்கும் விதத்திலா முதல்வர் மோடி உண்ணாவிரதம் மேற்கொண்டிருக்கிறார் என்பதை அவரிடம்தான் கேட்க வேண்டும்' எனத் தலையங்கம் தீட்டுகிறது, தினமணி.  (20.09.2011)

ஒரு ரயில் விபத்து நடந்தாலே சம்பந்தப்பட்ட அமைச்சர் பதவி விலகுவதைத் தார்மீகப் பொறுப்பாகச் சுட்டிக்காட்டும் இப்பத்திரிகைகள், இனப்படுகொலையின் தளபதியாகச் செயல்பட்ட மோடிக்கோ வேறொரு அளவுகோலை முன்வைக்கின்றன.  "குஜராத் மாநிலம் கடந்த பத்து ஆண்டுகளில் பல துறைகளில் சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதையும், வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்பதையும் அந்த மாநிலத்துக்குச் சென்று திரும்பும் அனைத்துத் தரப்பினரும் உறுதிப்படுத்துகிறார்கள்...  ஊழலில்லா நிர்வாகத்தைத் தருகிறார் என்பதாலும்தான் கோத்ரா கலவர நினைவுகளைப் புறந்தள்ளிவிட்டு, அனைத்துத் தரப்பினராலும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பாராட்டப்படுகிறார்' என எழுதி மோடியின் மனித இனத்துக்கு எதிரான குற்றங்களைக் குழிதோண்டிப் புதைத்துவிட முயலுகிறது, தினமணி. (20.09.11)  இந்து மதவெறி அரசியலைப்பேசி ஓட்டுப் பொறுக்க முடியாதென்பதால், "வளர்ச்சி' அரசியலைப் பேசி மோடிக்கு மகுடம் சூட்டப் பார்க்கிறது, பார்ப்பனக் கும்பல்.

"மதச் சார்பின்மையைப் பற்றிப் பேச நரேந்திரமோடிக்கு அருகதை உண்டா?' என வாசகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, "கடந்த காலத் தவறுகளிலிருந்து மோடி பாடம் கற்கக்கூடாதா?  பிராயச்சித்தம் தேடுவதற்கு எல்லா மனிதர்களுக்கும் உரிமை உண்டு.  ஆனால், அவர் திருந்திவிடக் கூடாது என்று சிலர் நினைப்பது ஏன் என்று புரியவில்லை' என மோடிக்காக வரிந்துகட்டிக் கொண்டு எழுதுகிறது, ஜூனியர் விகடன்.  (28.9.11, பக்.15)

பொதுமக்களுக்கு எதிரான எந்தவொரு கலவரமும் அரசின் ஒத்துழைப்பின்றி ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடந்துவிட முடியாது என்பது உலகமே அறிந்த உண்மை. குஜராத்தில் முசுலீம்களுக்கு எதிரான இந்து மதவெறியாட்டமோ ஒரு மாதத்திற்கும் மேலாக நடந்தது. இந்தஒரு சாட்சியமே, 2002 குஜராத் இனப்படுகொலையைத் திட்டமிட்டு நடத்தியவர் மோடி என்பதை நிரூபித்து விடுகிறது.

அந்தக் குற்றத்தை மோடி ஒப்புக்கொண்டதில்லை என்பது மட்டுமல்ல, அதைத் தவறு என்று கனவிலும் கருதவில்லை. மாறாக, கொலைகாரர்களைச் சட்டபூர்வமாகத் தண்டிக்க முயன்றவர்களை வேட்டையாடினார். சாட்சிகளை மிரட்டி குற்றவாளிகள் அனைவருக்கும் விடுதலை வாங்கித் தந்தார். மோடியை எதிர்த்த அவரது அமைச்சர் ஹரேன் பாண்டியா கொல்லப்பட்ட வழக்கில் குற்றஞ் சாட்டப்பட்ட முசுலீம் தீவிரவாதிகள் விடுதலை செய்யப்பட்டுவிட்டதால், அந்தக் கொலையை யார் செய்தது, அந்தக் கொலை எப்படி நடந்தது என்பது சி.பி.ஐ. ஆலும் "கண்டுபிடிக்க' முடியாத மர்மமாக உள்ளது.  கலவரத்தில் மோடியின் பாத்திரத்தை அம்பலப்படுத்திவரும் ஐ.பி.எஸ். அதிகாரி சஞ்சீவ் பட் வேலைநீக்கம் செய்யப்பட்டு சிறை வைக்கப்படுகிறார். நம் கண் முன்னால் நடக்கும் உண்மை இதுதான்.

