Thu04182024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back இரயாகரன் - சமர் அன்று மக்களை பலியிடுவதன் மூலம் தமிழீழம் கிடைக்கும் என்றவர்கள். இன்று நாடு கடந்த தமிழீழம் மூலம் தமிழீழம் கிடைக்கும் என்கின்றனர்

அன்று மக்களை பலியிடுவதன் மூலம் தமிழீழம் கிடைக்கும் என்றவர்கள். இன்று நாடு கடந்த தமிழீழம் மூலம் தமிழீழம் கிடைக்கும் என்கின்றனர்

  • PDF

இவர்கள் வேறு யாருமல்ல. புலித்தலைமையை சரணடைய வைத்துக் கொன்றவர்கள். சரணடைவதற்கு ஏற்ப யுத்தத்தை வழிகாட்டி நடத்தியவர்கள். வேறு யுத்தமுனைகளை  உருவாக்குவதை தடுத்து, தங்கள் தலைமை தப்பி செல்வதைத் தடுத்து, இறுதியில் அவர்களை சரணடைய வைத்துக் கொன்றவர்கள். தலைமையின் சொந்த முட்டாள்தனத்தை, இவர்கள் பயன்படுத்திய விதமோ மிக நுட்பமானது.

   

தமிழீழத்தை அடைய, மக்களைப் பலியிடக் கோரியவர்கள். பலிகொடுத்தால், அன்னிய தலையீடு மூலம் தமிழீழம் கிடைக்கும் என்றவர்கள். இந்த வகையில் யுத்த முனையில் மக்களை பணயம் வைத்ததன் மூலம், அவர்களை வகைதொகையின்றி சிங்கள பேரினவாதிகள் மூலம் கொல்வதற்கு வழிகாட்டியவர்கள். இப்படி பல பத்தாயிரம் தமிழ் மக்களைக் கொன்றவர்கள், இதன் மூலம் தமிழீழத்தை அன்னியத் தலையீடு மூலம் காணமுடியும் என்று கூறி தலைமையை வழிகாட்டியவர்கள். இறுதியில் அவர்களை சரணடையக் கோரியதுடன், அவர்கள் வரலாற்றை முடித்துவைத்தவர்கள். தங்கள் எல்லாக் கபட வே~ங்களையும் மறைக்க, இன்று நாடுகடந்த தமிழீழம் என்கின்றார்கள்.

 

அன்று தமிழீழத்தின் பெயரில் பல பத்தாயிரம் மக்களை பலி கொடுக்க கோரியவர்கள் இவாகள். இதன் மூலம் புலித்தலைமையை ஒரு இடத்தில் சேர வைத்து, அவர்களை சரணடைய வைத்தவர்கள். இப்படி மக்களையும், புலித் தலைமையையும் கொன்றவர்கள் யார்? பிரபாகரன் என்ற தனிப்பட்ட முட்டாளா!? சொல்லுங்கள். இதன் பின் பலர் இருந்துள்ளனர். யார் அவர்கள்? பிரபாகரனும், புலித்தலைமையும் தொலைபேசி மூலம், சர்வதேச ரீதியாக நாள் கணக்காக பேசியது தான் என்ன? இவர்கள் சொன்னது தான் என்ன? உங்களுக்கு தெரியுமா?

 

மக்களைப் பலியிடுங்கள். இதனால் சர்வதேச தலையீடு நடக்கும்;. தமிழீழம் கிடைக்கும்;. இப்படி இந்த வெளிநாட்டில் இருந்து யாரும் சொல்லவில்லை, வழிகாட்டியவில்லை என்று உங்கள் யாராலும் சொல்ல முடியுமா? இதை மூடிமறைக்கவும், தொடர்ந்து, உங்களை எமாற்றவும்,  நாடு கடந்த தமிழீழம் என்கின்றனர்.

