Thu04182024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயகம் வீட்டுப் பணியாளர்களின் கொத்தடிமை வாழ்க்கை

வீட்டுப் பணியாளர்களின் கொத்தடிமை வாழ்க்கை

  • PDF

அதிகாலையிலேயே எழுந்து ஓட்டமும் நடையுமாக நடுத்தர மேட்டுக்குடிவர்க்கத்தினர் வீடுகளுக்குப் பாத்திரங்கள் விளக்கி, வீடுபெருக்கக் கிளம்பிச் செல்லும் கண்ணம்மா (பெயர் மாற்றப்பட்டுள்ளது)வின் கதை இது. எட்டுவயதில் வீட்டு வேலைகள் செய்ய ஆரம்பித்த கண்ணம்மா (வயது 43)இப்போது சென்னை ராயப்பேட்டை பகுதியில் நான்கு வீடுகளில் தினமும் வேலை செய்கிறார்.

காலை ஆறு மணிக்கு ஆரம்பிக்கும் இவரது ஒருநாள் வாழ்க்கை, மதியம் கிடைக்கும் இரண்டு மணி நேர ஓய்வுக்குப் பின்னர், மீண்டும் வேலை எனத் தொடர்கிறது. வீடு திரும்ப தினமும் இரவு 9 மணி ஆகிவிடுகிறது. நான்கு வீடுகளில் கடினமாக உழைத்தாலும் கிடைக்கும் சம்பளமோ, வீட்டுவாடகை, மளிகைச்செலவு போன்றவற்றிற்குப் போதுமானதாக இல்லை. கண்ணம்மாவைப் போல, அடுத்தவர்களின் வீட்டு வேலைகளைச்செய்யும் வீட்டுப் பணியாளர்களின் ;எண்ணிக்கை இந்தியா முழுக்க 9கோடிக்கும் மேல் இருக்கும் என்கிறது ஒரு கணக்கெடுப்பு. இதில் 20சதவீதத்திற்கும் மேல் குழந்தைத்தொழிலாளர்கள். எங்கிருந்து இவர்களெல்லாம் வருகின்றனர்? கிராமப்புறங்களில் அழிக்கப்பட்டு வரும் விவசாயம்,பல குடும்பங்களை நகரை நோக்கி விரட்டுகின்றது. நகரங்களில் கிடைக்கும் வேலைகளை ஆண்கள் செய்தாலும், அதில் கிட்டும் வருமானம்,குடும்பத்தினர் அனைவரும் சாப்பிடுவதற்கே போதுமானதாக இல்லாததால், பெண்கள் வீட்டுவேலைகளுக்குச் செல்லத் தயாராகின்றனர். பன்னாட்டு நிறுவனங்களுக்குக் காடுகளையும் மலைகளையும் கிராமங்களையும் தாரைவார்த்த தனியார்மய உலகமயக் கொள்கை, அங்கிருக்கும் இலட்சக்கணக்கான பழங்குடியினரை விரட்டியடித்து வருகிறது. அவர்களில் கணிசமான பேர்கள் இந்தப் பணிகளுக்கு வந்து சேர்ந்துள்ளனர்.

 

நாளொன்றுக்கு சராசரியாக 12 மணிநேரத்திற்கும் மேலாக வேலை செய்யும் வீட்டுப் பணியாளர்களுக்கு உடற்சோர்வு, மயக்கம், தோல் எரிச்சல், ஒவ்வாமை,முதுகுவலி போன்ற தொழில்சார்ந்த நோய்கள், மாதம் ஒருமுறையாவது முடக்கிப் போட்டுவிடும். அதனால் வேலைக்கு வர இயலாத நாட்களுக்கு பல வீடுகளில் சம்பளத்தைப் பிடித்துவிடுவதை, ஏன் என்று கேட்கமுடியாது. கேட்டால் "நாளையிலிருந்து நின்றுகொள்' எனச்சொல்லிவிட்டு, வேறு ஆட்களை வேலைக்கு வைத்துக்கொள்வார்கள். சிகிச்சைக்கென மருத்துவரிடம் போனாலோ குறைந்தது ரூ. 100 ஆகிவிடும் என்பதால், பெரும்பாலும் கைப்பக்குவத்திலேயே வைத்தியம் பார்த்துக்கொள்கின்றனர். இவர்களை விடக் குறைவான ஊதியத்துக்கு வேலை செய்ய ஆட்கள் நிறைய இருப்பதால், சம்பளத்தை உயர்த்தச் சொல்லிப் பேரம் பேசுவது கூட இவர்களின் வேலைக்கு வேட்டு வைத்துவிடுகிறது. வீட்டுப்பணிகளில் ஈடுபடுத்தப்படும் குழந்தைகள் நிலையோ பரிதாபகரமானது.

