Fri04192024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயகம் குஜராத் இனப்படுகொலையில் மோடியின் பங்கு: புஸ்வானமானது புலன் விசாரணை

குஜராத் இனப்படுகொலையில் மோடியின் பங்கு: புஸ்வானமானது புலன் விசாரணை

  • PDF

குஜராத்தில் 2002ஆம் ஆண்டு நடந்த முசுலீம் படுகொலையின்பொழுது கொல்லப்பட்ட காங்கிரசு கட்சியைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இஹ்ஸான் ஜாஃப்ரியின் மனைவி ஜாகியா ஜாஃப்ரியும், அவ்வினப்படுகொலையின்பொழுது தமது உறவினர்களைப் பறிகொடுத்த வேறு சில முசுலீம்களும் இணைந்து, இவ்வினப்படுகொலை தொடர்பாக குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடியையும் அவரது அரசின் சில உயர் அதிகாரிகளையும் விசாரிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இவ்வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உச்ச நீதிமன்றம், இவ்வினப்படுகொலையில் மோடி மற்றும் சில உயர் போலீசு அதிகாரிகள் ஆகியோரின் பங்கு குறித்து விசாரணை நடத்துவதற்கு முன்னாள் சி.பி.ஐ. இயக்குநர் ராகவன் தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழுவொன்றை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அமைத்தது. மோடியின் மீது சுமத்தப்பட்ட 32 குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்திய சிறப்புப் புலனாய்வுக் குழு தனது அறிக்கையை கடந்த ஆண்டு மே மாதம் உச்ச நீதிமன்றத்திடம் அளித்தது. உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் இவ்விசாரணை நடந்ததால், மோடி சட்டப்படியே பயங்கரவாதக் குற்றவாளியாக அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், சிறப்புப் புலனாய்வுக் குழுவின் அறிக்கையோ "வரும், ஆனா வராது' என்ற வடிவேலுவின் நகைச்சுவையைப் போல அமைந்து விட்டது.

 

கோத்ரா ரயில் தீ விபத்தில் இறந்து போன "இந்துக்களின்' சடலங்களை, விசுவ இந்து பரிசத்திடம் ஒப்படைத்ததோடு, இந்து மதவெறியைத் தூண்டிவிடும் நோக்கத்திற்காகவே அச்சடலங்களை கோத்ராவிலிருந்து அகமதாபாத் வரை ஊர்வலமாக எடுத்துவரவும் அனுமதித்தது, குஜராத் மாநில அரசு. அச்சமயத்தில் கோத்ரா மாவட்ட ஆட்சியராக இருந்த ஜெயந்தி ரவி, "தனது எதிர்ப்பையும் மீறி, மோடி இதற்குச் சம்மதம் அளித்ததாக', இவ்வினப் படுகொலை தொடர்பாக விசாரணை நடத்திய மக்கள் தீர்ப்பாயத்திடம் சாட்சியம் அளித்தார். பின்னர் அவரே, "இம்முடிவு நல்வாயா என்ற கீழ்நிலை அதிகாரி எடுத்த முடிவாக'ப் பல்டியடித்து பிறழ் சாட்சியம் அளித்தார். இதற்குப் பரிசாக, ஜெயந்தி ரவி குஜராத் அரசின் உயர் கல்வித்துறை கமிசனராகப் பின்னர் நியமிக்கப்பட்டார்.

 

இந்தப் பின்னணி பற்றியெல்லாம் சிறப்புப் புலனாய்வுக் குழு அறிந்திருந்தபோதும், அது பற்றியெல்லாம் புலனாய்வு செய்யாமல், "54 இந்துக்களின் சடலங்களை கோத்ராவிலிருந்து அகமதாபாத்திற்கு எடுத்துச் செல்லும் முடிவைத் தானும் தனது அமைச்சர்கள் சிலரும் மாவட்ட ஆட்சியர் ஜெயந்தி ரவியும் சேர்ந்து எடுத்ததாக' மோடி அளித்த பதிலில் முழு திருப்தியடைந்துவிட்டதோடு, தனது அறிக்கையில், "தீயில் கருகி எரிந்து போன சடலங்களை விசுவ இந்துபரிசத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்ற முடிவை நல்வாயா என்ற கீழ்நிலை அதிகாரிதான் எடுத்ததாக'க் குறிப்பிட்டுள்ளது. மேலும், இச்சடலங்களை கோத்ராவிலிருந்து அகமதாபாத் வரை ஊர்வலமாக எடுத்து வரவில்லை என மோடி அளித்த பதிலையும் எவ்விதமறுப்புமின்றி ஏற்றுக் கொண்டுள்ளது.

