Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயகம் காஷ்மீர்: காங்கிரசு – பா.ஜ.க.வின் கள்ளக்கூட்டு!

காஷ்மீர்: காங்கிரசு – பா.ஜ.க.வின் கள்ளக்கூட்டு!

  • PDF

அரசியல் கைதிகளின் விடுதலைக்கான கமிட்டி என்ற அமைப்பு காஷ்மீர் பிரச்சினை குறித்து, “விடுதலை: ஒரே வழி” என்ற கருத்தரங்கை கடந்த அக்டோபர் 21 அன்று டெல்லியில் நடத்தியது.  இக்கருத்தரங்கில் காஷ்மீரைச் சேர்ந்த ஹுரியத் மாநாட்டுக் கட்சித் தலைவர்களுள் ஒருவரான சையத் அலி ஷா கீலானி, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நக்சல்பாரி புரட்சியாளரான தோழர் வரவர ராவ், எழுத்தாளர் அருந்ததி ராய் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

 

இக்கருத்தரங்கைச் சீர்குலைக்கும் திட்டத்தோடு அரங்கத்தில் நுழைந்திருந்த இந்துத்துவா பாசிசக் கும்பல் கருத்தரங்கம் நடைபெற்றுக் கொண்டிருந்தபொழுதே ரகளையில் ஈடுபட்டதோடு, சையத் ஷா கீலானி, அருந்ததி ராய் ஆகியோரைத் தாக்கவும் முனைந்தது.  இக்கருத்தரங்கையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காஷ்மீரின் வரலாற்றை விளக்கும் புகைப்படக் கண்காட்சியையும் அடித்து நொறுக்கியது, அக்கும்பல்.

தில்லி போலீசின் அனுமதி பெற்று, சட்டபூர்வமான முறையில்-அமைதியான வழியில் நடைபெற்றுக் கொண்டிருந்த இக்கருத்தரங்கின் மீது வன்முறைத் தாக்குதலை நடத்திய இக்கும்பல், அக்கருத்தரங்கில் உரையாற்றிய அருந்ததி ராயையும் சையத் ஷா கீலானியையும் தேசத் துரோகக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்ய வேண்டும் என்றும் சாமியாடி வருகிறது.  சில ‘தேசிய’ப் பத்திரிகைகள் இந்துத்துவா கும்பலின் இந்த பாசிச கோரிக்கைக்கு ஆதரவாக செய்திகளையும், தலையங்கக் கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளன.  சில தனியார் ஆங்கிலத் தொலைக்காட்சி ஊடகங்கள் அருந்ததி ராயைத் தேசத் துரோகக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்ய வேண்டிய அவசியம் குறித்து புதுப் பணக்கார கும்பலைக் கூட்டிவைத்து “டாக் ஷோ’’க்களை நடத்தித் தூபம் போட்டன.

அருந்ததி ராய் அக்கருத்தரங்கில், காஷ்மீர் மக்கள் நடத்தும் போராட்டத்தை, இந்தியாவின் மையப் பகுதியில் நக்சல்பாரிகள் நடத்தும் போராட்டத்தோடும், நர்மதை அணையை எதிர்த்துப் பழங்குடியின மக்கள் நடத்தும் போராட்டத்தோடும் ஒப்பிட்டுப் பேசியதோடு,  “போராடும் பழங்குடியின மக்களின் கரங்களில் உள்ள வில்லும் அம்பும், காஷ்மீர் இளைஞர்களின் கரங்களில் உள்ள கற்களும் அவசியமானவைதான்.  ஆனாலும், அதற்கு மேலும் நமக்குத் தேவைகள் உள்ளன.   நாகலாந்து, மணிப்பூர், சட்டிஸ்கர், ஒரிசா, காஷ்மீர் என இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நீதிக்காகப் போராடி வரும் மக்கள் ஐக்கியப்பட வேண்டிய அவசியத்தை’’த் தனது உரையில் சுட்டிக் காட்டினார்.

காஷ்மீர் பிரச்சினை குறித்து அம்மாநில மக்களின் கருத்தை அறிவதற்காக மைய அரசு நியமித்துள்ள மூவர் குழுவைப் புறக்கணிக்கக் கோரி அக்கருத்தரங்கில் அறைகூவல் விடுத்த சையத் ஷா கீலானி, “சுயநிர்ணய உரிமை, காஷ்மீர் மக்கள் அனைவரின், காஷ்மீரில் வாழும் சீக்கியர்கள், இந்துக்கள், புத்த மதத்தினர் உள்ளிட்ட அனைவரின் அடிப்படை உரிமையாகும்;  காஷ்மீர் மக்களின் போராட்டத்தை இந்தியாவின் பிற பகுதிகளில் வாழும் மக்கள் ஆதரிக்கத் தொடங்கியிருப்பது நல்ல அறிகுறியாகும்” என உரையாற்றினார்.