மோடி திருந்திவிட்டதாக ஒப்புக் கொள்ளவேண்டும். ஒப்புக் கொள்ளாதவன் குற்றவாளி என்று ஜூனியர் விகடனும் தினமணியும் இரட்டை நாயனம் வாசிக்கின்றனர். தமிழகத்தில் இருக்கும்போதே இந்தப் போடு போடும் இந்த உத்தமர்கள், ஒருவேளை குஜராத்தில் இருந்திருந்தால் சஞ்சீவ் பட்டையும் ஜாகியா ஜாப்ரியையும் கத்தியால் குத்திக் கொன்று விட்டு, "மாடு முட்டிச் சாவு' என்று செய்தி போடவும் தயங்க மாட்டார்கள்.

குஜராத் வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறதாம். கலவர நினைவுகளை புறந்தள்ளிவிட்டு அனைவரும் பாராட்டுகிறார்களாம். அது யாருக்கான வளர்ச்சி என்பது ஒருபுறமிருக்கட்டும்.  உங்கள் வீட்டிற்குள் ஒருகாலிகள் கும்பல் நுழைந்து, பெண்களை நிர்வாணப்படுத்தி, வன்புணர்ச்சி செய்து, ஆண்களைக் கொன்றுவிட்டு எல்லாம் முடிந்த பின், "நாங்களே குடும்பத் தலைவராக இருந்து உங்களை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்கிறோம்' என்று கூறினால், பதிலுக்கு நீங்கள் காறித்துப்புவீர்களா, செருப்பால் அடிப்பீர்களா என்று தெரியவில்லை.

ஜூனியர் விகடன் கழுகார்  என்ன சொல்கிறார் என்றால், அவரும் அவரது குடும்பத்தினரும் அப்படி அநாகரிகமாக நடந்து கொள்ள மாட்டார்களாம். அந்தக் காலிகளின் பிராயச்சித்தத்தை அங்கீகரித்து, அவர்களைக் குடும்பத் தலைவர்களாக ஏற்றுக் கதவைத் திறந்துவிடுவார்களாம். தினமணி குடும்பத்தினரோ, பழைய கலவர நினைவுளை மறந்து விட்டு, இனிய கனவுகளோடு புதிய குடும்பத் தலைவரைத் தழுவி வரவேற்பார்களாம். இவ்வளவு பரந்த மனப்பான்மை கொண்டவர்கள் ஆ.ராசா விசயத்தில் மட்டும் ஏன் குறுகிய மனோபாவம் காட்டுகிறார்கள் என்று தெரியவில்லை.

குற்றம் என்று எடுத்துக் கொண்டாலும், கொலை, தீவைப்பு, வன்புணர்ச்சி போன்ற குற்றங்களை ஆ.ராசா தலைமை தாங்கி நடத்தவில்லையே. புறங்கையை நக்கியிருக்கிறார். எவ்வளவு நக்கினார் என்பதை சி.பி.ஐ. இனி மேல்தான் கண்டு பிடிக்க வேண்டும். மோடி விசயம் அப்படியில்லை. எத்தனை பிணங்கள் விழுந்திருக்கின்றன என்று உலகத்துக்கே தெரியும்.

"வளர்ச்சி' என்று எடுத்துக் கொண்டால், மோடியின் குஜராத் அடைந்திருக்கும் வளர்ச்சியைக் காட்டிலும், ராசாவின் காலத்தில் மொபைல் போன்கள் அடைந்த வளர்ச்சி அதிகமில்லையா? மோடி பிரதமராகலாம். ராசாவுக்கு திகாரா? அல்லது ஆ.ராசாவும், நேரு உள்விளையாட்டு அரங்கை மூணு நாட்களுக்கு வாடகைக்கு எடுத்து, ஒரு "சூப்பர் டீலக்ஸ் உண்ணாவிரதம்' நடத்திவிட்டால்,அதனை பிராயச்சித்தமாகக் கருதி விடுவிக்கப்படுவாரா?

.  செல்வம்