 

8 அல்லது 9 வயதிலேயே பெற்றோரை விட்டுப் பிரிந்து, வேலைசெய்யும் வீட்டில் வாழ்வதும், தன் வயதொத்த அதே வீட்டாரின் குழந்தைகளுக்குக் கிடைக்கும் எவ்வித வசதிகளும் தங்களுக்கில்லா ஏக்கத்திலும், வீட்டு எஜமானர்கள் இழுக்கும் இழுப்புக்கெல்லாம் வேலை செய்து, ஓய்வென்பதையோ, சிறுவயதுக்குரிய விளையாட்டுக்களையோ காணமுடியாமல் வளரும் சோகம், மிகக் கொடுமையானது. பெரியவர்களைவிட மிகக் குறைந்த கூலிபெற்றுக் கொண்டு, உழைத்து ஓய்ந்துபோகும் சிறுவர்,சிறுமியரின் வேலைகளில் தென்படும் சிறுசிறு தவறுகளுக்கெல்லாம் அடி, உதை அல்லது கேவலமான வசைகள் என்பன சர்வசாதாரணம்.நொய்டா (உ.பி.) போன்ற திட்டமிட்டு உருவாக்கப்பட்ட நகரங்களில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகளில், வீட்டுப் பணியாளர் தங்குவதற்கென்றே சமையலறையை ஒட்டினாற்போல் ஓர் அறை ஒதுக்கிக் கட்டப்பட்டுள்ளன. அவற்றில் பீகார், ஜார்க்கண்ட், தமிழ்நாடு எனப் பல்வேறு மாநிலங்களைச்சேர்ந்த பணியாளர்கள் கோழிக்கூடுபோன்ற சிறிய அறைகளில் தங்கிக்கொண்டு நடுத்தர மேட்டுக்குடி வர்க்கத்தினரின் வீடுகளில் வேலை செய்கின்றனர்.

 

இவர்கள் அவசரத்திற்கு உறவினர்களிடம் பேசக்கூட அவ்வீட்டுத்தொலைபேசியைப் பயன்படுத்த முடியாது. மிச்சமீதியைத்தான் உண்ணமுடியும். நண்பர்களையோ, உறவினர்களையோ சந்திக்க வீட்டைவிட்டு வெளியே செல்ல முடியாது எனப் பல நிபந்தனைகளுடன், யாருமே வாழத் தகுதியற்ற வெளிச்சமோ காற்றோட்டமோ இல்லாத அறைகளில் கொத்தடிமைகளாக வாழ்கின்றனர்.

 

வெளியுலகே தெரியாமல், தனிமையில் வாழும் இப்பெண்கள் சில சமயங்களில் மனநோயாளிகளாகவும் மாறியுள்ளனர். எப்போது வேண்டுமானாலும் வேலையிலிருந்து நீக்கப்படலாம் எனும் நிச்சயமற்ற நிலையில்தான் பணியில் நீடிக்கின்றனர். அருகிலுள்ள மேட்டுக்குடியினர் வீடுகளில் வேலை செய்துவிட்டு வீடு திரும்பும் வீட்டுப்பணியாளர்களான பல பெண்களின் கொஞ்சநேர நிம்மதியையும், அரசுநடத்தும் டாஸ்மாக் சாராயக் கடைகள் பறித்து விடுகின்றன. வீட்டுவேலைக்குப் போகும் பெண்களிடையே நடத்தப்பட்ட ஆய்வில், அவர்களின் கணவன்மாரில் 70சதவீதம் பேர் குடிக்கு அடிமைகள் என்பதும், 60 சதவீதப்பெண்கள் வீட்டுக்கு வந்தால், குடிகாரக் கணவர்களின் சித்திரவதையை அனுபவிக்கின்றனர் என்றும் தெரியவந்துள்ளது.

