Thu04252024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back இரயாகரன் - சமர் ஸ்ராலின் ஏன் மறுக்கப்பட்டார்?, ஏன் தூற்றப்பட்டார்?, இன்னும் ஏன் தூற்றப்படுகின்றார்? (ஸ்ராலின் தூற்றப்படுவது ஏன்? : பகுதி – 02)

ஸ்ராலின் ஏன் மறுக்கப்பட்டார்?, ஏன் தூற்றப்பட்டார்?, இன்னும் ஏன் தூற்றப்படுகின்றார்? (ஸ்ராலின் தூற்றப்படுவது ஏன்? : பகுதி – 02)

  • PDF

ருசியா ஆய்வு மையம் 2003ம் ஆண்டு லெனின் பற்றிய ஆய்வு ஒன்றைச் செய்தது. அதன் போது, 65 சதவீதமான மக்கள் லெனினின் அடிப்படை நோக்கத்தை அங்கீகரித்ததுடன், அவை சரியானவை என்று ஏற்றுக் கொண்டதை 17.4.2003 பாரிஸ் லிபரேசன் பத்திரிகை தன் செய்தியாக வெளியிட்டு இருந்தது. 5.3.2003 லிபரேசன் பத்திரிகை ருசியாவில் 42 சதவீதமானோர் ஸ்ராலினை ஏற்று ஆதரிக்கின்றனர் என்ற செய்தியை வெளியிட்டது. மீதமுள்ளவர்களில் 36 சதவீதம் பேர் ஸ்ராலின் நன்மையே கூடுதலாக செய்தார் என்பதை அங்கீகரித்து ஆதரவாக இருப்பதை வெளியிட்டபடியே தான், அவரைத் தூற்றியது. அதே பத்திரிகை 1937-1938 இல் 40 ஆயிரம் பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக புதிய புள்ளிவிபரத்தையும் வெளியிட்டது.

மறுபுறம் லெனின், ஸ்ராலின் பற்றிய சரியான மதிப்பீடுகள், உலகளவில் உருவாகின்றது. மார்க்சியமே உலகை மாற்றும் ஒரே தத்துவமாக, தலை நிமிர்ந்து வருகின்றது. இதை தகர்க்க ஸ்ராலின் மரணமடைந்த 50 வது ஆண்டில் உலகெங்கும் மீண்டும் பெரியளவில் அரசியலற்ற வெற்று அவதூறுகள் மீளவும் உயிர்ப்பிக்கப்பட்டன. ஸ்ராலின் மீதான அரசியல் ரீதியான மதிப்பும், மக்களிடையே செயல்பூர்வமாக நடைமுறை ரீதியாக அதிகரித்து வரும் பாட்டாளி வர்க்;க செல்வாக்கையும் கொச்சைப்படுத்துவதே, மூலதனத்துக்கு அவதூறு நிபந்தனையாகிவிட்டது. பாட்டாளி வர்க்கத்தின் வர்க்க கண்ணோட்டத்தைக் கொச்சைப்படுத்தவே, ஸ்ராலின் மீதான அவதூறுகளை முன்வைக்கின்றன. மூலதனத்தின் நெம்பாக செயற்படும் வலது இடது சுதந்திர செய்தி அமைப்புகள், பலபக்க அவதூறுகளை 2003 இல் வெளியிட்டன. ஏகாதிபத்திய மூலதனத்தின் ஆதரவுடன், கடந்த கால ஆவணங்களை எல்லாம் தூசி தட்டி எடுத்தனர். ஆய்வுகள் என்ற பெயரில், அரசியலற்ற அவதூறுகளை நூலாக்கி டாக்டர் பட்டம் பெறுகின்றனர். இந்த நூல்களையே மேயும் ட்ராட்ஸ்க்;சியம் முதல் ஏகாதிபத்தியம் வரை, புல்லரிக்கும் மர்மக் கதைகளை உருவாக்கி உலாவவிடுகின்றனர். அதேநேரம் கடந்த 80 வருடமாக ஸ்ராலின் மீது இவர்கள் கட்டியமைத்த பொய்களும், அதை மெருகு ஊட்டிய ஆதாரங்களும் உண்மையற்றுப் போகின்றது. இதை செய்தியாக்கி, ஆய்வாக்கிய எவரும் நேர்மையாக சுயவிமர்சனம் செய்வதில்லை. அன்று அப்பட்டமாக ஆதாரம் என்ற பெயரில் கட்டமைத்த தரவுகள் அனைத்தும், விதிவிலக்கின்றி இன்று பொய்யாகியுள்ளது. இப்படி ஆய்வுகள் என்ற பெயரில் எழுதியவர்கள் பலர், ஏகாதிபத்திய உளவாளிகளாகவும், அவர்களிடம் கையூட்டுப் பெற்று இருந்ததும் கூட இன்று அம்பலமாகியுள்ளது. அவர்கள் வழங்கிய தகவல்கள் அனைத்தும் பொய்யானவை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இப்படி தகவல்களை வழங்கியவர்களுக்கும், ஏகாதிபத்தியத்துக்கும் இடையிலான தொடர்புகள் கூட இன்று ஆதாரபூர்வமாக அம்பலமாகியுள்ளது.

