Fri04192024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அரசியல்/சமூகம் ஒரு தீர்க்கதரிசியின் பொன்மொழிகள்

ஒரு தீர்க்கதரிசியின் பொன்மொழிகள்

  • PDF

அண்மையில் இணையமொன்றில் தீர்க்கதரிசி ஒருவர் திருவாய் மலந்திருக்கின்றார். அவரின் முதலாவது தத்துவ முத்து வேலையை மதித்து உண்மையாக உழைத்தால்,  நீங்களும் அவரைப் போல் வாழ்க்கையில் முன்னிற்கு வரலாம். ஊலகெங்கும் உள்ள தொழிலாளர்களிற்கும் விவசாயிகளிற்கும் இந்த உண்மை தெரியாமல் போனதால் தான் ஏழ்மையில் உழன்று கொண்டிருக்கிறார்கள்.

 

 

இலங்கையின் தேயிலைத் தோட்டங்களில் நாள் முழூவதும் உழைத்து விட்டு,  லயன் என்னும் புறாக் கூண்டுகளிற்குள் தலை முறை தலை முறையாக வாழ்ந்து வரும் தோட்டத் தொழிலாளர்களிடமோ அல்லது கடன் சுமை தாழ முடியாமல் தற்கொலை செய்து கொண்ட இந்திய விவசாயிகளின் குடும்பங்களிடமோ,  இந்த அறிஞரின் பொன் மொழியினை விளக்கி சொன்னால்,  அவர்கள் தங்களது துயர்மிகு வாழ்வினையும் மறந்து ஒரு கணமேனும் பெரியார் சொன்னதைப் போல் பின் உறுப்பால் சிரிப்பார்கள்.

சீன மக்களை அபின் போதையிலே ழூழ்கடிப்பதற்காக உணவுப் பயிர்ச் செய்கை செய்து வந்த வங்காள விவசாயிகளை கட்டாயப்படுத்தி அபின் பயிட வைத்தது ஆங்கில ஏகாதிபத்தியம்.  அதன் காரணமாக ஏற்பட்ட உணவுப் பஞ்சத்தினாலும்,  வரிக் கொடுமையினாலும் லட்சக்கணக்கான வங்க தேசத்து மக்கள் காலனிய ஆட்சிக் காலத்தில் மாண்டனர். இப்படி உலகம் முழுக்க மக்களை கொலை செய்து கொள்ளையடித்த பணத்தில் கொழுப்பேறிய ஏகாதிபத்திய ஆங்கிலேய அரசின் பிரதி நிதியான வின்ஸ்ரன் சேர்ச்சிலின் பிதற்றலான முதலாளித்துவத்தின் தீமை செல்வங்களை சரியாகப் பங்கிடாதது,  சோசலிசத்தின் நன்மை துன்பங்களை எல்லோருக்கும் சமமாக பங்கு போடுவது என்பதினை,  நமது தீர்க்கதரிசி காலனித்துவ எஜமான விசுவாசத்துடன் வாந்தி எடுத்துள்ளார்.

ஏழை மக்களின் உழைப்பில் வெட்கமில்லாமல் பிரபுத்துவ வாழ்க்கை வாழ்ந்த இந்த FAT TORY  யின் மற்றுமொரு திருவாசகமான இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுக்க தேவையில்லை,  ஏனெனில் இந்தியர்களுக்கு தம்மைத் தாமே ஆளத் தெரியாது என்பதையும் நம்மாள் ஞாகப்படுத்தி இருக்கலாம். வெள்ளையர்களுக்கு ஏவல் செய்பவர்கள் எனது இடுப்பிற்கு கீழே உள்ள மயிரை விடக் கேவலமானவர்கள் என்ற மருது சகோதரர்களின் வீர வரிகளை நாமும் ஞாபகப்படுத்தி இருப்போம்.