 

உங்கள் சொந்தபந்தங்களை கொன்றதன் மூலம் தமிழீழம் கிடைக்கும் என்றவர்கள். சரணடைவதன் மூலம் மீட்சி கிடைக்கும் என்றவர்கள். வேறு யுத்தமுனையை தொடங்குவதை தடுத்து நிறுத்தி, மக்களை கொன்றதுடன் புலியையே அழித்தவர்கள் இந்தத் துரோகிகள். இப்படி அன்று வழிகாட்டிய கூட்டத்தை நம்பி, புலம்பெயர் மந்தைகளாகிய நீங்கள் தமிழ் தேசியத்தை பலியிட்டவர்கள் நீங்கள். தொடர்ந்தும் அவர்களை நம்பி, அதைத்தான் செய்யப் போகின்றீர்களா சொல்லுங்கள்?  

 

இப்படிப்பட்ட இவர்களா தமிழ்மக்களின் மீட்பாளர்கள்? இவர்களை நம்பியா நீங்கள் செயல்படப் போகிறீர்கள். இவர்களை நம்புபவர்கள், தாங்கள் எவ்வளவு பெரிய முட்டாள்கள்  என்பதை தான் நிறுவுவார்கள். இதைத்தவிர நீங்கள் இதன் பின்னணியை, என்றும் கேள்வி எழுப்பியவர்களல்ல. இவர்களால் எம் இனம் சந்தித்த துயரத்தை இட்டு, அக்கறையற்ற சுய நலப்பேர்வழிகளா நீங்கள்? உங்கள் சுயநலமும், மந்தைத்தனமும், எம் இனத்தை அழித்துள்ளது.

 

கடந்தகாலத்தை திரும்பிப் பாருங்கள். இவர்களை நம்பி, இவர்கள் சொன்னதை எல்லாம் செய்தீர்கள். ஏன் எதற்கு என்று கேட்காது, மந்தைகளாக செய்தீர்கள். இப்படி மரக்கட்டையாக வாழ்ந்ததன் மூலம், உங்கள் இனத்தையே நீங்களும் சேர்ந்து அழித்தீர்கள். உங்கள் சொந்த பந்தங்களையே கொல்லக் கொடுத்தீர்கள். நீங்கள் மந்தைக்கூட்டமாக மாறி, ஓடி ஓடிக் கடித்தீர்கள். எந்தச் சூடு சுரணையுமற்று, இனத்துக்கு எதிராக கையை உயர்த்தினீர்கள். சொந்த சுயநலத்துடன், அனைத்தையும் நியாயப்படுத்தினீர்கள்.

 

உங்கள் மந்தைத்தனத்தின் பின்னணியில் தான், தமிழ்மக்கள் கொல்லப்பட்டனர்.  புலித்தலைமை  காட்டிக் கொடுக்கப்பட்டது. இதை வழிகாட்டி செய்தவர்கள் யார். சொல்லுங்கள். இன்று நாடு கடந்த தமிழீழம் பேசுகின்ற, அதே கூட்டம் தான்.

 

புலித்தலைமையைச் சரணடையச் சொன்ன, வெளிநாட்டுப் புல்லுருவிகள் யார்? அந்த துரோகிகள் யார்? புலித்தலைமையுடன்  இந்த நாடு கடந்த கூட்டம் நடத்திய, இறுதி உரையாடல்கள் என் இன்று வரை மக்கள் முன் வைக்கவில்லை. தங்கள் திருட்டும் துரோகமும் சோரமும் அம்பலமாகிவிடும் என்ற அச்சம். மக்களைத் தொடர்ந்து ஏமாற்றவும், உங்கள் முட்டாள் தனத்தை பயன்படுத்தி ஏமாற்றவே, தாங்களே உருவாக்கிய நாடுகடந்த தமிழீழத்துக்கான தேர்தலில் தாங்கள் மட்டும் நிற்கின்றனர். இன்று இந்தக் கூட்டம், நாடு கடந்த தமிழீழம் மூலம், தமிழீழம் கிடைக்கும் என்கின்றது. அன்று மக்களை பலியிடுவதன் மூலம் தமிழீழம் கிடைக்கும் என்றவர்கள் தான் இவர்கள்.