இதை ஆதாரமாக கொண்டு பிழைப்பு நடத்திய ட்ராட்ஸ்க்கியத்தின் 80 வருட அரசியல் கந்தலாகி நிர்வாணமாகின்ற நிலையிலும், எந்த சுயவிமர்சனத்தையும் செய்யவில்லை. மாறாக அரசியலற்ற அவதூறை அரசியலாக கொண்டே, இன்றும் பிழைக்கின்றனர். வர்க்க எதிரிகளை ஸ்ராலினின் முன்நிறுத்தி, அவர்களை சாதுவான பாசுவாக காட்டியே வந்தனர். அரசியல் ரீதியான விவாதம், விமர்சனம் எதுவுமற்ற வகையில், பாட்டாளி வர்க்கத்தின் வர்க்கப் போராட்டத்தை சிதைக்க நெம்புகளை நிமிர்த்த முனைகின்றனர்.

ஸ்ராலின் மேலான அவதூறுகளை கட்டமைக்கும் ஒவ்வொருவனின் அரசியலும் என்ன? சமகால நிகழ்வுகளில்; அவர்களின் அரசியல் நிலை என்ன? அதில் அவர்களின் பாத்திரம் என்ன என்று நெருங்கி ஆராயும் அனைவருக்கும், ஏகாதிபத்தியத்தின் அரசியல் கபடங்கள்; அப்பட்டமாக இருப்பது தெரியவரும்.