ஒரு சர்வாதிகாரியின் இறுமாப்புடன் இலங்கைத் தமிழர்களிற்கு எந்தவிதமான உரிமையும் கிடையாது எனக் கொக்கரிக்கும் கொலைகாரன் மகிந்தாவின் அழைப்பின் பேரில் வன்னி முகாம்களுக்கு சென்று வந்த நமது தீர்க்கதரிசி அடங்கிய மேட்டுக்குடிக் கும்பல் தான் முகாம்களில் மக்கள் நல்வாழ்வு வாழ்கிறார்கள் என அறிக்கை விட்டது. வேளிப்படையாக எல்லோருக்கும் அழைப்பு விட்டு இலங்கை சென்றதாகவும் அந்த அழைப்பிற்கு பதிலளிக்காமல் சோம்பேறிகளாகவும் மக்களைப் பற்றிய அக்கறையின்றியும் இருந்து விட்டு இப்போது தமது குழு அமைக்கப்பட்ட விதம் குறித்து குற்றம் சாட்டுவதாக அவர் மனம் கவலை கொள்கிறது.

இந்தக் குழுவில் உள்ளவர்கள் எல்லோரும் மகிந்தாவின் காலைக் கழுவுபவர்களாகவும்,  மரணித்த மக்களையோ அல்லது வன்னி முகாம்கள் எனும் சித்திரவதைக் கூடங்களில் அடைபட்டு இருக்கும் மக்களையோ,  பசியினால் கதறியழும் பச்சிளம் குழந்தைகளையோ பார்க்க முடியாத அளவிற்கு மகிந்தா மேல் காதல் கொண்ட மனநோயாளிகளா என்று கேட்டு இளகிய அவரது மனதை மேலும் புண்படுத்தக் கூடாது.  பல்லாயிரக்கணக்கான  எளிய மக்களின் எலும்புக் கூடுகளை மிதித்துக் கொண்டு வன்னி மண்ணில் நின்ற போது,  அவர் கவலை கொள்ளவில்லை என்பதற்காக மகிந்தாவை குற்றம் சொன்னால்,  அவர் மனம் கசிந்து உருகி கண்ணீர் விடமாட்டார் என்று நினைக்க வேண்டாம்.

அவரின் மற்றெரு தத்துவமுத்து பலஸ்த்தீன மக்களிற்கு எதிரி இஸ்ரேல் மட்டுமல்ல மற்றைய அரபு நாடுகளும் தானாம். நாங்களும் அதைத் தான் கூறுகின்றோம்,  தமிழ் மக்களிற்கு எதிரி சிங்கள பேரினவாத அரசு மட்டுமல்ல,  கருணா,  டக்ளஸ்,  கருணாநிதி மற்றும் உங்களைப் போன்ற புலம்பெயர் கும்பல்களும் தான். தமிழ் நாட்டிலே பிறந்து தமிழ் மொழியில் பத்திரிக்கை வெளியிட்டுக் கொண்டு தமிழையும் தமிழ் நாட்டு மக்களையும் ஈழப்போராட்டத்தினையும் கொச்சைப் படுத்திக் கொண்டு இருக்கும் பார்ப்பாணக் கும்பலின் ஈழப் பிரதிகள் தான் இவரைப் போன்றவர்கள்.

ஈழ மண்ணிலே புதைந்து போன பல்லாயிரக்கணக்கான மக்களின் எலும்புக் கூடுகளை மிதித்துக் கொண்டு மகிந்தாவின் புகழை ஒரே அலைவரிசையில் பாடும் இக்குழுவுடன் மனச்சாட்சியுள்ள எவரும் சேர முடியாது. பசியினால் கதறியழும் பச்சிளம் குழந்தைகளின் விம்மல்கள்,  வன்புணர்ச்சிக்குள்ளான பெண்களின் ஆழ்மன வெளிகளில் இருந்து வெடித்துக் குமுறும் அவலக் குரல்கள்,  வாழ்நாள் முழுவதும் உழைத்து வாழ்ந்த மக்கள் இன்று உணவிற்காக கையேந்தும் நிலைக்கு வந்ததை எண்ணி உள்ளம் வெதும்பி அழும் கதறல்கள் என அடக்கப்படடிருக்கும் எமது சமுதாயத்தின் குரல்கள் ஒரு நாள் எழுச்சி கொள்ளும் போது இவர்களின் ஆணவக் குரல்கள் இருந்த இடம் தெரியாமல் அடங்கிப் போய்விடும்.

http://www.psminaiyam.com/?p=5177

Last Updated on Tuesday, 04 May 2010 05:13