 

காலையிலேயே வேலைக்குக் கிளம்பிப்போய், வீடுதிரும்ப இரவு 8 மணிக்கும் மேலாகிவிடுவதால், தங்கள் குழந்தைகளைப் பராமரிக்க இப்பெண்களுக்கு நேரமிருப்பதில்லை. இது, அவர்களின் வளரும் குழந்தைகளின் ஆளுமையையும், கல்வியையும் சீரழிக்கிறது. சரியாகப் படிக்க இயலாத குழந்தைகள் 10 அல்லது 12 வயதானதும் இதே வேலைக்கு வந்துவிடுகின்றனர். இந்த சேவைக்காக மாநிலம் விட்டு மாநிலம் செல்வதும் அதிகரித்துள்ளது. டெல்லி போன்ற மாநகரங்களில் வீட்டு வேலை செய்வதற்கென்றே சேலம் மாவட்டத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பெண்கள் வந்து குவிந்திருக்கின்றனர். சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார் குறிப்பிட்டுள்ளபடி, விழுப்புரம் போன்ற மாவட்டங்களில் இருந்து கேரளத்திற்கு இவ்வேலைகளுக்கென 5ஆயிரம் ரூபாய் வரை முன்பணம் கொடுத்து பெண்களை அனுப்பிவைக்கும் தரகர்கள் ஏராளமானோர ;உள்ளனர்.

 

இவ்வாறு செல்லும்பெண்களில் பலர் பாலியல் வன்முறையால் கேரளாவில் கொல்லப்பட்டுள்ளனர்.இந்த வேலைகளுக்கு வீடுகளுக்கு தகுந்த ஆட்களை அனுப்புவதற்கென பல கங்காணிகள் பெருந்தொழில் நிறுவனங்களாக உருவெடுத்துள்ளனர். இவர்களிடம் பெயரைப் பதிவு செய்தவர்களை மேட்டுக்குடியினரின் வீடுகளுக்கு வேலைக்கு அனுப்பும் நிறுவனம், இவர்களுக்கு தர வேண்டிய சம்பளத்தைவீட்டு உரிமையாளர்களிடம் பெற்றுக் கொண்டு, அதில் கணிசமான தொகையைச் சுரண்டிக்கொண்டுதான் வீட்டுப்பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குகிறது. சென்னை போன்ற நகரங்களில், இவர்களுக்கு கிடைக்கும் அற்ப சம்பளத்துக்குள் குடிசைகளில்தான் குடியிருக்க முடிகிறது.

 

நகரை அழகுபடுத்தும் திட்டங்கள், இக்குடிசைகளை விட்டுவைப்பதில்லை. கூவம், பக்கிங்காம் கால்வாய் ஓரங்களில் குடியிருந்து வரும் இவர்களை, நகருக்கு வெளியே துரத்தும் பணி ஆரம்பித்து விட்டது. செம்மண்சேரி போன்ற புறநகர்ப்பகுதிகளுக்கு அகற்றப்படவிருக்கும் இப்பணியாளர்கள், தினமும் நகருக்குள் வந்து செல்வது என்பது இன்னமும் வாழ்வை சிக்கலாக்கியுள்ளது. இந்த அவல வாழ்வு வாழும் பெண்களை "திருடர்களாகப்' பார்க்கும் பொதுக்கருத்தை ஆளும் வர்க்கம் உருவாக்கி வைத்துள்ளது. பல அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வேலைக்கு செல்பவர்களின் கைரேகை, குடும்பப் பின்னணி போன்றவற்றை அருகிலுள்ள போலீசுநிலையத்தில் பதிந்து வைக்க வேண்டும் என்று போலீசு கட்டாயப்படுத்துகிறது. சில பத்திரிக்கையாளர்களோ, வீட்டு வேலைக்காரிகளை, வீட்டு எஜமானர்களை மயக்கும் சக்களத்திகளாகச் சித்தரித்து துணுக்குகளை எழுதுகின்றனர். ஏட்டளவில் இருக்கும் இந்தியத் தொழிலாளர் நலச்சட்டங்கள் கூட வீட்டுப் பணியாளருக்கென்று இல்லை.