ட்ராட்ஸ்கியத்தின் அவதூறுகள் அரசியலற்ற செப்பூட்டும் வித்தையாக அரங்கேறுகின்றது. கடந்த காலத்தின் அவதூறுகளை மறுக்கும் எந்த விவாதத்துக்கும் சரி, அவர்களின் அரசியல் நிலைப்பாடுகள் மீதான விவாதத்துக்கும் சரி, அவர்கள் பதில் அளிப்பதில்லை. தம்மையும் தமது சந்தர்ப்பவாத நிலைப்பாட்டையும் மூடிமறைத்தபடி, ஒரு தலைப்பட்சமாக அவதூறை மட்டும் பொறுக்கி எடுத்து பக்கங்களை நிரப்புகின்றனர். இந்த வகையில் ட்ராட்ஸ்க்கியவாதிகளின் இந்த நிலைப்பாடு, அப்பட்டமாகவே ஏகாதிபத்தியத்துக்கு நேரடியாக சேவை செய்கின்றது. விவாதத்தை மறுத்தும், அவதூறை ஆதாரமாகவும் கொள்கின்ற போக்கை லெனின் அம்பலப்படுத்தும் போது, ~~கொள்கை ரீதியான பிரச்சனையில் எதிராளியினுடைய ஒரு வாதத்திற்கும் பதில் சொல்லாமல் அவன் மீது ~இரக்கம்| காட்டுவதாகச் சொல்வது விவாதிப்பதாகப் பொருளாகாது. மாறாக அவதூறு செய்ய முயல்வது ஆகும்|| இப்படி உண்மை நிர்வாணமாகிவிடும் போது, கடந்த கால சொந்த நிலைப்பாடுகள் கூட கேள்விக்குள்ளாகின்றது. இதை மூடிமறைக்க விவாதம் மற்றும் எதிர்வாதத்தை முன்வைப்பது அவசியமற்றதாகின்றது. முன்பைவிட அவதூற்றுக்கு புது மெருகு ஊட்டி, வானத்தையே வில்லாக வளைக்க முனைகின்றனர். அவதூறின் அரசியல் முக்கியத்துவம் என்ற கட்டுரையில் லெனின் "அரசியல் அவதூறு பல சமயங்களில் சித்தாந்த ஒட்டாண்டித்தனத்தையும், நிர்க்கதியையும், வெறித்தனத்தையும், அவதூறு கூறுபவனின் எரிச்சலூட்டும் பேடித்தனத்தையும் மூடிமறைத்து விடுகின்றது." என்றார். தொழிலாளர் வர்க்கத்தின் பெயரில் வர்க்கப் போராட்டத்தையும், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தையும், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் பின்பாக தொடரும் வர்க்கப் போராட்டத்தையும் மறுக்கும் ட்ராட்ஸ்க்;கியத்தின் மூடி மறைத்த அவதூற்றை நாம் இனம்காண வேண்டியுள்ளது.

மார்க்சியத்தின் பல்வேறு அடிப்படைகளை தகர்க்க நினைக்கும் ஏகாதிபத்திய நோக்கத்துக்கு முண்டு கொடுக்கும் கருத்துகள் பல வெளியாகின்றன. அதில் ஒரு பகுதியாக ஸ்ராலினை தூற்றும் தனிமனித வசைபாடல்கள் அரங்கேற்றப்படுகின்றன. இதைப் போன்று ட்ராட்ஸ்கியத்தின் நான்காம் அகில சர்வதேச இணையத் தளத்தில் வசைபாடலை வெளியிடுகின்றனர். இந்த அவதூறுக்கான மூலநூல்கள் எப்போதும் ஒன்றாகவே இருக்கின்றது என்பது விதிவிலக்கல்ல. இவர்களுக்கு மட்டுமல்ல ஸ்ராலினை தூற்றும் வகையில், மேற்கத்தைய வலது இடது பத்திரிகைகள், தொலைக் காட்சிகள் வெளியிட்ட பல பக்கச் செய்திகள் சார்ந்த அவதூறுகளுக்குமான மூல நூல்களும், ஒன்றாக இருப்பது தற்செயலானவை அல்ல. கடந்த பத்து வருடமாக முன்னைய சோவியத் ஆவணங்களை எல்லாம் புரட்டிப் பார்த்து பல தொடர்ச்சியான அவதூறு கட்டுரைகள் எழுதப்பட்டன, எழுதப்படுகின்றன. இவற்றில் இருந்தே, இன்று அவதூற்றை தொகுத்து தூற்றுகின்றனர். அண்மைக் காலத்தில், முன்பு போல் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை பற்றிய கற்பனைத் தரவுகளை முன்வைக்க முடிவதில்லை. முன்னைய கற்பனையான புள்ளிவிபரங்களை முன்வைத்து செய்த அவதூற்றையும், அரசியல் பிழைப்பையும், முழுப் பூசனிக்காயை சோற்றுக்குள் அமுக்குவது போல் அமுக்கி விட முயலுகின்றனர். ட்ராட்ஸ்கிய பத்திரிகைகள் முதல் ஏகாதிபத்தியம் வரை முன்னர் தாம் கூறிய புள்ளிவிபரக் கற்பனைகளைப் பற்றி, வாய் திறப்பதில்லை. ஏகாதிபத்தியம் எதை எதையெல்லாம் சொன்னதோ, அதை அப்படியே மீளச் சத்தியெடுத்த ஸ்ராலின் எதிர்ப்புவாதிகள், ஏகாதிபத்திய தத்துவார்த்த கோட்பாட்டுக்கு இசைவாக இருந்ததையும், இருப்பதையும் நாம் காணமுடிகின்றது.

