Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back இரயாகரன் - சமர் "பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார்"!?

"பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார்"!?

  • PDF

அரசு காட்டியது பிரபாகரனையல்ல. அது போலியான சிங்களப் பிரபாகரன். முகமூடி போட்ட பிரபாகரன். பிரபாகரனோ நலமாக உள்ளார் உயிருடன் உள்ளார் என்று கூறி கட்டமைக்கும் பொய்கள், புனைவுகள், பித்தலாட்டங்கள் மூலம், தமிழினத்தை காயடிக்கின்றனர். எம்மைச் சுற்றி மானசீகமான நம்பிக்கையாக, பிரமையாக இது மாறி, மனநோயாகிவிடுகின்றது.

   

பொய்யைப் புனைந்து மக்களை ஏமாற்றுபவர்கள், எப்படி தமிழ் மக்களுக்கு நேர்மையாக இருப்பார்கள்!? மக்களை ஏமாளியாக்கி, தங்கள் சுத்துமாத்துக்களை கொண்டு பிழைத்துக்கொள்ளும் கூட்டம்தான், பிரபாகரன் உயிருடன் இருப்பதாக புனைந்து காட்டுகின்றது. 

  

இதன் பின்னணியில் அப்பாவி மக்களையும், ஏமாளிகளைக் கொண்ட சமூகத்தையும், தொடர்ந்து ஏமாற்றிப் பிழைக்க பொய்யைப் புனைகின்றனர். மக்களை ஏமாற்றும் பின்னணியில் வியாபாரிகள், பிழைப்புவாதிகள், அரசியல்வாதிகள் கூட்டாகவே இயங்குகின்றனர். பிரபாகரன் உயிருடன் இருப்பதாக கூறி, தமிழ்மக்களையே முட்டாளாக்கி ஏமாற்றுகின்றனர். அவர்கள் பிரபாகரன் இருப்பதாக கூறிப் பிழைக்கும் மோசடிப் பேர்வழிகள். இதன் பின்னணியில் புலிச் சொத்தை தனிப்பட்ட சொத்தாக மாற்றி, தமிழினத்தை திருடி வாழுகின்றது இந்தக் கூட்டம்.

    

திருடர்களும், மோசடிப் பேர்வழிகளும் தலைவர் இருப்பதாக கதைவிடுகின்றனர். இதன் மூலம் புலிச் சொத்தை தமிழ்மக்கள் கேட்க முடியாது, உயிருடன் உள்ள தலைவர்தான் கேட்ட முடியும் என்று கூறுவதன் மூலம், செத்துப் போனவரை உயிருடன் இருப்பதாக காட்டுகின்றனர்.  

 

இதன் மூலம் இரண்டு விடையங்களை, தமிழ் மக்களுக்கு மூடிமறைக்கின்றனர்.

 

1. இறுதி யுத்தத்தில் தலைமைக்கு நடந்த கதியையும், அதைச் சுற்றி நடந்த சதிகளையும், தலைமையின் துரோகம் மற்றும் பாசிச நடத்தைகளையும், ஏதுமற்றதாக காட்ட முனைகின்றனர்.

 

2. தலைவரே இல்லாத நிலையில் தலைவர் இருப்பதாக கூறி, புலிச் சொத்தை அபகரிப்பதும், இதனால் பல குழுக்களாக மாறி மோதுவதும் நடக்கின்றது. அதேநேரம் புலித் தலைவரின் பெயரில், ஏமாற்றி பொறுக்கித் தின்பது அரசியலாக மாறி நிற்கின்றது.

 

இப்படி நடந்ததை மூடிமறைத்து, பிழைப்பது புலி அரசியலாகிவிட்டது. இதற்குள் பல குழுக்கள் தோன்றி, தமக்குள் மோதுகின்றது. இதற்குள் மக்களை ஏமாற்றிப் பிழைப்பதே, தமிழ் தேசியமாக எஞ்சிவிட்டது. 

 

தமிழ்மக்களின் தலைவிதியைத் துப்பாக்கி முனையில் அபகரித்து அதை அழித்தவர்கள், தொடர்ந்தும் தமது பிழைப்புக்கு ஏற்ப அதை அழித்துக் கொண்டு இருக்கின்றனர்.

 

நடந்து முடிந்த யுத்தத்தையும், மனிதம் சந்தித்த அவலத்தையும், எந்த சுயவிமர்சனமும் இன்றி புதைத்தபடி தான், தேசியத்தைச் சொல்லிப் பிழைக்கின்றனர். இதன் பின் நிகழ்ந்த போர்க் குற்றங்கள் அனைத்தையும், எதுவுமற்றதாக்குகின்றனர்.