 

தாங்கள் இவ்வளவு காலமும் தமிழ்மக்களுக்கு செய்த துரோகத்தை, மனிதஇழிவுகளையும் சரி என்று அங்கீகரிக்கக் கோருகின்றனர். தமிழ்மக்களின் பெயரில், தாங்கள் கொள்ளையடித்த சொத்தை, தனிப்பட்ட சொத்தாக குவித்து வைத்துள்ள கூட்டம் தான் இது, தொடர்ந்து நாடு கடந்த தமிழீழத்தின் பெயரில், உங்களை தாங்கள் சூறையாடுவதற்கு உடன்படுங்கள் என்று உங்களைக் கோருகின்றனர். அன்று இந்த தமிழீழம் என்று கூறி, தமிழ்மக்களை  பணயம் வைத்து பலியிட்டவர்கள் இவர்கள். தமிழீழம், விடுதலைப்போராட்டம் என்பது, இவர்களுக்கு பணம் சம்பாதிக்கும் ஒரு வர்த்தகம். உழையாது உங்களைச் சுரண்டி தின்னும் கூட்டத்தின், உங்களை ஏமாற்றும் விளம்பரம் தான் "நாடு கடந்த தமிழீழம்"  

 

இப்படி கடந்தகாலத்தில் எம்மை வழிநடத்திய கூட்டம், தங்கள் சொத்தைப் பெருக்க இனத்தையே அழித்தது. சொத்தைச் சூறையாட, தங்கள் தலைமையைக் காட்டிக்கொடுத்தது.  இந்த இனவழிப்பை எப்படி, எந்த நிலையில் தாங்கள் நடத்தினர் என்பதை, இன்றுவரை உங்களுக்கு சொல்ல முன்வரவில்லை. விடுதலையின் பெயரில் மக்களை வெறும் மந்தையாக, தங்கள் எடுபிடிகளாக பயன்படுத்திவர்கள், இதன் பின்னணியில் தங்கள் சுகபோக வாழ்க்கையைத்தான்  உருவாக்கியவர்கள்.

 

உங்கள் உழைப்பை விடுதலையின் பெயரில் திருடியவர்கள், இன்று உங்களை மீண்டும் மொட்டையடிக்க நாடுகடந்த தமிழீழத்துடன் வருகின்றனர். போடுங்கள் புள்ளடியை என்கின்றனர். 

 

நாடு கடந்த தமிழீழக்காரர் ஒருபுறம் உங்களை மேய்க்கின்றனர் என்றால், மறுபுறத்தில் உங்களை மேய்க்கும் இந்த வட்டுக்கோட்டை தீர்மானக்காரர்கள் யார்? இவர்களுக்கு இடையில் அப்படி என்னதான் முரண்பாடு? இது பற்றி ஏதாவது தெளிவு உனக்கு உண்டா? மந்தை போல் அதுக்கும் இதுக்கும் தலையாட்டும் உன் நிலையை, மந்தை என்றுதானே சொல்ல வேண்டும்;! நீ என்ன தலையாட்டும் செம்மறியா?

 

"வட்டுக்கோட்டை தீர்மானம்", "நாடு கடந்த தமிழீழம்" என்று வரும் அனைவரும் சேர்ந்து தான், கடந்தகாலத்தில் தமிழினத்தை மொட்டை அடித்தவர்கள். இதன் மூலம் இனத்தையே அழித்தவர்கள். விடுதலையின் பெயரிலான சொத்தை அபகரிக்க, தங்கள் சொந்த தலைமையை காட்டிக்கொடுத்து அழித்தவர்கள், மக்களை கொன்றும், தலைமையை அழித்ததை  நியாயப்படுத்தவும், தொடர்ந்து தமிழ்மக்களை ஏமாற்றி தின்பதில் தமக்கு  இடையில் ஏற்பட்ட முரண்பாடுதான், இவர்களுக்கு இடையில் இரண்டு விதமான வேசங்கள். உங்கள் தலையாட்டும் செம்மறித்தனத்தையே, தொடர்ந்தும் பலி கேட்கின்றனர்.

 

பி.இரயாகரன்
27.04.2010
       

 

Last Updated on Tuesday, 27 April 2010 08:30