புரட்சிக்கு பிந்திய சமுதாயத்தில் வர்க்கப் போராட்டம் நடத்தப்படுவதை எதிர்க்கும் டிராஸ்கிஸ்டுகள், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பதையே ஏற்றுக் கொள்வதில்லை. லெனின் கூறுகின்றார்.  "முன்னோக்கிச் செல்வது, அதாவது கம்யூனிசத்தை நோக்கிச் செல்வது பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் வழியேதான் முடியும்; அதைத் தவிர வேறு வழியில்லை." என்றார். ஆனால் டிராட்ஸ்கிகள் ஜனநாயகத்தை அதன் முரணற்ற வகையில் பகுத்து ஆராயத் தவறி, அதை ஆதாரமாக கொண்டே தூற்றுகின்றனர். ஜனநாயகத்தை கொச்சை வடிவி;ல் திரித்து தூற்றும் போது ~~சோசலிசப் புரட்சிக்கு முன்நிபந்தனையான அரசியல், பொருளாதார அடிப்படைகளும் ஜனநாயக உணர்வுகளும் மனிதச் சிந்தனைப் பரப்புக்களும் விரிவடைந்திராத மூர்க்கத்தனமான விவசாய சமூகக் குணங்களில் தான் ஸ்டாலினிசம் உதித்தெழுந்தது. ஜனநாயகப் புரட்சியைக் கண்டறியாத தேசமாய் ரஷ்யா இருந்தது| என்று ட்ராட்ஸ்கியம் வசைபாடும் போது, ஜனநாயகம் பற்றிய முதலாளித்துவ சிந்தனை எல்லைக்குள் நின்றே கூச்சலிடுபவர்களாக இருக்கின்றனர். சோவியத்தில் ஜனநாயக புரட்சி நடைபெறவில்லை என்று, லெனினையே மறுத்துத் திரிக்கின்றனர். ஜனநாயகப் புரட்சி நடைபெறாத நாடுகளில் சோசலிச புரட்சி நடைபெற முடியாது என்று கூறுவதன் மூலம், எதைத்தான் எமக்கு போதிக்க முனைகின்றனர். வர்க்கப் போராட்டத்தை கைவிடுங்கள் என்பதைத் தான் ஒழிய, வேறு ஒன்றையும் அல்ல. ஆழ்ந்து நோக்கினால் ஸ்டாலின் பற்றிய அவதூறுகள், வர்க்கப் போராட்டம் முதல் ஜனநாயகம் பற்றிய அரசியலில், ஏகாதிபத்தியத்துக்கும் ட்ராட்ஸ்கியத்துக்கும் எந்த வேறுபாடும் அடிப்படைக் கோட்பாட்டின் மேல் இருப்பதில்லை. அப்படி ஒரு வேறுபாடு இருப்பதாக விளக்க முடியாதவர்களாகவே ட்ராட்ஸ்கிய அவதூறுகள் கட்டமைக்கப்படுகின்றன. ட்ராட்ஸ்கிய அவதூறுகள் எந்தளவுக்கு உள்ளதோ, அந்தளவுக்கு குருச்சேவ் அன்று ஸ்ராலினை தூற்றினான். குருச்சேவ் ஸ்ராலினை ஏன் மறுத்தான் என்பதும், எந்த அரசியலை கைவிட்டான் என்பதையும் நாம் ஆராய்வதன் மூலமே, டீராட்ஸ்கியத்துடன் அக்கபக்கமாகவே குருச்சேவ் செயல்பட்டான் என்பது துல்லியமாக எதார்த்தத்தில் காணமுடியும்.

