Sat04202024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயகம் லிபியா- அமெரிக்காவின் மறுகாலனியாகிறது!

லிபியா- அமெரிக்காவின் மறுகாலனியாகிறது!

  • PDF

கடந்த ஆறு மாதங்களாக லிபியாவில் அதிபர் கடாஃபிக்கு எதிராக நடத்தி வந்த போரில், ஏகாதிபத்திய விசுவாச கலகப்படை தலைநகர் திரிபோலியைக் கைப்பற்றியதும், அப்படையினரது இடைக்கட்ட அரசின் வெற்றியையும் கடாஃபி ஆட்சியின் வீழ்ச்சியையும் அமெரிக்காவும் நேடோ கூட்டணி நாடுகளும் அதிகாரபூர்வமாக அங்கீகரித்துள்ளன. ஜனநாயகம், மனித உரிமை, போரில் சிக்கிய சிவிலியன்களைப் பாதுகாப்பது என்றெல்லாம் கூப்பாடு போடும் அமெரிக்காவின் கபடத்தனத்தை மீண்டுமொருமுறை நிரூபித்துக் காட்டிவிட்டது, லிபியா மீதான ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புப் போர்.

 

 

அமெரிக்க வல்லரசின் தலைமையிலான ஏகாதிபத்திய நேடோ கூட்டணி நாடுகள் இராக், ஆப்கான் போலின்றி, லிபியாவிலேயே  விசுவாசக் கூலிப்படையை உருவாக்கிக் கொண்டு ஆக்கிரமிப்பு போரைத் தொடுத்தன. ஆளும் வர்க்க எதிர்த்தரப்பைப் பயன்படுத்திக் கொண்டு, அதிபர் கடாஃபிக்கு எதிரான அதிகாரப் போட்டியை மாபெரும் சர்வாதிகார எதிர்ப்பு  ஜனநாயகப் போராட்டமாகச் சித்தரித்து, அரபு நாடுகளின் துணையோடும் தமது கைக்கூலி ஐ.நா. மன்றத்தின் தீர்மானத்தைக் கொண்டும் லிபியாவில் ஒரு ஆட்சிக் கவிழ்ப்பை நிகழ்த்தி, அதன் மூலம் எண்ணெய் வளத்தைக் கொள்ளையிடக் கிளம்பியுள்ளன.

அதிபர் கடாஃபியின் ஆட்சியில் லிபியாவின் எண்ணெய் வர்த்தகத்தில் ஏகாதிபத்தியப் பன்னாட்டுக் கம்பெனிகள் ஈடுபட்டிருந்தாலும், ஏகாதிபத்திய நிதிமூலதன ஆதிக்கத்தின் முழுக்கட்டுப்பாட்டின் கீழ் லிபியா வராததும், எண்ணெய் வளங்கள் முழுமையாக ஏகாதிபத்தியக் கொள்ளைக்குத் திறந்து விடப்படாததும்தான் அமெரிக்க மேலாதிக்கத்திற்கான இந்த ஆக்கிரமிப்புப் போரின் அடிப்படை.  லிபியா மட்டுமின்றி, அங்கோலா, நைஜீரியாவில் எண்ணெய் மற்றும் கட்டுமானப் பணிகளில் பெருமளவு முதலீடு செய்துள்ள சீனா, இப்பிராந்தியத்தில் செல்வாக்கு செலுத்தி வளர்வது அமெரிக்க மேலாதிக்கத்துக்கு இடையூறாகும் என்பதால், வட ஆப்பிரிக்காவின் எண்ணெய் வளமிக்கப் பகுதிகளிலிருந்து சீனாவை வெளியேற்றுவது இப்போரின் முக்கிய நோக்கமாகியுள்ளது.

மேலும்,சிரியாவில்  மிகப்பெரிய விமானந்தாங்கி கப்பற்படைத் தளத்தை நிறுவியுள்ள ரஷ்ய வல்லரசு, சீனாவை ஆதரிப்பதால் மத்தியத்தரைக்கடல் பகுதியைத் தனது மேலாதிக்க இரும்புப் பிடிக்குள் கொண்டுவர, ரஷ்யா மற்றும் சீனாவின் செல்வாக்கை வீழ்த்துவது அமெரிக்காவுக்கு அவசியமாகியுள்ளது.  எனவே லிபியாவைத் தொடர்ந்து, தனக்கு முழு விசுவாசமான அடிவருடி ஆட்சியைத் திணிக்க அடுத்ததாக சிரியா மீது அமெரிக்கா குறிவைத்துள்ளது.

அமெரிக்காவுக்கு எதிராக சிறு முணுமுணுப்பைக் காட்டினாலும் ஏழைநாடுகளின் ஆட்சிகளைக் கவிழ்த்து விசுவாச பொம்மையாட்சிகளை நிறுவுவது, மூலவளங்களைச் சூறையாடி மேலாதிக்கத்தை நிறுவுவது என்ற தனது மறுகாலனிய போர்த்தந்திரத் திட்டத்தை அமெரிக்கா வல்லரசு இந்த ஆக்கிரமிப்புப் போரின் மூலம்  உறுதிப்படுத்திக் கொண்டுள்ளது.

அமெரிக்காவுக்கு அனுசரணையாக நடந்து கொள்வதன் மூலம் தம்மீது அமெரிக்கா குறிவைக்காது என்று ஏழை நாடுகளின் ஆட்சியாளர்கள் இன்னமும் நம்பிக் கொண்டிருப்பது முட்டாள்தனம்; லிபியா மீதான ஆக்கிரமிப்பு அம்மணமாக நடந்த போதிலும் பெயரளவிலான கண்டனத்துடன் பக்கவாட்டில் விலகிக் கொள்ளும் சீனாவும் ரஷ்யாவும் இப்போது அமெரிக்காவை எதிர்த்து சவால் விடும் நிலையில் இல்லை; உழைக்கும் மக்கள் ஓரணியில் திரண்டு போராடுவதன் மூலமே  ஏகாதிபத்தியங்களையும், குறிப்பாக உலக மக்களின் கொடிய எதிரியான அமெரிக்க மேலாதிக்க வல்லரசையும் வீழ்த்த முடியும்;  இந்த உண்மைகளை உலகுக்கு உணர்த்திவிட்டு மறுகாலனியப் புதைகுழியில் வீழ்ந்து கொண்டிருக்கிறது, லிபியா.