 

புலி யுத்தமும், புலித் தேசியமும் தமிழினத்தை அழித்ததற்கு அப்பால், தமிழினம் எதையும் புதிதாக பெறவில்லை. இதை வைத்து பிழைத்தவர்களும், புலிச் சொத்தை திருடியவர்களும் தான் இதன் மூலம், கொழுத்த இலாபம் அடைந்தனர்.

 

புலி, புலித்தேசியத்தின், ஒட்டுமொத்த விளைவு இதுதான். இன்று தமிழ் மக்களின் பெயரில் தான், புலிகள் கொண்டிருந்த சொத்துகள் தனிநபர் சொத்தாக மாற்றப்பட்டுவிட்டது. இ;ன்று இந்தத்  திருடர்கள் தான், தமிழ் தேசியத்தைப்பற்றி பேசுகின்றனர். இதில் ஒரு பகுதியினர் தங்கள் திருட்டை மூடிமறைக்கவே, தலைவர் உயிருடன் இருக்கின்றார் என்று கதையை தொடர்ந்தும் புனைகின்றனர். இதை ஒட்டி எத்தனை புனைவுகளும், கதைகளும், ஒன்றுக்கு ஒன்று முரணான தரவுகளுடன்.

 

மீசை முளைத்த பிரபாகரன், நக்கீரன் வெட்டியொட்டி வெளியிட்ட பிரபாகரன், பிரபாகரனை ஓத்த இராணுவத்தின் படம், பிரபாகரனை வெட்டியொட்டி வெளியிட்ட மாவீரர் தினப் படம், மலேசியாவுக்கு தப்பிப் போன பிரபாகரன் வள்ளம், தென்னாபிரிக்காவுக்கு பறந்து போன பிரபாகரனின் வள்ளம் முதல் நெடுமாறன் ஈறாய் கட்டமைத்து வெளியிட்ட எண்ணற்ற புனைவுகள்.

 

இதை கற்பனையில் எழுதியவர்களும், இதை வெளியிட்டவர்களும், இதன் மூலம் அப்பாவி மக்களை ஏமாற்றி பணம் சம்பாதித்தனர். அரசியல்வாதிகள் இதைக் கொண்டு, தங்கள் அரசியல் இருப்பை தக்கவைத்தனர். மனநோயாளிகளுக்கு இது முற்றியது.   

 

அனைத்தும் மோசடியானவை. தமிழ் மக்களை ஏமாற்றி மொட்டை அடிப்பதாகும். இதை வைத்து காசு பண்ணியவர்கள் ஒருபுறம். பத்திரிகைகள், சஞ்சிகைகள் முதல் புளக் வரை எழுதப்பட்ட கட்டுரைகள், புனைவு படங்கள் அனைத்தும், தமிழ் மக்களை திட்டமிட்டு ஏமாற்றுவதை அடிப்படையாகக் கொண்டது.

 

இதன் மூலம் தமிழ் மக்களை தொடர்ந்தும் முட்டாளாக, மூடர்களாக தக்கவைத்துக் கொள்ளவே முனைகின்றனர். பிரபாகரன் இருப்பதாக காட்டி,  முட்டாள்களையும், மூடர்களையும்  உருவாட வைக்கின்றனர். இதன் மூலம் மக்களை ஏமாற்றி காரியம் சாதிக்கவும், பணம் சம்பாதிக்கவும் முனைகின்றனர். இதற்கு வெளியில் இந்த புனைவுக்கு, எந்த சமூக அடிப்படையும் நோக்கமும் கிடையாது.

 

புனைவுகளை பகுத்தறிவு கொண்டு அறிய முடியாத மூடர்களும், முட்டாள்களும், மனநோயாளிகளும் இருக்கும் வரை, ஏமாற்றி வாழ்பவர்களுக்கு கொண்டாட்டம் தான்.

 

பிரபாகரன் இருப்பதாக நம்பும் முட்டாள்களிடம் கேட்கின்றோம், பிரபாகரன் உயிருடன் இருந்தால் பல குழுக்களைத் தான் உருவாக்க விட்டுவிடுவாரா!? புலியின் பணத்தை தனிப்பட்ட சொத்தாக்கத்தான் விட்டுவிடுவாரா? பிரபாகரன் இருப்பதாக காட்டி ஏமாற்றுபவர்கள், அதற்கு புனைவைத்தான் செய்கின்றனர் ஒழிய ஒரு நாளும் பிரபாகரனைக் காட்ட முடியாது.