1956 இல் டிராட்ஸ்கிய வாதிகளின் நான்காம் அகிலம் விடுத்த அறிக்கையில் குருச்சேவ்வின் அவதூறுக்கு கொள்கை ரீதியாக நன்றி தெரிவித்தனர். மேல் இருந்து ஆட்சியைக் கைப்பற்றி முதலாளித்துவத்தை மீட்ட இந்தச் சதியை (என்ன சதி என்பதை ஆதாரமாக கீழே பார்ப்போம்) நியாயப்படுத்தி "இதற்காக நாம் 25 வருடங்களாக காத்திருந்தோம். எனவே, நாம் இப்போது உள்ளே புகுந்திடவேண்டும். மிகுந்த ஆற்றலுடன் செயல்படவேண்டும்" என்றனர். குருச்சேவ் எதைச் செய்தாரோ அதைச் செய்ய 25 வருடமாக முயன்று தோற்றதை ஒப்புக் கொண்டது டிராட்ஸ்கியம். ஒரு முதலாளித்துவ மீட்சியை வரவேற்றதுடன் அதில் பங்கு கொள்ளவும் முயன்றனர். 1956 இல் 20 வது காங்கிரசில் குருச்சேவ் ஸ்ராலினுக்கு எதிராக கட்டமைத்த அவதூறுகளை, இரகசிய சுற்று அறிக்கையாக வெளியிட்டு தூற்றிய போது, டிராட்ஸ்கியவாதிகள் இப்படிப் போற்றினர். ஸ்டாலினின் அடிப்படையான வர்க்க கண்ணோட்டம் சார்ந்த மிச்ச சொச்ச வர்க்க அடிப்படைகளையும் துடைத் தெறிய, உள்ளே புகுந்து ஆற்றலுடன் அழித்துவிட அறை கூவல் விடுத்தனர். வர்க்க அடிப்படை அழித்தொழிப்பை நியாப்படுத்தி 1961 இல் நான்காம் அகிலம் விடுத்த அறிக்கையில் "குருச்சேவின் நடவடிக்கைகளில், பழமைவாதிகளுக்கு எதிரான ஸ்டாலினிய அழிப்புப் போராட்டத்துக்கு நாம் விமர்சனத்துடனான ஆதரவை வழங்கவேண்டும்" என்றனர். இப்படி கொள்கை வகுத்து குருச்சேவை தாங்கி பிடித்து உதவியதன் மூலம், பாட்டாளி வர்க்க சர்வதேசியத்தை குழிதோண்டிப் புதைக்க உதவினர். இதைத் தான் டிராட்ஸ்கியவாதிகள் அன்று முதல் இன்றுவரை செய்தனர், செய்து வருகின்றனர்.