 

கோத்ரா விபத்து நடந்த நாளன்று இரவில் உயர் அரசு அதிகாரிகள் மற்றும் போலீசு அதிகாரிகளை அழைத்துக் கூட்டம் நடத்திய மோடி, "இந்துக்கள் சுதந்திரமாக முசுலீம்களுக்கு எதிராகக் கோபத்தை வெளிப்படுத்த விட வேண்டும்' என அக்கூட்டத்தில் கூறியதாக, மோடி மீது குற்றம் சுமத்தியிருக்கிறார், ஜாகியா ஜாஃப்ரி. இக்குற்றச்சாட்டை ஜாகியா ஜாஃப்ரி நரேந்திர மோடியின் பயங்கரவாதக் குற்றங்களை விசாரிக்கக் கோரி வழக்குத் தொடுத்தவர்களுள் ஒருவரான ஜாகியா ஜாஃப்ரி மட்டுமல்ல, பாதிக்கப்பட்ட முசுலீம்களுக்காகப் போராடி வரும் பல்வேறு அமைப்புகளும் நீண்டகாலமாகவே கூறி வருகின்றன. குறிப்பாக, குஜராத் அரசில் வருவாய்த் துறை துணை அமைச்சராக இருந்தவரும், 2003  ஆம் ஆண்டில் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டவருமான ஹரேன் பாண்டியா, மக்கள் தீர்ப்பாயத்திடம் அளித்த சாட்சியத்தில், "இப்படியொரு அதிகாரிகள் கூட்டம் நடந்ததையும், அதில் மோடி இனப்படுகொலைக்கு ஆதரவாகப் பேசியதையும்' உறுதிப்படுத்தியுள்ளார்.

 

இக்கூட்டம் எந்த நோக்கத்திற்காக நடத்தப்பட்டது என்பதை, இக்கூட்டத்தின் பின் நடந்த சம்

பங்களைக் கொண்டு உறுதி செய்வதற்கு மாறாக, இக்கூட்டம் பற்றி மோடியும், அக்கூட்டத்தில் கலந்து கொண்ட அதிகாரிகளும் அளித்த சாட்சியங்களின் அடிப்படையில், "கூட்டம் நடந்தது உண்மை; ஆனால், அக்கூட்டத்தில் மோடி இந்து மதவெறி பயங்கரவாதத்துக்கு ஆதரவாகப் பேசியதாகக் கூறப்படுவதை நிரூபிப்பதற்குப் போதிய ஆதாரமில்லை' எனக் கூறி மோடி மீதான

குற்றச்சாட்டை தள்ளுபடி செய்துவிட்டது, சிறப்புப்புலனாய்வுக் குழு.

 

இக்கூட்டம் பற்றி சாட்சியம் அளித்த அதிகாரிகளுள் பலரும் பொய் சாட்சியம் அளித்ததாகச் சிறப்புப்புலனாய்வுக் குழுவே தனது அறிக்கையில் ஒப்புக்கொண்டுள்ளது. மோடியின் மீதான குற்றச்சாட்டைதள்ளுபடி செய்வதற்கு பொய் சாட்சியத்தை ஏற்றுக்கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழு, ஹரேன் பாண்டியாவின் சாட்சியத்தை, அவர் இறந்துவிட்டதைக் காரணமாகக் காட்டியும், அவரது சாட்சியம் மக்கள் தீர்ப்பாய ஆவணங்களில் முறையாகப் பதிவு செய்யப்படாததையும் காரணமாகக் காட்டியும் ஏற்றுக் கொள்ளமறுத்துவிட்டது. சிறப்புப் புலனாய்வுக் குழுவின் உள்நோக்கம் என்னவென்பதை இம்முரண்பாடு வெட்டவெளிச்சமாக்கிவிட்டது.

 

இந்து மதவெறிக் குண்டர்கள் அகமதாபாத் நகரையே தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு, முசுலீம் மக்கள் வாழ்ந்து வந்த நரோடா பாட்டியா, நரோடா காவ், குல்பர்கா சொசைட்டி பகுதிகளைத் திறந்தவெளி சுடுகாடாக ஆக்கிக் கொண்டிருந்த சமயத்தில், நகர வீட்டு வசதித் துறை அமைச்சரான ஐ.கே. ஜடேஜா, சுகாதாரத் துறை அமைச்சரான அசோக் பட் ஆகிய இருவரின் நேரடிக் கண்காணிப்பின் கீழ்தான் அந்நகரின் போலீசு கட்டுப்பாட்டு அறை இயங்கியது. போலீசு துறையோடு தொடர்பில்லாத இவ்விரு அமைச்சர்களும் கலவரம் நடந்து கொண்டிருந்த சமயத்தில், உள்துறை அமைச்சரான மோடியின் ஒப்புதலின்றி போலீசு கட்டுப்பாடு அறையில் இருந்திருக்க முடியாது. கலவரம் நடந்த சமயத்தில் போலீசு சட்டப்படி இயங்கவில்லை; ஆர்.எஸ்.எஸ்.பா.ஜ.க. கும்பலின் ஆணைப்படிதான் செயல்பட்டது என்பதற்கான ஆதாரம் இது என மோடியின் மீது உச்ச நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டது.