 

இந்தச் சதிகாரர்களின் சதி மற்றும் மோசடியின் பின்னணியில் தான், எம்மக்கள் சந்தித்த அவலங்கள் முதல் புலித்தேசியத்தின் தோல்விகள் அனைத்தும் மூடிமறைக்கப்படுகின்றது. 

 

1. புலித்தேசியமும், அதற்கு தலைமை தாங்கிய பிரபாகரனும், தமிழினத்தையே அழித்துவிட்ட உண்மையை தமிழினத்தால் சுயமாக உணரப்படுவதை தடுத்து வருகின்றனர்.

 

2. புலியும், புலித்தலைமையும் தேசியத்துக்காக போராடியதாக நம்பும் அப்பாவிகள், தங்கள் தலைமைக்கு அஞ்சலி கூட செய்ய முடியாத வண்ணம் ஏமாற்றப்படுகின்றனர்.

 

3. புலித் தலைமை தான் சரணடைந்ததன் மூலம், தன் கொள்கைக்கு முரணாக இழைத்த துரோகத்தை மூடிமறைக்கின்றனர்.

 

4. இந்த சரணடைவை சுற்றி நடந்த சதிகள், காட்டிக்கொடுப்புகள், வழிகாட்டு நெறிகள் அனைத்தும் திட்டமிட்டு மூடிமறைக்கப்படுகின்றது.

 

5. புலித்தலைமையின் இறுதி சரணடைவுக்கு முன், தலைமையுடன் நடந்த ஒலி வடிவ உரையாடல்கள் அனைத்துக்கும், என்ன நடந்து என்பதை மக்கள் சுயமாக எதையும் தெரிந்துகொள்ள முடியாத வண்ணம், இதன் பின்னணியில் செயல்பட்ட சதிகாரர்களால் அழிக்கப்படுகின்றது. எப்படி இந்த சதி நடந்தது என்பதை, இந்த ஒலி நாடாக்கள் தான் உண்மைகளைப்  பேசுகின்றது. அதை தமிழ்மக்கள் கேட்காத வண்ணம் தடுத்து, அதை அழிக்கின்றனர்.   

  

6. புலத்து தலைமையும், புலத்துத் திருடர்களும், சதிகாரர்களும் வன்னித் தலைமையுடன் இணைந்து, தமிழ் மக்களை இனப்படுகொலைகாரன் முன் பணயம் வைத்தனர். இதை மீறியவர்களைக் கொன்றும், பேரினவாதிகள் கொல்லவும் உதவிய தங்கள் தேசிய திருவிளையாடல்களை மூடிமறைக்கின்றனர்.

 

7. பேரினவாதம் தமிழ் மக்களையும், சரணடைந்த புலித்தலைமையையும் கொன்று வெறியாட்டம் போட்ட போர்க்குற்றத்தை, இன்று எதுவுமற்றதாக்குகின்றனர்.

 

8. புலிச் சொத்துகளை திருடி, தனிப்பட்ட சொத்துக்களாக மாற்றி, அதை தமிழ் மக்களுக்கு எதிராக பயன்படுத்துகின்றனர்.

 

இப்படி பல

 

இதன் மூலம் தமிழினம் ஒருபுறம் மந்தைகளாகவும், மறுபுறம் அநாதைகளாகவும் மாற்றப்படுகின்றனர். இந்த பின்னணியில் புலி அரசியல் 

 

1. தங்கள் கடந்தகால சதிகளையும், மோசடிகளையும் தொடர்ந்து பாதுகாக்கின்றனர்.
 
2. தமிழ் மக்களை காலாகாலமாக ஒடுக்கி, இனத்தையே அழித்ததையும் மூடிமறைக்கின்றனர்.
 
3. தாங்கள் மக்கள் பணத்தை திருடியதையும், அதை தனிப்பட்ட சொத்தாக மாற்றிவிட்டதையும்   பூசி மெழுகுகின்றனர்.

 

4. புலித் தலைமையை வலையில் சிக்கவைத்து, அவர்களைக் காட்டிக் கொடுத்து கொன்ற  தங்கள் அன்னிய கைக்கூலித்தனத்தை மூடிமறைத்து, அதை தமிழனின் ராஜதந்திரமாக காட்டுகின்றனர்.