1963 இல் டிராட்ஸ்;கியவாதிகளின் நான்காம் அகிலம் விடுத்த அறிக்கையில் "ரசிய கம்யூனிஸ்ட் கட்சியின் 20-வது காங்கிரசிலும், 22 வது காங்கிரஸ்சிலும் உருவாகியுள்ள நிலைமை, தொழிலாளர் அரசு நடக்கும் நாடுகளிலே கூட நமது இயக்கம் மறுமலர்ச்சி அடைவதற்கு மிகவும் சாதகமானதாகும்" என்று கூறி பாட்டாளி வர்க்கத்தின் அடிப்படையான கோட்பாடுகளை சிதைப்பதில் ஒரு கரம் குவித்தனர். இவர்கள் குருச்சேவ்வின் மார்க்சிய விரோத நிலைகளை ஆதரித்ததுடன், அதற்கு துணையாக செயல்படவும் அறைகூவல் விடுத்தனர். 1961 இல் 22 வது காங்கிரஸ் முடிவை வரவேற்ற டிராட்ஸ்;கிட்டுகளின் நான்காம் அகிலம், புதிய மத்திய குழுவுக்கு ஒரு கடிதத்தை எழுதியது. அதில் 1937 இல் ஸ்ராலினால் கொல்லபட்டவருக்கு நினைவுச் சின்னம் எழுப்பப்படும் என்று 1937 இல் டிராட்ஸ்;கி கூறியதை சுட்டிக் காட்டியதுடன் "இன்று இந்த தீர்க்கதரிசனம் உண்மையாகியிருக்கிறது. உங்களது பேராயத்தின் முன்பு கட்சியின் முதல் செயலாளர் அந்த நினைவுச் சின்னத்தை நிறுவுவதாக உறுதியளித்துள்ளார்" என்று கூறியதுடன், நினைவுச் சின்னத்தின் மீது டிராட்ஸ்;கியின் பெயர் "பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டும்|" என சுட்டிக் காட்டினர். அத்துடன் குருச்சேவைப் பாராட்டியதுடன் "டிராட்ஸ்கியிசத்துக்கு கதவு திறந்து விட்டுள்ளது" என்று கூறினர். அத்துடன் "டிராட்ஸ்கியத்தையும் அதன் நிறுவனமான நான்காம் அகிலத்தையும் முன்னெடுத்துச் செல்வதற்கு மாபெரும் உதவியைச் செய்திருக்கிறது" என்று பிரகடனம் செய்தனர். ஸ்டாலின் மரணத்தின் பின் குருச்சேவ் நடத்திய முதலாளித்துவ மீட்சியை டிராட்ஸ்கிகள் ஆதரித்து வரவேற்றதை நாம் இங்கு காண்கின்றோம்;. குருச்சேவின் நோக்கமும், டிராட்ஸ்கியின் நோக்கமும் அக்கம்பக்கமாக இணைந்து வந்ததையும், ஒரே புள்ளியில் சந்தித்ததையே இவை காட்டுகின்றன. ஸ்டாலினிய மார்க்சிய அரசியல் நிலைப்பாடுகள் சார்ந்த பலரை, குருச்சேவ் தலைமையிலான முதலாளித்துவ மீட்சியாளர்கள் உலக அளவில் படுகொலை செய்தும், ஆயிரக்கணக்கில் சிறையில் அடைத்த நிலையில் தான், ஸ்ராலின் மீதான தாக்குதலை நடத்த முடிந்தது. மார்க்சியத்துக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்ட எதிர்ப்புரட்சியாளர்களை சிறைகளில் இருந்து விடுவித்தும், புனர்வாழ்வு கொடுக்கப்பட்டது. புனர்வாழ்வு கொடுக்கப்பட்ட எதிர்ப்புரட்சியாளர்கள் அரசின் முன்னணி அதிகாரத்துக்கும், கட்சியின் தலைமைக்கும் கொண்டு வரப்பட்டனர். ஸ்ராலின் மீதான தாக்குதல் தனிநபர் ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் விரிந்த அளவில் தொடுக்கப்பட்டது.

குருச்சேவ் ஸ்டாலின் மீது தனிநபர் ரீதியாக அவதூற்றைப் பொழிந்த போது எல்லையற்ற வகையில் விரிந்து காணப்பட்டது. குருச்சேவ் ஸ்ராலினை "சூதாடி", "முட்டாள்", "கொலைகாரன்", "மடையன்", "பயங்கர இவான் போன்ற ஒரு கொடுங்கோலன்", "ஒரு குற்றவாளி", "கொள்ளைக்காரன்" என்று பலவாக தாக்கினான். "ரசியா வரலாற்றிலேயே மிகப் பெரிய சர்வாதிகாரி" என்றான். மேலும் குருச்சேவ் தனது தாக்குதலை ஸ்ராலினுக்கு எதிராக 20 வது காங்கிரஸ்சில் நடத்திய போது "குரோத மனோபாவம்" கொண்டவன் என்றான். "இரக்கமின்றி ஆணவமாகச்" செயல்பட்டவர் என்றான். "அடக்குமுறை பயங்கரவாதத்தை" கட்டவிழ்த்து விட்டவர் என்றான். "தேசத்தையும் விவசாயத்தையும் திரைப்படங்களின் மூலம் மட்டும் அறிந்தவர்" என்றான். "ஒரு கோளத்தின் மீது நின்று யுத்த நடவடிக்கைகளைத் திட்டமிட்டார்" என்றான் "ஸ்டாலின் தலைமை ரசிய சமூக வளர்ச்சிப் பாதையில் பெரும் தடைக்கல்லாக மாறிவிட்டது" என்றான். குருச்சேவ் இது போன்ற அவதூறுகளை தொடர்ச்சியாக பொழிந்தான். டிராட்ஸ்கியம் இது போன்றவற்றையே தன் வரலாற்றில் தொடர்ச்சியாக இடைவிடாமல் செய்து வந்தது. அண்ணன் தம்பியாக இதில் ஒன்றுபட்டு நின்று, தனிமனித தாக்குதலை நடத்திய நிலையில், கொள்கை ரீதியாக இவர்கள் தமக்கு இடையில் உடன்பட்டனர்.