 

இக்குற்றச்சாட்டு தொடர்பாக நடந்த விசாரணையில், ஐ.கே. ஜடேஜா, "மோடிக்கு நெருக்கமான

வரும், போலீசு துறையின் துணை அமைச்சருமான கோர்தன் ஜடாபியா கேட்டுக் கொண்டதன் அடிப்படையில்தான் போலீசு கட்டுப்பாடு அறையில்தானும் அசோக் பட்டும் இருந்ததாக'ச் சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் சாட்சியம் அளித்துள்ளார். இதோடு, வேறு பல சாட்சியங்களின் அடிப்படையில் அவ்விரு அமைச்சர்களும் கலவரம் நடந்த சமயத்தில் போலீசு கட்டுப்பாடு அறையில் இருந்ததைச் சிறப்புப்புலனாய்வுக் குழு உறுதி செய்தாலும், அவர்கள் இருவரும் கலவரத்தின்பொழுது போலீசின் நடவடிக்கையில் தலையீடு செய்ததை உறுதிப்படுத்துவதற்கான ஆதாரம் எதுவுமில்லை எனத் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. சிறப்புப் புலனாய்வுக் குழுவின் முடிவின்படி பார்த்தால், அவ்விரு அமைச்சர்களும் பொழுதைப் போக்குவதற்காகத்தான் போலீசு கட்டுப்பாடு அறையில் உட்கார்ந்திருந்ததாக எடுத்துக் கொள்ளவேண்டும்.

 

கலவரத்தின்பொழுது முசுலீம்களுக்குப் பாதுகாப்பு கொடுக்க முயன்ற, இந்து மதவெறி பயங்கரவாதிகளைக் கைது செய்ய முயன்ற சில போலீசு அதிகாரிகள் உடனடியாக உப்புசப்பில்லாத பதவிகளுக்கு மாற்றம் செய்யப்பட்டனர்; முசுலீம்களுக்கு எதிராகவும் இந்து மதவெறிக் குண்டர்களுக்கு ஆதரவாகவும் நடந்து கொண்ட போலீசு அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு, ஓய்வுக்குப் பின்னும் பதவி நீட்டிப்பு உள்ளிட்ட பல்வேறு சன்மானங்கள் குஜராத் அரசால் வாரி வழங்கப்பட்டன. இதற்குப் பின்னுள்ள உள்நோக்கத்தைப் புலனாய்வு செய்ய மறுத்துவிட்ட சிறப்புப் புலனாய்வுக் குழு, அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு அளிப்பதும், அவர்களை இடமாறுதல் செய்வதும் அரசின் தனிப்பட்ட உரிமை எனக் கூறி இக்குற்றச்சாட்டையும் தள்ளுபடி செய்துவிட்டது.

 

அகமதாபாத் நகரில் நரோடா பாட்டியா, நரோடாகாவ், குல்பர்க் சொசைட்டி ஆகிய பகுதிகளில் நடந்த முசுலீம் படுகொலைகளைத் தலைமை தாங்கி நடத்திய பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். கும்பலைச் சேர்ந்தபாபு பஜ்ரங்கி, ஜெய்தீப் படேல் ஆகியோருக்கும் மாநில அமைச்சர்களான கோர்தான் ஜடாஃபியா, மாயாபென் கோத்நானி மற்றும் அகமதாபாத் நகர போலீசு உயர் அதிகாரிகளான எம்.கே.டாண்டன், பி.பி. கோந்தியா ஆகியோருக்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடல்கள், இக்கொலை வழக்கின் முக்கிய சாட்சியமாக குஜராத் போலீசிடம் அளிக்கப்பட்டன. ஆனால், குஜராத் போலீசோ இச்சாட்சியத்தைத் திட்டமிட்டே புறக்கணித்ததோடு, "தொலைத்தும் விட்டது'. இது தொடர்பாக விசாரணை நடத்திய சிறப்புப் புலனாய்வுக்குழு, இத்தொலைபேசி உரையாடல்களைச் சாட்சியமாக எடுத்துக் கொள்ளாமல் புறக்கணித்ததற்கும் உள்துறை அமைச்சகத்துக்கும் எவ்விதத் தொடர்பும் கிடையாது. அச்சாட்சியத்தைப் புறக்கணித்தது கீழ்நிலை அதிகாரிகள் செய்த தவறு எனக் கூறி, மோடிக்கு எதிரான இக்குற்றச்சாட்டையும் புறக்கணித்துவிட்டது.