 

5. தங்கள் தலைமையை அழிக்கவும், பணத்தை திருடவும் நடத்திய சதியும், அதை ஓட்டி நடந்த இரகசிய பேரங்கள் காட்டிக் கொடுப்புகள் அனைத்தும் மூடிமறைக்கப்படுகின்றது.

 

6. புலத்து தலைமை உட்பட தமிழக பிழைப்புவாத புலி பிரமுகர்கள் வரை, இறுதி யுத்தத்தின் போது வன்னித் தலைமையுடன் நடத்திய தங்கள் இரகசிய சதிகள் உள்ளடங்கிய ஒலிநாடாக்களை எல்லாம் மக்கள் தெரிந்துகொள்ள முடியாத வண்ணம் அழித்து வருகின்றனர்.   

 

7. தமிழ்மக்களை தொடர்ந்து ஏமாற்றி, அவர்களின் பணத்தை அறவிட்டு வாழமுனைகின்றனர்.

 

8. மக்களை ஏமாற்றியபடி, பொருள் சார்ந்த வியாபாரத்தை அரசியல் மூலம் கட்டமைக்கின்றனர்.

 

இப்படி புலித் தேசியம் பணம் சம்பாதிக்கும் கூட்டத்தின் அரசியல் முன்னெடுப்பாக உள்ளது. இந்த வியாபாரத்தின் பின்னணியில்தான், பிரபாகரனை உயிர்ப்பித்து காட்டுகின்றனர். புலிப் பணத்தைத் திருடியும், மக்களை மோசடி செய்தும், தொடர்ந்தும் மக்களை ஏமாற்றிப் பிழைக்கவுமே, வித்தைகள் மூலம் பிரபாகரனுக்கு உயிரூட்டிக் காட்டுகின்றனர்.

 

தமிழினத்தை பேரினவாதத்தின் துணையுடன் அழித்தவர்கள் புலிகள். எஞ்சிய தமிழ் மக்களை மொட்டையடிக்க, பிரபாகரன் என்ற கத்தியை தீட்டுகின்றனர். தமிழ்மக்களின் தலையில் அதை வைத்துக்கொண்டு, ஆளுக்காள் பிரபாகரன் என்ற கொலைகாரனை உயிருடன் காட்டி, நயவஞ்சகமாகவும் மிரட்டியும் நிற்கின்றனர். தமிழ்மக்களை தொடர்ந்து அடக்கியொடுக்கவும், தாங்கள் சம்பாதிக்கவும் முனைகின்றனர்.

 

இந்த வகையில் பிரபாகரன் முதல் புலித் தமிழ்தேசியம் வரை, புலத்து புலிக் கும்பல்களால் உச்சரிக்கப்படுகின்றது.

 

பி.இரயாகரன்

 

இதை ஒட்டிய மேலதிக கட்டுரைகள்

 

1.புலித்தலைமையின் கழுத்தை அறுத்த துரோகிகள் யார்?

 

2. புலித் தலைவர்கள் எப்படி எந்த நிலையில் வைத்து கொல்லப்படுகின்றனர்!?

 

3. புலித் தலைமையைக் கொன்றவர்களும் அதை மூடிமறைப்பவர்களும்

 

4. சரணடைந்து மரணித்த துரோகிகளும் இறுதிவரை போராடி மடிந்த தியாகிகளும்

 

5. தலைவர் மரணிக்கவில்லை : இது ஒருபுறம் மனநோய் மறுபுறம் தமிழனை ஏமாற்றும் மோசடி


6. அநாதையாகவே மரணித்த பிரபாகரனும் காட்டிக் கொடுத்த துரோகிகளும்

 

7. புலித்தலைவரின் வாரிசுகளாக தம்மைத்தாம் தக்கவைத்துக் கொள்ள முனையும் மாபியாக்கள்

 

8. புலத்து ஊடக வியாபாரிகளோ புலிப் பினாமிகளாக நடித்துத்தான் வியாபாரம் செய்கின்றனர்

 

9. எம் மக்களுக்கு நடந்த அனைத்து மனிதவிரோதங்களையும் ஏற்றுக்கொள்ள மறுப்பவர்கள் கடைந்தெடுத்த சமூக விரோதிகள்

 

10. தன் தலைவரையே காட்டிக்கொடுத்த கே.பி என்ற மாபியா புலிகளின் புதிய தலைவராம்!

 

11. உளுத்துப் போன வட்டுக்கோட்டைத் தீர்மானம் மாபியாத் தனத்துக்கே இறுதியாக உதவுகின்றது

 

Last Updated on Wednesday, 17 March 2010 20:27