இதை இன்றும் ஆதரித்து நிற்பதுடன், டிராட்ஸ்கியத்தின் தலைசிறந்த வாரிசாக குருச்சேவை போற்றவும் தயங்கவில்லை. டிராட்ஸ்கிஸ்ட்டுகள் கூறுகின்றனர் "1954 இல் குருசேவ் இன் வேண்டுகோளின்படி அமைக்கப்பட்ட விசாரணைக் குழு கம்யூனிஸ்டுகள் மற்றும் குற்றச்சாட்டப்பட்டவர்கள் அனைவரையும் சகல குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவிக்கப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்தது." என்பதை எடுத்துக் காட்டி, ஸ்ராலினின் மீதான குற்றம் நிரூபணமாக இருப்பதாக தம்பட்டமடிக்கின்றனர். குருச்சேவ் திட்டமிட்டு மார்க்சிய நிலைப்பாட்டைக் கொண்டோரை படுகொலை செய்த நிகழ்வும், மார்க்சியத்தின் எதிரிகளை விடுவித்ததும் கம்யூனிசத்தின் வெற்றி என்கின்றனர். இதை நியாயப்படுத்தும் வகையில் "1956 இல் ஸ்டாலின் கால அநீதிகளை விசாரிக்க நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு போலி ஆவணங்கள் அடிப்படையில் அரசியல் பழிவாங்கலாக விசாரணை மற்றும் வழக்குகள் நடைபெற்றதாய் அறிக்கை சமர்ப்பித்தது." என்று கூறியதை எடுத்துக் காட்டி, ஸ்டாலின் அவதூறுகளை கட்டமைக்கின்றனர். போலி ஆவணம் மூலம் விசாரணை என்பதும், அதை முதன்மைப்படுத்திக் காட்டி டிராட்ஸ்கியம் பிழைக்க முனைகின்றது. இந்த பிழைப்புவாத கூத்தடிப்பு ஒருபுறம் நிகழ, அன்று ஒரு சதி கட்டமைக்கப்பட்டதை ட்ராட்ஸ்கியம் சொந்த முரண்பாட்டுடன் பெருமையாக முன்வைக்கின்றது. அதையும் கட்டுரையின் தொடர்ச்சியில் விரிவாக ஆராய்வோம்.