டெல்லியில் நடந்த காஷ்மீர் குறித்த கருத்தரங்கில் புகுந்து வன்முறையில் ஈடுபடும் இந்துத்வ குண்டர்கள்

நீர், நிலம், கனிம வளம் என நாட்டின் பொதுச் சொத்துகள் அனைத்தையும் ஏகாதிபத்திய முதலாளிகளுக்கு பட்டா போட்டுக் கொடுப்பது தேசத் துரோகமா? இல்லை, அந்த அநீதியைத் தடுப்பதற்குப் போராடி வரும் மக்களிடம் ஐக்கியப்பட்டுப் போராடுங்கள் எனக் கோருவது தேசத் துரோகமா?  சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்ற பெயரில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு இந்தியாவைப் பகுதிபகுதியாக ஆட்சியாளர்கள் பட்டா போட்டுக் கொடுப்பதைக் காட்டிலும், காஷ்மீர் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை அளிக்க வேண்டும் எனக் கோருவது எந்த விதத்தில் தேசத் துரோகமாகிவிடும்?

சண்டிகரில் காஷ்மீர் தொடர்பான கூட்டத்தை அச்சுறுத்திய இந்துத்வ கும்பல்

இந்துத்துவா கும்பலோ அருந்ததி ராயைத் தேசத் துரோகக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்வதை நியாயப்படுத்துவதற்காக, “காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்ததில்லை ” என அருந்ததி ராய் இந்தியாவின் தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிராகவும், பிரிவினைவாதத்தை ஆதரித்துப் பேசியதாகவும் குறிப்பிடுகிறது.  சில முதலாளித்துவ அறிஞர்கள், “அருந்ததி ராய் தேச ஒருமைப்பாட்டுக்கு எதிராகப் பேசியிருந்தாலும், அவர் வன்முறையில் ஈடுபடவில்லை; எனவே, அவரைக் கைது செய்ய வேண்டியதில்லை” என இப்பிரச்சினை குறித்துக் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.  இந்த இரண்டு கருத்துகளும் ஒன்றுக்கொன்று எதிரானது போலத் தோற்றமளித்தாலும், சாரத்தில் இந்துத்துவா கும்பலும், இந்த முதலாளித்துவ அறிஞர்களும் காஷ்மீரின் வரலாற்றை மூடிமறைக்கிறார்கள் என்பதே உண்மை.

‘‘காஷ்மீர் 1947-இல் இந்தியாவுடன் வலுக்கட்டாயமாக இணைத்துக் கொள்ளப்பட்டதே தவிர, அம்மாநிலம்  இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்தது கிடையாது” என்பது அருந்ததி ராயின் சொந்தக் கற்பிதம் கிடையாது.  அது ஒரு வரலாற்று உண்மை.  மேலும், காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்திருப்பது குறித்து அம்மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் அப்பொழுது இந்திய அரசு ஒத்துக் கொண்டது.  இந்த வரலாற்று உண்மைகளை இந்தியாவின் பிற பகுதிகளில் வாழும் மக்களிடம் எடுத்துக் கூறுவதல்ல, அவ்வரலாற்று உண்மையை மூடிமறைத்துவிட  முயலுவதுதான் துரோகமும் நயவஞ்சகமும் ஆகும்.

டைம்ஸ் நௌ, நியூஸ் 24, பயோனீர் உள்ளிட்ட சில ஊடகங்கள் அருந்ததி ராயைத் தண்டிக்கக் கோரும் விவகாரத்தில் இந்துத்துவா கும்பலைவிடக் கேவலமாக நடந்து கொண்டன.  அருந்ததி ராய் அக்கருத்தரங்கில் இந்திய இராணுவத்தை வன்புணர்ச்சி வெறிகொண்ட கும்பலாகச் சித்தரித்ததாக இந்த ஊடகங்கள் செய்திகளைத் தயாரித்து வெளியிட்டன.  அருந்ததி ராய் இந்த அண்டப்புளுகை அம்பலப்படுத்திய பின்னும், இந்திய தேசியவெறி பிடித்த இந்த ஊடகங்கள் ஒரு புளுகுணிச் செய்தியை வெளியிட்டதற்காக வெட்கப்படவுமில்லை; மறுப்பு வெளியிடவும் இல்லை.