 

குஜராத் முசுலீம் படுகொலை தொடர்பாகப் பதிவான வழக்குகள் அனைத்திலும் ஆர்.எஸ்.எஸ்., விசுவ இந்து பரிசத், பா.ஜ.க., ஆகிய இந்து மதவெறி அமைப்புகளோடு நெருங்கிய தொடர்பு வைத்திருந்த வழக்குரைஞர்கள்தான் அரசு வழக்குரைஞர்களாக நியமிக்கப்பட்டனர். இவர்கள் சாட்சியங்களை மிரட்டியதோடு, குற்றவாளிகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டனர். இக்குற்றச்சாட்டை விசாரித்த சிறப்புப் புலனாய்வுக் குழு, ஆர்.எஸ்.எஸ். பேர் வழிகளே அரசு வழக்குரைஞர்களாக நியமிக்கப்பட்ட போதும், அவர்கள் தொழில் தர்மத்தை மீறித் தவறாக நடந்து கொண்டார்கள் எனக் கூற முடியாது எனத் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

 

ஜாகியா ஜாஃப்ரி உச்ச நீதிமன்றத்தில் மோடி மீதுவைத்த 32 குற்றச்சாட்டுகளுள் பலவற்றை மேலோட்டமான புலனாய்வின் அடிப்படையில் தள்ளுபடி செய்துள்ள சிறப்புப் புலனாய்வுக் குழு, மோடி மீதான சில குற்றச்சாட்டுக்களுக்குப் போதிய ஆதாரம் இருந்தாலும், அவை அவர் மீது சட்டப்படி வழக்குத் தொடுப்பதற்கு ஏற்றவையல்ல எனக் குறிப்பிட்டுத் தனது அறிக்கையை நிறைவு செய்துள்ளது.

 

உச்ச நீதிமன்றம், தனது மதச்சார்பின்மை முகமூடியைக் காப்பாற்றிக் கொள்ளும்நோக்கத்தோடுதான் இப்புலனாய்வுக் குழுவை அமைத்ததேயொழிய, மோடி உள்ளிட்ட இந்து மதவெறி பயங்கரவாதிகளைத் தண்டித்துவிட வேண்டும் என்ற நோக்கமெல்லாம் அதற்கு இருப்பதாகக் கூற முடியாது. ஏனென்றால், எந்த அதிகாரமும் அற்ற ஒரு விசாரணை கமிசனைப் போலத்தான் இப்புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. குறிப்பாக, இதன் தலைவராக நியமிக்கப்பட்ட ராகவன், இந்து பயங்கரவாதத்தைவிட முசுலீம் பயங்கரவாதம் தான் அபாயகரமானது என்ற ஆர்.எஸ்.எஸ். சிந்தனையைக் கொண்ட பேர்வழி. இப்படிபட்ட குழுவிடமிருந்து, ஒரு நிடுநிலையான, நியாயமான அறிக்கையை எதிர்பார்ப்பது மூடநம்பிக்கைக்கு ஒப்பானது.

 

சிறப்புப் புலனாய்வுக் குழு தனது அறிக்கையை கடந்த ஆண்டு மே மாதமே உச்ச நீதி மன்றத்திடம் அளித்துவிட்ட போதும், இந்த அறிக்கை இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. பாதிக்கப்பட்ட முசுலீம் மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த அறிக்கையை, தெகல்கா வார இதழ்தான் கடத்திவந்து வெளியிட்டு, அதன் மோசடித்தனத்தையும் அம்பலப்படுத்தியிருக்கிறது. இந்த அறிக்கை தொடர்பான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் மார்ச் மாதம் வரும் பொழுது, உச்ச நீதிமன்றம் இவ்வறிக்கையை ஏற்றுக்கொண்டால் மோடியின் மீது சுமத்தப்பட்டுள்ள பயங்கரவாதக் குற்றங்கள் சட்டபூர்வமாகவே துடைக்கப்பட்டுவிடும். மாறாக, உச்ச நீதிமன்றம் இவ்வறிக்கையை நிராகரித்துவிட்டால், மோடி இன்னொரு விசாரணை நாடகத்தைச் சந்திக்க நேரிடலாம். இதற்கு அப்பால், இவ்வழக்கில் வேறு எந்தவிதமான அதிசயமும் நடந்துவிடாது.

• செல்வம்

Last Updated on Monday, 12 December 2011 13:25