குருச்சேவ் அரசியல் என்ன என்ற அடிப்படை உள்ளடகத்தில் இருந்து, இதை பகுத்தாய்வதை மறுப்பதே டிராட்ஸ்கியமாக உள்ளது. கோட்பாட்டு ரீதியாக என்ன அரசியலை முதலாளித்துவ மீட்பின் போது, குருச்சேவ் கையாண்டான் என்பதையும் கட்டுரையின் தொடர்ச்சியில் விரிவாக பார்ப்போம். அரசியல் ரீதியாக மார்க்சியத்தை மறுத்த குருச்சேவ் முதலாளித்துவத்தை நிலைநாட்ட களையெடுப்புகளை நடத்தினான்;. இவற்றை  வான் உயரப் போற்றும் டிராட்ஸ்கிகள் "ஸ்டாலினின் நிழலான பெரிஜா 23.12.1953 இல் சோவியத் உயர்நீதிமன்றத்தால் மரணதண்டனை விதிக்கப்பட்டு 5 மார்ச் 1954 இல் சுட்டுக் கொல்லப்பட்டான். பல ஆயிரம் நேர்மையான கம்ய+னிஸ்டுகளை கொன்றமை, பிரிட்டிஸ் உளவுத்துறைக்கு வேலை செய்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களின்படி "சோவியத் மக்களின் எதிரி" என்று பிரகடனப்படுத்தப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்டது." இதன் மூலம் நேர்மையான கம்யூனிஸ்ட்டுகளை தொடர்ந்து குருச்சேவ் பாதுகாத்தான் என்கின்றனர். மேலும் ஸ்ராலினை தூற்றவும் மார்க்சியத்தை வேரோடு பிடுங்கவும் "...பல்கெரிய, செக்கோசிலவாக்கிய, கங்கெரி களையெடுப்புகளில் பங்கு கொண்ட ஸ்டாலினிச கொலையாளிகளான அபகுமெவ், லீசற்சோவ், மக்காரோவ், பெஜல்கின் ஆகியோரும் கைதாகி விசாரணையின் பின்பு சுட்டுக் கொல்லப்பட்டனர். ஸ்டாலினிசத்தை சோசலிசம் என்று நம்ப விரும்புகிறவர்கள் இவர்களையே பாட்டாளி வர்க்கத்தின் தலைவர்கள் என்று நம்பலாம்" இப்படிக் கூறுவதன் மூலம், உண்மையில் டிராட்ஸ்கிகள் சவால் விடுகின்றனர். குருச்சேவின் முதலாளித்துவ மீட்சியை அப்பட்டமாகவே மறுக்கின்றனர். குருச்சேவின் வாலில் பிடித்து தொங்கி ஊளையிடவும்; கூடத் தயங்கவில்லை. "கம்யூனிஸ்டான" குருச்சேவ் தான், பாட்டாளி வர்க்கத்தின் எதிரிகளை கொன்றதாக இன்றும் கூறுகின்றனர். இந்த நிலைப்பாட்டை ஏற்றுக் கொள்ளும் போது, இங்கு இவர்கள் புரட்சிக்கு பிந்திய சமுதாயத்தில், தமது வர்க்க நலன் சார்ந்து முதலாளித்துவ மீட்சிக்கான வன்முறையை எதிர்க்கவில்லை. "மனிதாபிமானம், ஜனநாயகம், ஜனநாயக மத்தியத்துவம்" என்பதெல்லாம் ஸ்ராலினை எதிர்ப்பதற்கான டிராட்ஸ்கியத்தின் வெற்று ஆயுதங்கள் என்பதை, இதன் மூலம் நாம் தெரிந்து கொள்ளமுடியும்;. ஸ்ராலின் போன்றவர்கள் அன்றே கொல்லப்பட்டு டிராட்ஸ்கி போன்ற "கம்யூனிஸ்ட்டுகள்" ஆட்சிக்கு வந்திருக்க வேண்டும் என்பதே இதன் சாராம்சமாகும்;. "குருசேவ்வின் வருகையின் பின்பான ஸ்டாலினிச அதிகார வாழ்வின் தளர்வு தொழிலாளர்களின் கிளர்ச்சிகளை வெளிப்படையாக உருவாக்கின." என்று டிராட்ஸ்கியம் கூறி குருச்சேவை ஆதரிக்கும் போது, அரசியல் ரீதியாகவும் ஒன்றுபட்டே அன்றும் சரி இன்றும் சரி நிற்கின்றனர். இவற்றை விரிவாக நாம் பார்ப்போம்.

பி.இரயாகரன்
15.03.2010

1.இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் - (ஸ்ராலின் தூற்றப்படுவது ஏன்? : பகுதி – 1)

Last Updated on Thursday, 18 March 2010 12:04