அக்கருத்தரங்கில் காஷ்மீருக்குச் சென்று மடிந்து போகும் ஏழை இந்தியச் சிப்பாய்களின் அவல நிலையைச் சுட்டிக் காட்டிப் பேசிய அருந்ததி ராய், அதற்கு மாறாக, இந்திய இராணுவத்தை வன்புணர்ச்சி வெறிகொண்ட கும்பலாகச் சித்தரித்துப் பேசியிருந்தாலும்கூட  அதில் தவறொன்றும் காண முடியாது.  துப்பாக்கிச் சூட்டில் இருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள கற்களை வீசும் காஷ்மீர் இளைஞர்களைப் பிடித்துக் கொண்டுபோ அதற்குத் தண்டனையாக அவர்களின் விரல் நகங்களைப் பிடுங்கி எறியும் இந்திய இராணுவம், காஷ்மீரத்துப் பெண்களிடம் மட்டும் கண்ணியத்துடன் நடந்து கொண்டிருக்குமா?

அருந்ததி ராய், கீலானிக்கு எதிராக இந்துத்துவா கும்பல் சாமியாடியவுடனேயே காங்கிரசு கூட்டணி அரசு அவர்கள் இருவர் மீதும் தேசத் துரோகக் குற்றச்சாட்டின் கீழ் வழக்குத் தொடரும் ஏற்பாடுகளில் இறங்கியது.  பின்னர், அம்முயற்சியைக் கைவிட்டுவிட்டதாக மைய அரசு கூறினாலும், எந்த நேரத்திலும் அருந்ததி ராய் மீது வழக்குத் தொடுக்கும் நிலையில்தான் இப்பிரச்சினையை தில்லி போலீசிடம் விட்டு வைத்துள்ளது.  உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், “இப்பிரச்சினை பற்றி முடிவு செய்யும் சுதந்திரம் டெல்லி போலீசுக்கு உண்டு” எனக் கூறியிருப்பதில் இருந்தே காங்கிரசின் கபடத்தனத்தைப் புரிந்து கொள்ளமுடியும்.

காங்கிரசின் இந்த ஜனநாயக வேடத்தைக்கூட இந்துத்துவா கும்பலால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.  அருந்ததி ராய் மீது தேசத் துரோகக் குற்றச்சாட்டின் கீழ் வழக்குத் தொடர உத்தரவிடக் கோரி அக்கும்பல் தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, அதில் வெற்றியும் பெற்றுவிட்டது.

ஏதோ சட்டத்திற்குக் கட்டுப்பட்டு நடக்கும் கண்ணியவான் போல வழக்குத் தொடுத்துள்ள இந்துத்துவா கும்பல், இன்னொருபுறம் தனது மகளிர் அணியை இறக்கிவிட்டு அருந்ததி ராய் வீட்டின் மீது தாக்குதல் தொடுத்து, அவரை மிரட்டிப் பணிய வைக்க முயன்றது.  இத்தாக்குதல் ஏதோ யாருக்கும் தெரியாமல் சதித் திட்டம் தீட்டப்பட்டு, அதன்பின் நடத்தப்பட்ட திடீர்த் தாக்குதல் அல்ல.  “ஓவியர் ஹுசைனை வேட்டையாடியதைப் போலவே அருந்ததி ராயையும் வேட்டையாடுவோம்” என பஜ்ரங் தள் கும்பல் பத்திரிகைகளுக்கு செய்தியளித்துவிட்டு நடத்திய தாக்குதல் இது.

குறிப்பாக, என்.டி.டிவி., டைம்ஸ் நௌ, நியூஸ் 24 ஆகிய மூன்று தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தைச் சேர்ந்த செய்தியாளர்களும், ஒளிப்பதிவாளர்களும் தாக்குதல் நடைபெறுவதற்கு முன்பாகவே அருந்ததி ராயின் வீட்டின் முன் குவிந்துவிட்டனர்.  இதனைத் தாக்குதல் செய்தியை முதல் ஆளாக ஒளிபரப்பிவிட வேண்டும் என்ற ஆர்வக் கோளாறாகப் பார்ப்பதா? இல்லை,  இந்துத்துவா கும்பலுக்கும் சில தேசிய செய்தி ஊடகங்களுக்கும் இருக்கும் நெருக்கத்தைக் காட்டும் சான்றாகப் பார்ப்பதா?  மைய அரசு, முன்னரே அறிவித்துவிட்டு நடந்த இத்தாக்குதலைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்தது. இதன் மூலம், இவ்விவகாரத்தில் காங்கிரசும், பா.ஜ.க.வும் ஜாடிக்கேத்த மூடியாய்ச் செயல்படுவதாகக் கூறலாம்.