 

மேலும், இவர்கள் சங்கமாக அணிதிரட்டப்படாமலும் உள்ளனர். இவர்களுக்குச் சட்ட ரீதியாகத் தொழில் அங்கீகாரம் தரக் கோரி பல ஆண்டுகளாக கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வந்துள்ளன. உலகமயமாக்கம் தீவிரப்படுத்தப்பட்டபோது, இச்சேவைப்பணியில் ஈடுபடுவோர் இலட்சக்கணக்கில் பெருகியதால், இவர்களுக்கு சட்டப் பாதுகாப்பு தேவை என சர்வதேச அளவில் கோரிக்கைகள் எழுந்தன. பல தன்னார்வ நிறுவனங்கள் இதனை வாய்ப்பாகப் பயன்படுத்தி, பல குழுக்களை இப்பெண்களிடையே உருவாக்கி, இக்கோரிக்கையை எழுப்ப வைத்தன. தமிழ்நாடு அரசும், 2007 இல் வரைவு சட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியது. இதன்படி, இச்சேவையில் ஈடுபடுவோர், வீட்டுப்பணியாளர்கள் நலவாரியம் ஒன்றில் இணைக்கப்படுவர். ஆனால் தமிழ்நாடு அரசின் சட்டம், குறைந்தபட்சக் கூலியை இன்றுவரை வரையறுக்கவில்லை. 2005இலேயே கேரள, கருநாடக அரசுகள் உருவாக்கியுள்ள சட்டத்தின்படி, 8மணிநேர வேலைக்கு மாதத்துக்கு ரூ. 1800மும், வேலைசெய்யும் வீட்டில் 4 பேருக்கு மேலிருந்தால் ரூ. 2200உம் குறைந்தபட்ச ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

தமிழக அரசு இவர்களுக்காக ஆரம்பித்திருக்கும் நலவாரியம் பற்றிய செய்தியோ, அரசின் இணையதளத்தில் மட்டும்தான் உள்ளது. அந்த வாரியம், எங்கே இயங்குகின்றது எனும் தகவலைக் கூட அரசு விளக்கமாக அறிவிக்கவில்லை. கண்ணகி நகர் போன்ற சென்னைப் புறநகரில் தங்கி இருந்து, வீட்டுவேலை செய்யும் பெண்கள் தங்களைப் பதிவு செய்ய வேண்டுமானால், ஒருநாள் வேலைக்கு செல்லாமல் காஞ்சிபுரம் போய் தேடிஅலைந்து வாரியத்தில் பெயர் பதிய வேண்டும் எனும் நிலைதான் உள்ளது. இதிலிருந்தே அரசுக்கு இந்தப்பணியாளர்கள் மீதான அக்கறை என்ன என்பது தெரிகிறது. வேலை உத்திரவாதம், மருத்துவ வசதி, குறைந்தபட்ச விடுமுறைகள், தங்கள் குழந்தைகளின் கல்வி,ஆயுள் காப்பீடு போன்ற உடனடித் தேவைகளை இப்பணியாளர்கள் போராடிப் பெற வேண்டியுள்ளது. பிழைப்புக்கான இடத்தின் அருகிலேயே குடியிருப்புவசதி, ஈ.எஸ்.ஐ. மருத்துவ வசதி, சேமநலநிதி போன்றவையும் இவர்களுக்குச் சட்டப்படி அளிக்கப்பட வேண்டும். இதற்காக இத்தொழிலாளர்கள் அனைவரும் சங்கமாக ஓரணியில் திரள வேண்டும்.

 

கடுமையான உழைப்புச் சுரண்டலுடன் சட்டபூர்வ உரிமைகளையும் உலகமயம் பறித்துவரும் இன்றைய நிலையில், அல்லற்பட்டுவரும் இப்பணியாளர்கள் அமைப்பாகத் திரண்டு, மறுகாலனியாதிக்கக் கொள்கைகளுக்கு எதிராக இதரபிரிவு உழைக்கும் மக்களுடன் இணைந்து போராடுவதன்மூலம் மட்டுமே, தமது நலனையும் விடுதலையையும் சாதிக்க முடியும்.

 

கதிர்