அருந்ததிராயின் வீட்டையும் அவரையும் தாக்க முயற்சித்த இந்துத்வ கும்பல்

டெல்லிக்கு அடுத்து, ஒரிசா மாநிலத்திலுள்ள புவனேஷ்வர் நகரில் நடந்த காட்டு வேட்டைக்கு எதிரான கருத்தரங்கில் கலந்துகொள்ள வந்த அருந்ததி ராய்க்கு எதிராகக் கருப்புக் கொடி காட்டிய இந்துத்துவா கும்பல், அக்கருத்தரங்கை நடத்தவிடாமல் ரகளையிலும் இறங்கியது.  இவ்வன்முறையில் ஐந்து பேர் காயமுற்றனர்.  அருந்ததி ராய், இந்துத்துவா கும்பலின் இந்த சலசலப்புகளுக்கு அஞ்சாததோடு, காஷ்மீர் பிரச்சினை குறித்து தான் கூறிய கருத்துகளைத் திரும்பப் பெற முடியாது என்றும் அறிவித்திருக்கிறார்.

ஹுரியத் மாநாட்டுக் கட்சித் தலைவர்களுள் ஒருவரான மிர்வாயிஸ் உமர் பாரூக் அரியானா மாநிலத் தலைநகர் சண்டிகரில் காஷ்மீர் பிரச்சினை குறித்த நடந்த கருத்தரங்கில் கலந்துகொண்டு, உரையாற்றத் தொடங்கும் முன்பே ரகளையில் ஈடுபட்ட இந்துத்துவா கும்பல், அவரை நெட்டித் தள்ளி வன்முறையில் இறங்கியது.  “அவரின் அரசியல் கருத்துக்களுக்காகத்தான் மிர்வாயிஸ் தாக்கப்பட்டதாக’’க் கூறி, இந்துத்துவா கும்பலின் இந்த வன்முறையை விசிறிவிட்டுள்ளார், காங்கிரசின் கூட்டாளியும் ஜம்மு-காஷ்மீர் முதல்வருமான ஒமர் பாரூக்.

அருந்ததி ராயும், சையத் ஷா கீலானியும், மிர்வாயிஸ் உமர் பாரூக்கும் காஷ்மீர் பிரச்சினை குறித்து என்ன பேசி வருகிறார்களோ, அதுதான் காஷ்மீர் மக்களின் பொதுக் கருத்தாகும்.  இந்திய அரசின் காஷ்மீர் கொள்கைக்கு எதிரான இக்கருத்தைப் பேசுபவர்கள் மீது வழக்கு பாயும்; தாக்குதல் தொடுக்கப்படும் என ஒருபுறம் காட்டிவிட்டு, இன்னொருபுறம் காஷ்மீர் பிரச்சினையைத் தீர்ப்பதற்குக் கருத்துக் கேட்பு நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறது, காங்கிரசு கும்பல்.

இந்துத்துவா கும்பலோ, முசுலீம் தீவிரவாதத்தையும் பிரிவினைவாதத்தையும் எதிர்ப்பதில், தேசிய ஒருமைப்பாட்டைக் கட்டிக் காப்பதில் காங்கிரசைவிடத் தனக்குத்தான் அதிக அக்கறை உண்டு எனக் காட்டிக் கொள்ள தற்பொழுது காஷ்மீர் பிரச்சினையைப் பயன்படுத்திக்கொள்ள முனைகிறது.  அருந்ததி ராயின் பேச்சை மட்டுமல்ல, காங்கிரசு அரசு அமைத்துள்ள மூவர் குழுவின் சில்லறை ஆலோசனைகளை எதிர்ப்பதன் மூலமும்; அருந்ததி ராயைக் கைது செய்யாத காங்கிரசு அரசு, அஜ்மீர் வெடிகுண்டு வழக்கில் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களைக் கைது செய்வதாகப் புலம்புவதன் மூலமும் தனது இந்து-இந்திய தேசிய வெறியைக் காட்டி வருகிறது, அக்கும்பல்.
_____________________________
புதிய ஜனநாயகம், டிசம்பர் – 2010
_____________________________